எஞ்சினியரும் சித்தனும்

This entry is part 7 of 41 in the series 13 மே 2012

(1)

“சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து வருடங்களுக்கு முன்னாலேயே ஓய்வு பெற்றவர். அவரைப் போலவே நானும் இப்போது ஒரு ஓய்வு பெற்ற ஆசாமி என்பதில் அவருக்கு ஒரு வேளை திருப்தியோ என்று எனக்கு ஒரு ஐயம். “சார், வாங்க உங்க ரிட்டைர்மெண்ட் ஞாபகமா ஒரு காபி சாப்பிடலாம்” என்று பாலுசாமி தொடர்ந்தார். என் ஒப்புதலை அவரே என் சார்பாகச் சொல்வது போல் “சார் , சரவணாவுக்குப் போலாமா” என்று சொல்லவும் நானும் அவரும் மெல்ல அண்ணா நகர் சாலையில் சரவண பவன் ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே, பாலுசாமி கொஞ்சம் கொஞ்சமாகக் கால மணலில் தான் நடந்து வந்த காலடித் தடயங்கள் வழி பின் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பது ‘சார், நான் எப்படி எஞ்சினியர் ஆனேன்னு தெரியுமா” என்று அவர் சரவணபவன் ஓட்டலுக்குள் நுழையும் போது சொன்ன போது புரிந்தது எனக்கு. இருவரும் மின்விசிறிக்கு நேராகக் கீழிருக்கும் இருக்கைகளைப் பார்த்து அமர்ந்து கொண்டோம்.

“சார்; நான் எஞ்சினியர் ஆனதே என் ஸ்கூல் வாத்தியார் தான் காரணம். அவரு திடீர்னு ஒரு நாள் வகுப்பில நான் இனி மேல் உங்க வாத்தியாரில்ல; வேற வேலக்கிப் போறேன்னார்,

நானு ’என்னா வேலக்கி போறீங்க சார்னு’ கேட்டேன்.

அவர் சொன்னார்: ’எஞ்சினியர் வேலக்கி’

எனக்குப் புரியில; “எஞ்சினியர் வேலன்னு என்ன வேல சார்”

வாத்தியார் சொன்னார்: “ வாத்தியார் வேலயிலக் காட்டிலும் எஞ்சினியர் வேலயில சம்பளம் அதிகம்”

எனக்கு புரிஞ்சதெல்லாம் ”எஞ்சினியர்னா, எஞ்சினியர் வேலயில சம்பளம் அதிகம்னு தான். நானும் எஞ்சினியராக முடிவு செஞ்சேன் அப்போ” என்று கதையை எடுத்தவுடனே களை கட்டுமாறு ஆரம்பித்தார். காத்துக் கொண்டிருக்கும் ஓட்டல் பையனிடம் இரண்டு காபி ஆர்டர் பண்ணி விட்டு ”சார் போரடிக்கிறேனா “ என்று கேட்டுக் கொண்டே கதையைத் தொடரலானார். ஆரம்பத்தில் இருந்த அசுவாராசியாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தது.

”அந்த வருஷத்தில எஸ்.எஸ்.எல்.சி யில பெயிலாயிட்டே.ன். ஆனா என் வாத்தியார் மாதிரி நானும் எஞ்சினியராகமுனு நெனப்பு மட்டும் போகல. இந்தக் கட்டத்தில் பாலுசாமி ஆட்கொண்டது போல குரலில் உணர்ச்சி கூடிப் பேசினார். அவரது கரு மேனி மினுமினுத்தது. கண்களில் காந்தம் ஏறியது. ”சித்தன் கோயில்ல போயி உட்கார்ந்திட்டேன். சித்தனைப் பாத்தேன். சித்தன் என்னப் பாத்தான். அவன் கல் யானையையே கரும்பு தின்ன வச்சவன். சித்தன் இருக்கும் போது சித்தம் ஏன் கலங்குகிறாய் என்று சித்தன் என் கிட்ட சொல்றாப் போல இருந்திச்சி. மறுபடியும் அதே வகுப்பில சேர்ந்து படிக்கிறதா முடிவு செஞ்சேன்’ என்று பாலுசாமி கடந்த காலத்தையே கட்டி இழுத்துக் காண்பிப்பது போல என்னைப் பார்த்தார். இது வரைக்கும் எனக்குத் தெரியாத அவரின் ஆளுமையை அவர் இப்போது எனக்கு வெளிப்படுத்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது.

எங்க ஸ்கூல் கெட்மாஸ்டர் ரொம்ப பொல்லாதவர். அவரு மனசு வைக்கனுமே. அந்த வருஷ அட்மிஷன் நாளனக்கி அவர் ரூம் முன்னாடி ஒரே கூட்டம். நான் அவர் கண்ணுல படுறாப் போல காத்துக்கிட்டே இருந்தேன். பியூன் கிட்டப் போய் “சார் தான் அவர வந்து என்னைப் பாக்க சொன்னார்” னு ஒரு பொய் சொன்னேன் என்று பாலுசாமி அவர் சொன்ன பொய்க்கு என் ஒப்புதலை எதிர்பார்ப்பது போல் என்னைப் பார்த்தார். “ பியூன்கிட்ட பேசிக்கிட்ட இருந்த என்னப் பாத்திட்டு என்ன உள்ள விடுமாறு கெட்மாஸ்ட்ர் சொல்லவும் உள்ள போனேன். “ஏண்டா, நீ தான் பெயிலாயிட்டேயேன்; ஏன் பழையபடி வந்து உயிரெடுக்கிறே’ என்று கெட்மாஸ்டர் சொன்னதும் தான் தாமதம், நான் “ சார் இன்னொரு தரம் அதே வகுப்பில படிக்கனும்னு ஆச சார்”னு சொன்னதும் அவருக்கு சுர்ர்…ன்னு கோபம் வந்திருச்சு. “பெயிலான முகரக்கட்டக்கி இன்னொரு தரம் படிக்கனுமோ ,போடா”ன்னு விரட்டவும், நான்” சார், நான் எஞ்சினியராகனும்’’னேன். அதைக் கேட்டதும் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர் நின்றிருந்த என்னை கணுக்காலிலிருந்து உச்சந்தலை வரை ஏற இறங்கப் பார்த்தார். பார்த்து விட்டு “ போடா, சேர்ந்து படி”ன்னு அட்மிஷன் போட்டுக் கொடுத்தார்”. ”ஏற இறங்க என்னயா பார்த்தாரு ; என் சித்தனைப் பார்த்தாரு “ என்று அவர் சொல்லும் போது அவர் வார்த்தைகள் உண்மையேறி எதையும் கண்டு கொள்ளாது நகரும் காலத்தையும் ஆட்கொண்டது போல் தெறித்தன. ஓட்டல் பையன் இரண்டு குவளைகளில் காபி கொண்டு வைக்கவும் அவர் கதை தடைப்பட்டது.

(2)

காபி ஒரு மடக்கு அவர் தொண்டையில் இறங்கியது. அது அவர் கதையைத் தொடர உற்சாகப்படுத்தியது. “ எஸ்.எஸ்.எல்.சி பாஸ் ஆயிட்டேன். காலேஜில சேர்ந்து படிக்கனும்னு எங்க அப்பாகிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா என்று ஒரு புதிர் போட்டார். ”வேணாம்னு சொல்லிட்டாரா, ஒங்க அப்பா” என்று நான் வழக்கமாய்க் கேட்பேன் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். “ அப்படிச் சொல்லியிருந்தாப் பரவாயில்லயே; ஏண்டா, நம்மெல்லாம் காலேஜ்ல சேர்ந்து படிக்கிற ஜாதியாடா?” ன்னு கேட்டாரு. நான் காலேஜ்ல் சேர்ந்து படிப்பேன்னு ஒத்தக் கால்லே நின்னேன். அக்கம் பக்கத்துக்காரங்க பையன் பட்டணம் பாக்க ஆசப்படுறான். காலேஜ்ல சேர்த்து விடுங்க; இவன் எங்க படிக்கப் போறான்; பெயிலாட்டு ஊர் வந்து தான் சேரப் போறான்” என்று என் அப்பாகிட்ட சொல்லி சமாதானப்படுத்தினார்கள். அவரும் ஒரு வகையாக் கடைசியில் ஒத்துக் கொண்ட போது காலேஜ்ல சேர இன்னக்கின்னா நாளைக்கி கடைசி நாள். அப்ளிகேஷனில் ஜாதி சர்டிபிகேட் வாங்கிட்டு கிராமத்திலிருந்து திருவண்ணாமலை போயி, அங்கிருந்து மெட்ராஸுக்கு காலேஜ்ல கொண்டு போயி மறு நாளக்கி குடுக்கனும்; முடியிற காரியமா? னும். எங்க ஊரு பெரிய மனுஷன் ஒருத்தர் ஞாபகம் வந்துச்சு. அவர் தனக்கு வர்ற லெட்டர் எல்லாம் என் கிட்ட கொடுத்து படிக்கச் சொல்வார்; அப்பப்ப அவருக்கு லெட்டரும் எழுதிக் குடுப்பேன்; அவர் அந்தரங்கங்கள் கொஞ்சம் எனக்குத் தெரியும். நேரா அவர் கிட்ட போன்னேன். விஷயத்தைச் சொன்னதும் “ஏண்டா, ஒரு நாள் முன்னாடி வந்திருக்கக் கூடாதா; தாசில்தார் ஒருத்தர் தெரியும்; அவர் கிட்ட பேசுறேன் என்று தாசில்தாருக்கு போன் செய்தார். தாசில்தார் ஆபிஸ் விட்டு வெளியே செல்லும் சமயம். தாசில்தாரிடம்” நமக்குத் தெரிஞ்ச பையன்; காலேஜ்ல சேர்ந்து படிக்கனும்னு ஆசப்படுறான்; ஜாதி சர்டிபிகேட் வேணும்; நாளைக்கி கடசி நாள். பையன அனுப்பி வைக்கிறேன்” என்றதும் தாசில்தாரும் “வெளியே டூட்டி இருக்கு; பதினஞ்சு நிமிஷத்தில வரச் சொல்லுங்க” என்றார். நான் தாசில்தார் ஆபிஸிக்கு தபதபன்னு ஓடுனேன். தாசில்தார் பார்த்து சர்டிபிகேட் வாங்கினதும் மறுநாள் பஸ் பிடிச்சு மெட்ராஸ் நியூ காலேஜ்ல கொண்டு போய் கொடுத்திட்டேன்.

”காலேஜ்ல நாங்க படிக்கவா செஞ்சோம்” என்று அடுத்த பீடிகை போட்டார் பாலுசாமி. ”காபி ஆறிடும்; குடிங்க” என்று நான் அவரை நினைவு படுத்தினேன். ”நான் இராயப் பேட்டையில ஆஸ்டலில் தான் தங்கியிருந்தேன். என்னோட ரெண்டு மூனு ஃபிரண்ட்ஸ்; பீச் ரோட்டில தான் எங்க வாழ்க்கை” என்று நிறுத்தினார். கதையைக் கேட்கும் ஆவல் நிழல் போல் நீண்டது எனக்கு. ”பீச் ரோடு நெடுக நாங்க பிரிச்சுகிட்டோம்; அந்தந்தப் பிரிவுகளில் வந்து போற பொண்ணுகள நாங்க ஃபாலோ பண்ணுவோம்; இது எங்களுக்குல்ல ஒரு ஒப்பந்தம்.” என்று சொல்லிவிட்டு இப்படியிருந்தா எப்படி உருப்பட்டிருப்போம்னு பாருங்க என ஒரு சுய விமர்சனத்தையும் இணைத்தார்.

காலேஜ் பைனல் பரீட்சை; தேறுவோமான்னு சந்தேகம்; மறுநாள் கணக்குப் பரீட்சை; என் ஃபிரண்டு கிட்ட “டே; இன்னக்கி நான் ஒரு பொண்ண ஃபாலோ பண்ண போறேன்; என்னோட கூட துணைக்கி வா” என்றேன். அவனோ “போடா; பயமா இருக்கு நாளைக்கி பரிட்சையில பாஸ் பண்ணுவோமான்னு” என்று பயந்தான். அவன் கணக்கில் வீக்; எனக்கு கணக்கு நல்லா வரும். நான் அவன் கிட்ட “ டே; என்னோட ஒரு மணி நேரம் வந்தா நான் உனக்கு ரெண்டு மணி நேரம் கணக்கு சொல்லிக் கொடுக்கிறேன் நாளைக்கி பரீட்சைக்கு” என்றதும் என்னோட கூடப் புறப்பட்டான். நானும் அவனும் அந்த பொண்ண ஃபாலோ பண்ணிக்கிட்டே போணோம்; கடசியில் அந்தப் பொண்ணு மயிலாப்பூர் கோயிலோட குருக்களோட பொண்ணுன்னு கண்டுபிடிச்சோம்” என்று தனது இளமைக் கால கண்டுபிடிப்பை பாலுசாமி சொல்லும் போது அந்தத் தேடுதல் இப்போது பேதைமையாய் இருந்தாலும் அதில் ஒரு தீரச்செயல் தரும் மகிழ்ச்சி இருந்ததை அவர் இன்னும் மறக்கவில்லை என்பது போல் இருந்தது.

அந்த குரூப்ல நான் ஒருத்தன் தான் பாஸ் பண்ணினேன்; அதுவும் தேர்டு கிளாஸ்ல; சப்ஜெக்ட்ஸ்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கினாலும் இங்கிலீஸ் கால வாரி விட்டிருச்சு” ஊர் வந்து சேர்ந்தேன்; நான் பாஸ் பண்ணுவேன்னு யாரும் எதிர்பார்க்கல; எஞ்சினியர் ஆகனும்னு ஆச மட்டும் விடல; ஆனா தேர்டு கிளாஸ வச்சுகிட்டு எப்படி எஞ்சினியர் படிப்பில் சேர்வது. அப்பாவிடம் பழையபடி தொணதொணக்க ஆரம்பிச்சேன் எஞ்சினியர் ஆகனும்னு; எங்க அப்பா எப்படியோ பி.யு.சி யில தப்பித் தவறி தேர்டு கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்; எஞ்சினியர் படிப்பில சேர்ந்தாலும் ஒரு வருஷம் படிப்பான்; பெயிலாயிட்டு ஊர் வந்து சேர்ந்துருவான் என்று தனது பழைய எண்ணத்தில் நான் எஞ்சினியர் படிப்புக்கு அப்ளிகேஷன் போடுவதற்கு சம்மதித்தார்.

”இண்டர் வியூக்கு மெட்ராஸுக்குப் போகணும்” என்று சொல்லி நிறுத்தி விட்டு ஆறிப் போன காபியின் மிச்சத்தை ஒரே மடக்கில் குடித்தார். என் முகத்தைப் பார்த்து ‘போர’டிக்கிறானா என்றார். நானோ ‘ஒரு பெரிய போராட்டம் தான் ஒங்க வாழ்க்கை’ என்று சொன்னதும் அவர் ‘எல்லாம் அந்த சித்தன் பாத்துகிட்டான்’ என்று கதையைத் தொடர்ந்தார். எங்க ஊரில அப்பா ஃபிரண்டு ஒருத்தரோட காருல மெட்ராஸுக்குப் போனாரு. அவரோட எங்க அப்பா கோத்து விட்டாரு. அவர் காருல மெட்ராஸுக்கு வரந் தொட்டும் தொண தொணன்னு பேசிக்கிட்டே வந்தார். சும்மா பேசிட்டு வந்தாலும் பராவயில்ல. ’ஏண்டா நீயெல்லாம் எஞ்சினியராயிட முடியுமா? பேசாம ஒரு வேலக்கிப் போயிடு. ஒங்க அப்பாவுக்கும் ஒத்தாசையா இருக்கும். ஒனக்கு மெட்ராஸுல ஒரு வேலக்கி ஏற்பாடு செய்றேன்’ என்று வழியெல்லாம் ஒரு பாட்டு பாடிக் கொண்டே வந்தார். அவரோட பசங்க சரியாப் படிக்கலன்னு பின்னே தான் எனக்கு தெரிய வஞ்சுச்சு. மெட்ராஸுல ஒரு லாட்ஜுல நானும் அவரும் தங்குனோம். மறு நாள் காத்தால இண்டர்வியூ.

இண்டர்வியூ போர்ட்ல என்ன கேட்பாங்களோ; தேர்டு கிளாஸ வச்சுக்கிட்டு தேற முடியுமான்னு உள்ளுக்குள்ளேயே சந்தேகம். என்னய கூப்பிட்டங்க. மொதல கேட்ட கேள்வியே பயமாப் போச்சு. ‘தேர்டு கிளாஸ வாங்கிட்டு எந்த நம்பிக்கையில எஞ்சினியர் சீட்டு கிடைக்கும்னு இண்டர் வியூக்கு வந்த” என்று கேட்டார் முதலில் கேள்வி கேட்டவர். விடல நான். “ மொத்த மார்க்ல தான் சார் தேர்டு கிளாஸ். மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி மார்க் பாருங்க சார்; ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க்” என்றேன். கேள்வி கேட்டவர் “ அப்பன்னா இந்த சப்ஜெக்ட்ஸ்லா கேள்வி கேட்டா பதில் சொல்வயா” என்று மடக்கினார். எனக்கு உள்ளூர பயம். கணக்கில அவர் கேட்ட கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியல. “இந்தக் கணக்கெல்லாம் எங்களுக்கு நடத்தல சார்” என்று ஒரு அடி அடிச்சேன். ”தேறுவோமா”- உள்ளுக்குள்ள குடைச்சல். அடுத்த கேள்வி கேட்டவர் ஸ்ட்ரவுஜர் எக்ஸ்சேஞ்ர் வேலை செய்யும் விதம் பற்றிக் கேட்டார். சொல்லி விட்டு பாலுசாமி என்னைப் பார்த்த கண்கள் அவர் இண்டர் வியூ செல்லும் போது இப்படித் தான் விரிந்திருக்குமோ என்று ஊகம் செய்ய வைப்பது போல் இருந்தது. “சார் அவர் கேட்டது எனக்குத் தெரிஞ்சதாப் போச்சு. என்ன வேடிக்கையின்னா; லாட்ஜுல முத ராத்திரியில இண்டர்வியூக்கு கொஞ்சம் படிக்கலாம்னு பக்கங்களப் பொரட்டுற போது ஸ்ட்ரவுஜர் எக்ஸ்சேஞ்ர் வேலை செய்யும் விதம் பத்தி இருந்த பக்கங்களப் படிச்சுட்டுத் தூங்கிட்டேன். அதுவே கேள்வியாய் வந்ததும் மட மட வென்று பதில் சொல்லவும் கேள்வி கேட்டவர்க்குத் திருப்தியாகி விட்டது.

இண்டர் வியூ முடியிற சமயம். ‘சார் நான் எஞ்சினியர் ஆகிறது தான் என் லட்சியம்” என்றேன். இண்டர் வியூ கமிட்டி சேர்மன் “ அப்படியா’ ன்னு கணுக்காலிலிருந்து உச்சந்தலை வரை என்னை ஏற இறங்கப் பார்த்தாரு. “ என்னையா பார்த்தார்; அந்தச் சித்தனைப் பார்த்தார்” என்று சொல்லி விட்டு பாலுசாமி ஒரு விநாடி அசைவற்று சமாதியில் இருப்பவர் போலக் கண்களை மூடி இருந்தார். கண்களைப் பின்னர் திறந்து” போ; ஒனக்கு சீட்டு கிடச்சிருச்சு” என்று நான் எழுந்த போது என் காதில் சேர்மன் சொன்னது என் சித்தன் என் கிட்ட சொன்னாப் போல இருந்துச்சு. என்று அவர் முடிக்கும் போது தான் கவனித்தேன், காபி கொடுத்த சர்வர் “ காபிய குடிக்க வந்தாங்கல; இல்ல அரட்ட அடிக்க வந்தாங்கலா”ன்னு கேட்பது போல எங்களைப் பார்ப்பது தெரிந்தது.

சர்வரை நான் கூப்பிட்டேன்.” பாலுசாமி சார்; இன்னொரு காபி சாப்பிடலாம்” என்றதும் தலையசைத்தார். சர்வர் சந்தோஷமாய்ச் சென்று காபி கொண்டு வந்தான். அவருக்குக் காபி கொடுக்கும் போது அவரை ஏற இறங்கப் பார்த்தான். “சார்; உங்கள எங்கயோ பாத்தாப்புல இருக்கு” என்றான். பாலுசாமி சிரித்துக் கொண்டே தலையசைத்தார். சர்வருக்கு சித்தன் தலையசைப்பது போல் தெரிந்ததா? காபி குடித்து முடிந்ததும் சர்வர் வாசல் வரை வந்தான். பாலுசாமியும் நானும் ஓட்டல் வாசலில் நின்று பேசாமல் மாறி மாறிப் போய்க் கொண்டிருக்கும் சாலைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏற இறங்க பாலுசாமியைப் பார்த்தேன் நான். எனக்கு என்னைப் போல் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெற்ற ஆனால் இன்னும் சித்தம் உறுதியான அதே ‘பாலுசாமி’ தான். சித்தன் தான்.

Series Navigationசௌந்தரசுகன் 300 / 25துருக்கி பயணம்-1
author

கு.அழகர்சாமி

Similar Posts

Comments

  1. Avatar
    bandhu says:

    அந்த சித்தன் இப்போது என் சித்தத்திலும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *