வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்

This entry is part 23 of 33 in the series 19 மே 2013

வேதாளத்தின் மாணாக்கன்

(The Devil’s Disciple)

அங்கம் -3 பாகம் -2

 Cover image

மூன்று அங்க நாடகம்

 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

 

Fig 1 I can save you by telling

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

Fig 2 Standing together is the only force

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

Fig 3 No woman will lose her lover

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்செர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [50 வயது]  (British General Burgoyne)

6.  பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன்  [55 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant)

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். அன்னி டச்சியான் :  [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13  இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -3 பாகம் -2

மூன்று அங்க நாடகம்

 Fig 4 Do you realize

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.  [Websterbridge, New Hamshire, U.S.A]  பாதிரியார் இல்லம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  மறு நாள் இலையுதிர் காலத்து காலை நேரம்.

அரங்க அமைப்பு:   வெஸ்டர்பிரிட்ஜ்  நகர் மையத்தில் கட்டப் பட்டிருக்கும் பிரிட்டீஷ் இராணுவத் தலைமை ஆணையகம்.  கைதிகள் அடைக்கப் பட்டுள்ள சிறைக்கள அரண்கள்.  இராணுவக் காவலன் ஒருவன் கைதிகள் தனிப் பேச்சறைக் கதவைத் திறந்து,  ஜூலியா உள்ளே அனுமதிக்கப் படுகிறாள்.  இரவில் சரிவரத் தூங்காது, ஜூலியா பாதி மயக்க நிலையில் மெதுவாய் நடந்து வருகிறாள்.    காவலன் ஜூலியாவிடம் பரிவோடு நடந்து கொள்கிறான்.   கைதி ரிச்செர்டைக் காலையில் காண வந்த  ஜூலியா, உண்மையைச் சொல்லி, தான் அவனைத் தப்ப வைக்கப் போவதாய்க் கூறுகிறாள்.

 

ரிச்செர்டு:   அது அப்படி எளிதல்ல மிஸிஸ். ஆண்டர்சன் !  அதனால் விளையும் பயன் பயங்கரமானது.   என்னை விட்டுவிட மாட்டார் !  பாதிரியார் தப்பிச் செல்லவும் முடியாது.  இன்று யாராவது ஒருவரைத் தூக்கில் போட்டு மாதிரிச் சாவைக் காட்டி மக்களைப் பயமுறுத்துவதே இராணுவத்தின் குறிக்கோள் !   நாம் அதற்கு அஞ்சவில்லை என்று ஒன்றாக நின்று, தூக்கு மரத்தை முத்தமிடச் செல்வோம் !   துணிச்சலான அந்த ஓர்  எதிர்ப்புதான் ஜெனரல் பர்காயனை அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் விரட்டி, அமெரிக்காவை விடுதலைத் தேசமாய் விடுவிக்கும் !

 

Fig 5 My death will not break your heart

ஜூலியா: [பொறுமை இழந்து ஆத்திரமாய்] இதெல்லாம் நமக்குத் தேவையா ?

ரிச்செர்டு:  [சிரித்துக் கொண்டு]  மாதர்க்குத் தேவை இல்லைதான் !  ஆனால் ஆண்களுக்கு வேறாக நோக்கம் உள்ளது.  விந்தையான  எதிர்ப்பு உள்ளது மிஸிஸ் ஆண்டர்சன் !   அது மாதருக்கு மூடத்தனமாய்த் தெரியுது !

ஜூலியா:  ஆடவர் பிடிவாத்தால் மாதர் தாம் நேசிப்போரை இழக்க நேர்கிறது !

ரிச்செர்டு:  அதனால் என்ன ?  மாதருக்குப் புதிய காதலர் எளிதாய்க் கிடைக்குது.

ஜூலியா:  [ஆங்காரமாய்]  இப்போது நீ உணர்கிறாயா, உன்னை நீயே கொல்கிறாய் என்று ?

ரிச்செட்ர்டு:   என்னை மட்டும் கொல்ல எனக்கு உரிமை உள்ளது, மிஸிஸ் ஆண்டர்சன் !   நீ  என்னைப் பற்றிக் கவலைப் படாதே !  [புன்னகையுடன்] என் மரணத்தால் எந்த மாதரும் தன் காதலனை இழக்கப் போவதில்லை !   ஆனால் உன்னைத் தவிர யாரும் என்னைக் கவனிக்க வில்லை.   தெரியுமா உனக்கு ! ….  என் தாய்  … இறந்து போய் விட்டாள் !

ஜூலியா:  என்ன ?  இறந்து விட்டாளா உன் தாய் ?

ரிச்செர்டு:  இருதய நோயில் செத்து விட்டாள் நேற்றிரவு !  அவளது கடைசி வார்த்தை எனக்கு ஒரு சாபம் இட்டது !    என் அகால மரணத்துக்கு அவள் ஆசி மட்டும் கிடைக்காது !  மற்ற என் உற்றார் யாரும் என் மரணத்துக்காக  நோக மாட்டார் !   ஏழைப் பெண் எஸ்தர் இரண்டு நாள் எனக்காக அழுவாள் !   நானே என் இறுதி உயிலைச் சிறையில் எழுதினேன், சிறைப் பாதிரி முன்பாக !   என் வாரீசு சொத்தை யெல்லாம் எஸ்தருக்கும் என் தம்பிக்கும் எழுதி விட்டேன் !

 

Fig 6 Call me as your witness

ஜூலியா:  [கேலியாக] எனக்கொன்றும் இல்லையா ?

ரிச்செர்டு:  [வியப்புடன்]  உனக்கா ?  எப்படி உனக்கு நான் எழுத முடியும் ?

ஜூலியா:  எனக்காகத் தூக்கில் தொங்கிச் சாகவும் தயாராக இருக்கிறாய் இல்லையா ?   என்னைப் பற்றி நீ சிந்திக்க வில்லையா ?

ரிச்செர்டு:  சிந்திக்க வில்லைதான் !  ஆனாலும் நேற்று என்மீது நீ உன் ஆத்ம நேசத்தை வெளிப்படையாகக் காட்டினாய் !   என் மரண தண்டனை உன் மனதை உலுக்கி மிருதுவாக்கி விட்டது.  என்னை நீ நேசித்து ஏனிங்கு வந்தாய் ?   இன்று பகல் 1 மணிக்கு மேல் நானிங்கு வாழப் போவதில்லை !  உயிரோடிருக்கப் போகும் ஒரு மனிதனை நீ நேசிக்க வேண்டும் !

ஜூலியா:  நீ நினைப்பது தவறென்று நான் உனக்கு நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் ?

ரிச்செர்டு:   கவலைப் படாதே !  நான் உனக்குக் கடமைப் பட்டுள்ளேன் நீ என்னைச் சிறிது நேசிப்பதற்கு !   எனது மரணம் ஒருபோதும் உன்  இதயத்தை முறிக்காது !

ஜூலியா:  [கண்ணீருடன், கரத்தை அவன் தோள் மீது வைத்து]  உனக்கு அது எப்படித் தெரியும் ?

ரிச்செர்டு:  [வியப்புடன்]  மிஸிஸ் ஆண்டர்சன் !  என்ன இது ?  மன்னிக்க வேண்டும் என்னை !   காவலர் வரும் வேளை !  என் ஆயிட் காலம் முடிந்து விட்டது !   முற்றிப் போன பிரச்சனை இது !

ஜூலியா:  இன்னும் தாமத மாகிவிட வில்லை !  நீதி மன்றத்தில் சாட்சியாய் வர என்னை அழைத்திடு !  உண்மையை நான் சொல்லி விடுகிறேன், நீ யாரென்று ?   உன் தியாகச் செயலை நீதி மன்றத்தில் பாராட்டுவாரே தவிர உன்னைத் தூக்கில் போடத் தயங்குவார் !

ரிச்செர்டு:  அப்படித் தெரியாது அவருக்கு !  சூழ்ச்சி செய்து பாதிரியைக் காப்பாற்றியதாக என்னை  அடுத்துத் தண்டிக்கத் துணிவார் !  தண்டிப்பி லிருந்து கண்டிப்பாய் என்னைத் தப்ப வைக்க முடியாது நீ !

ஜூலியா:  நீ சாவதற்குத்தான் விரும்புகிறாய் !  வாழ்வதற்கு அல்ல !

 

Fig 7 Save yourself for my sake

ரிச்செர்டு:  [பிடிவாதமாய்]  இல்லை !  எப்படியும் என் மீது பழி சுமத்துவார் !   நான் மரிப்பது உறுதி !  என்ன காரணம் கூறினால் என்ன ?

ஜூலியா:  சரி !  நீயாவது உண்மையைச் சொல்லித் தப்பிக் கொள் ! நான்  உன்னை மிகவும் வேண்டுகிறேன்.  என் பொருட்டு என் கணவரைக் காப்பாற்றியதாக சற்று முன் சொன்னாய்.  இப்போது என் பொருட்டு நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளேன்.  நான் உன்னோடு வாழ்ந்து வாழ்க்கை முடிவுக்கே செல்கிறேன்.  உனக்காக நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்.  நீதி மன்றத்தில் உண்மையைச் சொல்லி, உன்னைக் காப்பாற்ற எனக்கொரு வாய்ப்பைப் கொடு !

 

[தொடரும்]

*******************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 15, 2013)

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigationவள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரைநாகராஜ சோழன் M.A.M.L.A.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *