தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?

This entry is part 6 of 23 in the series 21 டிசம்பர் 2014
Anna and Kalaignar
தொலைக்காட்சிகள் இல்லாத காலம் அது. வானொலிகளில் பாடல்கள் கேட்கலாம். நான் வானொலி கொண்டுவரவில்லை. பத்திரிகை வாங்கினால்தான் செய்திகள் தெரியும். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. திரு. பக்தவத்சலம் தமிழக முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி எதிர் கட்சித் தலைவர். அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினர். எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திகள் அதிகம் பத்திரிகைகளில் வெளிவராது. விடுதலை,முரசொலி, தென்றல், மன்றம் போன்ற இயக்க பத்திரிகைகள்தான் கழகத்தின் செய்திகளை வெளியிட்டன.
ஆனால் தாம்பரம் டவுனில் உள்ள கடைகள் வீடுகள்  ஆகியவற்றின் சுவர்களில் சுவரொட்டிகளுக்கு பஞ்சமில்லை. அவற்றைப் பார்த்தாலே போதும், எங்கே எந்த அரசியல் கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது என்பது. தெரிந்துவிடும். அடிக்கடி தாம்பரத்திலும், பல்லாவரத்திலும், சைதாப்பேட்டையிலும் தி. மு. க. வின் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதை அந்த சுவரொட்டிகள் மூலம் அறிந்துகொள்வேன். அக் கூட்டங்களில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். போன்ற கழகத் தலைவர்கள் பேசுவார்கள். நான் கூடியமட்டும் நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ அக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன். மின்சார இரயில் இருந்ததால் சைதாப்பேட்டை வரைகூட சிரமம் இல்லாமல் சென்று திரும்பலாம்.
ஒரு முறை சைதப்பெட்டைக் கூட்டத்தில் அண்ணா பேசுகிறார் என்பதை அறிந்து இரவு சென்றிருந்தேன். அண்ணா வரும் வரை கூட்ட ஏற்பாட்டாளர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் பெசிக்கொண்டுதானிருந்தார்கள். மேடையில் பேசியவர்கள் அது பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து பேசினார்கள். அப்போது அண்ணாவின் கார் வந்தது. கூட்டத்தில் பெரும் சலசலப்பு உண்டானது. அண்ணா வேட்டியை அவிழ்த்து ஒரு முறை இறுக கட்டிக்கொண்டு மேடையில் ஏறினார்.( அவர் அவ்வாறு வேட்டி கட்டும் பாணியை கலைஞரின் பராசக்தி திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் காணலாம். )  கடல் அலை போல் ஆர்ப்பரித்த மக்கள் அப்படியே கப் சுப் என்று ஆகிவிட்டனர்! எனக்கு ஒரே ஆச்சரியம்! மக்கள் அண்ணா மீது கொண்டுள்ள மரியாதையை அன்று கண்டு வியந்து போனேன் எனில் அது மிகையன்று! சுமார் அரை நூற்றாண்டு கழிந்தபோதும் அந்தக் காட்சி அப்படியே என்னுடைய மனதில் பதிந்துள்ளது! அவருடைய  அடித்தொண்டையிலிருந்து வரும் தனித் தன்மையான குரலில் சொற்பொழிவைக் கேட்டு நான் கிறங்கிப்போனேன்!  தேனுண்ட வண்டாக மயங்கிப்போனேன்! சிங்கப்பூரில் இருந்தபோது அண்ணாவின் சொற்பொழிவுகளை தமிழ் முரசு பத்திரிகையில் நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.ஆனால் இப்போதோ அவரின் பேச்சாற்றலை நேரில் கேட்டு வியந்துபோனேன்!
அண்ணா ஒரு திரைப்பட நடிகர் அல்ல! ஆனால் திரைப்பட கதாநாயகர்களுக்கும் இல்லாத கவர்ச்சி அண்ணாவிடம் இருந்தது! அவர் அங்கு பேசத்தான் வந்தார். அவர் பேச்சைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டு வழிந்தனர். அப்படி அவர் என்ன பேசிவிடப் போகிறார்? அவர் அப்போது தமிழக முதல்வர் இல்லை.  பகுத்தறிவையும் சமுதாய மறுமலர்ச்சியையும் குறிக்கோள்களாகக் கொண்டுள்ள ஒர்  இயக்கத்தின் பொதுச் செயலாளர்தான் அண்ணா!
அவர் என்ன சாதாரண பேச்சாளரா? அதுதான் இல்லை! 1940,1960 களில் அவர்தான் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்.அவருக்கு நிகர் அவரே எனலாம். மேடைப்பேச்சில் புதியதொரு சொற்பொழிவு பாணியை உருவாக்கிய முன்னோடி. அவரால்தான் தமிழ்ச் சொற்பொழிவு புதிய வடிவும், பொலிவும் பெற்றது. கருத்தாழம் மிகுந்த அவருடைய சொற்பொழிவுகளில் உவமைகளும், அவருக்கே அமைந்த அடுக்கு மொழியும்,கிண்டலும் கேலியும் இயல்பாக மடை திறந்த வெள்ளமென ஊற்றெடுக்கும்.  அவரின் அழகுத் தமிழ் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. அவருடைய சொற்பொழிவுக்குக் காத்திருந்ததுபோல வேறு எவரின் சொற்பொழிவுக்கும் தமிழர்கள் காத்திருந்ததில்லை. அவருக்காகக் கூடிய மக்கள் வெள்ளம்போல் வேறு யாருக்காவும் அதுவரை திரண்டதில்லை.
அண்ணா நாவன்மை கொண்ட சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. அவர் கைவண்ணம் கொண்ட மறுமலர்ச்சி எழுத்தாளர். அவருடைய உரைநடை, தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனை.அவருடைய எழுத்துக்களில் புதுமை பூத்துக் குலுங்கின. அது எதுகை மோனை விளையாடும் வீறுநடை. அவர் கையாண்ட சொல்லாக்கங்களும், தொடராக்கங்களும் சாகா வரம் பெற்றவை. மாற்றான் தோட்டத்து மல்லிகை, எதையும் தாங்கும் இதயம், எங்கிருந்தாலும் வாழ்க என்பன போன்ற பல நூறு தொடர்களைப் பயன்படுத்தியவர் அண்ணா. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் எழுதி இளைஞர்கள், மாணவர்கள், வாசகர்களின் மனதில் நிலைத்த இடம் பெற்றவர். அவருடைய சிறுகதைகள் சீர்திருத்தக் கதைகளாகவும், புதிய கருத்துக்களையும், செய்திகளையும்  சொல்லுபவையாகவும் அமைந்தன. சில பிரச்சாரக் கதைகளிலும் பிரசார நெடி இல்லாது நாசூக்காக எழுதும் ஆற்றல் மிக்கவர் அண்ணா. அவருடைய கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், புதிய சமுதாயம் காண வழிவகுத்தவை.
அண்ணாவின் நாவல்களில் மறுமலர்ச்சிக் கருத்துக்களும், புதிய களங்களும், நடைச்சித்திரங்கள் போன்ற பாத்திரங்களும் விறுவிறுப்பான நடையும் வெளிப்பட்டன. அவருடைய பல நாவல்கள் நாடகங்களாகவும், திரை ஓவியங்களாகவும் வெளிவந்துள்ளன.
அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் அவரை நாடக ஆசிரியராக புகழூட்டின . சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் போன்ற நாடகங்களும் மறக்க முடியாதவை..சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், இன்னும் சில நாடகங்களில் அண்ணா நடித்துள்ளார். தமிழ் நாட்டின் தலைசிறந்த நாவலாசிரியர் கல்கி அவர்கள் அண்ணாவை தென்னாட்டு பெர்னார்ட் ஷா என உளமகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
அண்ணா தமது சமுதாய சீர்திருத்த எண்ணங்களையும், அரசியல் பிரச்சாரத்தையும் சுவை நல்கும் விதத்தில் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டு புரட்சி செய்தார். அவர் விடுதலை, திராவிட நாடு, நம்நாடு, காஞ்சி முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தபோது அவற்றில் கடித இலக்கியத்தைத் தோற்றுவித்து பெருமை சேர்த்தார். இதன்மூலம் அவர் ஒரு சிறந்த கட்டுரை ஆசிரியர் எனவும்,  நல்ல இதழாசிரியர் என்றும் போற்றப்பட்டார்.
இவ்வாறு எழுத்துலக வேந்தராக விளங்கிய அண்ணா முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி திராவிடப்பண்ணை என்னும் நிறுவனத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார். அவர் சிறந்த நூலாசிரியர் என்பதையும் தமிழகம் உணர்ந்தது.
இயல் இசை நாடகங்களில் ஆழ்ந்த கருத்தைச் செலுத்திவரும் அண்ணா ஒரு பல்துறை அறிஞர்.
அண்ணாவை சிங்கப்பூரில் பத்திரிகை வாயிலாகவும் நூல்களின் மூலமாகவே அறிந்திருந்த நான் இப்போது அவரை  நேரில் கண்டும் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டும் உவகை கொண்டேன். அண்ணாவை என்னுடைய வாழ்கையின் வழிகாட்டியாகக் கொண்டுள்ளதை நான் எண்ணி மகிழ்ந்தேன்.
சனி ஞாயிறுகளில் நான் நண்பர்களுடன் சென்னை சென்று வந்தாலும், சில நாட்களில் தனியே செல்வதையும் விரும்பினேன். அப்போதெல்லாம் நான் மெரினா கடற்கரைக்கு செல்வதையே பெரிதும் விரும்பினேன். அங்கு ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஓசையில் தூரத்தில் தெரியும் தொடுவானத்தில் தோன்றும் வண்ணங்களின் மாற்றத்தைக் கண்டு மகிழ்வேன். அப்போது தங்கத் தகடு போன்று அஸ்தமிக்கும் சூரியன் நீல நிறக் கடலில் மெல்ல மெல்ல மூழ்கி மறையும் அதிசயத்தைக் கண்டு மகிழ்வேன். அப்போது சிறுகதைக்கான கரு கூட தோன்றும். அதுபோன்றுதான் ‘ காதல் அலைகள் ” எனும் ஒரு சிறுகதை எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். அப்போது அதன் ஆசிரியர் ப. சந்திரகாந்தம் அதை பிரசுரித்து என்னுடைய பெயருக்கு அடியில் சென்னை என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கதையை அப்பா எனக்கு அனுப்பி வைத்ததோடு,  கதைகள் எழுதுவதோடு நில்லாமல் பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு அறிவுரை .கூறியிருந்தார். இருட்டிய பிறகு மெரினா புஹாரியில் சுவையான பிரியாணி அருந்திவிட்டு தாம்பரம் திரும்புவேன். அப்போதெல்லாம் கைவசம் நிறைய பணம் இருந்ததால் கவலையில்லாமல் காலம் கழிந்தது.
ஒரு நாள் விடுதி நண்பர் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். அவர் பி.எஸ்.சி. இயற்பியல் மாணவர். ஆம்பூரைச் சேர்ந்தவர். கிறிஸ்தவர். தமிழ் ஆர்வத்தால் எனக்கு நண்பனானவர்.
கல்லூரியில் மாணவர் கிறிஸ்துவ  இயக்கம் இயங்கி வந்தது. அதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதில் என்னைச் சேர்ந்துகொள்ளச் சொன்னார். நான் தயங்கினேன். என்னுடைய திராவிட இயக்க ஈடுபாட்டை அவர் அறிந்தவர்தான். அதனால் எனக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை அவர் மாணவர்  கிறிஸ்துவ இயக்கத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். நான் அதில் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் அவர்கள் நடத்தும் ஓய்வு நாள் பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்றார். ஓய்வு நாள் பள்ளி என்பது ஞாயிறுகளில் கிறிஸ்துவ பிள்ளைகளுக்காக நடைபெறும் வேதாகமப் பள்ளி. அங்கு சிறு பிள்ளைகளுக்கு பைபிள் கதைகள், ,கிறிஸ்துவப் பாடல்கள், ஜெபம் போன்றவை சொல்லித் தரப்படும்.இவற்றில் எனக்கு உண்மையில் கொஞ்சமும் அனுபவம் இல்லை. சிறு பிள்ளையில் நான் தெம்மூர் கோவிலில் அவ்வாறு பயின்றிருக்கலாம். சிங்கப்பூரில் அதைத் தொடரவில்லை.
நான் கிறிஸ்துவனானாலும் ஆலயத்துக்குச் செல்வதில்லை. என்னிடம் பைபிள் கூட இல்லை. ஞானப்பாட்டுகள்,கீர்த்தனைகள் எதுவும் தெரியாது!
” பரமண்டலங்களிளிருக்கிற எங்கள் பிதாவே … ”  என்ற ஜெபம் கூட தெரியாமல் இருந்தேன்! எப்போதாவதுதான் அப்பா என்னை கோவிலுக்கு கூட்டிச் செல்வார். அதிலும் முக்கியமாக ஈஸ்டர், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதுதான் கட்டாயம் கோவில் செல்வோம். இளம் வயதில் பள்ளிப் பருவத்தில்  என் ஆர்வம் அனைத்தும் தமிழ் மீதுதான் இருந்தது.அத்துடன் திராவிட இயக்கத்தின் கொள்கைகளின்மீது அளவுக்கு அதிகமான பற்றுதல் கொண்டிருந்தேன்.
தந்தை பெரியார் கடவுள் இல்லை என்பவர்! அறிஞர் அண்ணாவும் கலைஞரும், இதர கழகத்தின் தலைவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்! ஆனால் ” ஒன்றே குலம் ஒருவனே தேவன். ” என்று அவ்வப்போது கூறிக்கொள்வார்கள். எந்தக் கடவுளின் பெயரையும் சொல்லி இவர்தான் அந்த ஒரே கடவுள் என்றும் அவர்கள் சொன்னதில்லை.அத்துடன் கணியன் பூங்குன்றனாரின்  ” யாதும் ஊரே, யாவரும் கேளீர் ” என்ற பாடல் வரியையும் கூறிக்கொள்வார்கள். எனக்கு இவை மிகவும் பிடித்திருந்தன. இவை இரண்டுமே பகுத்தறிவுக்கு ஒத்தவையாகத் தோன்றின.
          கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு பாசறையில் வளர்ந்துவிட்ட நான், கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஒரு நல்ல கிறிஸ்துவனாக வாழ்வது என்பது முரண்பட்டதாகத் தெரிந்தது. கிறிஸ்துவர் யார் திராவிட இயக்கத்தில் இருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தேன். வலம்புரி ஜான் நினைவு வந்தது. ஆனால் அவர் எந்த அளவுக்கு கிறிஸ்துவ கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர் என்பது எனக்குத் தெரியவில்லை.அதுபோன்றே இஸ்லாமியர் யாராவது திராவிட இயக்கத்தில் உள்ளனரா என்றும் எண்ணிப் பார்த்தபோது சாதிக் பட்சா நினைவுக்கு வந்தார். இவர்கள் இருவரும் இறை நம்பிக்கையுடன் எவ்வாறு பெரியாரின் நாத்திகக் கொள்கையையும் ஏற்றுக்கொண்டனர் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.
          அப்போது அப்பாவின் நினைவு வந்தது. அவர்கூட இளம் வயது வரை கிராமத்து கோவிலிலும், கிறிஸ்துவ போர்டிங்கிலும் பயின்றவர்தான். அனால் பெரியாரின் கொள்கைகளின் மீது அழ்ந்த பற்று மிக்கவர். அவர்தான் எனக்கு துவக்க காலத்தில் பெரியார் பற்றியும், அண்ணா பற்றியும், கலைஞர் பற்றியும் அறிமுகம் செய்தவர். அதன்பின்புதான் நான் அவர்களின் நூல்களை வாங்கிப் படித்து அவர்களின் வசமானேன்.
          நான் சிறு வயதிலிருந்து கடவுளை எண்ணி எதையும் வேண்டிக்கொண்டதில்லை. கடவுள் பற்றி யாரும் என்னிடம் போதித்ததும் கிடையாது. நான் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகனாகவே வாழ்ந்துள்ளதை அப்போதுதான் உணர்ந்தேன்.
          உலகைப் படைத்தது கடவுளா அல்லது இயற்கையிலேயே உருவானது உலகமா என்ற ஐயம் என்னுடைய மனதில் எழேவே செய்தது. உலகைப் படைத்தது கடவுள் எனில், அதோடு தொடர்புடைய கோளங்களையும், பரந்த வானவெளியையும் கோடிக்கணக்கான விண்மீன்களையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்கவேண்டும்? இது சாத்தியமான ஒன்றா? அப்படியே கடவுள்தான் படைத்தார் எனில் அவர் ஒருவராகத்தானே இருக்க முடியும்? பல கடவுள்களால் இருக்க வாய்ப்பில்லையே? ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளை வழிபட்டு அவர்தான் உண்மையான கடவுள் என்று போதிக்கிறது.அது உண்மையானால் அத்தனைக் கடவுள்களும் கூட்டணி அமைத்தா உலகையும் வான்வெளியையும் படைத்து இன்றுவரை பராமரித்து வருகிறார்கள்? அந்தக் கடவுள்கள் ஒற்றுமையாக இருக்கும்போது அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு மனிதர்கள்  ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகிறார்களே! சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அனால் அதை நான் படித்ததில்லை.  வாய்ப்பு வரும்போது அதையும் படிக்க வேண்டும்.
           இத்தகையச் சூழலில்தான் பிரான்சிஸ் என்னை மாணவர் கிறிஸ்துவ இயக்கத்தில் சேரச் சொல்கிறார். அவருக்கு நான் உடன் பதில் சொல்வதற்கு தடுமாறினேன்! அது பற்றி யோசித்து பதில் சொல்வதாகவும், எதற்கும் ஒரு வாரம் அவகாசம் தருமாறு வேண்டினேன்.
          அன்று இரவு அறையில் படுத்ததும் கடவுள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவாறு உறங்கிவிட்டேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்சுசீலாம்மாவின் யாதுமாகி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

40 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///// நான் மெரினா கடற்கரைக்கு செல்வதையே பெரிதும் விரும்பினேன். அங்கு ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஓசையில் தூரத்தில் தெரியும் தொடுவானத்தில் தோன்றும் வண்ணங்களின் மாற்றத்தைக் கண்டு மகிழ்வேன். அப்போது தங்கத் தகடு போன்று அஸ்தமிக்கும் சூரியன் நீல நிறக் கடலில் மெல்ல மெல்ல மூழ்கி மறையும் அதிசயத்தைக் கண்டு மகிழ்வேன். /////

    சென்னை மெரினா கடற்கரையில் காலைச் சூரியோதயம் காண முடியுமே தவிர மாலையில் சூரிய அத்தமனம் எப்படித் தெரியும் ?

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      அதை அப்படியே எடுக்கக்கூடாது. மாலை மறைந்து இருள் கவ்வும் நேரம் மிகவும் ரம்மியமான நேரம் மட்டுமன்று. ஆன்ம நிலை உணர்வுகளை எழுப்பவல்லது. அப்படிப்பட்ட நேரத்தை அஸ்தமனம் என்பர். அஸ்தமனம் கடற்கரையென்றில்லாமல், எங்கும் நடக்கும். மருத்துவர் அப்படிப்பட்ட நேரத்தை கடலைப்பார்த்து கழித்திருக்கிறார். கடலும் இருள் சூழ்ந்து வாழ்க்கை நிலையாமையை நமக்கு போதிக்கும். எனவே சென்னை மெரீனாவில் கதிரவன் மறைந்ததாக எடுக்கக்கூடாதென்பது என் கருத்து.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பெரியாரும் அவரது பிரதான சீடர்களும் கடவுள் இல்லையென்று முழக்கினாரே தவிர, இந்தப் பிரபஞ்சம், கோடான கோடி சூரிய மண்டலங்கள், ஒளிமந்தையான காலக்ஸிகள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும்பிண்டம், உயிரினங்கள், பயிரினங்கள், ஒப்பற்ற மனித இனங்கள், பூமியின் பேரளவு நீர்வளம், நிலவளம், சூழ்வெளி எப்படித் தோன்றின என்று ஆய்வுகள் செய்து விஞ்ஞானம் / மெய்ஞானம் பற்றிக் கூறிய தில்லை.

    http://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

    சி. ஜெயபாரதன்

  3. Avatar
    ஷாலி says:

    // பூமியின் பேரளவு நீர்வளம், நிலவளம், சூழ்வெளி எப்படித் தோன்றின என்று ஆய்வுகள் செய்து விஞ்ஞானம் / மெய்ஞானம் பற்றிக் கூறிய தில்லை….//விஞ்ஞானத்தைப் பற்றி பெரியார் கூறியது.

    இந்த மாபெரும் சனியனான ஜாதி மத பேதத் தொல்லைகள் மனித சமூகத்தை விட்டுத் தொலையவேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான ஞானமும் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியும் தேவை.தொழில் காரணமாகத்தான் தொழில் ஆதாரமாகத்தான் ஜாதிகளோ ஜாதிக் கொடுமைகளோ ஏற்ப்படுத்தப்படிருக்கிறது.

    தோட்டி என ஒரு ஜாதியும் அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்ப்பட்டது?மலம எடுக்கும் தொழிலை,நாற்றமுள்ள தொழிலை அவன் எற்றுக்கொண்டதால்தான், இப்படியே கஷ்டமானதும் இழிவானதுமான வேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள வேலை செய்கிறவர்கள் மேல்ஜாதியாகவும், ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு வயிறு வளர்த்து திரிபவர்கள் மகா மகா மேல்ஜாதியாகவும் ஏற்ப்பட்டதற்கு காரணம் விஞ்ஞான ஞானமில்லாமையே. மேனாட்டிலே இம்மாதிரியான தொல்லை அநேகமாக தீர்ந்துவிட்டது.

    விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, சமத்துவம் அந்த சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது. நாம் என்ன கூறினாலும் நமது பின் சந்ததியார்கள் பழைய தொழில்முறை ஜாதி முறை திட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி.உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக்கொண்டு வருகிறது.விஞ்ஞான வளர்ச்சி மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்ப்பட்டிருக்கிறது.பழைமையான சகல துறைகளிலும் புதுமை தோன்றியிருக்கிறது.வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப்போகிறோம்.

    -தந்தை பெரியார் 23-01-1938 ல் ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் மதம்,கடவுள் எனும் தலைப்பில் ஆற்றிய உரை வீச்சு-குடியரசு.சொற்பொழிவு.30-01-1938. பக்கம்.106.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஷாலி அவர்களே,

    விஞ்ஞான வளர்ச்சி, ஆன்மீகம் ஊறிப்போன இந்திய சமூகத்தில் ஜாதீய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் என்னும் கோட்பாட்டை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. இரண்டுக்கும் தொடர்பில்லை !

    எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த [Omniscient, Omnipotent, Omnipresent] படைப்பாளி இல்லை என்னும் திராவிடக் கட்சிகள், பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை ஆராயவில்லை என்பதே என் கருத்து.
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      But western atheists have gone into that question. No God but only nature have made all, according to them. Scientists, except a rare few, generally take the view against the three Os God saying no individual being has created all.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        Apropos of EVR’s talk.

        விஞ்ஞான வளர்ச்சியில்லாமலேயே மேலை நாட்டினர் அல்லது ஐரோப்பியரிடையே தொழில் வழி அருவருப்புகள் கிடையா. விஞ்ஞான வளர்ச்சிக்கு முன், பின் என்று மாறுபாடு இவ்விடயத்தில் அவர்களிடம் வரவில்லை.

        இந்தியரின் அடிப்படைக் குணமே தொழில்வழி விருப்பு; வெறுப்பைச்சார்ந்தே. இந்துக்கள் என்றில்லை. இந்தியக்கிருத்துவரும், இசுலாமியரும் ஜைனரும் சீக்கியரும் பவுத்தரும் – மலம் அள்ளும் தோட்டியையும் அவரின் தொழிலையும் அருவருப்பாகத்தான் பார்ப்பார்.

        மோடியின் தூய்மை இயக்கம் இந்த இந்தியரின் அடிப்படைக் குணத்தை மாற்ற முயற்சிப்பதால் முழ வெற்றியடையாதென்கிறார்கள். பொதுயிடங்களை அசிங்கப்படுத்துபவர்களிடையே ஜாதிமத பேதமில்லை. வீட்டில் பிள்ளைகளை வளர்ப்பது; பொதுவிடங்களில் நடந்து கொள்வது; டாய்லட் ஹாபிட்ஸ், டேபிள் மேனர்ஸ் என்று நிறைய பொதுக்குணங்கள் அனைத்து இந்தியரையும் ஒன்றாக்குகின்றன.

        மனித மனங்களை சட்டம் போட்டு மாற்ற முடியாது. சட்டம்போட்டு அலுவலகங்களைத்தான் தூயமையாக வைக்க முடியும் மோடியால். வெளியே முடியாது.

        திருடனாப் பார்த்து… என்ற பட்டுக்கோட்டையாரின் வரியும், சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை என்று வள்ளுவர் குறளும் இக்கருத்தை அச்சாணிபோல பதிய வைக்கின்றன.

        இப்படித்தொழிலே ஒருவனின் ஏற்ற தாழ்வை இந்தியமணத்தில் இயற்கையாகவே காலம்காலமாக விதைத்து வேறூன்றி ஆலவிருக்ஷமாக ஆக்கிவிட்டது. இந்துமதம் அதைப்பயன்படுத்தி, அதாவது திரு ஜயபாரதன் சொன்னது போல இருந்தே தீரும் என்ற நம்பிக்கைமட்டும் கொண்டதால், இந்த இயற்கை ஏற்ற தாழ்வையும் உள்வாங்கி மதக்கோட்பாடை அமைத்துக்கொண்டது. அவ்வளவுதான். If you cannot break them, join them – என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா? அதைத்தான் இந்துமதம் செய்தது என்பது என் கருத்து. Make the best of the worst is the only choice and practical too. எனவே தொழில்முறைவழிகளிலிருந்து ஜாதிமுறைகள் தோன்றியது இயற்கை நீட்சி.

        இந்துமதத்தை மாற்றிவிட்டால் இந்தியமனங்களை மாற்றிவிடலாம் என்பது வெறுங்கனவே. இந்தியக்கிருத்துவரிடையும் இசுலாமியரிடமும் அதே பழக்கவழக்கங்கள் நிலவுகின்றனவே!

        EVR was an idealist. He was not a pragmatist.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர்கள் ஷாலி அவர்களும்,ஜெயபாரதன் அவர்களும் திராவிடர் இயக்கத்தின் நாத்திக கொள்கைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
    அறிவியல் பூர்வமாக பெரியாரும் அண்ணாவும் கடவுள் இல்லை என்று கூறியதில்லை என்று ஜெயபாரதன் அவர்கள் கூறியுள்ளார். உண்மைதான். ஆனால் எந்த அறிவியல் கடவுள் உள்ளதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்துள்ளது. உலகின் அறிவியலாளர்கள் நிரூபிக்க முடியாத ஒன்றை பெரியாரும் அண்ணாவும் புதிதாக என்ன ஆராய்ச்சி செய்து எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்? கடவுள் ஒருவர் உள்ளார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்பதால்தான் தந்தை பெரியார் ” கடவுள் இல்லை..கடவுள் இல்லேவே இல்லை ” என்று கூறினார்.
    அதே வேளையில் கடவுள் உள்ளார் என்பதை ஒவ்வொரு மதமும் ஒருவிதமாகக் கூறுகின்றன.இதில் எந்த மதம் உண்மையான மதம்? கடவுளைப் பற்றி எந்த மதம் கூறும் கதை உண்மை?
    ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவனும் தன்னுடைய மதம் போதிக்கும் கடவுளையே நம்புகிறான். நான் கிறிஸ்துவன் என்பதால் நான் வேதாகமத்தில் ஆதியாகமத்தில் கடவுள் உலகை ஆறு நாட்களில் படைத்தார் என்பதையும் ஏழாம் நாள் ஓய்வாக இருந்தார் என்பதையும் நம்புகிறேன். இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லாவிட்டாலும் நம்புகிறேன். என்னைப்போல்தான் உலகின் அனைத்து கிறிஸ்துவர்களும் நம்புகிறார்கள். வேறு மதங்கள் கூறும் கடவுள்களை நாங்கள் நம்புவதில்லை. இதுபோன்றுதான் இந்துக்கள் கிறிஸ்துவர்கள் கூறும் உலகின் படைப்பையோ. ஆதாம் ஏவாளையோ நம்புவதில்லை.இஸ்லாமியகள் ஆதாம் ஏவாளை நம்புவதாகத் தெரிகிறது. புத்தர்கள் இதை நம்ப மாட்டார்கள்.
    கடவுள்தான் உலகை 6 நாட்களில் படைத்தார் என்பதை வான்வெளி அறிவியலாளர் ஜெயபாரதன் நம்புவாரா என்பது எனக்குத் தெரியவில்லை. சகலகலாவல்லவர் ( அனைத்தையும் கற்றவர் ) நம்புவாரா என்பது தெரியவில்லை.
    நான் என் நம்புகிறேன் என்றால் அதுதான் நம்பிக்கை என்பது. தெரியாத ஒன்றை கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என்பதே எல்லா மதங்களின் போதனையாக உள்ளது. அதில் கேள்வி கேட்கக் கூடாது. இது பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லையே என்று கூறினால், கேட்டால், கேள்வி எழுப்பினால் அவன் நாத்திகன்.பெரியார் கடவுள் பற்றியெல்லாம் கொஞ்சமும் பயம் இல்லாமல் கடவுளே இல்லை என்று போதித்துவிட்டு 100 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார். அவர் போயுள்ளது சொர்க்கமோ அல்லது நரகமோ என்பது பற்றியெல்லாம் அவருக்கோ வீரமணிக்கோ கவலை இல்லை. அவர்களைப் பொறுத்தவரை சொர்க்கமும் நரகமும் இந்த உலக வாழ்க்கையில்தான் உள்ளது.அதன்பின்பு எல்லாமே மாயைதான்!
    அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //தெரியாத ஒன்றை கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என்பதே எல்லா மதங்களின் போதனையாக உள்ளது. அதில் கேள்வி கேட்கக் கூடாது. இது பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லையே என்று கூறினால், கேட்டால், கேள்வி எழுப்பினால் அவன் நாத்திகன்.//

      I beg to disagree. It is possible to believe rationally. இசுலாமைப்பற்றி நான் சொல்வதற்கில்லை எனது அறியாமையின் காரணத்தால். கிருத்துவத்தில் எல்லாவற்றையும் நம்புங்கள் என்று சொல்லும் பிரிவும், நமக்குப் பிடித்தவண்ணம் நம்பலாமென்னும் பிரிவும், அல்லது பிடிக்காதவைகளைவிட்டுவிடலாம் (அதாவது நம்ப முடியாதவற்றை), அல்லது நம்ப வியலாதவைகள் ஏதோ ஒரு நன்னோக்கத்துடனே வைக்கப்பட்டன அவை என்ன என்று ஆய்ந்து பின்னர் நம்பலாமென்றும் பலபிரிவுகள் உள.

      இதேபோல் இந்துமதத்தில் சொல்லப்பட்டவைகளையெல்லாம் நம்ப வேண்டுமென்று எவரும் கட்டாயப்படுத்தவில்லை என்பதே இந்துமதத்தின் தனிச்சிற்ப்பென்று எடுத்துக்காட்டப்படுகிறது. எ.கா. பகவத் கீதை. அதை இடைச்செருகல் என்றும்; இல்லை, கிருஸ்ணபரமாத்மாவே சொன்னாரென்றும்; அதை புனித நூலாக எடுப்போரும், வெறும் நூலாக எடுப்போரும் இப்படியாக பலபல மதவழிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. எவரும் இதுதான் சரி எனத் திணிக்கவில்லை.

      எனவே பகுத்தறிவாளர்களும் இந்துமதத்தை அனுசரிக்க முடியும். பெரியார் தன் வாழ்க்கையில் தமிழ்ப்பிராமணர்களோடு நடந்த சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளினாலும், அவர்கள் தம் வாழ்க்கை உயர்வுக்காக மதத்தைப் பயன்படுத்தி, பிறமக்களைத் தம்மைவிட தூரத்தில் வைத்து அவமானப்படுத்துகிறார் என்பதை உறுதியாக நம்பி, இந்துமதத்தை விமர்சித்தால் அது தமிழ்ப்பிராமணர்களை மிகவும் வருந்தச்செய்யுமென்று முடிவெடுத்ததார். அது பின்னர் பிறழ்ந்து நாத்திகவாதமாயிற்று.

      மதங்களை ஒதுக்கிவிட்டால் ஒருவன் நாத்திகனாகிவிடுவான் என்பது தவறான பார்வை. இறைவனை நம்பித் தொழுதேத்த மதங்கள் கட்டாயமில்லை. அப்படி மதங்களைத் தள்ளி தன் வழிசென்று வணங்குப்வர் நாத்திகரில்லை. என்னைக்கேட்டால் உண்மையில் அவர்களே இறையோடு இணைந்துவாழ்வோர். Personal theism is far truer than any other ism, Dear Dr Johnson. Religions will degenerate (as we see today; and that degeneration has hurt your feelings here, hasn’t it?); but personal theism will continue to remain pure.

      //Above all, to thy own self be true//

      — (Shakespeare in Hamlet)

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அரைகுறைப் படிப்புக் கல்வி அறிவுள்ள பெரியார் கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள், முட்டாள் என்று கர்வத்துடன் முழக்கியவர்.

    அப்படியானால் கடவுளை நம்பிய திருவள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர், காளிதாசர், ஆண்டாள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், பாரதியார், அருணகிரிநாதர், வள்ளலார், மீரா, காரைக்கால் அம்மையார், ஏசுநாதர், அன்னை தெரேசா, நபிநாயகம் ஆகியோரெல்லாம் முட்டாளா ?

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கடவுள் நம்பிக்கை கொண்ட விஞ்ஞானிகள் காலிலியோ, கெப்பளர், காப்பர்னிகஸ், நியூட்டன், ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், கவிஞர்கள் உமர் கயாம், கலீல் கிப்ரான் ஆகியோரும், பெரியார் குறிப்பட்டபடி முட்டாள்களா ?

      சி. ஜெயபாரதன்

          1. Avatar
            IIM Ganapathi Raman says:

            Ok agreed. Put under arrest ! That is sufficient to prove that he is against the so-called truths established by God according to Roman Church. My point is that in ancient times, scientists were punished, more often, fatally, for showing that the God has not created this and that.

            Religious fanaticism is man’s long lasting legacy to succeeding generations and that is always in operation. The people killed in the name of God vastly outnumber those killed in 2 WWs. All religions should be held guilty of genocide. Why does the Religion make people fanatic and want to kill others? We must examine. That is possible for religious people, sorry.

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          http://jayabarathan.wordpress.com/galileo/

          விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

          1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படை யாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதி பதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையி லிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

          சி. ஜெயபாரதன்

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      One man’s meat is another man’s poison. இல்லையா? இதன் பொருள் என்ன? உலகத்தவர் அனைவரும் ஒரே கருத்தையோ, நினைப்பையோ கொள்வாரில்லை என்பதுவே. அதன் படி, ஒருவன் தான் நினைத்ததைச் சரி என்று கருதி, பிறர் அதை விடயத்தை வேறுமாதிரி கருதும்போது, அவன் மெல்லிய இதயத்தானாக இருப்பின், ஐய்யோ பாவம் அவர்கள் என்பான்.

      இயேசுவின் உடலை ஆணிகள் வைத்து அறைந்த போது, பிதாவே அவர்களை மன்னியும். அவர்கள் தெரியாமல் செய்கின்றார்கள் என்றார்.

      ஆனால், அவர்கள் தெரியாமல் செய்யவில்லை. இயேசு நாட்டிற்கெதிராக கலவரத்தை மூட்டி ஆட்சியைப்பிடிக்க சதிசெய்தார் என்று நம்பித்தான் கொன்றார்கள். இல்லையா?

      ஆக, யார் சொன்னது சரி? இயேசுவா யூதர்களா? யூதர்கள் பார்வையில் இயேசுவின் செயல் சரியன்று. கிருத்துவர் பார்வையில் யூதர்கள் செயல் தவறு.

      அதேதான் இங்கும். கடவுளை நம்புகிறவர்கள் இல்லாதவொன்றுக்காக அல்லாடி தம் வாழ்வை வீணாக்குகிறார்கள். சொன்னாலும் மறுக்கிறார்கள். எனவே முட்டாள்கள் என்று சொல்வதைத்தவிர வேறென்ன சொல்லமுடியும் பெரியாரால்?

      கடவுளை வெறும் நம்பிக்கையோடா விட்டார்கள்? என்ன்னென்னவெல்லாம் செய்கிறார்கள் தமிழகத்தில்? இவை போன்ற அடாவடிச்செயல்களே பெரியாரைக் கடுஞ்சொற்களை ஆத்திகர்களை நோக்கி வீசினார்.

      உங்கள் நம்பிக்கை உங்களுக்கு அறிவார்ந்த செயல். எல்லோருக்கும் எப்படி அதே என்று முடிவு கட்டினீர்கள். சற்று விளக்கலாமே? Please explain to me. I am a believer and I feel EVR is correct to castigate the people who abuse the belief in God by performing high handed excesses.

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        ///ஆனால், அவர்கள் தெரியாமல் செய்யவில்லை. இயேசு நாட்டிற்கெதிராக கலவரத்தை மூட்டி ஆட்சியைப் பிடிக்க சதிசெய்தார் என்று நம்பித்தான் கொன்றார்கள். இல்லையா? ///

        பைபிளில் இப்படி இல்லை.

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          நீங்கள் கிருத்துவர். நானில்லை. விவிலியத்தை மட்டுமே நம்புவர். படிப்பவராகவும் இருக்கலாம். நான் விவிலியம் எழுதப்பட்ட காலத்தைப் பற்றியும் படிக்கிறேன்.. அதன்படியே இயேசுவின் சரிதமும் விவிலிய காலத்தை ஆராய்ந்த
          வரலாற்றாசிரியர்களும் சொல்லித் தெரிகிறேன். அதன்படி, இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை ட்ரீசன் (High treason). //அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். உரோம அரசுக்கு எதிராக இன்னொரு அரசைத் தன்னை அரசனாக பிரகடனப்படுத்திக்கொண்டு அமைக்க முயற்சித்தார்// என்பது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். அவற்றை மறுத்தார் இயேசு. ஆயினும் ஏற்கப்படவில்லை. அரசுக்கு எதிராகக் கலகமூட்டினார் என்ற குற்றச்சாட்டே ஏற்கப்பட்டது. பிதாவே இவர்கள் அறியாது செய்கிறார்கள் என்று சொன்ன இயேசுவுக்கு ஏன் தன்னைத் தண்டிக்கிறார்கள் என்றும் தெரியும். அவர் அறையப்பட்ட சிலுவையின் மேல் //இவர் யூதர்களின் ராஜாவாம்// ēsus Nazarēnus, Rēx Iūdaeōrum (INRI) meaning Jesus of Nazareth, King of Jews. என நக்கலாக எழுதித்தொங்கப்போட்டார்கள் யூத அதிகாரிகள். Jesus of Nazareth is an ordinary citizen. King of Jews is the title he gave unto himself – This is their sarcasm. Jesus knew that mocking.

          I don’t believe in the verbal in-errancy of either the Bible, or the Koran or the sacred texts of Hinduism etc . To me, all such texts issued from the fertile imagination of humans who lived at the time. They might have been written with good intentions, may contain good words to guide people, yet it can’t be be said that they should be be taken to be the purest, inerrant, immutable and everlasting. They are subject to wear and tear of the great leveller TIME.

    3. Avatar
      IIM Ganapathi Raman says:

      //அரைகுறைப் படிப்புக் கல்வி அறிவுள்ள பெரியார் கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள், முட்டாள் என்று கர்வத்துடன் முழக்கியவர்.//

      There you go again!

      மெத்தப் படித்தவனுக்குத்தான் கடவுள் என்றால் அக்கடவுள் தேவையில்லை!
      ஏழைக்கன்று; பணக்காரனுக்குத்தான் என்றால் அக்கடவுள் தேவையில்லை!
      பெண்ணுக்கன்று, ஆணுக்குத்தான் என்றால் அக்கடவுள் தேவையில்லை!
      இருவேறுலகம் என்றால் இறைவன் என்பவன் எதற்காக? எனபது கண்ணதாசன் பாடல்.

      இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான உலகத்தில் நாத்திகமே நன்று. அது, படித்தவன்; படிக்காதவன், ஆண்; பெண், ஏழை; பணக்காரன் எனப் பாகுபாடு பார்க்கவில்லை. இறைவன் அந்த நாத்திகத்தையே வரவேற்பான். உலகத்தோர் நன்கு வாழவேண்டும் என நினைக்கும் நாத்திகன், உலகத்தவர் இறைவன் பெயரைச் சொல்லி அடித்துக்கொண்டு சாகட்டும் என்று மூட்டிவிடும் ஆத்திகன் – இவ்விருவரின் எவர் உயர்ந்தவர்? எவரிடம் இருக்கிறது தெய்வத் தன்மை?

      இதைபோலவே கடவுள் உண்டு என்று நம்புவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. அதேதான் இல்லையென்பதற்கும். எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை.

      கடவுள் இல்லையென்று சொன்னால் கர்வம்! உண்டு என்றால் அடக்கமா? I am bemused :-)

      ஆத்திகர்களிடம் நிறைந்திருக்கும் அகங்காரங்களைப்பற்றி நாள்தோறும் படிக்கிறோமோ?

      சின்னாட்களுக்கு முன், ஒரு ஆராய்ச்சி முடிவினபடி, நாத்திகர்கள் ஆத்திகர்களைவிட அறிவாளிகள்.

      In my opinion, religion is a good servant but a bad master. I find it in my own life. The more I know, the more I became arrogant and started to look down upon people who don’t know. Perhaps it may be with me, an immature and unguarded mind. So, be careful when you handle the religion if you are like me.

      Believe so that you will love the atheists among all. If you hate the atheists like Jeyabharatan does here, your belief is a show-off: indeed, satanic.

  7. Avatar
    தி.தா.நாராயணன் says:

    டாக்டர் அவர்களுக்கு,
    தொடுவானம்-47ல் நாத்திகமா? ஆன்மீகமா?தொடரை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.உண்டு, இல்லை இவை இரண்டுமே பரஸ்பரம் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. எவற்றுக்கும் சாலிட் ப்ரூஃப் என்பது யாரிடமும் இல்லையெனும்போது, அதுபற்றிய வாத பிரதிவாதங்களும் அர்த்தமற்றவையாக ஆகிவிடுகின்றன.ஆயினும் அனைத்தும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தன.நன்றி.

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் டாக்டர் ஜான்சன்.

    கடவுளைப் பற்றி நான் முன்பு அனுப்பிய என் வலைப் பூங்காக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

    http://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

    கடவுள் உள்ளதென்றும், இல்லையென்றும் யாராலும் நிரூபிக்க முடியாது.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      The atheists of London led by Richard Hawkins fought a case with the authority to advertise their atheism in public places. The authority denied first; but later allowed with the following slogan of atheists. THERE IS PROBABLY NO GOD.

      Are you satisfied with this slogan? They say, probably.

      Are the believers say : There is probably God. Not at all. The believers fanatically say: THERE IS GOD.

      The better and decent people are atheists if I take your last sentence for argument.

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          Yes, but the name is insignificant to the point at issue.

          Atheists are saying PROBABLY IS NOT.
          Believers are saying categorical IS.

          And you have written that neither the existence of God nor His in-existence is provable.

          That being the case, how come the Believers are so sure ?
          How come the believers are angry with the atheists who also want to be sure?

          Same law should apply here.

  9. Avatar
    ஷாலி says:

    //கடவுள்தான் உலகை 6 நாட்களில் படைத்தார் என்பதை வான்வெளி அறிவியலாளர் ஜெயபாரதன் நம்புவாரா என்பது எனக்குத் தெரியவில்லை. சகலகலாவல்லவர் ( அனைத்தையும் கற்றவர் ) நம்புவாரா என்பது தெரியவில்லை.//

    டாக்டர் ஸார்! கடவுள் உலகை ஆறு நாளில் படைத்தேன் என்றாலும் நான் நம்புவேன்.அறுபது நாளில் படைத்தேன் என்றாலும் நம்புவேன்.ஏனென்றால் ஒரு பொருளைப் படைத்தவனுக்குத்தான் அவன் எடுத்துக்கொண்ட கால அளவு தெரியும்.இதைக் கண்ணை மூடி நம்பலாம்.ஆனால் இதற்க்கு அடுத்த ஒரு வசனம், “அவர் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார்”. இதைத்தான் நம்ப சங்கடமாக உள்ளது.நீங்களும் நானும் சாதாரண மனிதர்கள் வேலை செய்வதன் காரணமாக சக்தி இழப்பால் ஓய்வை நாட வேண்டிய கட்டாயம் உள்ள பலஹீனம்.கடவுள் அப்படிப்பட்ட பலஹீனத்திற்கு ஆட்பட்டவரா?

    பேராசிரியர்.ஜெயபாரதன் சொல்வதுபோல் //எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த [Omniscient, Omnipotent, Omnipresent..]// கடவுளுக்கு ஓய்வு தேவையில்லை.இங்குதான் கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு பதிலாக பகுத்தறிவை பயன்படுத்தும் போது எங்கேயோ கோளாறு உள்ளது என்பது தெரிய வரும்.எந்த ஒரு நம்பிக்கையும் இந்த மூன்று “Omni” க்கும் முரண்படக்கூடாது.இந்த அடிப்படை விதியை வைத்துக்கொண்டு கடவுளை தேடினால் எவரும் எளிதாக கண்டு கொள்ளலாம்.

    // தெரியாத ஒன்றை கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என்பதே எல்லா மதங்களின் போதனையாக உள்ளது. அதில் கேள்வி கேட்கக் கூடாது.//

    “31இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். 32பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார். “ -யோவான்.8:31,32.

    கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். . (மத்தேயு 7:7-11).

    டாக்டர் ஸார்! உண்மையை தேடுங்கள்.அந்த உண்மை பொய்மைகளிலிருந்து விடுதலை தரும்.

  10. Avatar
    ஷாலி says:

    //அரைகுறைப் படிப்புக் கல்வி அறிவுள்ள பெரியார் கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள், முட்டாள் என்று கர்வத்துடன் முழக்கியவர்.//

    பேராசிரியர்.ஜெயபாரதன் அய்யா அவர்களே! பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை தாங்கள் தவறாக விளங்கி உள்ளீர்கள்.அவர் கடவுளை கல்வியின் மூலம் தேடவில்லை.தமிழ் நாட்டில் மனிதர்கள் மத்தியில் தலையில் பிறந்தவன் உயர்ந்தவன் காலில் பிறந்தவன் தாழ்ந்தவன்., இப்படித்தான் மனிதர்களை கடவுள் படைத்தான் என்று உயர் ஆதிக்க சாதி மக்கள் காலம்காலமாக் சொல்லி வந்ததால்தான் இந்த கடவுளே வேண்டாம் என்று மறுத்தார்.

    தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை, ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடனேயே, அவர் கடவுள் மறுப்பைக் கையில் எடுக்கவில்லை. சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, 1925 மே மாதம், அவர் குடியரசு இதழை வெளியிடத் தொடங்கிவிட்டார். அவ்விதழ், தொடக்க காலத்தில், முகப்பில், கோயில், சிலுவை, பிறை ஆகிய மதச் சின்னங்களைத் தாங்கியே வந்தது. எம்மதமும் சம்மதமே என்ற போக்கையே அது காட்டுகின்றது. ஆனால்,
    1967ஆம் ஆண்டு, ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்னும் முழக்கத்தை உயர்த்திப் பிடித்தார்.
    எனினும், மேலைநாட்டுக் கடவுள் மறுப்பாளர்களுக்கும், பெரியாருக்கும், ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. அவர்கள் தத்துவத் தளத்தில், கருத்து முதல் வாதம் என்றும், பொருள் முதல் வாதம் என்றும் வாதுரைகளை நிகழ்த்தினர். பெரியாரின் கடவுள் மறுப்பு, தத்துவத் தளத்தில் பிறக்கவில்லை. சமூகத் தளத்தில் பிறந்தது. தத்துவத் தளத்தை நோக்கி நகர்ந்தது.

    கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும்தான் ஏற்றத்தாழ்வு பேசும் இழிநிலை இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பெரியார் உணர்ந்தார். ‘நான்தான் உன்னைச் சூத்திரனாகவும், பஞ்சமனாகவும், சண்டாளனாகவும் படைத்தேன்’ என்று கடவுளே சொல்வது போல, இங்கு இயற்றப்பட்ட இதிகாச புராணங்கள், தம்மைத் தாமே அடிமைகள் என்று மக்களை நம்ப வைத்தன.

    பெரியார் கடவுள் இல்லையென்று சாதாரணமாக சொல்லவில்லை. இப்படி சொல்கிறார்:

    “மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது. கண்ணில் படக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது. கோவிலுக்குப் போகக் கூடாது. குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறதுபோல கொள்கை தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகள் ஆக்காமலோ விட்டிருப்பதை பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், அவர் சர்வதயாபதர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.”

    இவர் கடவுள் மறுப்பு மக்களை ஒன்றாக்க வேண்டும் என்ற சிந்தனை யோடு உழைப்பை மதிக்க வேண்டுமென்ற சிந்தனையோடு உழைப்பவனை அவமானப்படுத்துபவனை எதிர்க்க வேண்டுமென்ற சிந்தனையோடு முன் வைக்கப்பட்ட கடவுள் மறுப்பு அதுதான், பெரியாரின் கடவுள் மறுப்பு.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ஷாலி அவர்களே

      பெரியார் கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள் என்று கர்வத்துடன் முழக்கியவர்.

      இதுதான் பெரியார் திருவாக்கு.

      சி. ஜெயபாரதன்

  11. Avatar
    suvanappiriyan says:

    திரு ஜெயபாரதன்!

    //அப்படியானால் கடவுளை நம்பிய திருவள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர், காளிதாசர், ஆண்டாள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், பாரதியார், அருணகிரிநாதர், வள்ளலார், மீரா, காரைக்கால் அம்மையார், ஏசுநாதர், அன்னை தெரேசா, நபிநாயகம் ஆகியோரெல்லாம் முட்டாளா ?//

    பெரியாரின் கருத்துக்களை தவறாக விளங்கிக் கொண்டதால் பலருக்கு இதில் தெளிவு கிடைக்கவில்லை. பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.

    “கடவுளை மக்களிடையே பரப்பினவனை ஏன் அயோக்கியன் என்கின்றோம் என்றால், கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை, பற்றற்றவர், எங்கும் நிறைந்தவர், எல்லாமுமானவர் என்பது தெரிந்தும் அதற்கு மனிதனைப் போல உருவம் அமைத்து மனிதனுக்குள்ள ஆசாரபாசங்கள் யாவும் அதற்கு உண்டு என்று கதை எழுதி, அதற்கும் பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, கோயில் என்பதெல்லாம் உற்பத்தி செய்து, அதற்குச் சோறு, பூசை என்றும், அவனைக் கொன்றது – இவனைக் கொன்றது என்றெல்லாம் எழுதி அதை மக்களிடையே பரப்பி, மக்களையும் அறிவற்ற முட்டாள்களாக – மூட நம்பிக்கைக்காரர்களாக ஆக்கியதால் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்கின்றோம்.”

    – பெரியார்
    (‘விடுதலை’, 29.01.1969)

    கற்பனை செய்ய மடியாது அந்த கடவுளுக்கு உருவத்தைக் கொடுத்து அதற்கு மனைவியையும் உண்டாக்கி அந்த கடவுளுக்கு குழந்தைகளையும் உருவாக்கி அதன் மூலம் காணிக்கை வசூலிக்கும் புரோகிதத்தனத்தை வெறுத்ததனால் எழுந்த வார்த்தைகளே இவை. கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      சுவணப்பிரியன் அவர்களே

      பெரியார் கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள் என்று கர்வத்துடன் முழக்கியவர்.

      இதுதான் பெரியார் திருவாக்கு. உங்கள் கருத்து பற்றி இங்கு தர்க்கமில்லை.

      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      paandiyan says:

      //கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.//

      muslims are now come up with different story. very good for tamilnadu in the future. and if they spread this statement secular keep shut their mouth because of NGO benefits.

    3. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் சுகுணப்பிரியான்,

      ///கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.////

      இது நான் அறியாத புதுச் செய்தி !!! இதற்கு என்ன ஆதாரங்கள் ? பெரியார் உணர்ந்ததை உங்கள் கருத்தாகச் சொல்கிறீர் அல்லவா ?
      ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று கடவுளை நம்பியோ, நம்பாமலோ அண்ணா ஒருவர்தான் சொன்னார். ஆனால் இது திராவிடக் கட்சிக் கொள்கை இல்லை.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        மதங்களின் கொள்கைகளே நிரந்தரமாக இருக்கா. எப்படி ஒரு கட்சியின் கொள்கை நிரந்தரமாக இருக்கும்? நாத்திகத்தில் தொடங்கி, பின்னர் அக்கொள்கையை விடுத்து, ஓரிறைக்கொள்கையை தன் கட்சி ஏற்றல் அண்ணா மக்களைப்புரிந்தவர் என்று தெரியும்; அவர்களுக்கேற்ப சில கொள்கைகளையும் விட்டுக்கொடுத்தார். மாறாமல் இருப்பது எதுவேமில்லை; அடிக்கடி தன் கொள்கைகளைப் மறுபரிசீலனை செய்வது கற்றோர் செயல். அண்ணா அதைச்செய்தார். ஓரிறைக்கொள்கையை தமிழ்மக்களுக்காகத்தான் வைத்தார். தான் நாத்திகனாகவே வாழ்ந்து மறைந்தார். தனிநபர்கள் கூட தம் கொள்கையைத் தனியாகவே வைத்துக்கொள்ள வேண்டும்; பிறர் விரும்பவில்லையென்றால் திணிக்கக்கூடாதென்பது அண்ணா விட்டுச்சென்ற வாழ்க்கைப்பண்பாகும்.

  12. Avatar
    தி.தா.நாராயணன் says:

    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்–இந்த சொற்றொடரில்தான் ஆன்மீகத்தின் சூட்சுமம் உள்ளது. ப்ரூஃப் காட்டத் தேவையில்லை. யோசித்தால் அதுவேதான் நாத்திகத்துக்கான ஆயுதமுமாக இருக்கிறது.

  13. Avatar
    suvanappiriyan says:

    திரு ஜெயபாரதன்!

    //கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை, பற்றற்றவர், எங்கும் நிறைந்தவர், எல்லாமுமானவர் என்பது தெரிந்தும்//

    இந்த வாக்கியத்தை பெரியார்தான் சொல்கிறார். கடவுள் என்ற ஒரு சக்தி நம்மால் கற்பனை செய்ய முடியாது என்தைத்தான் இங்கு பெரியார் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு மாற்றமாக சிலைகளை வடித்ததைத்தான் எதிர்க்கிறார். அதன் பேரால் மனிதர்களை பாகுபாடு படுத்தியதைத்தான் எதிர்க்கிறார். இது எனது கருத்தல்ல. பெரியாரின் கருத்தே.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் சுவனப்பிரியன்,

      கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை நம்புபவர் யாவரும் முட்டாள் என்று பெரியார் சொல்லியதாக முதலில் ஒப்புக் கொள்கிறீர்களா ?

      //கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை, பற்றற்றவர், எங்கும் நிறைந்தவர், எல்லாமுமானவர் என்பது தெரிந்தும்//

      இந்த வாசகத்துக்கு என்ன ஆதாரம் ? இது பெரியாரை ஓர் ஆத்திகவாதி என்று முரணாகக் காட்டுகிறது !!!!

      சி. ஜெயபாரதன்

  14. Avatar
    அம்மணி says:

    //நண்பர் சுகுணப்பிரியான்,
    ///கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.////
    இது நான் அறியாத புதுச் செய்தி !!! இதற்கு என்ன ஆதாரங்கள் ? பெரியார் உணர்ந்ததை உங்கள் கருத்தாகச் சொல்கிறீர் அல்லவா ?//

    அட நீங்க வேற! சுவனப்பிரியன், ஜெயினுலாபுதீன் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே! அல்லாவுக்கே அல்வா குடுக்கிறவங்களுக்கு பெரியாருக்கு பெட்டி கட்றதா கஷ்டம்?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      மாற்றுக் கருத்துக்களை நாகரிகமாக எடுத்து வையுங்கள். கேள்விகளை நாகரிகமாகக் கேட்டு பதில்களையும் நாகரிகமாகப் பெறலாமே! அநாகரிகமாக எழத தளங்கள் இருக்கின்றன. அங்கு போய் அடவாடித்தனமாக எழுதலாமே? சிந்திக்கவும்.

      1. Avatar
        ஷாலி says:

        தங்கமணி-அம்மணி சட்டியில் உள்ளதுதானே வெளியே வரும்! நாகரீகம் நஹீ ….ஹி…ஹி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *