வேடன்

This entry is part 1 of 5 in the series 1 ஜூன் 2025

குரு அரவிந்தன்

வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது. இவர் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இன்று எங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் சொல்லாகவும் இந்த வேடன் சொல் இருக்கின்றது.

ஹிரந்தாஸ் முரளி என்று சொல்லப்படும் 30 வயதான இவரது தந்தை கேரளாவையும், தாயார் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். இவர் திருச்சூரில் பிறந்தார். இவர் தனது மார்பிலே ‘அ’ என்ற தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தைப் பெரிதாகப் பச்சை குத்தியிருப்பதால், தமிழ் இசைப் பிரியர்களின் பார்வை இவர்மீது திரும்பியது. பாலக்காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இதுவரை இவ்வளவு கூட்டம் எந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கும் சேரவில்லை என்று அறிவிப்பாளர் குறிப்பிட்டார். கனடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்கூட இவரது பாடல்வரிகளுக்கு ஏற்ப பாவனை செய்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார்.

ஒரு காலத்தில் மைக்கல் ஜாக்ஸன் எப்படி பரதநாட்டியத்தை தனது காணெளியில் கலந்து வெளியிட்டுத் தமிழர்களிடையே பிரபலமானாரோ, அதேபோல இவர் தமிழர்களின் பறை இசையைக் கலந்து கேரள மக்களைக் கவர்ந்து வருகின்றார். இதைவிட ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான இவரது பாடல் வரிகளுக்காக ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை காணெளி மூலம் அவர் பிரபலமானார். ‘பூமி என்ஜன் வாழுனிதம்’ என்ற இசைத்தட்டு அடுத்து வெளிவந்ததும் இன்னும் ரசிகர்கள் அதிகமாயினர்.

ஒருவர் தனது துறையில் வேகமாக வளர்ந்து பிரபலமாகும் போது, அவர்மீது அவதூறு சொல்லவும் சிலர் இருப்பார்கள். தங்களால் முடியவில்லையே என்ற ஆதங்கம் வெறுப்பாக மாறலாம். அதுவே பிரபலமனவரை பெண்களுடன் தொடர்பு படுத்தியோ அல்லது போதை வஸ்துவுடன் தொடர்பு படுத்தியோ சில பொது ஊடகங்களில் உள்ளவர்கள் அவதூறுகளை எழுதத் தொடங்கிவிடுவார்கள். இவர் முகநூலில் பெண்களைப் பற்றி தவறாக எழுதினார் என்றும், இவரது நண்பர்கள் போதை வஸ்;து வைத்திருந்தனர் என்றும், தனது கழுத்திலே புலிப்பல்லைக் கட்டித் தொங்கவிட்டார் என்றெல்லாம் இவர் மீது குற்றங்கள் சுமத்தப்படன. 

வேடனை முளையிலே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று சில பிரபலங்கள் முயற்சி எடுத்தார்கள், எந்தப் பொலிஸார் கைது செய்து காவலில் வைத்தார்களோ அவர்களே இப்போது பாதுகாப்பாய் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதற்குக் காரணம் மக்கள் குரல் அவருக்குப் பின்னால் இருப்பதுதான்.

இசையுலகில் நீர்க்குமிழி போல உடைந்து போவாரா அல்லது  இதையெல்லாம் கடந்து இவர் செல்வாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க முடியும்.

Series Navigationகவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *