கூடை

This entry is part 1 of 23 in the series 7 டிசம்பர் 2014

பட்டுக்கோட்டை தமிழ்மதி

 

 

ஏழெட்டு கூடைகளோடு

என் மகன் .

 

மண்ணள்ளி விளையாட

ஒன்று

தம்பிக்கென்றான்.

 

அப்பாவிடம் ஒன்றை கொடுத்து

கவிதை எழுதும்  காகிதத்திற் கென்றான்.

 

இது

பிளாஸ்டிக்பைக்கு பதில்

கடையில் பொருள் வாங்க வென்றான்

 

ஆத்தா

வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள

ஒன்றை

ஊருக்கு அனுப்பச் சொன்னான்

 

குடத்தடி கொடிமல்லி பூப்பறிக்க

இது அக்காவுக் கென்றான்

 

கூடைகளுக்கெல்லாம் கொண்டாட்டம்

குதித்து குதித்து

குப்புற விழுந்து சிரித்தன.

 

ஊரில் பார்த்த

ஓலை குட்டான்

கடவாய் பொட்டி

 

சாணி அள்ளும் தட்டுக்கூடை

ஈச்சமிளாறில் செய்த

நெல் தூற்றும் கூடை

அவித்த நெல்லை அள்ளும் கூடை

நெல்லரைக்க போய்

தவிடள்ளும் கூடை

 

பனையோலை கிழித்து

மூங்கில் சீவி

முடைந்த கூடை

ஞாபகம்.

அழகு கூடையொன்றில்

அள்ளி கொடுத்தான்

அம்மாவுக்கு தன்

முத்தங்களை.

 

வரைய சொன்ன ஆசிரியையிடம்

கூடை ஒன்றை கொடுத்து

அதில்

நட்சத்திரங்களை போட சொல்லி

நின்றான்

 

வெறுங் கூடை

நிறைய நிறைய

கனவுகள்.

–பட்டுக்கோட்டை தமிழ்மதி

 

Series Navigationவரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *