ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்

This entry is part 13 of 36 in the series 30 செப்டம்பர் 2012

 

கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாக, தங்களுக்கு எந்தவிதச் சேதார முமில்லாமல் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களைப் பார்த்து வியக்காமலிருக்கமுடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை. பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந்தரப் பிரஜையாகவும் 24×7 நேரமும் காட்டி யவாறே, இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப் பட்டுள்ள, உருவேற்றப்பட்டுவருகிற பெண்பிம்பங்களுக்காக, பெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவருகி றார்கள். 19.08.2012 அன்று நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் நீயா-நானா’ நிகழ்ச்சியைப் பார்த்த போது மேற்படி எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதற்கு முன்பே ‘பெண் ஏன் மிகையாக ஒப்பனை செய்துகொள்கிறாள்?’ என்று ‘நீயா-நானா’ நவீனப் பட்டிமன்றம் நடத்தினார்கள். இப்பொழுதும் கிட்டத்தட்ட அந்தமாதிரி தலைப்புதான். சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தன் போன்றவர்களுக்கு பதிலாய் இதில் உளவியல் மருத்துவர் ஷாலினி, எழுத்தாளரும் சமூகப் போராளியுமான ஓவியா ஆகிய இருவரும் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட இதே போன்றதொரு நிகழ்ச்சியில் ”அழுத்தமாக உதட்டுச் சாயம் தீட்டிக் கொள்ளப் பிடிக்கும்”என்று ஒரு பெண் கருத்துரைத்தபோது “அவ்வாறு செய்துகொள்வதே I am sexually active என்று தெரியப்படுத்து வதற்காகத்தான்” என்றார் உளவியல் மருத்துவர் ஷாலினி. உளவியலாய்வுக் கல்வி அவ்வாறு நிறுவுவதாகவே இருக்கட்டும். அதற்காக அதை ஒரு பொதுமேடையில் அத்தனை ‘கொச்சையாக’த் தெரியப்படுத்தவேண்டுமா என்று தோன்றியது. ஒருவகையில் “ஆணின் உணர்ச்சிகளைத்தூண்டும் விதமாகப் பெண்கள் உடையணிவதால்தான் பாலியல் பலாத்காரம் நடக்கிறது” என்று பேசும் தொனியை இதிலும் கேட்க முடிகிறதல்லவா. இத்தகைய கருத்தை ஓர் ஆணோ, சாதாரணப் பெண்ணோ கூறியிருந்தால் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அதை அனுமதித் திருப்பார்களா? வடமாநிலங்களில், வெளிநாடுகளில் எத்த னையோ பெண்கள் இயல்பாக அழுத்தமான நிறத்தில் உதட்டுச்சாயம் தீட்டி அறிவார்ந்த பல துறைகளிலும் தங்கள் தனிமுத்திரைகளைப் பதித்த வண்ணம் இருப்பது நடப்புண்மை.

அதேபோல், முதலில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது ’நீயா-நானா’ நிகழ்ச்சி யிலும் accessories என்று சொல்லப்படும் காதணிவகைகள், முதலான பல் வேறு அலங்காரப்பொருட்களை அணிவது குறித்து பெண்கள் பேசும்போது, “இது ஆண்களைக் கவரவே. உங்களை நீங்களே நுகர்பொருளாக்கிக் கொள் கிறீர்கள்”, என்று உளவியல்மருத்துவர் கூறினார். “நீங்கள் சொல்வதைக் கேட்ட பிறகுதான் இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனக்கு உறைக்கிறது”, என்று ஒரு பங்கேற்பாளர் கூற, “அதுதான் ‘நீயா-நானா” என்று மார்தட்டிக்கொண்டார் நிகழ்ச்சித் தொகுப் பாளர். அதுவே, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இன்னொரு பெண், “அப்படிப் பார்த்தால் அதேவிதமாய் உங்களையும் கூற முடியும். எல்லாம் பார்க்கும் பார்வையில் தான்”, என்று சொல்ல முற்பட்டபோது அவரை மேலே பேசவிடாமல் ‘மைக்’ஐ கைமாற்றிவிட்டார் அவர். “பாண்டிபஜாரில் இத்தகைய ”அலங்காரப் பொருட்களை தேடியலைவதாகச் சொல்பவர் அதற்காய் எத்தனை அருமையான நேரத்தை இழக்கிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்”, என்று கருத்துரைத்தார் ஓவியா. சம்பந்தப்பட்ட பெண் வாரத்தில் ஆறு நாட்கள் அயராது உழைத்து ஏழாவது நாள் ஒரு நான்கு மணிநேரங்கள் தனக்குப் பிடித்த பொருளை வாங்கச் செலவழிப்பதால் அவருக்கு நேரத்தின் அருமை தெரியவில்லை என்று அறவுரைப்பது எவ்வளவு தூரம் சரி? [பொதுவாகவே நிகழ்ச்சித்தொகுப்பாளரும், சிறப்பு விருந்தினர்களும் நாட்டாமைத் தீர்ப்பு வழங்குவதும் பங்கேற்பாளர்களைக் குட்டுவதும் திட்டுவதும் இந்த நிகழ்ச்சியில் நிறையவே நடக்கிறது].

இதில் மிக முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது எந்த மேடையில் மேற்படி அறிவுரைகளெல்லாம், பெண்ணுரிமைக் கருத்துகளெல்லாம் தரப்படுகிறது என்பதைத்தான். விஜய் தொலைக்காட்சி ‘பெண்கள் சமூகத்தில் நுகர் பொருளாக்கப்படுகிறார்கள், இளந்தலைமுறையினர் அது குறித்த விழிப்பு ணர்வு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்’ என்றெல்லாம் விசனப் படுவது எத்தனை வடிகட்டின போலித்தனம்; அயோக்கியத்தனம். அதில் ஒளிபரப் பபடும் நிகழ்ச்சிகளில் முன்வைக்கப்படும் பெண்பிம்பங்கள் எத்தகையவை? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெறும் சிறுமிகளிலிருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பெண்கள் வரை பெண்ணின் உடலை நுகர்பொருளாக உருவேற்றும்படியான ஆடைகளையும், ஒப்பனைகளையும், அங்க சேஷ்டைகளையும் தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். எல்லா விதமான பாடல்களையும் பாடுவதுதான் திறமை என்று சொல்லிச்சொல்லி கேவல மான பாடல்களை, நாட்டிய அடவுகளைக் குழந்தைகளுக்கு திறனாற்றலாக உருவேற்றுகிறார்கள்.

பிற தொலைக்காட்சிசானல்களிலெல்லாம் செய்திவாசிப்புஇடம்பெறுகிறது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அதுவும் கிடையாது. கட்சி ரீதியான சானல் அல்லவென்றாலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியெல்லாம் நீயா-நானாவில் விவாதமேஇடம்பெறாது.[ஆனால், அன்னா ஹஸாரேயைக் கோமாளியாக, முட்டாளாகக் காட்டுவதே குறியாய் கட்டாயம் ‘நீயா-நானா’ நடத்தப்படும்]. கடுங்கோடையிலும் கோட்டு-சூட் அணிந்தபடிதான் விஜய்தொலைக்காட்சி ஆண்-தொகுப்பாளர்கள் காட்சியளிப்பார்கள். ஆனால்,பெண்தொகுப்பாளர்களின் ஆடையணிமணிகளும், ஒப்பனைகளும் அவர்களைப் பண்டமாகக் கடைவிரித்தபடி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பெண்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, நடமாடும் வணிக வளாகங்களாக வலம்வரும்படி வகுத்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதானே இந்த ஒலி-ஒளி ஊடகங்களின் எழுதப்படாத சட்டமாக இருந்துவருகிறது. இதுபோக, இந்தத் தொலைக்காட்சிச் சானல்கள் நொடிக்கு நூறாக முன்வைக்கும் விளம்பரங்களில் பெண்கள் அலங் காரப் பொருட்களின் ஷோ-கேஸ்கள் தானே. இவ்வாறு இளந்தலை முறையினர் தொலைக்காட்சி சானல்கள் வழியாய் நாளும் மூளைச்சலவை செய்யப் படுகிறார்கள். இதில் கலாச்சாரத்தைப் பற்றியும் கிராமப்புற ‘வெள்ளந்தி மனிதர்களை’ப் பற்றியும் ஆவேசமாகப் புகழ்பாடுவதில் ஒன்றும் குறைச் சலில்லை. முக்கலும் முனகலுமாய், அயல்நாட்டவர்களைவிடக் கேவலமாக மூக்கால் தமிழைப் பேசியவாறு தமிழ்மொழி அழிந்து போகிறதே என்று பிலாக்கணம் பாடுகிறார்கள். பகுத்தறிவு வளர வேண்டும் என்று பேசிய வாறே மூட நம்பிக்கைகளை வளர்க்கும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடு கிறார்கள். விஜய் தொலைக்காட்சியும் ஒளி-ஒலி ஊடகங்களின் இந்த நியமங்களையெல்லாம் இம்மிபிசகாமல் கடைப்பிடித்து வருகிறது.

இதுபோதாதென்று நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ’பாரம்பரியத்’தின் நவீன வடிவமாய் நடிகர்-நடிகையரை, திரைப்படக் கலைஞர்களை மாமனிதர்களாகக் காட்டி மூளைச்சலவை செய்வதும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக மற்ற தொலைக்காட்சி சானல்களில் இருப் பதைப் போலவே விஜய் தொலைக்காட்சியிலும் இடம்பெறுகிறது. ’குடி குடியைக் கெடுக்கும்’ என்று கூறியவாறே இளைஞர்கள் குடிப்பதை வெகு சகஜமான நடைமுறையாகத் திரும்பத்திரும்ப உருவேற்றும் திரைப் படங் கள், ஈவ்-டீசிங் என்ற பெயரில் வார்த்தைகளாலும் செய்கை களாலும் காதல் என்ற பெயரிலும் ஈவ்-டார்ச்சரிங் செய்யும் கேடுகெட்ட வழக்கத்தை, உயிர் கொல்லி ‘ராகிங்’ என்ற அருவருக்கத்தக்க செயலை மாணவர் சமுதாயத்தின், இளைய தலைமுறையின் இயல்பான நடத்தையாக திரும்பத் திரும்பக் காட்டி உருவேற்றிவரும் திரைப்படங்களும் தொடர்ந்து திரையிடப் படும் நிலையில் பெண் சமுதாயத்தில் நுகர்பொருளாக்கப்படுகிறாள், பண்டமாக, இரண்டாந்தரப் பிரஜையாக பாவிக்கப் படுகிறாள் என்றெல்லாம் இந்த சானல்கள் அங்கலாய்ப்பது எத்தனை பெரிய மோசடி? நீயா-நானா என்றேனும் ‘ஒளி-ஒலி ஊடகங்களில் எத்தகைய பெண்பிம்பம் வைக்கப் படுகிறது என்பது குறித்து விவாதம் நடத்த முன்வருமா? இந்த நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினர்களாக தொடர்ந்த ரீதியில் பங்கேற்று எழுச்சிபெற்ற மனத்தினராகப் பெண்விடுதலைக் கருத்துகளை முழங்குபவர்கள் ஒளி-ஒலி ஊடகங்கள் குறித்த அத்தகைய அகல்விரிவான விவா தங்கள் இன்றைய அத்தியாவசியத்தேவை என்ற கருத்தை விஜய் தொலைக்காட்சியிடம் ஏன் முன்வைக்கலாகாது? வலியுறுத்தலாகாது?

முன்பு ஒருமுறை மாநகரப் பேருந்தில் பயணம்செய்துகொண்டிருந்த போது “லேடீஸ் நிக்கறாங்கப்பா, அந்தப்பக்கம் தள்ளிப்போங்கப்பா”, என்று பெண்களின் பாதுகாவலனாகக் குரலெழுப்பியவண்ணம் பெண்கள் பகுதியி லேயே உரசிக் கொண்டு நின்றுகொண்டிருந்த ‘பெரிய மனிதனை’ “முதலில் நீங்கள் தள்ளி நில்லுங்கள்” என்று சொல்லியபோது அவன் முறைத்த முறைப்பு இருக்கிறதே…! விஜய் தொலைக்காட்சி ‘பெண் சமுதாயத் தில் பண்டமாக பாவிக்கப்படுகிறாள்’ என்று பேசக்கேட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்வு தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தது.

தம் முதுகிலுள்ள அழுக்கைப்பற்றிய சொரணையற்றவர்களிடமிருந்து, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற துணிச்சலில் வெளிப்படும், வியாபார உத்திகளில் ஒன்றாகக்கொள்ளப்படும் சமூகப்பிரக்ஞையும் அக்கறையும் தான் சமூகச்சீர்கேடுகளிலெல்லாம் மிகவும் அபாயகரமானது.

——–

Series Navigationஓடியது யார்?காதல் துளி
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *