வசந்ததீபன்
(1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்
____________________________________________
வழிபாடுகள் இடர்பாடுகள்
தொடருது துயர் பாடுகள்
ஆறு கடந்து போகிறது
காற்று கடந்து போகிறது
காலமும் கடந்து போகிறது
வாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்
வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்
வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்
பாதைகள் நிறைய போகின்றன
ஊருக்குள் போகும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை
பாதைகளுக்கு முன்னால் நின்றிருக்கிறேன்
நெருப்பை தொட்டுப் பார்த்தான்
நெருப்பாயிருந்தது
நெருப்பு நெருப்பாய் இல்லாமல் வேறு எதுவாக இருக்கும்இருக்கும்
பெருங்கதையாடல்
பெருந்திணைப்பாடல்
பெருஞ்சூறையாய் வீசுகிறது
இழப்பதற்கு எதுவுமில்லை
பெறுவதற்கு ஏராளம் உள்ளது
அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவோம்.
மழை பொழியட்டும்
மனங்களெங்கும்
மானுடம் செழிக்கட்டும்
விண்மீன்களை பார்க்கிறேன்
தேவதைகள் கண்கள் சிமிட்டுகிறார்கள்
சாமரம் வீசுகிறது காற்று
மவுனங்களுக்கும்
வார்த்தைகளுக்கும்
இடையே தீராத உரையாடல்கள்.

(2) இணக்கமற்ற பயணம்
___________________________________
எய்தவன் மனதில் இச்சை
அம்பின் நோக்கம் எதுவுமில்லை
அடிபடுபவையின் உயிரில் மரணவலி
கனவென்று எதுவும் கிடையாது
கனலும் நினைவுகள் உண்டு
பேரிரைச்சல் எழுப்பும்
காற்றாய் திரிய ஆசை
திருடனைப் போல வரும்
சூறைக் காற்றாய் அள்ளிப்போகும்
மரணத்தின் கால்களை அறிந்தவரில்லை
சிலையின் அருகில் போனேன்
சிலிர்ப்பாயிருந்தது
சிலைக்கும் இருந்திருக்குமாவெனத் தெரியவில்லை
உன் மிடறுக்குள் நான்
என் மிடறுக்குள் நீ
திகட்டாது காதல்
புழுவாய் நெளியாதே
பாம்பாய் சீறு
வெயில் உன்னை வருத்தாது.
நீ பூ நான் வாசம்
நான் பூ நீ வாசம்
நேசம் நீ நான் உன் வசம்
கண்கள் பேசுகின்றன
இதயம் மெளனிக்கிறது
என்னுள் காதலெனும் பெருங்கடல்
கனவுகள் என்னைத் தின்கின்றன
நான் மெளனமாயிருக்கிறேன்
என் மெளனம் அமைதியில்லை
படகை செலுத்துகிறேன்
மனது உடன் வர மறுக்கிறது
கூடு பிரிந்த பறவையாய்
நதியோடு போகிறேன்
நட்சத்திரங்கள் அழைக்கின்றன
நானும் ஒரு நட்சத்திரமாக ஆசை
பால் வெளியில் எங்கோ எவரறியாமல் ஜொலிக்கணும்
இருளுக்குள் ஒளியிருக்கும்
ஒளிக்குள் இருளிருக்கும்
இரண்டுக்கும் நடுவே
மனித வாழ்விருக்கும்
இலைகள் உதிர்கின்றன
தனிமை இசைக்கிறது
காற்று நாற்காலியில்
ஓய்வு கொள்கிறது
வசந்தம் வருகிறது
பூக்கள் பாடுகின்றன
கூண்டுக்குள் பறவை அழுகிறது
ஜனனம் போகிறது
மரணம் வருகிறது
திகைப்பாய் உலகம்
நினைத்துப் பார்க்கிறேன்
துக்கம் ஓடி வருகிறது
மனசை படாரென்று மூடுகிறேன்.

(3) தீராத புத்தகப் பிரதி
_______________________________
உன் கனவுகள் உன் வாழ்வு
இணையாத தண்டவாளங்கள்
சரக்கு ரயிலாக நீ
நீ என்ன நினைக்கிறாய் ?
நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?
உனது மொழியில் உனது வார்த்தையில் எழுது
ஒரு வார்த்தைக்கு வன்மம்
தீயாய் சுட எத்தனிக்கிறாய்
எம் வாழ்வினை இத்தனைக்காலம் சிதைக்கும் உன்னை விட்டு விடமாட்டோம்
இதயங்களை கனவுகளால் நிரப்புவோம்
இன்மையின் ரணங்களை
கவிதைகளால் மருந்திடுவோம்
கனிகள் கிட்டும் காலம் வரும்
கலங்கிய குளத்தில் மீன்
கரையேற வழியில்லை
உயிர் வாழ வகையில்லை
கடவுளைத் தேடுங்கள்
தடுக்கவில்லை
கடவுளாய் நடிக்காதீர்கள்
ரோசக்காரர்கள் போராடுகிறார்கள்
கருங்காலிகள் கால் வாருகிறார்கள்
போராட்டங்கள் பிசுபிசுத்து விடுகின்றன
எந்த மனிதனும் துன்பத்தை விரும்புவதில்லை
எந்த மனிதனும் துன்பத்தை நேசிப்பதில்லை
தஸ்தாவெஸ்கி போன்ற மனிதர்கள் வாழ்வை நேசிப்பதில்லை…நேசிப்பதில்லை…
என் எழுத்துக்கள் என்னைச் சொல்லும்
என் வார்த்தைகள் என்னை வரைந்து காட்டும்
நான் சொல்ல
இன்னும் நிறைய இருக்கின்றன.

4. காடு
____________________
தலை சிலுப்பி உடல் அசைக்கும் கருங்குருவி
மரக்கிளைகள் நீர் சொட்டின
நதியோட்டம் வீரியம் நிறைந்திருந்தது
காட்டுப் புஷ்பங்கள் சிரிக்கின்றன
பிச்சைப் பாத்திரம் ஏந்திய புத்தன்
குதிரை ஓடிய பாதைகளில் குருதி வாசனை
வறுமை ஆயுதம் தரித்திருக்கிறது
தரித்திரம் மரணத்தை ஏந்தியிருக்கிறது
மடியிலே நெருப்பை வைத்திருக்கிறது உயிர்
உணவு பாத்திரத்தில் மலர்கள் பூத்திருந்தன
நிசப்தம் கிளையோடின
ஈரக் காற்றில் கொக்குகள் நடுங்கின
படகோட்டி துடுப்பை அசைக்கிறான்
கடந்த காலம் பெருஞ்சீற்றமாக கடக்கிறது
நதியின் வேட்கை ததும்புகிறது
இலைகளற்ற மரம்
பசியோடு திரியும் மீன்கொத்தி
வெயில் ரெளத்திரம் கொண்டுள்ளது
வெள்ளைச் சேலை மலையில் தொங்குகிறது
அந்திச் சூரியன் பல் வண்ணங்களை நெய்கிறது
ஓவியமாகிறது நீர் வீழ்ச்சி
காட்டுத் தீ பெருக்கெடுத்துப் பாய்கிறது
காற்று பரபரக்கிறது
காடை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன
கண்ணீரில் கரையும் உடல்கள் காற்றில் மறைகிறது கற்பூரம் கானல் நீரோ காதல்
இதயம் பூக்கிறது
மேனியெங்கும் வண்ண பூக்கள்
அன்பு சகல பாவங்களை மூடும்
இருளுக்குள் பயணம்
நெஞ்சுக்குள் ஊறும் பயம்
கால்களிலிருந்து வேர்கள் கிளம்புகின்றன
மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன
காலம் மண்டையோடுகள் பூண்டு தாண்டவமாடுகிறது
மரண உற்சவம்
செத்துக் கொண்டிருக்கிறது மரம்
பசியோடு குஞ்சுகள்
மெளனமாய் உருகும் மரங்கொத்தி
சாலையில் யாவும் கடந்தசெல்கின்றன
காற்றாய் போயின உறவுகள்_நட்புகள்
நானும் ஒரு நாள்.