செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)

This entry is part 8 of 14 in the series 8 நவம்பர் 2015

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

புதுக்கோட்டை

02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)

சிந்தனைப் பொழிவு – 3

செய்திக்குறிப்பு

புதுக்கோட்டை நவம்பர் 2

“தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறுவிக்காட்டியவர் பரிதிமாற் கலைஞர்” என்றார் புலவர் மா.நாகூர்.

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவையின் சார்பில் புதுக்கோட்டை பாலபாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் சிந்தனைப் பொழிவுக் கூட்டத்திற்குப் பேரவையின் துணைத்தலைவர் சண்முக பழனியப்பன் தலைமை வகித்தார். தலைவர் முனைவர் சு.மாதவன் வரவேற்புரையாற்றினார். சிந்தனைப் பொழிவுச் சிறப்புரையாற்றிய புலவர் மா.நாகூர் பேசியதாவது: “மதத்தை பரப்ப வந்து நம் தமிழ்மொழியை உலகமெல்லாம் பரப்பியவர் கால்டுவெல். அவர் வழியில் தமிழ் மொழியை மொழியியல் அடிப்படையிலும் இலக்கண அடிப்படையிலும் நுணுகி ஆராய்ந்து தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறுவிகாட்டியவர் பரிதிமாற் கலைஞர். பிறமொழி துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றலும் பொருள் தெளிவு உள்ள செம்மைத் தன்மையும் உடைய ஒரே மொழி தமிழ்மொழி. பகுதியோடு எதைச் சேர்க்கிறோமோ அதற்கேற்ப பொருள் மாறும் தனித்தன்மை உடைய ஒரே மொழியாகவும் தமிழ்மொழி விளங்குகிறது. இத்தகைய ஆய்வுமுடிவுகளை உலகுக்கு அளித்து அவரைத் தொடர்ந்து வந்த மு.வ., மறைமலை அடிகள், தேவநேயப் பாவணர், தெ.பொ.மீ போன்ற அறிஞர்களால் தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சிகளுக்கு உந்து சக்தியாகவும் அடிப்படையாகவும் விளங்கியவர் பரிதிமாற் கலைஞர்” என்றார் அவர்.

நிறைவாக துணைச்செயலாளர் பாண்டியன் நன்றி நவின்றார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கவிஞர் ஆ.பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் பாரதி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Series Navigationஇந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *