ரவி அல்லது
“பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம்.”
உம்மா சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தது. எது செய்யும்போதும் ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி ஆரம்பிச்சா சைத்தான் ஓடிருவான். சொல்லலைன்னா இவர்களோடதான் நம்ம வேலைன்னு கூடவே இருந்திருவான் என்றார்கள்.பல முறை மறந்து போய்விடுகிறது.
உம்மா வாங்கிய செருப்பு பண்ணு கணக்கா மெத்து மெத்துன்னு இருக்கு. நாளைக்கு பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர்கள் போட்டுப் பார்க்கிறேன் என்று கேட்பார்களோ என இப்போதே கவலையாக இருக்கிறது.
யாருக்கு வேண்டுமானாலும் போடக் கொடுக்கலாம் ரபீக்கு மட்டும் கொடுக்கக்கூடாது.
அவனுக்கு சதா வியர்த்துக்கொண்டே இருக்கும். அவன் உட்கார்ந்து எந்திரிக்கும் இடத்திலும் தண்ணீர் ஊத்தின மாதிரி ஈரமாக இருக்கும். அவன் போட்டுப் பார்க்க கேட்டால் முகம் கோணாமல் எப்படி மறுப்பது.
யா… அல்லாஹ் ஒரு நல்ல யோசனையாக எனக்கு சொல்லிவிடு. நானும் உன்னைப்போல எவர் மனமும் நோகக்கூடாதுன்னு நினைக்கிறவன்தானே அல்லாஹ்.
உஸ்தாத் ஒரு முறை சொன்னதுதான் நினைப்புக்கு வருது.நோய்ங்கிறது அல்லாஹ்வினுடைய ரஹ்மத் அதனை வெறுக்கக்கூடாது என்றார்.
உஸ்தாத்தை எல்லோரும் ஹஜ்ரத்துன்னு கூப்பிடும்போது எனக்கு மட்டும் உஸ்தாத்ன்னு கூப்பிடுறதுதான் பிடிச்சிருந்தது. எனக்கு தஹ்நீக் கொடுத்தது உஸ்தாத்தானாம். எங்கள் யாரிடமும் நான் உஸ்தாத் என்று அவரை எப்போது கூப்பிட ஆரம்பித்தேன். ஏன் கூப்பிட ஆரம்பித்தேன் என்று எந்த செய்தியும் இல்லை.
உம்மா ஒரு விசயம் சொன்னார்கள். ‘நாங்க டெல்லி போயிட்டு வந்தப்புறம்தான் நான் சூழியானேன்டா’ என்று. இதுக்கும் நான் உஸ்தாத்ன்னு கூப்பிடுறதுக்கும் தொடர்பு இருக்குமான்னு எனக்குத் தெரியல.
உஸ்தாத் எளிமையாக நேர்மையாக வாழ்கிறவர். அவரிடம் ஓதுகிறேன் என்றால் அதற்காகவே எல்லோரும் தனியாக மரியாதை தருவார்கள்.
“உபைது எங்கடா கிளம்பிட்டே.”
“உம்மா முட்டை வாங்கியாறச்சொன்னிச்சு.
அதான் போய்க்கிட்டிருக்கேன்.”
“டேய்… இன்னிக்கு சலீம் பாய் கடை தொறக்கலே. அவுங்க சொந்தக்கார வீட்ல மௌத்தாம்.”
“மச்சான். நீ ரயில்வேக் கேட்டுக்கிட்டுப் போட. ஹாஜி நானா பொட்டிக்கடையிலயும் முட்டை இருக்கும்டா.” என்றான் ஜாகீர்.
பக்கத்தில் வந்து
“மச்சான் நாளைக்கு ஊருக்கு போறேன்டா. கட்டுரை நோட் நாளைக்குத்தான் ஈஸ் இட் சார் (அந்த வாத்தியார் எது சொன்னாலும் ‘ஈஸ் இட் கரெக்ட்’ என்று அடிக்கடி சொல்லுவார்) திருத்துவான். சாயந்திரம் வரும்போது நோட்டை எடுத்துக்கிட்டு வந்து மாமி வீட்டில இருப்பாங்க கொடுத்துர்றா. லீவு போட்டதுக்கே கத்துவான். கட்டுரை எழுதாமல் போனா இன்னும் கத்துவான். நான் போறேன்டா மச்சான்.”
இவன் உண்மையிலேயே போறானா? ஈஸ் இட் சாருக்கு பயந்து போறானா அல்லாஹ்க்கும் அவனுக்கும் தான் தெரியும். சாருங்க எல்லோருக்கும் அவன் பொய் சொல்றான்னு தெரியும். ஆனாலும் அவனை ஒண்ணும் செய்யமாட்டாங்க. அந்த பொய்ய அழகா நம்புற மாதிரியே ஏத்த இரக்கத்தோட சொல்வான். இதனால அவுங்க எல்லோரும் மன்னிக்கக் கூடிய சின்ன தப்பா அவன் செய்தாலும் அவனை வெளுத்து எடுத்துருவாங்க. அவன் ஜிப்லீஸா இல்லையா இதே மாதிரி எஸ்கேப்பாகி ஓடிருவான்.
‘நவ்துபில்லாஹ்’ என்னமா பொய் சொல்வான். அவன் வீட்ல எப்படி இதை அனுமதிக்கிறாங்கன்னே தெரியல.
ஒரு முறை உம்மாகிட்ட பொய் சொன்னதுக்கு அடி பின்னி எடுத்துட்டாங்க. அதோட விட்டிருந்தாப் பிரச்சனை இல்லை. விரல்ல எண்ணிக்கை மெஷினை மாட்டிவிட்டு ‘அஸ்தக்பிருல்லாஹ்’ ஓதிக்கிட்டே போயி ஹஜ்ரத்துக்கிட்ட இஸ்திக்பார் தொழுகை எத்தனை ரக்காத், என்னென்ன ஆயத்து தோன்றும், எத்தனை ஓதனும்ன்னு கேட்டுக்கிட்டு வாடான்னுட்டாங்க’.
அந்த வாரம்தான் உஸ்தாத் புதுசா கொஞ்சம் தூரமா வீடு கட்டி பாத்தியா ஓதி விருந்து எல்லாம் கொடுத்தார். நாங்களும் அப்போது அங்கு போயிருந்தோம்.
மத்தியான வெயிலை விட தூரம் கிறுகிறுன்னு வந்துருச்சு.
உஸ்தாத்தைப் பார்த்துட்டு திரும்பி வீட்டுக்கு வந்தபோது உம்மா எண்ணிக்கை மெஷினில் நான் ஓதிய நம்பரை சரியாக சொன்னார்கள். இன்னைக்கு வரை அது ஆச்சரியமாகவே எனக்கு இருக்கு.
இஸ்திக்பார் தொழுது அல்லாஹ்விடம் தவ்பா பண்ணதோட உம்மா பொய்யையும் புரட்டையும் என்னிடம் அண்டவிடாமல் செஞ்சுட்டாங்க.
ஜாகீர், சேக், மீரான், தமீம், காதர் எல்லோரும் பல சமயம் பல இடங்களுக்கு என்னைக் கூப்பிடாமலையே போயிருவாங்க. சில சமயம் ‘இங்கேயேஇருடா நாங்க வருகிறோம்’ என்று சொல்லிருவாங்க. நான் உண்மையை சொல்லிவிடுவேன்னு அவங்களுக்கு பயம்.
அவர்கள் ஏதோ தப்பு பண்ணப்போறாங்கன்னு.நான் புரிஞ்சுக்குவேன்.
எனக்கு வகுப்புல ரொம்ப பிடிச்சவன் சின்னச்சாமி. ‘சின்னா’ன்னு நான் கூப்பிடுவது அவனுக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை அவன் உபைதுன்னு கூப்பிடாமல் உபைம்பான். அவன் குரலில் அது வாப்பம்மா
என் முழுப் பெயரை சொல்லிக் கூப்பிடும்போது கிடைக்கிற சந்தோசம். சின்னா கூப்பிடும்போதும் இருக்கும். சில சமயம் அவன் மறுபடியும் கூப்பிடனுங்கிறதுக்காகவே நான் காதுல கேட்காதது மாதிரி இருப்பேன்.
ஒரு முறை சின்னா சொன்னான். நம்ம கிளாஸ்ல பல பேர் சின்னான்னு ன்னுக்கு எனக்கு அழுத்தம் கொடுத்து கூப்பிடுறது ஏன்னு தெரியுமாடான்னு கேட்டான். அவன் சொன்ன பிறகு தான் கூப்பிடுகிறவன்களெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது ஓரளவு எனக்குப் புரிஞ்சது.
“உபை…”
“என்னடா…”
“நீ அடிக்கடி துவாச் செய்கிறேன், துவாச் செய்கிறேன்னு சொல்லுவியேடா. இதை உங்க அல்லாஹ்கிட்டே சொல்லி துவாச் செய்றியாடா.” என்றான்.
அன்று இரவு உம்மா தஹஜ்ஜத் தொழும்போது நான் நினைத்துக்கிட்டே படுத்திருந்ததாலையோ என்னவோ அல்லாஹ் அந்த நேரத்தில் எழுப்பிவிட்டான் போல. நானும் தஹஜ்ஜத் தொழுதேன். தஹஜ்ஜத்தில் தொழுது அழுது கேட்டால் அல்லாஹ் கேட்டதைக் கொடுப்பான்னு உஸ்தாத் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார்.
இன்ஷா அல்லாஹ் அவன் விரும்பியது போல எல்லாவற்றையும் அல்லாஹ் மாற்ற வேண்டும்.
சின்னாகிட்டே உனக்காக துவா செஞ்சேன்டான்னு சொன்னேன்.அவனும் என்னிடம் ‘எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற மின்னடியானிடம் நாம கடைசி வரை நண்பர்களாக இருக்கனும்ன்னு சாமி கும்பிட்டேன்டா’ என்றான்.
முட்டைத் தட்டு எடுக்காமல் வந்தது தவறு என இப்போதுதான் புரிந்தது. முட்டையை உடைக்காமல் வீட்டுக்கு கொண்டு போய்க் கொடுத்துறனும். சலீம் பாய் சுருள்லப் போட்டு சணல் டைட்டா கட்டிக்கொடுப்பார். ஹாஜி நானா, கடையில் இல்லாததால் யாரோ ஒரு புதுப் பையன் கீஸ் பையில போட்டுக் கொடுத்துட்டார். வீட்டுக்கு போற வரைக்கும் அல்லாஹ் அல்லாஹ்ன்னே போக வேண்டியதாக இருக்கு.
சைக்கிள் இருந்தால் இந்நேரம் வீட்டுக்கு போயிருக்கலாம். அம்மா சமையல் வேலைகள் செய்யும்போது குரான் ஓதும் அதை கேட்கவே ராஹத்தாக இருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே வீட்டுப்பாடத்தை முடித்துவிடலாம். ரொம்ப நாளாக உம்மாவிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லாப் பாடங்களிலும் நூறு மதிப்பெண்கள் எடு வாங்கித் தருகிறேன் என்கிறார். எல்லாத்தையும் சரியாக எழுதினாலும் இங்கிலீஷ் சார் ஒரு மார்க், அரை மார்க் குறைத்து விடுகிறார். என்னால் இதனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த முறை உம்மாவிடம் சொல்லிவிட்டேன். ‘நான் தேர்வு எழுதிட்டு வந்து மீண்டும் வீட்ல உன்கிட்டையும் எழுதுறேம்மா. அதை நீயே திருத்தி மதிப்பெண் போடு. பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கம்மா. இன்ஷா அல்லாஹ் இந்த முறை அல்லாஹ் எனக்கு சைக்கிளைக் கொடுத்துருவான். பாரும்மா’ என்றேன்.
உம்மா சத்தமாக சிரித்தார்கள். உம்மா சிரிக்கும்போது பேரழகாக இருப்பார்கள்.
வாப்பா இருந்தால் சைக்கிள் வாங்கிக்கொடுத்திருப்பார்
என்ற நினைவு அவ்வப்போது வரும். பெருநாள் தொழுகைக்கு எல்லோரும் அவரவர் வாப்பாவோடு தொழுது வரும்போது வாப்பா இல்லாதது பெரிய குறையாகவே தெரியும். அல்லாஹ் போதுமானவன்.
வாப்பாவை உடனே எதற்கு அழைத்துக்கொண்டான் என்று அல்லாஹ் தான் அறிவான்.
நான் பிறந்து ஆறு மாதத்தில் வாப்பா தொழுது விட்டு வரும்போது பேருந்து மோதி அதே இடத்தில் மௌத்தாகிவிட்டாராம். ‘இன்னாலில்லாஹி வா இன்ன இலைஹி இராஜிஊன்.’
வாப்பா மௌத்துக்குப் பிறகு உம்மா நிக்காஹ் பண்ணவே இல்லை.
உம்மாவின் தோழிகள், வாப்பாவின் தோழர்கள் எல்லாருமே என்னைப் பார்க்கும்போது அடிக்கடி சொல்வது, ‘நீ உங்க வாப்பா மாதிரியே இருக்கேடா. அதான் உங்கம்மா சின்ன வயசாக இருந்தும் நிக்காஹ் செய்யவில்லை’ என்பார்கள்.
உஸ்தாத் ஒரு முறை அபு சுலைமா (ரலி), உம்மு சுலைமா (ரலி) வாழ்க்கையைப் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கும் போது என்னிடம் சொன்னார்கள்.
“உங்க உம்மாகிட்ட நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு சுலைமா (ரலி)க்கு கொடுத்த துவாவை ஓதச் சொன்னேன். சிரிச்சிக்கிட்டே வேணாம்ன்னு மறுத்திருச்சு. சீதேவி புள்ளைடா. அதுக்கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம பார்த்துக்கடா. உன்னைய ஹாபீஸாகவும் ஆக்கணும், கலெக்டராகவும் ஆக்கணும்ன்னு அல்லாஹ்கிட்டே அன்றாடம் மன்றாடிக்கிட்டு கிடக்குடா.” என்றார்.
உம்மா மிகச் சிறப்பாக பேசக்கூடியவர். அவர் தோழிகளின் பிள்ளைகள் படிப்பதன் அவசியத்தை தோழிகளுக்கு ஹதீஸுகளைச் சொல்லிப் புரிய வைப்பார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் படிக்க வைத்ததை சொல்லிக்காட்டுவார்கள். நாயகம் (ஸல்) வபாத்துக்குப் பிறகு ஆயிஷா (ரலி) அவர்கள் எழுபத்து மூன்று வயதோ என்னவோ அதுவரை அவர்கள் உயிர் வாழ்தார்கலாம். அப்போது வைத்தியப் பணியையும் செய்து வந்தார்களாம்.
பெண்கள் படிப்பதன் அவசியத்தை பெரும்பாலும் தன்னை சந்திக்கும் பெண்களிடமெல்லாம் பேசுவார்கள்.
கல்லூரிக்கு போகும் பிள்ளைகளுக்கு தர்பியத்தாக வாழுவது எப்படி என்று போதிப்பார்கள். உம்மாவால்தான் ஊரில் பல பெண் பிள்ளைகள் அரசு வேலைக்கு போனார்கள் என்றும் சொல்வார்கள்.
உம்மாவுக்கு துன்யாவின் கல்வியைக் கொடுத்திருந்தால் நிச்சயமாக உம்மா கலெக்டராகத்தான் இருந்திருப்பார்கள்.
இன்ஷா அல்லாஹ், ஒரு நாள் நான் கலெக்டராகி உம்மாவை கலெக்டர் காரில் வைத்து நான் அந்த டவாலி உடையணிந்து அப்படியே ஊரை ஒரு ரவுண்ட் அடித்து கலெக்டர் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இந்த துவாவை அல்லாஹ் கபூலாக்க வேண்டும்.
ஒரு சமயம் உம்மா கூட பேசிக்கிட்டு இருக்கும் போது
“நீ ஏம்மா இன்னொரு நிக்காஹ் பண்ணிக்கக் கூடாது. அல்லாஹ் குத்தம் புடிக்க மாட்டானாம்மா” என்றேன்.
உம்மா என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டே அழுதடி யாஸின் ஓத ஆரம்பித்துவிட்டார்கள்.
எப்போது நான் தூங்கினேன் என்று எனக்கேத் தெரியாது. அன்றுதான் வாப்பாவை உம்மா எவ்வளவு தூரம் காதலித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
உம்மாவை மம்மம்மா யாராவது வந்தால் ஓதச் சொல்லிக் கேட்பார்கள். கிராத்தோட ஓதுவார்கள்.
நான் இத்தனைத் துல்லியமாக ஓதுவதற்கு உம்மாவும் ஒரு காரணம். பள்ளி வாசலில் தொழுகைக்கு கிராத்தோட பாங்கு சொல்வதில் உஸ்தாத்துக்கு ரொம்ப பெருமை. வெளியூர்க்காரர்கள் யாராவது தொழ வந்தால் ‘யாருங்க இது. இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு இனிமையா பாங்கு சொல்றான். அல்லாஹ் அவனுக்கு பரக்கத் செய்யட்டும்’ என்பார்கள். உஸ்தாத்து காதுக்கு இந்த செய்தி போனால் அன்றைக்கு முழுவதுமே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இன்னைக்கு சாலையில் வாகனங்களைக் காணோம். ஏதாவது விபத்தாக இருக்குமோ. தூரமாக அய்யப்பன் பக்தர்கள் நடந்து போயிக்கொண்டிருந்தார்கள். வேறு யாரையும் காணோம். எனக்கு முன்னாடி அய்யப்பன் கோயிலுக்கு போகின்ற பெரியவர் மெதுவாக தனியே நடந்து போய்கொண்டிருந்தார்.
அந்தப் பெரியவர் மெதுவாக கீழே விழப்போனார்.
‘அல்லாஹ்’ என்று கத்திக்கொண்டே அவரைப் பிடிக்க, அவர் என் மேல் குப்புற விழுந்து மயங்கிவிட்டார். அவரை அப்படியே புரட்டி வெளியே வந்து எந்தப் பக்கம் பார்த்தாலும் யாரையும் காணோம். ஓடிவிடலாமா என்று நினைக்கும் போது அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் வந்தது.
மூக்கில் விரலை வைத்தால் மூச்சுக் காத்தைக் காணோம். வயிற்றில் கை வைத்தால் அதுவும் அசையக் காணோம்.
எனக்குள்ளே ஏதாவது செய், எதாவது செய்யுன்னு பரபரன்னு இருக்கு. யா…அல்லாஹ் யாராவது ஒருத்தரை அனுப்பக்கூடாதா.
யா… அல்லாஹ்
யா… அல்லாஹ்
நான் என்ன செய்யுறது.
அவர் நெஞ்சுல கைய வச்சி அழுத்துறேன். அவ்வளவு பெரிய உருவத்தில ஒரு ஏழாவது படிக்கிறவன் கை அழுத்துறது முட்டாள்தனமாக எனக்கே தெரிஞ்சுது.
யா…. அல்லாஹ் ஏதாவது பண்ணு.
ஏதோ வெறி வந்தவனாக. அவர் நெஞ்சில் ஏறிக் குதிக்க ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவு நேரம் குதிச்சேன்னு எனக்கேத் தெரியல. அவர் உடம்பு ஒரு துடி துடிச்சு என்னைய தூக்கி அங்கே வீசிருச்சு.
நான் ஏந்திருச்சி அவர்கிட்டே போனா அவர் கண்ண முழிச்சு கைய பின்னாடி ஊன்றி எழு முயற்சி பண்ணார். நான் கொஞ்சம் தூக்க முயன்ற பலத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டார்.
அல்லாஹூ அக்பர்.
அல்லாஹூ அக்பர்.
அல்லாஹூ அக்பர்.
நாங்கள் இருவருமே இப்போதுதான் ஓரளவு இயல்பு நிலைக்கு மாறி இருந்தோம். தூரமாக கிடந்த அவர் பையில் இருந்த தண்ணியை எடுத்துக் கொடுத்தேன்.
முகத்தைக் கழுவி கொஞ்சம் தண்ணீர்க் குடித்ததும் பேசக்கூடிய நிலைக்கு அவர் வந்துவிட்டார்.
அவர் போட்டிருந்த பனியனில் என்னுடைய கால் தடங்கள் பதிந்து அழுக்காகி இருந்தது. என்னுடைய சட்டை, கையிலியில் சந்தனம், குங்குமம், திருநீர் ஹோலி பண்டிகை மாதிரி கரையாகி இருந்தது.
அவர் பனியனுக்குள் மாட்டி இருந்த எனது வெள்ளைத் தொப்பி வண்ண நிறமாக மாறி இருந்தது.
“உன் பேர் என்னப்பா” என்றார் பெரியவர்.
என் முழு பெயரையும் சொன்னேன்.
“சாமி சரணம். அந்த வாபர் சாமியே உன் ரூபத்தில வந்து காவந்து பண்ணி இருக்காரு. நீ என்ன காரியம் செஞ்சுருக்கேன்னு உனக்குப் புரியுதா. பக்கத்துல வாப்பா உன் காலில் விழுந்து ஆசி வாங்கனும்.”
“உம்மா திட்டுவாங்க. நான் கிளம்புறேன் ஐயா.”
அதற்குள் அவரைத்தேடி அவரோடு வந்தவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் காலையில் மாத்திரை போட மறந்துவிட்டதை சொன்னார். தான் செத்துப் பிழைத்திருப்பதாக சொன்னார். வாபர் சாமி வாபர் சாமி என்று வானத்தைப் பார்த்து அடிக்கடி கும்பிட்டார்.
“ஆத்துக்கு அந்த பக்கம் ஆலமரத்து வீரனார் கோயில் நிழலில் படுத்து கிடந்தோம். உங்களை காணலைன்னு இங்க வந்துப் பார்த்தா. குருசாமி நீங்கள் இப்படி இருக்கீங்க.”
பெரியவர் ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமியாம். ஐம்பத்தி ஒண்ணாவது வருடமாக அவர் அய்யப்பன் கோயிலுக்கு போகிறாராம். அவர்கள் பேசிக்கொண்டதில் எனக்குப் புரிந்தது.
என் பெயர் சொல்லி அழைக்க தடுமாறியவர்.
“தம்பி… உங்க வீட்டு போன் நம்பர் சொல்லுப்பா.”
“எங்க வீட்ல போன் இல்லைய்யா.”
பொதுவாக உம்மா நம்பரை நான் யாருக்கும் கொடுப்பதில்லை.
“மலைக்குப் போயிட்டு வந்து உன்னைய பா்க்கணும் தம்பி. உனக்கு ஏதாவது செய்யணும்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ய்யா.”
“சாமி. இந்த தம்பிய என்கூட சேர்த்து வச்சி ஒரு போட்டோ எடுங்க சாமி.”
“சாமி எல்லாருடைய போனு மொத்தமா ஒரு பையில் போட்டு கட்டி இருக்கு சாமி.”
பெரியவர் பட்டன் போன் இரண்டை மட்டும் வெளியில் வைத்துவிட்டு மற்றவைகளை உள்ளே வைத்தது தவறாகிவிட்டதோ என்பது மாதிரி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அல்லாஹ் எப்போதும் என் பக்கம்தான். நான் ஓடுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“தம்பி… வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் தெரியும்தானே.”
“தெரியும் ஐயா.”
“தமிழ்நாடு முழுக்க ஊர்வலம் நடந்த பிறகு எங்க ஊர்ல நடக்கும். ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு. வெறுப்பு, கோவம், குரோதம்ன்னு எனக்கே அசிங்கமா இருக்கு தம்பி.”
“தப்பு இரண்டு பக்கமும் இருக்கலாம்ய்யா. அங்க என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனால் ஒண்ணும் மட்டும் சொல்ல முடியும் ஐயா.”
உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள், ‘ஒரு கண் குத்தப்பட்டு ஒருவர் வந்தால் உடனே நீதி வழங்கிவிடாதே. அடுத்து வருகிறவன் இரண்டு கண்ணும் இழந்திருக்கலாம்’ என்பார்கள்.
எங்க உஸ்தாத் அடிக்கடி சொல்வார்கள். மார்க்கம் பிறரை நேசிக்க சொல்கிறது. ‘பிற முஸ்லிம்’ என்று சொல்லவில்லை. ‘அண்டை வீட்டாரை நேசியுங்கள்’ என்கிறது. அண்டை வீட்டு முஸ்லீம்ன்னு சொல்லவில்லை. ‘பிறருக்கு உணவளியுங்கள்’ என்கிறது. ‘பிற முஸ்லிம்’ என்று சொல்லவில்லை. அதனால…
“தம்பி, உங்க அம்மா உன்னைய நல்லா வளர்த்திருக்காங்க. அந்த தெய்வத்துக் கால்லயாவது விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் தம்பி.”
“ஐயா உம்மா திட்டுவாங்க. நான் கிளம்புறேன்.”
“உன்னைய மீண்டும் பார்க்கணும்ய்யா. நான் ஒரு கனவு கண்டேன் தம்பி. அத சுத்தமா மறந்துட்டேன். இப்பதான் ஞாபகத்துக்கு வருது. நான் மயக்கமாக கிடக்கிறேன், பொணமாக் கிடக்கிறேன்னு வச்சுக்கலாம். என் முகத்துல விழுந்த வெள்ளை தொப்பி கலராக மாறி வானத்தில் வெள்ளைப் புறாவா பறக்குது. ஒரு சின்னப் பையன் நான் கையப்புடிக்கிறேன். கைய உருவிக்கிட்டு ஓடுகிறான்.”
பெரியவர் தேம்பி தேம்பி அழுதார்.
அவர் கூட வந்தவர்களும் அழுதார்கள். எனக்கு உஸ்தாத் பல முறை பயான் செய்யும்போது நான் அழுதது நினைவுக்கு வந்தது. உஸ்தாத் அழுவுறதும் ஒரு நியமத் என்பார்கள்.
“அதோ பள்ளி வாசல் தெரியுது பாருங்கள். அங்க, எங்க உஸ்தாத் இருப்பார்.”
“ஊஸ்தான்னா.”
“உஸ்த்தாத். குரான் ஓதிக்கொடுக்கிற வாத்தியார். ஹஜ்ரத் இல்லை. பள்ளி இமாமை பார்க்கணும்ன்னு சொல்லுங்கள். அவரைக் காண்பிப்பார்கள், அவர் என்னையச் சொல்லுவார்.”
இதற்கு மேல் நிற்க வேண்டாமென முட்டை கொண்டு வந்த கீஸ் பையை எடுத்தால் பத்து முட்டையும் உடைந்து இருந்தது. பெரியவரும் அவர் கூட வந்தவர்களும் முட்டை வாங்கித்தருகிறோம் என்றதை காதில் வாங்காமல் வேகமாக கிளம்பிவிட்டேன்.
யா… அல்லாஹ். நீ முட்டையைப் படைக்கும்போதே ஓட்டைக் கெட்டியாகப் படைத்திருக்கக்கூடாதா. இல்லை என்றால் இதை மனிதர்கள் தின்காம இருக்கிறது மாதிரி செய்திருக்கக்கூடாதா. ஒரு சின்னப் பையன் இப்படி சித்திரவதை படுவான்னு உனக்குத் தெரியுந்தானே அல்லாஹ்.
இப்ப நான் என்னப் பண்ட்றது. உம்மா திட்டுவாங்களா இல்லை அடிப்பாங்களா. இது வட்டலப்பம் செய்யவா, இல்லை மதியம் ஆனம் செய்யவா. உம்மாக்கிட்ட காசு இருக்குமா, இருக்காதா வீட்டை நெருங்க நெருங்க பயம் அதிகமாகிவிட்டது.
எதையாவது ஓதலாமா என்றால் அழுகையைத்தவிர எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது.
இன்றைக்கு ஜூரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உம்மா குப்பையைப் போட வெளியே வந்து கொண்டு இருந்தார்கள்.உடுப்பெல்லாம் அழுக்காகாமல் இருந்தால்
ஓடிக் கட்டிப்பிடித்திருப்பேன்.
உம்மா என்னைய அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நான் அழுது கொண்டே எல்லாவற்றையும் சொல்லிக் காண்பித்தேன்.
‘அல்லாஹ்வே..’
‘அல்ஹம்துலில்லாஹ்…’
‘மாஷா அல்லாஹ்.’
‘நவ்துபில்லாஹ்’ என்று நான் சொல்லிக்கொண்டு இருப்பதற்கு
இடையிடையே மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்
“உனக்கு எங்கையும் அடிபடலையே வாப்பா.”
“இல்லைம்மா.”
“கீஸை வெளியே வீசிட்டு, குளிச்சிட்டு, அப்படியே வாளியில சோப்புத்தூளப்போட்டு ஊர வச்சிட்டு சாப்பிட வாங்க வாப்பா. திடீர்ன்னு வெளியூர் போகவேண்டியதாக இருக்கு மச்சி. வர கொஞ்ச நாளாகும். மச்சான் வாங்கியாந்த முட்டைகள் இருக்கு நீங்கள் வச்சுக்குங்க மச்சின்னு சுலைஹா கொடுத்துட்டுப் போனா. நான் சமச்சிட்டேன். குளிச்சிட்டு சாப்பிட வாங்க வாப்பா.” என்றார்கள்.
“எத்தனை முட்டைம்மா.”
“பத்து முட்டை வாப்பா.”
எனக்கு இரண்டு ரக்காத் தொழ வேண்டும் போலத் தோன்றியது. ஸலவாத்தையும் ஓத வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வெளியே வீசிய கீஸைக் கிழித்து நாய் நக்கிக் கொண்டிருந்தது. இரண்டு காக்கைகள் முட்டை ஓட்டை தூக்கிக்கொண்டு பறந்தது.
யா… அல்லாஹ் இவைகளுக்கு உணவளிக்கத்தான் இத்தனை சிரமம் கொடுத்தாயா என்ற நினைப்பு வந்தது.
அந்த நாய் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டது.
‘அல்ஹம்துலில்லாஹ்.’
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
***