அவளை அழைத்தார்கள்.
விளம்பர உலகின்
மாடலாக,
அவள் கைகள், கண்கள்
இடுப்பும், தொடையும்
வழியும் போதை
கண்களில் கண்டனர்
ஆண்கள்.
முதலில்
பியானோ மீது சரிந்தாள்
கைகளில், கால்களில்
தைலம் தடவினார்
கேமிரா கண்களுக்கு
பொருந்தும் என்றனர்.
விழும் அருவியில்
குளியல்,
அவள் உடலில்
ஒட்டுத்துணிகள்
மறைக்க வேண்டியதை மறைத்து
கேமிராவை
சுழற்றி எடுத்தனர்.
அவளது மேனியில்
அருவியின் நீரில்
துடியென துடிக்கும்
இளமை என்றனர்.
சோப்பின் வாசத்தால்
அவளது வதனம்
அழகுற செய்ய
பலப்பல வித்தைகள்
விதைத்தனர் கவிதையில்.
மரத்தை
கட்டி அணைத்தாள்
ஒயிலாக.
அணிந்த
குட்டைப் பாவாடை
காற்றில் பறக்க
தொடைகளில்
தெரிந்தது
கல்லாவின் உயரம்.
பெருத்த தொந்திகள்
கள்ளத்தனம் செய்ய
இவளது தொடையும், மார்பகங்களும்
சல்லடைத்துணிகளால்
வியாபாரம் செய்தனர்.
பச்சை
புல் வெளியில்
ஓடச் சொன்னார்கள்.
எம்பிக்குதித்த
மார்பகங்களுக்கு ஏற்ற
கச்சை
இதுதான், இதுதான்
கூவினர்.
அவள்
உடலின் அனைத்து
உறுப்புகளையும்
வியாபாரம் செய்தனர்.
அவளின்
இதயத்தைத்தவிர.
– ஜெயானந்தன்.