கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?

author
1
0 minutes, 1 second Read
This entry is part 28 of 28 in the series 3 ஜூன் 2012

டிவிஆர் ஷெனாய்

ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு மீது மிகவும் பிரியம். அந்த செல்ல குரங்கை தனக்கு மெய்க்காப்பாளனாக நியமித்தான். ஒரு நாள் அரசன் தூங்கிகொண்டிருக்கும்போது ஒரு ஈ அரசனை சுற்றி பறந்துகொண்டிருந்தது. குரங்கால் அந்த ஈயை அடித்து விரட்ட முடியவில்லை. ஆகவே அந்த குரங்கு அருகிலிருந்த வாளை எடுத்து பளேர் பளேரென்று ஈயை அடித்து துரத்தியது. ஈ தப்பிவிட்டது. தூங்கும் அரசன் தப்பவில்லை.

விஷ்ணுசர்மன் ந்ரிபசேவகவானரா- கதையை இவ்வாறு முடிக்கிறார். “நீண்டநாள் இருக்க விரும்பும் அரசன் முட்டாள் சேவகர்களை வைத்துகொள்ளக்கூடாது”

பஹூஷக்தி, உக்ரஷக்தி, அனந்த்ஷக்தி என்ற மூன்று முட்டாள் இளவரசர்களுக்கு அரசு நடத்துவதை போதிப்பதற்காக பஞ்ச தந்திர கதைகளை விஷ்ணு சர்மன் கூறியதாக சம்பிரதாயம் தெரிவிக்கிறது. மார்க்ஸிய புத்தகங்களில் மூழ்கிக்கிடக்கும் தங்களது மூக்குக்களை வெளியே எடுத்து கொஞ்சம் இந்திய புத்தகத்தில் சொல்லப்படும் ஞானத்தையும் காம்ரேட் பினாரயி விஜயனும், காம்ரேட் பிரகாஷ் காரத்தும் தெரிந்துகொள்ளலாம்.

சிபிஎம் கட்சி இடுக்கி மாவட்ட செயலாளரும், காம்ரேட் பினாரயி விஜயனின் ஆதரவாளருமான காம்ரேட் எம்.எம் மணி தனது வாயை திறப்பதற்கு முன்னதாகவே சிபிஎம் பிரச்னையில் இல்லையா என்ன? கூடவே கன்னூர் மாவட்ட செயலாளர் பி ஜெயராஜன் என்ற பினாரயி விஜயன் ஆதரவாளர் கூடவே ஒத்து ஊதினார் என்பதையும் சேர்த்துகொள்ள வேண்டும்.

டி பி சந்திரசேகரனின் கொலையால் ஏற்கெனவே சிபிஎம் சந்தேகத்தின் கீழ் இருந்தது. இடது முன்னணியின் பெரியண்ணனான சிபிஎம்மின் சர்வாதிகாரம் ஏற்கெனவே உடைய ஆரம்பித்திருந்தது. சிபிஐ எம்.எல்.ஏ ஆர் செல்வராஜ் தனது சிபிஐ கட்சியையும் விட்டு விலகி, இடது முன்னணியையும் விட்டு விலகி, தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு நெய்யத்தின்கரா தொகுதியில் மீண்டும் தேர்தலில் நின்றார். இந்த முறை காங்கிரஸ் டிக்கட்டில். கூடவே, காம்ரேட் காரத்தும், காம்ரேட் விஜயனும் வி.எஸ்.அச்சுதானந்தனை கட்டுப்பாட்டில் வைத்துகொண்டிருக்க வேண்டிய பிரச்னை வேறு.

வி.எஸ் அச்சுதானந்தனுடனும் ஆர் செல்வராஜுடனும் போடும் அரசியல் சண்டைகள் என்ற உவமை ரத்த நிரூபணமாக ஆனது டிபி சந்திரசேகரன் 2012 மே 4 ஆம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டபோதுதான். சந்தேகம் உடனே சிபிஎம்மின் மீது விழுந்தது. அந்த கட்சியை விட்டு விலகிதான் டி பி சந்திரசேகரன் தனது புரட்சிகர மார்க்ஸிஸ்டு கட்சியை துவங்கினார்.

சிறப்பு புலனாய்வு குழு இப்போது பி பி ராமகிருஷ்ணன் என்ற தலசேரி சிபிஎம் ஏரியா கமிட்டி உறுப்பினரையும், அபினேஷ் என்ற சிபிஎம் உறுப்பினரையும் கைது செய்துள்ளது. இந்த வலை விரிவடையுமா?

CBI, மற்றும் சிறப்பு புலனாய்வு குழு, கேரளா போலீஸ் ஆகியவை சிபிஎம் மீது பல விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றன. 70-90 சிபிஎம் தலைவர்கள் மீது விசாரணை நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. 30 சிபிஎம் தலைவர்கள் உடனே கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. சிலர் ஏற்கெனவே உள்ளே இருக்கிறார்கள். இந்த சிபிஎம் உறுப்பினர்கள், மாவட்ட அளவிலேயே இருந்தாலும், இது கவலைப்படக்கூடிய ஒரு திசையை நோக்கி போகிறது.

தொடுபுழாவில் டிபி சந்திரசேகரன் கொலையால் கட்சி மீது விழுந்திருக்கும் கறையை போக்க சிபிஎம் பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில்தான் காம்ரேட் மணி மேடையேறினார்.

“ஆமாம். நாங்கள்தான் சிபிஎம் எதிரிகளை கொன்றோம். நாங்கள் சுட்டோம். கத்தியால் குத்தினோம். அடித்தே சாகடித்தோம். கட்சி எதிரிகளை பற்றி லிஸ்டு போட்டு ஒவ்வொன்றாக தீர்த்து கட்டினோம். யார் யாரெல்லாம் கொல்லப்பட வேண்டுமோ அவர்களை எல்லாம் சிபிஎம் கட்சி கொல்லும்” என்று எம் எம் மணி முழங்கினார்.

அய்யப்பதாஸ் என்ற சிபிஎம் கட்சி உறுப்பினரில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பாலு என்ற காங்கிரஸ் ஆளை கொன்றது என்று எம் எம் மணி கூறினார். 13 பேர்களை கொண்ட எதிரிகள் லிஸ்டிலிருந்து ஒருவர் சுட்டுகொல்லப்பட்டார், ஒருவர் குத்தி கொல்லப்பட்டார், மற்றொருவர் அடித்தே கொல்லப்பட்டார்

நினைவில் வைத்துகொள்ளுங்கள். கொலை செய்வதற்கு காசு வாங்கிகொண்டு கொலை செய்தவன் போலீஸிடம் மூடிய கதவுகளுக்கு பின்னே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. காங்கிரஸ் சிபிஎம் கட்சி மீது வைத்த குற்றச்சாட்டும் அல்ல. பினாரயி விஜயனின் தீவிர ஆதரவாளர் ஒருவரால் மேடையில் செய்யப்பட்ட பகிரங்க பேச்சு.

டிபி சந்திரசேகரன் கொலையோடு இது எவ்வாறு தொடர்புடையது? எம்.எம் மணியின் லாஜிக்கின் படி, சிபிஎம் தனது வன்முறை பக்கத்தை மறைக்க முயற்சி எடுத்ததே இல்லை. ஆகவே சந்திரசேகரனின் கொலையில் சிபிஎம் கட்சிக்கு தொடர்பில்லை என்று சொன்னால், அது உண்மையிலேயே அந்த கொலையில் சிபிஎம் கட்சிக்கு சம்பந்தம் இல்லை என்றுதான் பொருள்!

பினாரயி விஜயனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் மணி, டிபி சந்திரசேகரன் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காக வி.எஸ் அச்சுதானந்தனை விமர்சித்தார். கட்சியை விட்டு விலகுபவர்கள் எப்போதுமே நல்ல கம்யூனிஸ்டாக இருக்கமுடியாது என்றார். ஒரு காலத்தில் எம் எம் மணி அச்சுதானந்தன் பக்கத்தில் இருந்தார்.

சிபிஎம் கட்சி தன்னைத்தானே விசாரணை நடத்தும் நீதிபதியாகவும் தண்டனை கொடுக்கும் கொலையாளியாகவும் வரித்துகொள்கிறது. ஆனால், டிபி சந்திரசேகரன் மரணத்தில் கட்சிக்கு பங்கில்லை என்று சொல்லும்போது மற்ற கொலைகளை விசாரிக்க கதவை திறந்துவிட்டாரா?

காம்ரேட் மணியின் கூடவே சிபிஎம் மாவட்ட செயலாளர் பி ஜெயராஜனும் அப்படிப்பட்ட விசாரணைகள் இப்பொது தேவையில்லை என்று சொல்கிறார்.

அக்டோபர் 22, 2006இல் தலசேரியில் முகம்மது பைஸல் என்பவர் சிபிம்மிலிருந்து விலகிய சில நாட்களிலேயே கொலை செய்யப்பட்டார். CBI இந்த கொலையில் கரயி ராஜன் என்ற சிபிஎம் கன்னூர் மாவட்ட கமிட்டி உறுப்பினரும், திருவாங்காடு லோக்கல் கமிட்டி உறுப்பினர் கரயி சந்திரசேகரனும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.

காம்ரேட் ஜெயராஜன் அதெல்லாம் முக்கியமில்லை என்கிறார். தனது உறுப்பினர்களை போலீஸிடம் கொடுக்கமாட்டோம். கட்சி இவர்களை பாதுகாக்கும் என்று சிபிஎம் கன்னூர் மாவட்ட செயலாளர் கூறுகிறார். கட்சி நடத்தும் விசாரணை மட்டுமே முக்கியம் என்பதுதான் பி ஜெயராஜனின் நிலைப்பாடு போலிருக்கிறது.

எதற்கு விசாரணை? காம்ரேட் மணியே ஒப்புகொள்கிறார். “அரசியல் எதிரிகளை கொல்வது சிபிஎம் கட்சியின் வரலாறு”

பிரகாஷ் காரத்தும் பினாரயி விஜயனும் பகிரங்கமாகவே வி எஸ் அச்சுதானந்தனையும் ஆர் செல்வராஜையும் விமர்சித்துகொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்லப்போனால், எதிரிகளை விட இடுக்கி சிபிஎம் மாவட்ட செயலாளரிடமும், கன்னூர் மாவட்ட செயலாளரிடமும்தான் அவர்கள் பயப்பட வேண்டும்.

விஷ்ணு சர்மன் சொன்னது போல, அறிவுள்ள அரசன் தனது காப்பாளர்களை புத்திசாலித்தனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

“கெட்ட விளம்பரம் என்று ஏதுமில்லை” என்று ஐரிஷ் எழுத்தாளர் ப்ரெண்டன் ப்ரெஹன் ஒருமுறை சொன்னார். பல அரசியல்வாதிகள் அதனை சிரமேற்கொண்டு வாழ்கிறார்கள். ப்ரெஹன் கூடவே சேர்த்ததை மிகச்சிலரே நினைவில் வைத்திருக்கிறார்கள். –”உங்களுடைய மரண செய்தியை தவிர”

காம்ரேட் எம் எம் மணியும், காம்ரேட் பி ஜெயராஜனும் நிச்சயமாக விளம்பரத்தை இலவசமாக பெற்றுவிட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் கட்சியின் மரணச் செய்தியின் முதல் பாராவை எழுதிவிட்டார்களா?

Series Navigationஅத்திப்பழம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    யாரு எக்கேடு கெட்டால் என்ன, யாரு செத்தால் என்ன நம்பக்கு முக்கியம் சுர்ஜித் கர்ஜித்த “மதசார்பின்மை” தான முக்கியம். யாரு வீட்டில் இழவு விழுந்தால் என்ன, “மதசார்பின்மை” யை காப்பாராமல் இருக்க கூடாது

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *