நினைவுகள் மிதந்து வழிவதானது

This entry is part 24 of 43 in the series 24 ஜூன் 2012

 

 

இருளின் மொழியைப் பேசும்

தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும்

வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய

வனத்தின் நீரூற்றுக்கள்

பெரும்பாலும் மௌனமானவை

எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில்

பரவியணைக்கப் போதா நீர்

நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில்

யாது பயன்

 

காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை

செரித்து

தேயாப் பசி கொண்ட கானகத்தின்

எப் பெருவிருட்சத்தின் வேர்

அகன்ற வாயைக் கொண்டதுவோ

 

புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும்

இக் காட்டிலெது நீ

அண்டும் குருவிகள் எக்கணமும்

குருதி சிந்தப் பறக்கக் கூடுமான

முற்செடியொன்றின் ஒற்றைப் பூ

விஷமெனப் பலரும்

விட்டொதுங்கக் கூடுமான

பாம்புப் புற்றருகில் தனித்த காளான்

இக் காட்டிலெது நீ

 

உள்ளே செல்ல எப்பொழுதும்

அனுமதி மறுக்கப்படக் கூடுமான

மாளிகை வாசல் யாசகன்

எவராலும் கரை சேர்க்கப்படாமல்

பயணம் தொடரக் கூடுமான

நதி முதுகின் இலை

மற்றுமோர் அழியா மேகமும் நான்

 

தவிர்ப்புக்களுக்கு வசப்படா

நினைவுகள் மிதந்து வழிவதானது

மெதுவாய்க் கொல்லும் நச்சு

இப்பொழுதும்

உள்ளிருந்து விழிகளுக்கு

தாவித் தீர்க்கும் உள்ளாழ்ந்த நிறைகனல்

உன்னால் தோன்றியதுதான்

 

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18காசி
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Comments

  1. Avatar
    ஏ.தேவராஜன் says:

    இறுக்கமும் அகப்பார்வையும் கொண்ட தங்களின் கவிதை வாசக மனத்துக்குள் விசேடப் பிரதேசங்களில் ஆழப் பிரவேசிக்கிறது! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *