மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

This entry is part 7 of 9 in the series 29 ஜூன் 2025

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்:

(THE CONQUEST OF HAPPINESS)

[*OUR SWEETEST SONGS ARE THOSE THAT TELL OF SAADEST THOUGHT என்று உலகம் புகழும் கவிஞர் SHELLEY எழுதியிருக்கிறார். இருந்தாலும், ஏன் எப்போதுமே துயரத்த்தில் தோய்ந்த கவிதைகளையே எழுதவேண்டும்? அப்பழுக்கற்ற சோகத்தை எழுதுவதைப்போல் ஏன் அப்பழுக்கற்ற சந்தோஷகணத்தை நாம் எழுதக்கூடாது என்று ஒரு கவிதைநூலுக்கான முன்னுரையில் வாசகர் விருப்பமாகக் கேட்டிருந்தேன். கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் அதுகுறித்து என்னைக் குற்றஞ்சாட்டுவதாக விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த இன்னொரு கவிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். சபை நாகரீகம் கருதி நான் பேசாமலிருந்தேன். பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் இந்த நூல் THE CONQUEST OF HAPPINESS தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தது.]

C:\Users\computer\Desktop\RUSSEL\russel 1.jpg

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!

(BERTRAND RUSSEL)

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:

லதா ராமகிருஷ்ணன்

ஒரு பிரிட்டிஷ் தத்துவஞானி, தர்க்கவாதி, கணிதவியலாளர், வரலாற்றாசிரியர் மற்றும் சமூக விமர்சகர், போர் எதிர்ப்பு ஆர்வலர். அணு ஆயுதக் குறைப்பு மற்றும் வியட்நாம் போரை எதிர்த்தார், மேலும் முதல் உலகப் போரின் போது அமைதிக்காக சிறை சென்றார்

இவர் சமூக மற்றும் தார்மீக பிரச்சினைகள் குறித்த ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார்ஆவார்அவர் பகுப்பாய்வு தத்துவத்தின் (Analyrical Philosophy) நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.  1950 ஆம் ஆண்டு மனித விழுமியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு  இவருக்கு வழங்கப்பட்டது

தத்துவத்தின் மதிப்பில்“, “கணிதத்தின் கோட்பாடுகள்போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்தத்துவத்தின் முக்கியத்துவத்தையும், அறிவை நோக்கிய அதன் பங்கையும் வலியுறுத்தினார்சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார் மற்றும் சமூக மாற்றத்திற்காக வாதிட்டார்

1970 பிப்ரவரி 2 அன்று இறந்தார்

C:\Users\computer\Desktop\RUSSEL\russel 3.jpg
C:\Users\computer\Desktop\RUSSEL\images (2).jpg

THE CONQUEST OF HAPPINESS (மகிழ்ச்சியைக் கைவசப்படுத்துதல்) என்ற இவருடைய நூல் 1930இல் பிரசுரமானது. இதுவரை பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. 

இது இவருடைய பரவலாகப் பேசப்படும் நூல்களுள் ஒன்று. மொத்தம் 17 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் மனிதன் ஏன் மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறான்? அவன் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டும்? என்று மானுடத்தின் மீதான உண்மையான அக்கறையோடும் கரிசனத்தோடும் மனித வாழ்வின் இந்த அடிப்படை அம்சத்தை பல்வேறு கோணங்களிலிருந்து ஆய்ந்தலசுகிறது. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் முன்வைக்கும் ஆய்வலசல்கள் சிலவற்றோடு நான்ம் உடன்படாமல் போகலாம், ஆனால், அவர் மனிதனின் என்றுமான தேடலாகிய மகிழ்ச்சி  குறித்தும் அதன் இன்மை குறித்தும் in all seriousness தீர ஆய்ந்தலசிக் கருத்துரைத்திருக்கிறார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த நூல், 1) எது மனிதர்களை மகிழ்ச்சியற்றவர் களாக்குகிறது? 2) Byron வகை மகிழ்ச்சியின்மை 3) போட்டி 4) அலுப்பும் பரவசமும் 5) சோர்வு 6) பொறாமை 7) பாவ உணர்வு 8) தண்டிக்கப்படுவோம் என்ற பீதிக்கலவரம் 9) பொதுமக்களின் அபிப்பிராயம் குறித்த அச்சம் 10) மகிழ்ச்சியடைதல் இனியும் சாத்தியமா? 11) உற்சாகம் 12) பாசம் 13) குடும்பம் 14) பணி 15) பொதுவான ஆர்வங்களும் ஈடுபாடுகளும் 16) முயற்சியும் விலகிய மனப்பான்மையும் 17) மகிழ்ச்சியான மனிதர்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் வாழ்க்கை வரலாறும், அவருடைய எழுத்தாக்கங்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றனவா, மொழிபெயர்க் கப்பட்டிருக்கின்றனவா என்று விவரம் தெரியவில்லை. 

இங்கே நூலின் முதல் அத்தியாயம் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தரப்பட்டுள்ளது.

முன்னுரை

 இந்த புத்தகம் கற்றறிந்த சான்றோர்களுக்கானது அல்ல. அல்லது, வாழ்வியல் ரீதியான ஒரு பிரச்சினையை வெறுமே பேசிக்கொண்டிருந்தால் போதும் என்பதாக பாவிப்பவர்களுக்கு அல்ல. இந்த நூலின் இனியான பக்கங்களில் ஆழமான தத்துவமோ அல்லது ஆழ்ந்த புலமையையோ காண இயலாது.  பொது அறிவு அல்லது நடைமுறை அறிவு என்று நான் நம்புகின்ற ஒன்றால் உத்வேகம் அளிக்கப்பட்ட சில கூற்றுக்களை ஒருங்கிணைத்துத் தருவது மட்டுமே என் நோக்கமாக அமைந்துள்ளது. நான் இதில் வாசகர்களுக்குத் தந்திருக்கும் செய்முறை விளக்கங்களைப் பற்றி நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்: அவை என்னுடைய அனுபவத்தாலும், அவதானிப்பாலும் உறுதிசெய்யப் பட்டவை. அவற்றோடு பொருந்திய அளவில் நான் இயங்கியபோதெல்லாம் அவை எனதேயான மகிழ்ச்சியை அதிகரித்திருக்கின்றன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், இங்குள்ள பெருந்திரளான ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியை அனுபவிக்காமலேயே இருப்பவர்கள், மகிழ்ச்சியின்மையால் துயருற்றிருப்பவர் களாக உள்ளவர்கள்,  தங்களுடைய நிலைமைக்கான காரண காரியங்கள் பரிசோதிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிவகை ஒன்று பரிந்துரைக் கப்பட்டிருப்பதை இந்த நூலில் கண்டறியக் கூடும். நல்லவிதமாக மேற்கொள்ளப் படும் முயற்சியின் மூலம் மகிழ்ச்சியற்றிருக்கும் பலர் மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

***

பாகம் – 1

மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்

அத்தியாயம் 1

எது மனிதர்களை மகிழ்ச்சியற்றவர்களாக்குகிறது?

மிருகங்கள் எல்லாம் உடல்நலன் சரியாக இருந்து உணவும் போதுமான அளவு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர்கள் என்று நாம் விழைகிறோம். ஆனால் நவீன உலகில் அவர்கள் அப்படி இல்லை குறைந்தபட்சம் மிகப் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக இல்லை எனலாம். நீங்கள் உங்களவில் மகிழ்ச்சியற்றிருந்தால், நீங்கள் மட்டுமே அப்படியில்லை, மகிழ்ச்சியற்றிருத்தல் என்பதான அசாதாரணத் தன்மையுடையவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவாவது நீங்கள் தயாராக இருக்கவேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களெனில், உங்களுடைய நட்பினரில் எத்தனை பேர் அப்படியிருக்கிறார்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படி உங்கள் நட்பினரை ஆய்ந்து அலசிய பிறகு முகங்களை படித்தறியும் கலையை உங்களுக்கு நீங்களே கற்பித்துக்கொள்ளுங்கள். ஒரு சாதாரண நாளில் நீங்கள் சந்திப்பவர்களுடைய மனநிலைகளை உணர்ந்து உள்வாங்கிக் கொள்ள முடிந்தவர்களாக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

’ஓர் அடையாளக்குறியிருக்கிறது நான் சந்திக்கும் ஒவ்வொரு முகத்திலும்.  பலவீனத்தின் அடையாளங்கள்; துயரின் அடையாளங்கள்’ என்று கூறுகிறார் கவிஞர் Blake. இந்த அடையாளங்கள் வெவ்வேறாக இருக்கிறது என்றாலும் மகிழ்ச்சியின்மை உங்களை எல்லாவிடங்களிலும் எதிர்கொள்வதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் நியூயார்க்கில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் தலைசிறந்த நகரங்களில் அச்சு அசலான ஒன்று. அங்கே பரபரப்பான தெருவொன்றில் வேலை நேரங்களில் நில்லுங்கள். அல்லது, வார இறுதியில் ஒரு பிரதான வீதியில் அல்லது ஒரு மாலை நேர நடனக்கூடத்தில் இருந்துபாருங்கள். உங்களுடைய ’தான்’ என்ற உணர்வை, தன் முனைப்பை உங்களுடைய மனதிலிருந்து அகற்றி விடுங்கள். உங்களைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் அந்நியர்களின் ஆளுமைகள் உங்களை ஒவ்வொருவராக ஆக்கிரமிக்க அனுமதியுங்கள். இந்த வெவ்வேறு விதமான கூட்டங்களில் ஒவ்வொன்றுமே தனதே யான பிரச்சனையுள்ளதாக இருப்பதை உங்களால் கண்டறிய முடியும். வேலைநேரக் கூட்டங்களில் உங்களால் பரபரப்பை. படபடப்பை, அதீத கவனக்குவிப்பை,  ஜீரணக்கோளாறை, கையிலுள்ள போராட்டம் தவிர வேறெதிலும் ஆர்வமற்ற தன்மையை, வேடிக்கை விளையாட்டுக்கான இயலாமையை, தங்களுடைய சக உயிர்கள் குறித்த பிரக்ஞையின்மையை உங்களால் காண முடியும். வார இறுதியில் ஒரு பிரதான வீதியில் ஆண்களும் பெண்களும் – எல்லோருமே வசதியானவர்கள்; அவர்கள் சிலர் மிகவும் செல்வந்தர்கள் – மகிழ்ச்சியின்பத்திற்கான தேடலில், நாடலில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.  இந்த நாடலும் தேடலும் எல்லோராலுமே ஒரே சீரான வேகத்தில், ஊர்வலத்தில் உச்சபட்ச மெதுவாக ஓடும் காரின் வேகத்தில் மேற்கொள்ளப் பட்டு வருவதைக் காண முடியும். அந்த கார்களால் சாலையைப் பார்க்க முடிவதில்லை. சுற்றிலும் இருக்கும் இயற்கை காட்சிகளைக் காண முடிவதில்லை. ஏனெனில், கண்ணையும் கவனத்தையும் வேறு பக்கம் திருப்பினால் விபத்து ஏற்பட்டுவிடும். அந்த கார்வண்டிகளில் உள்ள எல்லோருமே மற்ற கார்களை முந்திச் செல்வதில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள். கூட்டம் காரணமாக அதை அவர்களால் சாதிக்க இயலாது. இந்த கவனக்குவிப்பிலிருந்து அவருடைய மனங்கள் விலகி அலையத் தொடங்கினால், வண்டியை ஓட்டும் பொறுப்பிலில்லாமல் வண்டியில் பயணம் செய்யும் சிலருக்கு இப்படி அவ்வப்போது நடப்பதுண்டு, விவரிக்க இயலாத அலுப்பும் சலிப்பும் அவர்களை ஆக்கிரமித்து சிறிய அதிருப்தி என்பதாக தங்கள் அடையாளங்களை அவர்கள் மீதும் பதிக்கின்றன. அவ்வப்போது ஒரு கார் வண்டி முழுக்க நிறைந்திருக்கும் ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் உண்மையான மகிழ்ச்சியின்பத்தை வெளிப்படுத்துவார்கள் ஆனால், அவர்களுடைய ஆரவாரச் செய்கைகளால், அதிரடி நடவடிக்கைகளால் சூழலில் ஒவ்வாமையுணர்வை ஏற்படுத்தி முடிவில் ஒரு விபத்தை ஏற்படுத்தி காவல்துறை யினரின் கைகளில் மாட்டிக்கொள்வார்கள். விடுமுறைக்காலத்தில் மகிழ்ச்சி அனுபவித்தல் சட்டத்திற்கு புறம்பானது.

 அல்லது, மறுபடியும், ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுதில் மனிதர்களை கவனித்துப்பாருங்கள்.  எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற தீர்மானத் தோடுதான் வருகிறார்கள். ஒரு பல் மருத்துவரிடம் செல்லும்போது அங்கே கத்திக் கூப்பாடு போடக்கூடாது என்று அழுத்தமான சங்கல்பத்துடன் செல்வது போன்ற அதே அளவு தீர்மானத்தோடுதான் வருகிறார்கள். மதுவருந்தலும் இணையைத் தொட்டுத்தடவுவதுமே மகிழ்ச்சியின் நுழைவாயில்கள் என்று கொள்ளப்பட்டுள்ளன. எனவே அங்கே வருவோர் உடனடியாகக் குடிக்கிறார்கள். தங்கள் இணையர்கள் தங்களை எத்தனை மனஞ்சுளுங்கவைக்கிறார்கள், வெறுப்பேற்றுகிறார்கள் என்பதை கவனிக்காமல் இருக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவு மதுவருந்திய பின் ஆண்கள் விசும்பத் தொடங்குகிறார்கள். தாம் எத்தனை உதவாக்கரைகள், ஒழுக்க ரீதியாக எந்த அளவுக்கு தரம் தாழ்ந்தவர்கள், தங்களுடைய தாயாரின் அன்புக்கும் அபிமானத்திற்கும் தாம் எந்தவிதத்திலும் தகுதியானவர்களாக ஒழுக்கரீதியாக இல்லையே என்றெல்லாம் புலம்பத்தொடங்குகிறார்கள். மது அவர்களுக்காகச் செய்வதெல்லாம் நிதானமாக, சுயவுணர்வோடு அவர்கள் இருக்கும் சமயங்களில் தங்களது தர்க்க அறிவு அழுத்தி – அடக்கிவைத்திருக்கும் அவர்களுடைய குற்ற வுணர்வை விடுதலை செய்வதுதான்.

இத்தகைய பலவிதமான மகிழ்ச்சியின்மைகளுக்கான காரணங்களில் சில சமூகக் கட்டமைப்பில் பகுதியளவு இருக்கின்றன; பகுதியளவு தனிநபர் சார் உளவியலில், மனப்போக்கில் அடங்கியிருக்கின்றன. இதுவுமே கூட கணிசமான அளவு சமூகக் கட்டமைப்பினால் உருவாவதுதான்.  இதற்கு முன்பு நான் மகிழ்ச்சி வளர்த்தெடுக்க சமூகக் கட்டமைப்பில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து எழுதியிருக்கிறேன். போர் என்ற ஒன்று இல்லாமல் ஆக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து, பொருளாதார ரீதியான சுரண்டல் குறித்து, கொடூரத்திலும் அச்சத்திலும் நிலைகொண்டிருக்கும் கல்வி குறித்து எல்லாம் இந்த புத்தகத்தில் பேசுவது என் நோக்கம் நோக்கம் அல்ல

 போரை முற்றிலுமாக தவிர்க்கவும் ஒழிக்கவும் உதவும் ஒரு சமூக கட்டமைப்பை கண்டறிந்துகொள்ள வேண்டியது நம்முடைய மனித நாகரீகத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், மனிதர்கள் இத்தனை மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கையில் எந்தவித சமூகக் கட்டமைப்பாலும் போரை ஒழிக்க இயலாது. மனிதர்கள் இத்தனை அதிகம் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கும்போது, பகலின் ஒளியைத் தொடர்ந்த ரீதியில் பொறுத்துக்கொண்டிருப்பதை விட ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதே குறைந்த அளவு பயங்கரமானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இயந்திரங்களின் வழியாக உற்பத்தி சார் நன்மைகள் அவை மிகவும் தேவைப்படுபவருக்குக் கொஞ்சமேனும் பயனளிப்பதற்கு வறுமை பல்கிப் பெருகுவதைத் தடுக்கவேண்டியது மிகவும் அவசிய மாகிறது. ஆனால், வசதி படைத்தவர்களே மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கும் போது எல்லோரையும் செல்வந்தர்கள் ஆக்குவதால் என்ன பயன்? கொடூரத்திலும், அச்சத்திலும் கல்வி கற்கும் நிலை மோசமான விஷயம். ஆனால், இத்தகைய வேட்கைகளிடம் அடிமைகளாக இருப்பவர்களுக்கு வேறு எந்த விதமான கல்வியும் தரப்பட வழியில்லை. இத்தகைய அக்கறைகள் நம்மை தனிநபர் சார் பிரச்சனைக்கு இட்டுச்செல்கின்றன. ஒரு ஆனால் அல்லது பெண்ணால் இங்கே இப்போது, நம்முடைய எப்போதுமே ஏக்கத்தின் பிடியிலிருக்கும் சமூகத்தின் மத்தியில் இருப்பவர்கள் தமக்கான மகிழ்ச்சியை அடைவதற்கு என்ன செய்யலாம்? இந்தப் பிரச்சினையை விவாதிப்பதில் நான் புறவயமாகக் காணப்படும் அவலத்தின், துன்பத்தின் உச்சபட்ச காரணத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறவர்களை மட்டுமே இந்த புத்தகத்திற்காக கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். உணவுக்கும் உறைவிடத்திற்கும் போதுமான அளவு வருமானமும், தினசரி வேலை களைச் செய்துவரப் போதுமான உடல்நலமும் கிடைப்பது சாத்தியமே என்று அனுமானித்துக்கொள்கிறேன் மனித வாழ்வில் ஏற்படும் பேரழிவுகளை, பெரும் சோகங் களை –  ஒருவருடைய குழந்தைகள் இறந்துவிடுவது, அல்லது, அனைவரும் காண மதிப்பழிக்கப்படுவது போன்றவற்றை நான் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய பேரழிவுகள் பெரும் சோகங்கள் பற்றியும் பேசவேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை மிக முக்கியமானவை. ஆனால், அவை இந்த நூலில் நான் சொல்ல விரும்பும் விஷயங்களிலிருந்து வேறுபட்டதொரு ஒழுங்கமைவைச் சேர்ந்தவை. நாடுகள் பலவற்றிலும் பெரும்பாலான மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் தினசரி வாழ்வில் அவர்களை அலைக்கழிக்கும் மகிழ்ச்சியின்மைக்கு ஒரு நிவாரணத்தை, அதிலிருந்து குணமாவதற்கான வழியைப் பரிந்துரை செய்வதே என் நோக்கம். இத்தகைய மகிழ்ச்சியின்மை சகிக்கமுடியாததாக இருக்கிறது. ஏனெனில், இதற்கான புறவயக் காரணம் என்று எதுவும் இல்லை. அதே சமயம், இந்த மகிழ்ச்சியின்மையிலிருந்து தப்பிப்பது இயலாத காரியமாகத் தோன்றுகிறது 

இந்த மகிழ்ச்சியின்மை பெருமளவில் உலகைப் பற்றிய தவறான கண்ணோட்டங்களின் விளைவாக ஏற்படுகிறது. நெறிமுறைகள் / ஒழுக்கவியல் குறித்த தவறான கண்ணோட்டங்கள் மூலமாக, வாழ்வு சார்ந்த, பழக்க வழக்கங்கள் குறித்த தவறான கண்ணோட்டங்களின் விளைவாக ஏற்பட்டிருப்பது என்று நான் நம்புகிறேன். இந்த மகிழ்ச்சியின்மை,  மனிதர்களோ மிருகங்களோ  – அவற்றின் எல்லாவிதமான மகிழ்ச்சியும் முடிவில் எதைச் சார்ந்திருக்கிறதோ அந்த, சாத்தியமாகும் விஷயங்களை அடைய இயல்பாகவே நம்மிடம் இருக்கும் உத்வேகமும் பசியும் அழிந்தொழியவே வழிவகுக்கிறது. இந்த இயல்பான விஷயங்கள் மனித சக்திக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.மனிதனின் மகிழ்ச்சி, சராசரியான நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும் நிலையில் அவனால் கைக்கொள்ளப்படத் தேவைப்படும் மாற்றங்களை இந்த நூலில் சுட்டிக்காட்ட, பரிந்துரைக்க முனைந்துள்ளேன்.

 நான் பரிந்துரைக்க விரும்பும் வாழ்க்கைதத்துவத்தை மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்ய சில ’தன்வரலாற்று’ச் சொற்களை எடுத்துரைக்க விரும்புகிறேன். ஒரு குழந்தையாக எனக்கு மிகவும் பிடித்த  பிரார்த்தனை கீதம் WEARY OF EARTH AND LADEN WITH MY SIN ( இந்த பூமி களைப்பூட்டுகிறது; பாவங்கள் பாரமேற்றுகின்றன). எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, நான் எழுபது வயது வரை வாழ நேருமானால் என் வாழ்வின் 14 பங்கில் ஒரு பங்கைதான் இதுவரை சகித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பில் எனக்கு இன்னும் எஞ்சியுள்ள அலுப்பும் சலிப்பும் சகிக்க முடியாததாகவே இருக்கும் என்ற கருதினேன். வளரிளம் பருவத்தில் வாழ்க்கையை தீர வெறுத்தேன். பல நேரங்களில் தற்கொலையின் விளிம்புக்குச் சென்றேன். ஆனால், கணிதவியலை இன்னும் அதிகம் கற்க வேண்டும், அறிய வேண்டும் என்ற ஆர்வம் என்னை தற்கொலை யிலிருந்து காப்பாற்றியது. இப்பொழுது அதற்கு எதிர்நிலையில் நான் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். வருடா வருடம் எனக்கு வயது அதிகமாக ஆக நான் வாழ்க்கையை இன்னும் அதிகமான மகிழ்ச்சியோடு அனுபவிக் கிறேன்.

இதற்கு ஓரளவு காரணமாக இருப்பது வாழ்வில் நான் மிகவும் விரும்பியவை என்னென்ன என்பதை நான் கண்டறிந்துகொண்டு அவற்றில் பலவற்றை படிப்படியாக அடைந்து விட்டதும், விரும்பிய சிலவற்றை  – அடையமுடியாதது, அசாத்தியமானது –  வெற்றிகர மாக புறமொதுக்கிவிட்டதுமே இதற்கான காரணமாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்கிடமில்லாத அறிவுஞானம் ஏதாவது ஒன்றைப் பற்றி அல்லது எவரொருவரை பற்றி அடைவது என்பது ஆகக்கூடிய காரியம் அல்ல என்ற முடிவை வெற்றிகரமாக எட்டிவிட்டதைக் கூறலாம். ஆனால்,  மிகப்பெரிய அளவிலான காரணம் என் மீது எனக்கு இருக்கும் தன்முனைப்புச் சிந்தனை குறைந்துகொண்டே வருவதுதான். PURITAN EDUCATION பெற்ற பலரைப் போலவே எனக்கும் என்னைப் பற்றியே, என்னுடைய பிழைகள், பாவங்கள், போதாமைகள் இவற்றைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கும் வழக்கமிருந்தது. அதனால் எனக்கு நானே – நியாயமான அளவில் என்று உறுதியாகக் கூற முடியும் – அவலமான ஒன்றாகத் தோன்றினேன். படிப்படியாக நான் என்னுடைய போதாமைகள் போன்ற தன்முனைப்பான கண்ணோட்டங்களில் அக்கறை யற்றிருக்கப் பழகிக்கொண்டேன். புறவயமான விஷயங்களில் என்னுடைய கவனத்தை குவிக்க தொடங்கினேன். உலகம் இருக்கும் நிலைமை, அறிவு சார் பல்வேறு துறைகள், நான் நேசிக்கும் தனிநபர்கள் போன்று புறவய விஷயங்கள் ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய வேதனையை தரக்கூடிய, கொண்டுவரக்கூடியவை என்பது உண்மையை. உலகம் போரில் ஆளை இறங்கி இருக்கும் அறிவுஞானம் என்பது ஒரு சிலவற்றைப் பொறுத்தவரை அடையவே முடியாததாக இருக்கும். நட்பினர் இறந்துபோவார்கள் ஆனால், இந்த விதமான வேதனைகள் வாழ்வின் ஆதாரமான தன்மையை அம்சத்தை குறைப்பதில்லை. தன்னைப் பற்றி தனக்கு இருக்கும் ஏற்படும் சுய வெறுப்பை போல். மேலும், புறவயமான ஆர்வங்கள் எல்லாம் ஏதாவது ஒரு செயல்பாட்டை ஊக்குவிக் கின்றன. அந்த ஆர்வம் உயிர்ப்போடு இருக்கும் வரை அது என் மனச்சோர்வுக்கான முழுமையான தடுப்புச் சக்தியாக விளங்குகிறது. மாறாக, ஒருவரிடம் உள்ள தன்னீர்ப்பு, சுயம் சார்ந்த ஆர்வம் எந்தவகையான முன்னோக்கிய செயலுக்கும் நம்மை வழி நடத்து வதில்லை. ஒரு நாட்குறிப்பேட்டை பராமரிக்க அது வழி செய்யலாம். தன்னைத்தானே உளவியல் ரீதியான அலசலுக்கு உட்படுத்த அது வழி செய்யலாம். ஒரு துறவியாக கூட நம்மை மாற்றலாம். ஆனால், துறவியாக இருந்தாலுமே துறவிமடத்தின் வழக்கமான நியமங்கள் அவரை தனது ஆன்மாவை மறக்க வைத்திருந்தால் ஒழிய அவர் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். மதம் காரணமாக கிடைப்பதாக அவர் சொல்லும் மகிழ்ச்சி அவர் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளியாக மாறுவதிலும் அவருக்குக் கிடைத்திருக்க முடியும். அதாவது, அவ்வாறாகவே வாழ்ந்திருக்கும்படியான கட்டாயம் அவருக்கு ஏற்பட்டால்). மிக அதிக அளவில் தன் முனைப்பில் ஆழ்ந்திருக்கும் அவமானம் அவலமானவர்களுக்கு, வேறு எந்த வழியிலும் குணப்படுத்த இயலாதவர்களுக்கு புறவயமான ஒழுங்கு, கட்டுப்பாடு மட்டுமே மகிழ்ச்சிக்கான பாதையாக அமைகிறது.

 தன்முனைப்பு, தன்னுள் ஆழ்ந்திருத்தல் என்பது பலவகைப்பட்டது. SINNER, NARCISSIST, MEGALOMANIAC – பாவி, அதீத  தற்காதல்காரர், அதீத தற்பெருமைக்காரர் –   ஆகிய மூன்று பரவலாக காணக் கிடைக்கும் பிரிவினரை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

 பாவி அல்லது குற்றவாளி என்ற பிரிவினரை பற்றி நான் பேசும்போது பாவ காரியங்களை செய்கிறவர்களைப் பற்றிப் பேசவில்லை.  பாவகாரியங்களை, அந்த வார்த்தையை நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளும் விதத்தில், எல்லோருமே செய்கிறார்கள்; அல்லது, யாருமே செய்வதில்லை. குற்றம் அல்லது பாவம் குறித்த பிரக்ஞையில் ஆழ்ந்திருக்கும் மனிதனையே நான் பாவி என்று குறிப்பிடுகிறேன். இந்த மனிதர் தொடர்ந்த ரீதியில் தனது ஆன மறுதலிப்பை கடவுளின் மறுதலிப்பாக ஏற்றவாறு இருக்கிறார். அல்லது, அவருக்கு மத நம்பிக்கை உண்டு என்றால் அவர் தனது மறுதலிப்பை கடவுளின் மறுதலிப்பாக பொருள் பெயர்க்கிறார். தான் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றி அவருடைய மனதில் தன்னை பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அந்த பிம்பம், உண்மையில் தான் எப்படிப்பட்டவராக இருக்கிறோம் என்ற அவருடைய அறிதலோடு தொடர்ந்த ரீதியில் முரண்பட்டுக்கொண்டே, மோதிக்கொண்டேயிருக்கிறது. இந்த மனிதர் தன்னுடைய பிரக்ஞாபூர்வமான சிந்தனையில் தனது தாயின் முழங்கால்களில் உட்கார வைக்கப்பட்டு கற்பிக்கப்பட்ட மூதுரைகளை, பொன்மொழிகளைஅவர் பல காலத்திற்கு முன்பே புறமொதுக்கியிருக்கும் பட்சத்தில் ‘பாவம்’ குறித்த அவருடைய புரிதல் அவருடைய நனவிலி மனதில் ஆழப் புதைந்திருக்கும். அவர் போதையில் இருக்கும் போது, அல்லது, உறங்கிக் கொண்டிருக்கும்போது மட்டுமே அது மேலெழும்பி வரும். என்றாலும், அது ஒன்றே போதும் – எல்லாவற்றிலிருந்தும் கிடைக்கும் சுவையை அகற்றி விட அது ஒன்றே போதுமானதாகக்கூடும். அடியாழத்தில் அவர் இன்னமும் அவரது குழந்தைப்பிராயத்தில் அவருக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தையும் ஏற்றுக் கொண்டவரா கவே இருக்கிறார். கெட்ட வார்த்தையில் திட்டுவது தப்பு, மது அருந்துவது தப்பு, சாதாரண வியாபார தந்திரம் தவறு -எல்லாவற்றுக்கும் மேலாக பாலுறவு தவறு என்று. இந்த நுகர்வின்பங்கள் எதிலிருந்தும் அவர் தன்னை விலக்கிக்கொள்வதில்லை. ஆனால், அவை யெல்லாமே, அவை தன்னை மதிப்பழிக்கின்றன, கேவலப்படுத்துகின்றன என்ற உணர்வால் அவனுக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன. தனது முழுமொத்த ஆத்மாவாலும் அவன் விரும்பும் ஒரே இன்பம் தனது தாயால் அங்கீகரிக்கப்பட்டு, அன்போடு வருடித் தரப்படுவதுதான். அதைத் தனது குழந்தைப்பிராயத்தில் அனுபவித்ததை அவனால் நினைவுகூர முடிகிறது. இந்த இன்பம் அவனுக்கு இனியும் கிடைக்க வழியில்லை என்பதால் இனி எதுவுமே ஒரு பொருட்டல்லை என்று எண்ணுகிறான் அவன். குற்றம் புரிந்துதானாகவேண்டும் என்ற நிலையில் மிக ஆழமாக குற்றத்தில் இறங்க முற்படுகிறான் அவன். காதல்வயப்படும்போது தாய்மைக்கே உரித்தான பாசத்தை, அன்பை எதிர்பார்க்கிறான். ஆனால், அதை அவனால் ஏற்க இயலவில்லை. ஏனெனில், அம்மா என்ற பிம்பம் காரணமாக அவனால், பாலுறவும் அது சார்ந்த தொடர்புறவும் கொள்ளும் எந்த பெண்ணுக்கும் மரியாதை காட்ட முடியவில்லை. பின், தனது ஏமாற்றத்தில் அவன் கொடூரனாக மாறுகிறான். தன் கொடூர குணத்தை எண்ணி வருந்துகிறான். கற்பனை செய்யப்பட்ட குற்றம் அது குறித்த உண்மையான குற்ற உணர்வு ஆகிய அந்த அலுப்போட்டும் வழக்கமான சுழற்சியை புதிதாக மீண்டும் தொடங்குகிறான். இதுவே மிகவும் இறுகிய அளவில் தீயவர்களாக இருக்கும் பலரின் உளவியலாகும். அவர்களை இலக்கின்றி எதையோ செய்ய தூண்டுவது, அலையச் செய்வது அடைய சாத்தியமற்றதொரு விஷயத்திற்கான (அம்மா அல்லது அம்மா-பதிலி) அதீதப் பற்றும், அதனோடு சேர்ந்த அளவில் நமது ஆரம்ப வருடங்களில் அபத்தமானதொரு நெறிமுறைக் கோட்பாட்டைக் கைக்கொள்ளுதலும்தான். வாழ்வின் ஆரம்ப கால நம்பிக்கைகள் பாசங்கள் ஆகியவற்றின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலையாவது இந்த தாய்மை சார் ஒழுக்கவியலுக்கு பலியாகிறவர்கள் மகிழ்ச்சியை நோக்கி முதல் அடி எடுத்துவைத்தலாக அமையும்.

அதீத தற்காதல்(Narcissism)  ஒருவகையில் வழக்கமாய் கொண்டிருக்கும் குற்றம் பற்றிய உணர்வின், புரிதலின் எதிரிடையான விஷயம் எனலாம்.  அது தன்னைத்தானே ஒருவர் வியந்து போற்றுதல், மற்றவர்களால் அப்படி வியந்து போற்றப்பட வேண்டும் என்று விரும்புதல் ஆகிய வழக்கத்தில் அமைந்திருப்பது. ஒரு புள்ளி வரை அது இயல்பானது. அதைக் கண்டிக்கவோ மதிப்பழிக்கவோ தேவையில்லை. இந்த வழக்கம் அதீதமான அளவில் ஒருவரை ஆட்கொள்ளும்போதுதான் அது ஒரு பெரிய அளவிலான குற்றம் அல்லது பாவ காரியம் ஆகிவிடுகிறது. பெண்கள் பலரிடம், குறிப்பாக, பணக்கார உயர்வர்க்க சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களிடம் அன்பை உணர்தலுக்கான திறனாற்றல் முற்றிலுமாக வறண்டுவிட்டது. அந்த இடத்தை, அத்தனை ஆண்களும் தன் மீது காதல் வயப்பட வேண்டும் என்று வலுவான ஆர்வம், வேட்கை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. இத்தகைய பெண்களில் ஒருவர் தன்னை ஒரு ஆண் விரும்புகிறார் என்பதை தெரிந்துகொண்டுவிட்டால் அதன் பின் அந்த பெண்ணுக்கு அந்த ஆண் எந்த விதத்திலும் தேவைப்படாதவர் ஆகிறார். இதே விஷயம், அந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஆண்களுக்கும் நேர்கிறது. இதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக LIAISONS DANGEREUSES  (*“Les Liaisons Dangereuses,” or “Dangerous Liaisons,” 18ஆம் நூற்றாண்டின் ஒரு ப்ரெஞ்சு நாவல். இரண்டு உயர்குடி நபர்களைப் பற்றிய இந்நாவலில் அவர்கள் ஒருவரை யொருவர் காதல்வயப்படச் செய்து ஏமாற்றிக்கொள்கிறார்கள்; ஆட்டுவிக்கிறார்கள். இந்நாவலில் காதல், வேட்கை ஏமாற்றுதல், கட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகள் ஆகியவற்றை வீழ்ச்சியடைந்துவரும் ப்ரெஞ்சு மேற்குடி வர்க்கப் பின்னணியில் பேசுகிறது)  இன் கதாநாயகனைச் சொல்லலாம். தற்காதல், தற்பெருமை இந்த உச்சத்தில் ஒருவரிடம் இடம்பெறும் பட்சத்தில் தன்னைத் தாண்டி பிற எந்த மனிதரிடமும் ஒருவருக்கு நிஜமான ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, அன்பு, காதல் இவற்றிலிருந்து நிஜமான திருப்தியை, மனநிறைவை அடைய முடியாமல் போய்விடு கிறது. மற்ற ஆர்வங்கள், ஈடுபாடுகள் இன்னமும் மோசமாக சரிவடைகின்றன. உதாரணத்திற்கு அதீத தற்காதல் வயப்பட்டிருக்கும் ஒருவர், மகத்தான ஓவியர்களுக்கு அளிக்கப்படும் நினைவஞ்சலியால் ஈர்க்கப்படுபவர், ஓர் ஓவிய மாணவராக மாறலாம். ஆனால், ஓவியம் என்பது அவரைப் பொறுத்தவரை அடைய வேண்டிய இலக்கல்ல; இலக்கை அடைவதற்கான வழி மட்டுமே என்பதால் ஓவியக்கலையின் வழிமுறைகள்,  நுட்பங்கள் அவருக்கு ஆர்வமூட்டுவதில்லை எந்தவொரு விஷயத்தையும் தன்னோடு தொடர்புபடுத்தி மட்டுமே அவரால் பார்க்கமுடிகிறது. விளைவு, தோல்வியும் ஏமாற்றமுமே. கூடவே, கேலி கிண்டலும் வரவாகிறது. அவர் எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைப்பதில்லை. தம்மையே கதாநாயகனாக கதாநாயகிகளாக உன்னதமாகச் சித்தரிக்கும் நாவலாசிரியர்களின் படைப்புகளுக்கும் இதே கதிதான். ஒரு பணியில் கிடைக்கக்கூடிய மெய்யான தரமான வெற்றி என்பது அந்த வேலை எது சம்பந்தமானதோ, எதனோடு தொடர்புடையதோ அந்த விஷயம் குறித்த உண்மையான ஆர்வம் அக்கறையை பொறுத்தே அமைகிறது. வெற்றிகரமான அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராக வீழ்ச்சியடைவது, படிப்படியாக அவர்களிடம் சமூக அக்கறை குறைந்து அந்த இடத்தில் தன்னைப் பற்றிய அதீத அக்கறையும் பிம்பம் குடியேறுவதுதான். தன் மீது மட்டுமே ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கும் நபர் பாராட்டத்தக்கவர் அல்ல. அத்தகைவராக அவர் தன்னை உணர்வதுமில்லை. அதன் விளைவாக உலகமே தன்னை வியந்து போற்ற வேண்டும் என்ற ஒற்றை அக்கறையைக் கொண்டிருக்கும் அந்த நபர் தனது இலக்கை அடைய வழியில்லை என்றே சொல்லலாம். அப்படியே அவர் உலகம் போற்றும் புகழை அடைந்தாலும் அவரால் முழு நிறைவை, முழுமையாக சந்தோஷத்தை அடைய முடியவில்லை. காரணம் மனித உள்ளுணர்வு என்பது எப்போதுமே தன்மனைப்பு கொண்டதாக இருப்பதில்லை. 

அவ்விதமாய் ஒரு அதீதத் தற்காதல் கொண்ட ஆசாமி செயற்கையான அளவில் அவ்விதம் தன்னைத்தான் எல்லைக் குறுக்கிக்கொள்கிறான். அந்த மனிதன் ஒருவன் குற்ற உணர்வால் எந்த அளவுக்கு உண்மையாக மேலாதிக்கம் செய்யப்படுகிறானோ அந்த அளவுக்கு செயற்கையாக தன் எல்லையைக் குறுக்கிக்கொள்கிறான். கற்கால மனிதன் நல்ல வேட்டைக்காரராக இருப்பதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அவன் அதற்கான துரத்தியோடலில் ஆனந்தமும் அடைகிறான். தற்பெருமை  ஒரு கட்டத்திற்கு மேல் எந்த ஒரு செயல்பாட்டிலும் அதைச் செய்வதில் உள்ள இன்பத்தைக் கொன்றுவிடுகிறது. அவ்விதமாய் ஒருவித அலுப்பையும் மொண்ணைத்தனத்தையும் வரவாக்குகிறது. பல நேரங்களில் அதன் மூலாதாரம்  தயக்கம் என்பதாக இருக்கிறது. அதற்கான நிவாரணம் தன்மதிப்பு வளர்ச்சியடைவதில்தான் இருக்கிறது. ஆனால், இது தன்னிலிருந்து விலகிய அக்கறைகள் ஆர்வங்களால் தூண்டப்படும் வெற்றிகரமான செயல்பாட்டினால்தான் எட்டப்படுவதாகிறது. 

ஒரு தற்புகழ்ச்சியாளன் (megalomaniac) தற்காதல்காரனிடமிருந்து(Narcissist) எப்படி வேறுபடுகிறான் என்றால் அவன் எல்லோரையும் வசியம் செய்பவனாக, இருக்க வேண்டும் என்பதை விட அதிகாரம் மிக்கவனாக, சக்தி வாய்ந்தவனாக இருக்கவே அதிகம் விரும்புகிறான். மற்றவர்கள் தன்னை நேசிப்பதை விட தன்னைப் பார்க்க அச்சப்படுவதை அவன் விரும்புகிறான். இந்தப் பிரிவில் தான் ஏராளமான பைத்தியங்களும், சரித்திரத்தின் மகத்தான மனிதர்களில் பெரும்பாலும் இடம்பெறு கிறார்கள். அதிகாரம் மீதான பற்று, காதல் இயல்பான மனிதகுலத்தில் ஒரு வலுவான அம்சமாக தற்பெருமைபோல் இடம்பெற்றுள்ளது. அவ்விதத்தில் அது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. ஆனால், அது அதீதமான அளவில் அல்லது எதார்த்த நிலைமை குறித்த போதுமான அறிதலும் புரிதலும் அற்ற அளவில் அமையும்போது மட்டுமே அது சகிக்கமுடியாததாகிறது. இது எங்கு ஏற்படுகிறதோ அந்த மனிதனை இது மகிழ்ச்சியற்ற வனாக்குகிறது, அல்லது, மடத்தனமானவனாக்குகிறது, அல்லது இரண்டுமாக்குகிறது. மகுடம் சூட்டப்பட்ட தலைவனாக தன்னை பாவித்துக்கொள்ளும் ஒரு மனநோயாளி ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி சிந்த சுவாதீனம் உள்ள மனிதன் பொறாமைகொள்ளும் வகையான மகிழ்ச்சி அல்ல. மாமன்னன் அலெக்சாண்டர் சித்த சுவாதீனமற்ற அந்த மனிதரைப் போன்ற போன்றவர் தான். ஆனால், அவரிடம் மனநோயாளியின் கனவை நனைவாக்கும் திறனாற்றல் இருந்தது. அதேசமயம் அவரால் தன்னுடையதேயான கனவை நனவாக்க முடியவில்லை. காரணம் அவருடைய வெற்றி வளர்ச்சியடைய அடைய அவருடைய கனவு தனது சாத்தியங்களை விரிவாக்கிக்கொண்டே போயிற்று. புகழுக்குத் தெரிந்த உச்சபட்ச மகத்தான மகத்தான வெற்றியாளர் அவர்தான் என்பது தெளிவானபோது தான் ஒரு கடவுள் என்று தீர்மானித்தார் அவர். அவர் மகிழ்ச்சியான மனிதராக இருந்தாரா? அவருடைய மது போதை, அவருடைய பெருங்கோபச் சீற்றங்கள், பெண்களிடம் அவருக்கு இருந்த ஈர்ப்பின்மை, அக்கறையின்மை, தன்னை தெய்வாம்சம் பொருந்தியவராக அவர் முடிவு செய்தது பறையறிவித்துக் கொண்டது  – இவை எல்லாமே அவர் மகிழ்ச்சியோடு இருக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. மனித இயல்பில் ஓர் அம்சத்தை வளர்த்து, அதற்காக மற்ற அம்சங்கள் அனைத்தையும் பாழாக்குவதில் இறுதியான உறுதியான திருப்தி / நிறைவு இல்லை. அதேபோல், ஒருவருடைய தன் முனைப்பை,  ஈகோவை, பூதாகரமாகப் பெருக்கிக் காட்டுவதற்கான கச்சாப் பொருளாக உலகனைத்தையும் பாவிப்பதிலும் பரிபூரண நிறைவு கிட்டுவதில்லை. பொதுவாக மிகவும் மேனியாக் சித்தம் கலங்கியவர் ஆனாலும் சரி, குறைந்தபட்ச சித்த சுவாதீனம் உள்ளவரானாலும் சரி – ஒருவித அதீத அவமதிப்புக்கு ஆளாகியவராக, ஒருவித அதீத அவமதிப்பின் உற்பத்திப் பொருளாகவே இருப்பார். தனது பள்ளிப் பருவத்தில் நெப்போலியன் சக மாணவர்களை விட மிகவும் தாழ்நிலையில் இருந்ததால் பாதிப்புக்கு ஆளானவர். சக மாணவர்கள் செல்வந்தர்கள்; செல்வ வளம் மிக்க மேற்குடி வர்க்கத்தினர். நெப்போலியன் உதவித் தொகை பெற்று படிக்கும் ஏழை மாணவன். புலம்பெயர்ந்தோர் திரும்புதலை அவர் அனுமதித்தபோது தன் பள்ளியிலான சக மாணவர்கள் தன் முன் தலைதாழ்த்தி வணங்குவதைக் காணும் மன நிறைவு ஏற்பட்டது அவருக்கு. என்னவொரு ஆனந்தம் இது!  இருந்தாலும், அது மன்னரை பலி கொடுத்து, அதேவிதமான மனநிலை அடைவதான அதேவிதமானதொரு மனநிறைவுக்கு இட்டுச் சென்றது.  அது ஸெயிண்ட் ஹெலனாவுக்கு இட்டுச்சென்றது. எந்த மனிதனும் தன்னிகரற்ற சக்தித் திறனாற்றல் கொண்டவர் அல்ல என்பதே உண்மை என்பதால் அதிகாரம் மீதான காதலால் மட்டுமே முழு நிறைவடையும் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு வாழ்க்கை கண்டிப்பாக ,சீக்கிரமாகவோ காலதாமதமாகவோ, கடந்துசெல்ல முடியாத, வெற்றிகொள்ள முடியாத தடைக்கற்களை சந்திக்கவேண்டிவரும். இப்படித்தான் நடக்கும் என்ற ஆறுதலும் புரிதலும் நமது பிரக்ஞைக்குள் வலுக்க்ட்டாயமாகப் பிரவேசிக்காமல் ஒருவகையான மனநிலைப் பிறழ்வின் மூலமே தடுக்கப்படுவது சாத்தியம் என்றாலும், ஒரு மனிதன் போதுமான அளவு அதிகாரம் மிக்கவனாக, உயர்ந்தவனாக இருந்தால் இந்த விஷயம் குறித்து தனக்கு சுட்டிக்காட்டுவோரை, எடுத்துச்சொல்வோரை அவனால் சிறையில் அடைக்கவும் சிரச்சேதம் செய்யவும் முடியும்.  இங்ஙனம், ஒடுக்குமுறைகள் அரசியல் மற்றும் உளவியல் ஆய்வு சார் உணர்வுத்தளங்களில் ஒன்றுக்கொன்று கைகோர்த்துச் செல்கின்றன. மேலும், எங்கெல்லாம் உளவியல் ஆய்வு சார் ஒடுக்குமுறை கணிசமான வடிவில் இடம்பெறுகிறதோ அங்கே உண்மையான சந்தோஷம் என்பது இல்லை. அதிகாரம் தனது முறையான வரம்பெல்லைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் அளவில் அது மகிழ்ச்சிக்கு பெருமளவு வழிவகுக்கலாம். ஆனால், அதிகாரம் என்பதே வாழ்வின் இறுதி முடிவாக பாவிக்கப்படும் அளவில் அது பேரழிவுக்கு புறவயமாக இல்லாவிடினும் உள்வயமாக ஒருவரை அழைத்துச் செல்கிறது .

மகிழ்ச்சியின்மைக்கான உளவியல்ரீதியான காரணங்கள் ஏராளமானவை, பலதரப் பட்டவை என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால், அவையெல்லாமே தமக்கிடையே பொதுவான ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அச்சு அசலாக மகிழ்ச்சியற்ற மனிதனாகத் திகழ்பவன் தனது வளரிளம்பருவத்தில் சில இயல்பான திருப்திகள் கிடைக்கப்பெறாமல் இழப்புற்றவனாக இருக்கிறான். அப்படி கிடைக்கப்பெறாத அந்த ஒரே திருப்தியை வேறு எந்த நிறைவுணர்வையும் விட மேலாக மதிக்கத் தொடங்குகிறான். அவ்விதமாய் தனது வாழ்க்கைக்கு ஒரு பக்கமான வழியே, அதிலும் வெற்றி குறித்த அளவுக்கதிகமான வலியுறுத்தல் கொண்டதாய், அதனோடு தொடர்புடைய செயல்பாடுகளை வலியுறுத்துவதற்கு மாறாக இறுதி வெற்றி குறித்து அளவுக்கதிகமான வலியுறுத்தல் கொண்ட அளவில் அமைந்ததை அவன் தனது வாழ்க்கைக்குத் தந்து விடுகிறான். இதில் இன்னொரு மாற்றமும் தற்காலத்தில் அதிக அளவு சகஜமாக காணப்படுகிறது. ஒரு மனிதன் தன்னை முழுமொத்தமாக முறியடிக்கப்பட்டதாக உணர்கிறான். ஆனால் அவன் எவ்வகையான நிறைவையும் நாடுவதில்லை; வெறும் கவனஞ்சிதறலையும் மறதியையுமே நாடுகிறான். அவ்விதமாய் அவன் இன்பத்தின் பக்கன் ஆகிறான். அதாவது, வாழ்க்கையின் உயிர்ப்புத்தன்மையை, உயிரோட்டத்தை குறைப்பதன் மூலம் வாழ்க்கையை சகித்துக்கொள்ளக்கூடியதாக மாற்ற முயல்கிறான். எடுத்துக்காட்டாக மது போதை ஒரு தற்காலிகத் தற்கொலை. அது வரவாக்கும் மகிழ்ச்சி வெறும் எதிர்மறையானது மட்டுமே. மகிழ்வின்மையின் கணநேரம் நிறுத்தம் மட்டுமே. தற்காதலனும், தற்புகழ்ச்சியாளனும் மகிழ்ச்சி என்பது சாத்தியமே என்று நம்புகிறார்கள். அதை அடைய சரியான வழிகளாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வழிகளை அவர்கள் பின்பற்றக்கூடும். ஆனால், போதைக்கிறக்கத்தை நாடும் மனிதன் அது எந்த வடிவத்திலானதாக இருந்தாலும் நம்பிக்கை அறவே இழந்துவிட்டவர். அவர் விஷயத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது மகிழ்ச்சி என்பது விரும்பத்தக்கதே என்று அவரிடம் வலியுறுத்துவது. மகிழ்ச்சியற்றிருக்கும் மனிதர்கள் சரியாகத் தூங்கமுடியாதவர்களைப் போல,  அது குறித்து எப்போதுமே பெருமிதவுணர்வு கொண்டிருப்பவர்கள். ஒருவேளை அவர்களுடைய பெருமிதம் தனது வாலை இழந்துவிட்ட நரி அது குறித்து அடையும் பெருமித உணர்வை ஒத்ததாக இருக்கலாம். அப்படியெனில் இந்த பெருமித உணர்விலிருந்து அவரை குணப்படுத்த நாம் செய்ய வேண்டியது – அவரால் இன்னொரு வாலை, புதிய வாலை வளர்க்க முடியும் என்பதையும், அதற்கான வழிவகைகளையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது. மகிழ்ச்சியாக இருக்கமுடிவதற்கான ஒரு வழியை கண்டுகொண்ட நிலையிலும் வேண்டுமென்றே மகிழ்ச்சியின்மையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறவர்கள் அரிதாகவே இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அத்தகைய மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால், மிகச் சிலராகவே இருப்பார்கள் என்பதால் அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே, வாசகர் மகிழ்ச்சியற்று இருப்பதைவிட மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார் என்று நான் அனுமானித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த விருப்பம் நிறைவேற என்னால் உதவ இயலுமோ, இயலாதோ – எனக்குத் தெரியாது. ஆனால்,  எப்படியிருந்தாலும் அதற்கான முயற்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வழியில்லை .

Series Navigationநிகரற்ற அன்பின் கரிசனம்சொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *