மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்

author
0 minutes, 17 seconds Read
This entry is part 11 of 13 in the series 25 ஜூன் 2017

 மல்லிகைஜீவா

                       (பிறந்த திகதி 27-06-1927)

 

                                                             முருகபூபதி   அவுஸ்திரேலியா                                  

 

 

நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள்.

எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன்  வள்ளுவர் இல்லத்திற்குச்  சென்றுவிட்டான்.

ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின்  மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும்  நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள்.

அன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார்.

அப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை.  அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது.

அதனைத்தான் பின்னாட்களில் தர்மாவேசம் எனப்புரிந்துகொண்டேன். அவருக்கு எமது தமிழ் சமூகத்திடம் ஏதோ கோபம், ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவே அந்த வயதில் தெரிந்துகொண்டேன்.

சங்கானை என்னும் இடத்தில் நடந்த சாதிக்கலவரம் பற்றி அவர் பேசினார். சாதி என்றால் என்னவென்று தெரியாமல்தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். விடுதியில்தான் அதன் அர்த்தம் எனக்கும் முருகானந்தனுக்கும் தெரிந்தது.

டொமினிக்ஜீவா,  அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றியும் பேசினார். அவர், ஒரு விறகுவெட்டிப்பிழைக்கும் தொழிலாளியின் மகன் என்ற தகவலும், தெருவிலிருந்த மின்கம்பத்தின் கீழே அமர்ந்து படித்திருக்கிறார் என்ற செய்தியும் டொமினிக்ஜீவா அன்று சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

டொமினிக்ஜீவா அன்று பேசும்போது அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. பேசி முடித்த பின்னர் அவருக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப்போத்தலை எடுத்து அருந்தினார்.

மிச்சமும் வைத்தார். அதனை அருந்துவதற்கு இரண்டு மாணவர்கள் போட்டியிட்டனர்.

அதுதான் நான் டொமினிக்ஜீவாவை முதல் முதலில் கண்ட காட்சி. அவரை பின்னாட்களில் சந்திப்பேன் என்றோ, அவர் வெளியிட்ட மல்லிகையில்தான் எனது முதலாவது இலக்கியப்பிரதி வெளியாகும் என்றோ, அவர் எனது குடும்ப நண்பராவார் என்றோ, அவர் பற்றி கட்டுரைகளும் நூலும் எதிர்காலத்தில் எழுதுவேனென்றோ அந்தச் சிறிய வயதில் நான் கனவுகூட காணவில்லை. ஆனால், நான் அன்று காணாத கனவெல்லாம் பிற்காலத்தில் கனவாக வந்து நனவாகியிருக்கின்றன.

அவருடன் நெருங்கிய பின்னர்.  அவரும் என்னுள் கனவுகளை விதைத்தார். அவற்றை நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன்,  தமது 90 ஆவது அகவைக்கு வந்திருக்கும் அவரை வாழ்த்துகின்றேன்.

முதல் முதலில் 1964 இல் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த பின்னர், மீண்டும் அவரை சந்தித்தது எங்கள் நீர்கொழும்பில்தான். அப்பொழுது 1971 ஆம் ஆண்டு.

ஏப்ரில் கிளர்ச்சி முடிந்து, மாலையானதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் காலத்தில் அவர் எங்கள் ஊருக்கு வந்திருக்கும் செய்தியுடன் நண்பர் செல்லையா செல்வரத்தினம் எங்கள் வீட்டுக்கு வந்தார். ( இவர் பின்னாளில் பத்திரிகையாளராக தினபதி – சிந்தாமணியில் பணியாற்றியவர். தற்போது பிரான்ஸிலிருக்கிறார்.)

நண்பரும் எழுத்தாளருமான நீர்கொழும்பூர் முத்துலிங்கம் அவர்களின் வீட்டுக்கு டொமினிக்ஜீவா வந்திருக்கிறார். அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை நடத்துகிறார் என்ற தகவலையும் செல்வரத்தினம் சொன்னார்.

நேரில் சென்று பார்த்தேன். 1964 இல் நான் பார்த்த அதே டொமினிக்ஜீவா. வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல். ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். அவரது வாயில் வெற்றிலை. அதனை குதப்பிக்கொண்டே பேசினார்.

அன்று 1964 இல்  மேடையிலிருந்து அவர் ஆக்ரோஷமாகப்பேசியபோது அருகில் செல்லவும் தயங்கியிருந்த நான், 1971 இல் அமைதியாக இலக்கியம்பேசியபோது தயக்கம் எதுவுமின்றி நெருங்கிப்பழகத்தொடங்கினேன்.

அந்த நெருக்கம் 1971 முதல் அவருக்கு 90 வயது வரும் இக்காலம் வரையில் விக்கினம் எதுவுமின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் அண்மையில் இலங்கை சென்றசமயத்திலும் அவரைச்சென்று பார்த்துவிட்டு வந்து  எழுதியிருக்கின்றேன்.

மல்லிகை ஜீவா என பின்னாளில்  அறியப்பட்டிருந்த டொமினிக்ஜீவா,  1966 இல் முதலாவது மல்லிகை இதழை வெளியிட்டார்.

“ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி

யாதியினைய கலைகளில் உள்ளம்

ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்

ஈன நிலைகண்டு துள்ளுவார்” 

என்னும் பாரதியின்  கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ்,  தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப்சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் விதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற)  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.

மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து,  இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர்  தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.

ஒரு  சிகையலங்காரத்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால்  ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர்  ஜீவா.

சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை   தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார்.  இந்தச்சரிதை  ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.

முழுநேர  எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான ஜீவா, இதழாசிரியராகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது. அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.

ஆயினும் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளோ- காகிதத்தட்டுப்பாடோ – வாழ்வாதார நெருக்கடியோ இல்லாத இந்த கணினி யுகத்திலும் கொழும்பிலிருந்து வெளியான மல்லிகை,  அதன் ஆசிரியராலேயே  நிறுத்தப்பட்டதும் ஈழத்து இலக்கிய உலகில் மறக்கமுடியாத செய்தியாகும்.

இலங்கை கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானவேளையில்  தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கான விருதை முதல் முதலில் பெற்றவரும் டொமினிக் ஜீவா என்பதும் முக்கியமான தகவல்.   அவர் குறிப்பிட்ட விருதைப்பெற்றுக்கொண்டு யாழ். ரயில் நிலையத்தில் வந்திறங்கியபொழுது,  அக்காலப்பகுதியில்   யாழ். மேயராக  இருந்த துரைராஜா என்பவரின் தலைமையில் யாழ்நகர மக்களின்  சார்பில் மகத்தான வரவேற்பும்  அளிக்கப்பட்டது.

அவ்வாறு யாழ். மக்களின் அபிமானத்திற்கு ஆளாகியிருந்த டொமினிக் ஜீவா,  போர் நெருக்கடியாலும்  விமர்சிக்கப்படவேண்டிய  சில  அரசியல்  அழுத்தங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து மல்லிகையை வெளியிட்டார்.

மல்லிகை பற்றி     இலங்கை பாராளுமன்றத்திலும் விதந்து பேசப்பட்டிருக்கும்  தகவலை   பாராளுமன்ற       குறிப்பேட்டில் ( ஹன்சார்ட்) பார்க்க முடிகிறது.

தேசத்தின் கண், சாகித்திய ரத்னா உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் மல்லிகை ஜீவா  முழுநேர எழுத்தாளராக, இதழாசிரியராக வாழ்ந்து, தற்பொழுது  கொழும்பின் புறநகரில் ஓய்விலிருந்தவாறு,  தமது எஞ்சிய காலத்தில், முந்திய காலம் பற்றி நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.  மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.

ஏறு போல் நட  – ஓய்தலொழி – குன்றென நிமிர்ந்து நில் – சிதையா நெஞ்சுகொள் – சுமையினுக்கு இளைத்திடேல் – தூற்றுதல் ஒழி – தோல்வியிற் கலங்கேல் – ரௌத்திரம் பழகு – வெடிப்புறப்பேசு – முதலான  குணாதிசயங்கள்  இருந்தன. இந்த அருங்குணங்கள் மல்லிகைஜீவாவிடமும்  நீடித்திருந்தது  என்பது பரகசியம்.

இலக்கிய இதழை யாழ். மண்ணில் மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர் சூட்டலாம்…? என்று தனது இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

இதயம் – கமலம் – மலர் – செந்தாரகை – கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு,  இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார். மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.

மல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல் வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர்  சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.

இலங்கையிலும் தமிழகத்திலும் பல சிற்றிதழ்கள் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன. இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென  நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.

பொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் –  கூட்டுறவு அடிப்படை – குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.

சுமார்  47  வருடகாலமாக  வெளிவந்த  மல்லிகை  கடந்த  சில வருடங்களாக வெளியாகவில்லை.  அதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்கின்றனர்.

முன்னர்   யாழ். ரயில்  நிலையத்திற்கு  அருகில்  தமது  மனைவி மக்களுடன்    வாழ்ந்த  ஜீவா   தற்பொழுது  கொழும்பில்  மட்டக்குளிய – காக்கை  தீவில்  மகன்  திலீபன்  குடும்பத்துடன்  வசிக்கிறார்.  முன்னர் அவரைச்சுற்றி   மல்லிகை   இதழ்களும்  மல்லிகை   வெளியீடுகளும் நூல்   மதிப்புரைக்கு  வந்த    எழுத்தாளர்களின்  நூல்களும்தான் இருக்கும்.   ஆனால்,  இப்பொழுது  அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான்  இருக்கிறார்கள்.

சாதாரண குடும்பத்தில்   பிறந்து  தனக்குத்தெரிந்த  தொழிலையே   செய்து வாழ்ந்தவரை –  தோழர்  கார்த்திகேசன்  மாஸ்டர்  இடதுசாரி அரசியலுக்குள்   அழைத்து  வந்தார்.   ராஜகோபாலன்  என்ற  இலக்கிய   ஆர்வலர்  இலக்கியத்தின்பால்   திருப்பினார்.

கணித வாத்தியாரின்   கணக்கை   திருத்தியதனால் “உனக்கெதற்குப்படிப்பு….போய்   சிரையேன்டா…” –  என்று அவமானப்படுத்தியதும்   பள்ளிப்படிப்புக்கு  முழுக்குப்போட்டார். மல்லிகை   நடத்தியபொழுது  இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும்  முற்போக்கு  இலக்கியவாதிகளினதும்  சகவாசத்தினால்  தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள  முயன்று  பிற  மொழி இலக்கியங்களுக்கும்   மல்லிகையில்  களம்  வழங்கினார்.

சகோதர   சிங்கள  இலக்கியவாதிகளின்  மீது  நேசமுற்று  பிரபல மூத்த   சிங்கள  இலக்கிய  மேதை   மார்ட்டின்  விக்கிரம  சிங்காவை  கௌரவித்து  மல்லிகை   முகப்பில்  அவரது  படத்தை   வெளியிட்டு சிறப்பிதழ்  வெளியிட்டார்.

அதனைக்கண்டு   பொறுக்கமுடியாத  ஒரு  அதிதீவிர  தமிழ்க்கொழுந்து,  யாழ். மத்திய  கல்லூரிக்கு  முன்னால்  தமது பிரியத்துக்குரிய   சைக்கிளில்  வந்துகொண்டிருந்த  ஜீவாவை வழிமறித்து  –  மார்ட்டின்  விக்கிரமசிங்காவின்    படத்துடன்  வெளியான   மல்லிகை  இதழை   வாங்கி  அவர்  முன்னாலேயே கிழித்து   முகத்தில்  எறிந்துவிட்டுச்சென்றது.

அதன்  பின்னும்  பல  வருடங்கள்  மல்லிகை   வெளியானது.  ஜீவா தொடர்ந்தும்   இலங்கையெங்கும்  அலைந்து  திரிந்து  மல்லிகை விநியோகித்து   ஈழத்து  தமிழ்  இலக்கியத்தை  வளர்த்தார். வளம்படுத்தினார்.

ஆனால்  – அந்த  அதி தீவிர  தமிழ்க்கொழுந்து  அகதியாகச்சென்று ஐரோப்பிய   நாடொன்றில்  தனது  வாழ்வாதாரத்திற்காக  ஐரோப்பிய மொழி  படித்து  வாழ்கிறது.

“பிறர்    ஈன  நிலைகண்டு  துள்ளுவர்…” என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில்   உச்சாடனம்  செய்த  ஜீவா   இன்று  எப்படி இருக்கிறார்….?

இலக்கிய  உலகில்  கனவுகளை   விதைத்தவர்….  இன்று  ஒரு  புதிய கனவுலகில்   வாழ்கிறார்.   அது  குழந்தைகளின்  உலகம்.

47  ஆண்டுகளை   நெருங்கிய  மல்லிகை   50  ஆண்டுகளை நிறைவு  செய்துவிடவேண்டும்  என்றுதான்  மல்லிகையை   நேசித்த  பலரும் எழுதினார்கள்.    பேசினார்கள்.   தமது  முகநூல்களில்  பதிவுசெய்தார்கள்.   ஆனால்,  ஜீவாவுக்கும்  மல்லிகைக்கும்  யார் மணிகட்டுவது…?

எவரும்   முன்வரவில்லை.   முன்வந்திருந்தாலும்  ஜீவா  அதற்கு சம்மதித்திருப்பாரா…?    என்பதும்   கேள்விக்குறி.  அவருக்கு எதிர்பாராதவிதமாக  வந்த  சுகவீனத்தால்   அவர்  இன்று மட்டக்குளியில்   பேரக்குழந்தைகளுடன்  விடப்பட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான   தமிழ்,  முஸ்லிம்,  சிங்கள  படைப்பாளிகள் – கல்விமான்கள் , அறிஞர்களின்  வாழ்வையும்  பணிகளையும் சித்திரிக்கும்   கட்டுரைகளையும்  அவர்தம்  படங்களையும்  பதிவுசெய்த   மல்லிகை   இன்று  நூலகம்  இணையத்தில்  மாத்திரமே பதிவாகியிருக்கிறது.   பலரதும்  வீடுகளில்  பல்கலைக்கழகங்களில் நூலகங்களில்   முன்னைய  பிரதிகள் ,   ஆண்டு மலர்கள்  இருக்கின்றன.

ஜீவா   இலங்கையர்களை   மட்டும்  மல்லிகையில்  கனம் பண்ணவில்லை.   இந்திய  சோவியத்  உட்பட  பல  சர்வதேச படைப்பாளிகளுக்கும்    உரிய  மரியாதையை   வழங்கினார்.

ஜீவா   சில   சமயங்களில்  வெட்டு  ஒன்று  துண்டு   இரண்டு  என்றும் முகத்துக்கு   நேரே   பேசும்  இயல்புள்ளவர்.   யாழ்ப்பாணத்தில் பிரபலமாக   இருந்த  தம்பித்துரை   அன்  சன்ஸ்  என்ற  பத்திரிகை – புத்தகக்கடைக்கு   மாதாந்தம்  மல்லிகையில்  பத்துப்பிரதிகளை வழங்குவார்.   அந்த  கடை  உரிமையாளர்  அதனை  பத்திரமாக பாதுகாத்து   மேசையின்  கீழே  வைத்திருந்துவிட்டு,  அடுத்த  தடவை ஜீவா  புதிய  இதழின்  பிரதிகளை   கொடுக்கவரும்பொழுது,  ” எதுவும் விற்கவில்லை” –   என்று  மேசையின்  கிழே   இருந்த  பத்து பிரதிகளையும்   எடுத்துக்கொடுப்பார்.   இந்த  நாடகம்  பல  மாதங்களாக அரங்கேறியது.   வழக்கம்போல்  கடையில்  தொங்கும்  குமுதம், ஆனந்தவிகடன்,   பொம்மை,  பேசும்  படம்  இதழ்கள் விற்பனையாகிவிடும்.

ஒரு  நாள்   ஜீவாவின்  தர்மாவேசம்  விழித்துக்கொண்டது.

”  நாளைக்கு  நீர்  இறந்துபோனால்  உம்முடைய  சாவீட்டுக்கு  குமுதம்,   ஆனந்த  விகடன்,   பொம்மை,  பேசும்  படம்  ஆசிரியர்கள் வரமாட்டார்கள்.    யாழ்ப்பாணத்திலிருக்கும்  இந்த  ஜீவாதான் வருவான். ” –  எனச்சொன்னது  அவரது  தர்மாவேசக்குரல்.

ஒரு   சமயம் The Island   பத்திரிகை   வெளியிடும்  நிறுவனம் வெளியிட்ட   திவயின  சிங்கள  ஏடு  ஜீவாவை   பேட்டி கண்டு  எழுத விரும்பி   நாள்   குறித்தது.   அவருக்கு  சிங்களம்  தெரியாது.   என்னை உடன்  அழைத்துச்சென்றார்.   அந்த  நேர்காணல்  சந்திப்பை  கொழும்பு கலாபவனத்தில்  (Art Gallery ) ஒழுங்கு செய்து  தந்தவர்  கலாசார திணைக்களத்தில்  செயலாளராக  பணியாற்றிய  தமிழ்  அபிமானி கே.ஜி.அமரதாஸ.

அவ்வேளையில்  குட்டிமணி   தங்கத்துரை  முதலானோர்   சிறையில்  இருந்தனர். அமிர்தலிங்கம்   எதிர்க்கட்சித்தலைவராக  பிரபலமாகியிருந்தார்.

சிங்கள   வாசகர்களுக்கு  தமிழ்  இலக்கியம்  போதியளவு  அறிமுகம் இல்லாதிருந்த   காலம்.   ஆனால், மார்ட்டின்  விக்கிரமசிங்கா,   டி.பி. இளங்கரத்னா,   குணதாச  அமரசேகர,  கருணாசேன  ஜயலத்,  ஜீ. பி.சேனாநாயக்கா,   குணசேன  வித்தான,   ஆரியரத்தின  வித்தான, கே.ஜயத்திலக்க,   மடவள  எஸ்.  ரத்நாயக்கா  போன்ற இலக்கியவாதிகள்   தமிழ்  வாசகர்களுக்கு  அறிமுகமாகியிருந்தனர்.

ஜீவா,  அந்த  நேர்காணலில்  மேலே   குறிப்பிட்ட  சிங்கள எழுத்தாளர்களின்   பெயர்களைச்சொல்லி,  இவர்களையெல்லாம் எமது   தமிழ்   இலக்கிய  வாசகர்கள்  தெரிந்து  வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள  வாசகர்களுக்கு  தெரிந்த  பெயர்கள் அமிர்தலிங்கமும்   குட்டிமணியும்தான்.   எனச்சொன்னதும்,  அந்த சிங்கள  நிருபர்  அசந்துவிட்டார்.  பின்னர்  தன்னை சுதாகரித்துக்கொண்டு,    இந்தக்கருத்தையே   இந்த  நேர்காணலுக்கு தலைப்பாக  எழுதுவேன்   என்றார்.

அந்த  நிருபர்  சொன்னவாறே  அந்தத்தலைப்பு   ஜீவாவின் தர்மாவேசக்குரலாக   அந்தச்சிங்கள  ஏட்டில்  ஒலித்தது.

தொடக்க   காலத்தில்  மல்லிகையின்  ஆண்டு  மலர்கள்  ஒவ்வொரு வருடமும்   ஓகஸ்ட்  மாதத்தில்  வெளியாகும்.   பிற்காலத்தில்   ஜனவரி   மாதத்தில்  வெளியானது.   இறுதியாக  நான்  பார்த்த மல்லிகை   46   ஆவது   ஆண்டு  மலரில்  2001  இல்    பாராளுமன்றத்தில்    அஸ்வர்  எம்.பி.,  மல்லிகை   பற்றி உரையாற்றியபொழுது    ஜீவாவையும்  அவரது  தேசிய  உடையையும் விதந்து   போற்றியது  பற்றிய  தகவலை  இரத்தினச்சுருக்கமாக வெளியிட்டு    பாரளுமன்ற  பதிவேட்டு  திகதியையும்      (Hansard  – – 04-02-2001)   குறிப்பிட்டிருந்தார்.

மல்லிகை   இலக்கிய  வாசகர்களின்   மனதில்  மட்டுமல்ல இலங்கைப்பாராளுமன்றத்திலும்   ஒலித்திருக்கிறது  என்ற  பெருமிதம் அதில்  தெரிந்தது.

இலங்கையில்   தமிழில்  முதல்  முதலில்  சிறுகதைக்காக  சாகித்திய விருது   பெற்றவர்.   சாகித்திய  இரத்தினா,   தேசத்தின்  கண்,  கனடா இலக்கியத்தோட்டத்தின்   இயல்  விருது  என்பனவற்றையெல்லாம் பெற்றுள்ள ஜீவா   – 2010 – 2011   காலப்பகுதியில்   என்னுடன் உரையாற்றியபோதெல்லாம்… ” எல்லாம்  போதுமப்பா… இனி  எனக்கு என்ன  தேவை….? முடிந்த  வரையில்  எனக்குத்  தெரிந்ததை எனக்குத்தெரிந்த  விதமாகச்செய்தேன்…. எல்லாம்  போதுமப்பா…” என்ற களைப்புத்தொனியுடன்   சொல்லியிருக்கிறார்.

அவர்   எனக்குள்ளும்,  பலருக்குள்ளும்  பயனுள்ள  விதைகளை விதைத்தவர்.   எனக்குத் தெரிந்த மட்டில்  மல்லிகை  நீர்கொழும்பு பிரதேச   சிறப்பிதழ்,   ( 1971)  அவுஸ்திரேலியா   சிறப்பு  மலர் (2000) சர்வதேச   தமிழ்  எழுத்தாளர்  மாநாடு (2011).  அந்தக்கனவுளை நனவாக்கியிருக்கின்றோம்.

ஒருசமயம்  இலங்கை   வந்தபொழுது  எனக்காக  மல்லிகை காரியாலயத்தில்   நடத்திய  சந்திப்பில்தான்  மாநாடு  பற்றிய எண்ணக்கருவை   விதைத்தார்.

நீர்கொழும்பு,   திக்குவல்லை,   மினுவாங்கொடை,  அநுராதபுரம் முதலான  தமிழ்  மக்கள்  செறிந்து  வாழாத பிரதேசங்களிலிருந்தெல்லாம்   பலரை  இலக்கிய  உலகிற்கு  அழைத்து   வந்து   களம்  அமைத்துக்கொடுத்தவர்.

பிரதேச   மொழி வழக்குகள்   ஆய்வுகளில்  பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக   இருந்தவர்.   ஐரோப்பிய  நாடுகளில்  நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக   அழைக்கப்பட்டு  பரிஸிலும்  லண்டனிலும் பாரட்டப்பட்டவர்.   சோவியத்தின்  அழைப்பில்  சென்று  திரும்பியவர். தமிழக   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்,  கலை,  இலக்கிய பெருமன்றம் ,   எட்டயபுரம்  பாரதி  மன்றம்,  கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S)  முதலானவற்றின்  அழைப்பில்  சென்றவர்.

மணிவிழா,  பவள  விழா  முதலானவற்றை   கடந்து  வந்தவர்…. இன்று மட்டக்குளியில் , காக்கைதீவில்  மாலைப்பொழுதுகளில்  சூரியன் மறையும்   ரம்மிய  காட்சியை   கண்டு களித்துக்கொண்டிருக்கிறார்.

மல்லிகை    நின்றது  கவலைதான்.  ஏமாற்றம்தான்.

கோமல்  சாமிநாதன்  நடத்திய  சுபமங்களா  நின்றபொழுது  அவர் முதுகுத்தண்டு   நோயினால்  காலமாகியிருந்தார்.   எனினும்  இறுதி இதழாக   அவருக்கு  அஞ்சலி    செலுத்தும்  சிறப்பிதழ்  வெளியானது.

மல்லிகை   நின்றதை   நாம்  இலக்கிய –  ஊடக வரலாற்றுப்பின்னணிகளுடன்   ஆராய்தல்  பொருத்தமானது.

பி.எஸ். ராமையா   நடத்திய  மணிக்கொடி,   ரகுநாதன்  நடத்திய  சாந்தி, விஜயபாஸ்கரன்   நடத்திய  சரஸ்வதி,   ஜெயகாந்தன்  நடத்திய ஞானரதம்,   நா. பார்த்தசாரதி  நடத்திய  தீபம் ,  கண்ணதாசன் நடத்திய  கண்ணதாசன்  ஆகியன  நின்றன.   அதன்  பிறகு  அவற்றை எவரும்   நடத்துவதற்கு  முன்வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் –  வணிக  இதழ்கள்  என  வர்ணிக்கப்பட்ட  குமுதம், ஆனந்தவிகடன்,   என்பன  தலைமுறை   தலைமுறையாக வெளியாகிறது.

கல்கியும்  –  கலைமகளும்  வருகின்றன.  கல்கி,  கிருஷ்ணமூர்த்தியுடன் கல்கியோ,    கலைமகள்  கி.வா. ஜகந்நாதனுடன்  கலைமகளோ நின்றுவிடவில்லை.   ஆனால்,  ஜீவா   இருக்கும்பொழுதே  மல்லிகை நின்றுவிட்டது.   எஸ்.பொன்னுத்துரையின்  மறைவுடன்  தமிழகத்தில் இயங்கிய   அவரது  மித்ர  பதிப்பகமும்  மூடப்பட்டது. குமரன்   இதழையும்  பதிப்பகத்தையும்  தொடக்கிய  மூத்த படைப்பாளி   செ. கணேசலிங்கனின்  குமரன்  இதழ்  நின்றுவிட்டாலும்  – குமரன் பதிப்பகம்  இலங்கையிலும்  தமிழகத்திலும்   இயங்குகிறது.   கணேசலிங்கன்  அதற்கென  ஒரு வாரிசை  உருவாக்கி  வளர்த்துவிட்டார்.

ஞானம் கொழும்பில் வெளியாகிறது. அதன் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்குப்பின்னரும் ஞானம் வெளிவரும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவருக்குப்பின்னர் அவரது மகன் பாலச்சந்திரன் நடத்துவார் என்ற திடமான நம்பிக்கையை சமகாலத்தில் பார்க்கின்றோம்.

மல்லிகை   ஜீவா  பல   மேடைகளில்  மல்லிகையின் எதிர்காலத்திற்காக  உயில்  எழுதிவைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.   தனது  மகன்  திலீபன்  தனக்குப்பின்னர் மல்லிகையை   நடத்துவார்  என்று   இழையோடும்  கருத்துக்களை மல்லிகை  ( தூண்டில்)  கேள்வி – பதில்  பகுதியிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால்,  இன்று  அவற்றை  அவரிடம்  யாராவது  நினைவு படுத்தினால்… ” அப்படியா…?”  என்றுதான்  கேட்பார்.                                  இந்த ” அப்படியா ”   சொல்லைக்கேட்க  விரும்பாமல்தான்  அவரைச்சந்திக்கும்   பலரும்  அவரது  சுகத்தை  விசாரிப்பதுடன் விடைபெறுகிறார்கள்.

பலரும் தமது நூல்களை ஜீவாவுக்கு சமர்ப்பித்துள்ளனர். நானும் எனது கதைத்தொகுதி ஒன்றை அவருக்கு சமர்ப்பித்துள்ளேன். பிரபல சிங்கள எழுத்தாளர் குணசேனவித்தான தாம் விரைவில் வெளியிடவுள்ள நூலை ஜீவாவுக்கே சமர்ப்பித்திருப்பதாக அண்மையில் என்னிடம் சொன்னார்.

எங்கள் ஜீவாவை கொண்டாடுவோம்.

—-0—

 

 

 

Series Navigationமொழிவது சுகம் ஜூன் 24 2017சதைகள் – சிறுகதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *