வாக்காளரும் சாம்பாரும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 32 in the series 15 டிசம்பர் 2013

-நீச்சல்காரன்

காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா” என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து “இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி” என்று பைவ்யமாகத் தனது தோசைக் கடை முதலாளியிடம் சொன்னார். “தம்பி ஒரு ஓட்டு இல்லாட்டி எலெக்சன் கேட்டுப்போகாது, தோசை மாஸ்டர் இல்லாமல் வியாபாரம் ஓடாது” என்றார் முதலாளி. “அண்ணாச்சி, எலெக்சனே என்னை நம்பித்தான் நடக்குது” என்று மூன்று மாத ரகசியத்தைப் பட்டென்று போட்டுடைத்தார் வர முடியாது என்று கெஞ்சினான். சிறிதும் எதிபாராத பதிலால் இன்னும் விளக்கமாகச் சொல்லச் சொன்னார் முதலாளி. எப்பவுமே சஸ்பென்சைக் காப்பத்துவதுதான் கெத்து என்று எதோ படத்தில் பார்த்த நியாபகத்தில் சஸ்பென்சை உடைக்க மாட்டேன் என்று மௌனம் சாதித்தார் தோசை மணி.

பயபுள்ள கவுசிலர் எலெக்சனின் நிகுத்து போல என்று மட்டும் முதலாளிக்கு புரியத்தொடங்கியது. அதுசரி “உங்க அப்பா யாருக்கு ஓட்டுப் போடப் போறாரு?” என்று வினாவினார். “அவரு எப்பவுமே பெரிய கட்சிக்குத் தான் ஒட்டு போடுவாராம். கண்டிசன் நம்பர் ஒன், அந்தக் கட்சித் தலைவருக்கு அதிகத் தொண்டர்கள் இருக்கணும், அவரு காருக்குப் பின்னாடி எட்டு காராவது போகணும், அடிக்கடி அறிக்கை விடனும். கண்டிசன் நம்பர் டு, தமிழ்ப் பற்று பத்தி பேசனும், தமிழ் மக்கள் என் உயிருனு பேசனும், தமிழ் வாழ்கனு சொல்லனும். இதுதான் இவர் பாலிசி” என்றார் தோசை மணி. எப்படியோ இவன் குடும்பத்திலிருந்து ஒரு ஓட்டு இவனுக்கில்லை என்று கலக்காத சாம்பாரின் அடியிலிருந்து பருப்பை எடுப்பது போல அக மகிழ்ந்து போனார் முதலாளி. “சூப்பர்! சூப்பர்! நல்ல தேர்வு அடுத்து உங்க அம்மாவும் அதுமாதிரிதான் ஓட்டு போடப் போறங்களா?” என்றார். “அவுங்களப் பொருத்த மட்டில் பக்கத்து வீட்டு காசியம்மாள் யாருக்கு ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்குத் தான் இவங்களும் போடுவாங்க. அதுமாதிரி யாராது தெரிஞ்சவுங்க, அறிஞ்சவுங்க, பேசுனவுங்க, சொந்தக்காரவுங்கனு இருந்தால் அவங்களுக்கும் ஓட்டு போடுவாங்க” என்று சொல்லிக் கொண்டே “கொஞ்சமிருங்க பூத்தில இருந்து குமாரு கூப்பிடுறாரு” என்று இரு நிமிடங்கள் உரையாடலை நிலுவையில் இட்டார் தோசை மணி. அதைக் கேட்டமாத்திரத்தில் கலக்காத சாம்பாரை மேல்புறமாக எடுத்து ஊத்தியது போல கவலை கொண்டார் முதலாளி. அடிக்கடி அடுப்பு சரியில்லைன்னு லீவு போட்டு இவன் எலெக்சன் வேலைய நல்லப் பார்த்திருக்கான் போல மனதிற்குள் பொரிந்து கொண்டார்.

“நான் தான் முகேஷ் பேசுறேன்..” என்று வரும் கேன்சர் விளம்பரம் போல சிறு நேரத்தில் “நான்தான் மணி பேசுறேன்” என்று அலைப்பேசி உரையாடலுக்குள் வந்தார் தோசைமணி. “அதுசரி உங்க அண்ணே கடலைமணியாவது நீ சொல்ற ஆளுக்கு ஓட்டு போடுவாரா?” என்று போட்டு வாங்க முயல்கிறார் முதலாளி. “அவன் ஒரு ஆகாதவன் முதலாளி, அவனுக்கு காரியம் ஆகுறமாதிரி இருக்கிறவுங்களுக்குத்தான் ஓட்டு போடுவான். போன வருசம் ரோடு போட்ட எம்.எல்.ஏ. மாடசாமி தான் குலசாமினு சொல்வான், ஆனால் போன வருசக் கடைசியில ரேசன் அரிசி சரியில்லைன்னு அவரையே திட்டுவான். போன மாசம் இலவச டீவி கொடுத்த அமைச்சரை ஓகோனு சொன்னான், ஆனால் கரண்ட இல்லன்னு இப்ப திட்டுறான். இந்த ஏலேக்சனுல காசு கொடுத்தா அவுங்களுக்கே ஓட்டக் குத்துவான் முதலாளி” என்று விவரங்களை அள்ளிக் கொடுத்தார் தோசைமணி. “அப்புறம், வீட்டு வெளிய தூங்கும் உங்க பாட்டி?” என்றார் முதலாளி. “அந்தக் கிழவியோட பூத் நோட்டீஸ யாரு வீட்டுக்கு வந்து கொடுத்தாலும் அந்தக் கட்சிக்குத் தான் ஓட்டு போடும். அதுக்கு அரசியல் தெரியாது முதலாளி” என்று தனக்குத் தெரியும் என இலைமறை காயாகச் சொன்னான் தோசைமணி

“அப்ப உங்க வீட்டுல அப்பா மட்டுதான் நாட்டு நடப்பைப் பார்த்து ஓட்டு போடுவாரு போல” என்று சாம்பாரை எப்பவும் கலக்கி ஊற்றும் ஓனர் போல கூட்டிக்கழித்துச் சொன்னார் முதலாளி. “அப்படியெல்லாம் இல்லை எங்க சின்ராசு மாமா இன்னும் விவரமானவரு அமெரிக்கா, ஜப்பான் நாட்டு ஏரோபிளைனை எல்லாம் கிட்டத்தில போயி பார்த்தவரு. அவரு எப்பவும் ஜெயிக்கிற கட்சிக்குத் தான் ஓட்டு போடுவார். எந்தக் கட்சியில சினிமா ஹிரோக்கள் அதிகம் இருக்காங்களோ இதுதான் வெல்லும் என்பார். ஒருவருசம் ஓட்டு போட்டா ஐஞ்சு வருசம் போட்டமாதிரினு சொல்வாரு.” என்று அருமை பெருமைகளை அளந்துவிட்டார் தோசைமணி.

ஓருவழியாகப் பொறாமையை மறைத்துக் கொண்டு யாரோ எழுதிய வசனம் ஒன்றை “நாட்டில ஊழல் செய்யாதவுங்க, அரசு சொத்துக்களைக் காப்பவங்ககள், திறமை அடிப்படையில் நிர்வாகிகள், தொழிற்துறை உற்பத்தியை ஊக்குவிப்பவங்கள் இப்படி யாருக்கும் ஓட்டு போடக் கூடாதா?” என்று ஆதங்கப் பட்டமாதிரிக் காட்டினார் முதலாளி. “சரிசரி எனக்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்னும் நம்ம காளியண்ணே வீட்டுலயிருந்து எலெக்சன் பூத்து வரைக்கும் இறக்கிவிட ஆட்டோ வச்சிருக்காரு அதுலயே போயி அவருக்கு ஒரு ஓட்டு போடனும்” என்று தனது அவசரத்தை வெளிக்காட்டினார் தோசைமணி.

ருசியான சாம்பார் சட்டியுடன் கீழே கொட்டியது போல அதிர்ச்சியடைந்தார் முதலாளி, “டேய் மணி, அப்ப நீகூட உனக்கு ஓட்டு போட்டுக்க மாட்டியா?” என்று குழப்பமாகக் கேட்டுவிட்டார். தோசைமணியோ முதலாளியின் கற்பனை என்னவென்று புரியாமல் “முதலாளி கிண்டல் பண்ண நேரமில்லை எலெக்சனுக்கு நேரமாச்சு, எனக்காகக் காத்திருப்பாங்க” என்று மீண்டும் அந்த ரகசியத்தை உடைக்காமல் கதறினார் தோசைமணி. சாம்பாரில் விழுந்த பல்லியாக உடனே “உனக்காக எதுக்குக் காத்திருக்காங்க? அப்ப நீ எலெக்சன்ல நிக்குறதானே” என்று கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தி ரகசியத்தை உடைக்கத் துணிந்தார் முதலாளி. “அட நீங்க வேற எலெக்சன் ஆபிசர்களுக்கு வடை, காபி, இட்லி, சாம்பார் சப்ளை நான் தான் அதத்தான் அப்படி சொன்னேன்” என்றார் தோசைமணி. அடுப்படிப் பூனை தட்டிவிட்ட சாம்பார் பானை போல சிரித்துக் கொண்டே செல்பேசியை மடக்கிக் கொண்டார் முதலாளி.

Series Navigation(அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்முரண்பாடுகளே அழகு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *