டூடூவும், பாறுக்கழுகுகளும்

This entry is part 4 of 23 in the series 20 டிசம்பர் 2015

சுப்ரபாரதிமணியன்

இறந்ததைத் தின்று இருப்பதைக் காக்கும் பாறுக்கழுகுகளை பாதுகாக்கிற விழிப்புணர்வு பேரணியை திருப்பூரில் ஆரம்பித்து வைக்கிற போது டூடூ பறவை பற்றியும் நினைத்துக்க் கொண்டேன். என் உரையில் டூ டூ பற்றியும் குறிப்பிட்டேன். அந்த இரு சக்கர வாகனப்பேரணியை அருளகம் அமைப்பும் ( இயறகி பாதுகாப்பு அமைவனம்) , திருப்பூர் தகவல் தொழில்நுட்பக்கழக இளைஞர்களும் இணைந்து நடத்தினார்கள். திருப்பூரில் தொடங்கி மேட்டுப்பாளையம் கோத்தகிரி, கூடலூர், முத்தங்கா, குண்டல்பேட்டை., தாளவாடி, ஆசனூர் சக்தி வழியாக 400 கி மீ விழிப்புணர்வு பரப்புரைகள் நிகழ்த்தி இரு தினங்கள் கழித்து திருப்பூர் வந்தடைந்த்து. இரண்டு சரணாலயங்கள் ( முத்தங்கா, வயநாடு ) வழியாகவும் நான்கு புலிகள் பாதுகாப்பு பகுதிகள் ( முதுமலை, பந்திப்பூர், சத்தியமங்கலம், பிலிகிரி ரங்கன் ) வழியாகவும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைத் தொட்டும் இந்தப்பயணம் அமைந்திருக்கிறது.

.பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவையின் பெயர் தான் டூடூ. இந்திய மகாசமுத்திரத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டூடூ என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது. டூடூ என்றால் ( போர்த்துகீசிய மொழி) முட்டாள் அல்லது அற்பமான என்பது பொருள். டூடூவிற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. மொரீஷியஸில் இருந்த கல்வாரியா என்னும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவு. டூடூ இப்பழத்தைச் சுவைத்த பிறகு, அதன் கழிவுடன் வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். டூடூ அழிந்ததால் கல்வாரியா மரமும் அழிந்துபோய்விட்டது. ஒரு உயிரினத்தின் அழிவு, சங்கிலித் தொடராக அது சார்ந்துள்ள மற்ற உயிரினங்களின் அழிவாகவும் மாறுவதை இதிலிருந்து உணரலாம். ஒரு காலத்தில் வேடிக்கைப் பொருளாக இருந்த டூடூ இந்த உலகில் இருந்து அற்றுப்போய் விட்டாலும், சுதந்திரம் அடைந்துவிட்ட இன்றைய மொரீஷியஸின் பெருமைக்குரிய அரசுச் சின்னமாக டூடூ கண்களில் பட்டு வருகிறது..

இது வான்கோழியைவிட சற்று. சதைப்பற்று மிக்கது. வளைந்த பெரிய அலகு உடையது. இறகுகளும், வாலும் வளர்ச்சியுறாமல் காணப்பட்டன. கால்கள் குட்டையாகத் தடித்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே, இவை பறக்கவும், ஓடவும் முடியாதவைகளாக இருந்தன. ஒரு தடவைக்கு ஒரு முட்டையே இடும். தரையில் புற்களால் கூடு அமைத்து முட்டையை அடைகாக்கும். டூடூவைப் பற்றி 1507 – ஆம் ஆண்டுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சுற்றி கப்பலில் சென்ற மாலுமிகள் தண்ணீரூக்காக மொரீசியஸ் தீவில் ஒதுங்கியபோது இப்பறவையைப் பார்த்தார்கள். பிடித்து உண்டார்கள். 1598 – ல் இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள், மனிதர்கள் விரும்பாத அழகற்ற பறவை என இதனை அறிவித்தார்கள். குடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது. 1681 – க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டூடூ என்று பறவையின் பெயரால் குறிப்பிடுகிறார்கள். உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மிக மிக சாதுவான பறவையாக டூடூ இருந்ததுதான் அழிந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.டூடூ மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாத பறவை யாக இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவ அமைப்பைக் கொண் டிருந்தாலும் காண்பதற்கு நட்பான பறவை யாகவும் அது இருந்து உள்ளது. இதனால் டூடூவை கேலிக்குரிய பறவையாகப் பார்த்திருக்கிறார்கள். பறக்க இயலாத சிறிய சிறகுடைய பறவை இது. இந்த இயல்பால் ஆபத்து வந்தால்கூட டூடூ மிக எளிதில் சிக்கிக்கொண்டிருக்கிறது, எதிர்த்துச் சண்டையும் இடுவதில்லை. டூடூவின் அழிவை, போர்க் குணம் இல்லாத எந்த இனமும் காலமாற்றத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போக நேரிடும் என்றும் புரிந்துகொள்ளலாம். இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் என்னும் அழகிய தீவைப் பூர்வீகமாகக் கொண்டது டூடூ. இந்தத் தீவில் பல ஆண்டுக் காலத்துக்கு மனிதர்களே இல்லை. மனிதர்கள் காலடி படாதவரை டூடூக்கள் இங்கு பெருமளவில் செழித்து வாழ்ந்திருக்கின்றன. முதன்முதலில் கடல் மூலம் இந்தத் தீவுக்கு வந்த அரபி யர்கள் ஓய்வு எடுப்பதற்காக இறங்கியுள்ளனர். அடுத்து, 1507ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் இந்தத் தீவுக்கு வந்து தங்கியுள்ளார்கள். இவர்கள்தான் டூடூவை முதலில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. டூடூ என்ற பெயரை அவர்கள்தான் இட்டி ருக்க வேண்டும். அதற்குப் போர்த்துகீசிய மொழியில் முட்டாள் என அர்த்தம். டூடூக்கு முட்டாள் பறவை என்ற பெயரும் உண்டு.ஆனால், 1598இல் மொரிஷியஸுக்கு வந்த டச்சுக்காரர்கள்தாம் டூடூவைக் கண்டுபிடித்ததாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெருமளவில் டூடூ வேட்டையாடப்பட்டது டச்சுக்காரர்களின் கால கட்டத்தில்தான். அவர்கள் மெய்பூ என்னும் நகரை உருவாக்கி, அதைத் தலைமையிடமாகக்கொண்டு மொரீஷியஸை ஆண்டு வந்தார்கள்.மொரீஷியஸ் இப்படி நாடாக ஆன பின்புதான் டூடூவின் அழிவுகாலம் தொடங்கியது. டச்சுக்காரர்களுக்குப் பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். பிரெஞ்சுக்காரர் களிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர். மனிதக் குடியேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தன. அதனால் இந்தத் தீவில் நாய்கள், எலிகள், பூனைகள், பன்றிகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையும் பெருகின.

டூடூ சண்டையிடும் இயல்பு இல்லாத பறவை. புற்களால் கூடுகள் அமைத்து, அது இட்ட முட்டைகள் இந்த விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. டூடூவின் எண்ணிக்கை சட்டெனக் குறைந்தது. 1680ஆண்டுக்குள் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. மனிதர்கள் கண்ணில் பட்டு அதிகபட்சம் 100-150 ஆண்டுகளுக்குத்தான் அவற்றால் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கிறது.டச்சு ஓவியர் ரோலண்ட் சாவ்ரே 1624இல் டூடூவை படமாகத் தீட்டியுள்ளார். இதுதான் டூடூவைத் தெரிந்துகொள்வதற்கான முதல் சாட்சியாக இருந்தது. அதன் பிறகு பலரும் ஓவியங்களில் டூடூவைப் பதிவுசெய்துள்ளனர். ஓவியங்களின் அடிப்படையில் அதன் உடல் சாம்பல் நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. டூடூ வாழ்ந்த காலத்தில் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அது தடமே இல்லாமல் எலும்புத் துண்டுகள்கூட மிஞ்சாமல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்பது பற்றியச் செய்திகளை இணைய தளங்களில் காண முடிகிறது.

மொரீஷியஸ் பிரிட்டிஷின் காலனியாக இருந்தபோது, ரிச்சர்டு ஓவன் என்னும் பிரிட்டிஷ் உயிரியியலாளர், 1865இல் உதிரிஉதிரியாகக் கிடைத்த எலும்புகளை வைத்து டூடூவின் எலும்புக் கூட்டைத் திரும்ப அமைத்தார். அதை வைத்துதான் டூடூவின் உருவத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது. சுமார் 3 அடி முதல் 6 அடி உயரத்துடன் டூடூக்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எடை சுமார் 10இலிருந்து 20 கிலோ வரை.இருந்ததாக இணைய தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. டூடூ இன்றைக்கு ஓவியங்களிலும், மொரிசியஸ் நாட்டு அரசாங்கச் சின்னத்திலுமே காணப்படுகிறது.

அது போல் அழிந்து கொண்டிருக்கும் பாறுக்கழுகுகள் எனப்படும் பிண்ந்தின்னிக் கழுகுகளை காப்பாற்ற இன்றைக்கு விழிப்புணர்வு பரப்புரை தேவைப்பட்டிருக்கிறது.முன்பெல்லாம் கேட்பாற்ற்றுப் பிணங்கள் கிடக்கிற போது பாறுக்கழுகுகள் பிண்ந்தின்ன கூட்டம்கூட்டமாய் வந்து அதை சுத்தமாய் சாப்பிட்டு முடித்த பின் சுத்தம் செய்து விட்டுப் போகும்என்பார்கள். இந்தவகை ஆகாய மருத்துவர்களான பாறுக்கழுகுகள் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளையும், கோமாரி, நீலநாக்கு , ஆந்த்ராக்சு நோய்கள் காரணமாக இறந்த கால்நடைகளையும் தின்கும் ஆனால் அவை எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது. இந்தப் பாறுக்கழுகுகளின் சாவுக்கு டைக்குளோபினாக் என்ற ஊசி மருந்து காரணமாக இருக்கிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மாடுகள் , கால்நடைகளுக்கு வந்த மடிவீக்கம், சுளுக்கு போன்ற நோய்களுக்கு டைக்குளோபினாக் தரப்பட்டிருக்கிறது. அந்த மருந்து தந்தும் குணமாகாமல் இறந்து போன மாடுகளைத் தின்ற பாறுக்கழுகுகள் டைக்குளோபினாக் ஊசி மருந்தின் எச்சத்தை பாறுக்கழுகுகளின் சிறுநீரகத்தால் ஜீரணிக்க முடியாமல் சிறுநீரகம் செயலிழந்து அவை சாகின்றன. இது பற்றிய ஆராய்ச்சிகள் சற்று தாதமாகவே கிடைக்க பல ஆயிரக்கணக்கான பாறுக்கழுகுகள் இறந்து விட்டன. இந்திய அரசும் எட்டு ஆண்டுகளுக்கும் முன் இந்த மருந்தை தடை செய்து விட்டது. ஆனாலும் சட்ட்த்திற்குப் புறம்பாக மனிதர்களுக்கு விறக்ப்படும் டைக்குளோபினாக் மருந்தின் அளவை கூட்டி காலநடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் எனபதும் அபாயகரமானதாகும்.

இறந்த சடலங்களின் மேல் விசம் தடவாமலும் இயறகையாக இறக்கும் விலங்குகளை, கால்நடைகளை புதைக்காமலும் எரிக்காமலும் கழுகுகளுக்கு தரவேண்டும் என்று இயறகை ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். நம் கண் முன்னால் இருந்த வெண்முதுகு பாறுக்கழுகு, செந்தலைக் பாறுக்கழுகு, நீண்ட அலகு கொண்ட பாறுக்கழுகு, மஞ்சள் பூசிக்கழுகு போன்றவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் இன்றைய நிலையில் அவற்றை மனித அழிவிலிருந்து காப்பாற்ற சில நடவடிக்கைகளிம் தேவைப்படுகின்றன. சென்ற தலைமுறையில் சிவிகிப்புலி என்ற சீட்டா, கடந்த் மூன்று தலைமுறைக்கு முன் இருந்த டூடூ போன்றவை அழிந்தது போல் பாறுக்கழுகுகளும் முழுதாய் அழிய வாய்ப்பிருக்கிறது இதைத் தடுக்க வேண்டும். அண்மையில் அருளகம் அமைப்பு கோவை கிராம சபைகளில் இது பற்றியத் தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அளவில் முன் முயற்சியான நட்டிக்கையை எடுத்திருக்கிறது. அருளகம் தொடர்ந்த பரப்புரைகளில் இதை வலியுறுத்தி வருகிறது

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளதுவாழையடி வாழை!
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    Mahakavi says:

    அந்தப் பறவையின் பெயர் “டூடூ” அல்ல. “டோடோ” The spelling is dodo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *