நண்பன் என்பவன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 9 in the series 20 டிசம்பர் 2020



கௌசல்யா ரங்கநாதன்
           ——
நீண்ட, நெடிய, 45 நாட்கள் போல் படுத்த, படுக்கையாய், மருத்துவ மனையொன்றில் கிடந்த, என் அலுவலக சகா குமார், அன்று உடல் நலம் தேறி அலுவலகம் வந்தவுடனேயே, அவன் இருக்கைக்கே போய் நலம் விசா¡¢த்த போது ஏனோ விளங்கவில்லை அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்..

“என்னடாச்சு உனக்கு?” என்ற போதும் அவன் என்னை தவிர்த்து எங்கள் மற்ற சகாக்களுடன் சகஜமாய் உரையாடத் தொடங்கினான்..
இத்தனைக்கும் இந்த 45 நாட்கள் அவன் மருத்துவ மனையில் படுத்திருந்த போது அடிக்கடி போய்ப் பார்த்து, ஆறுதலும், வேண்டிய உதவிகளும் செய்தவன் நான் மட்டுமே.. சொல்லிக் காட்டுகிறான் பாரு என்று யாரும்,என்னை தயவு செய்து நினைத்து விட வேண்டம்..உண்மையில் நடந்ததை மட்டும் தான் சொன்னேன்..கனத்த மனத்துடன் என் இருக்கைக்கு திரும்பிய பிறகு, குமார் அங்கு வந்து மெதுவாய் அதே சமயம் பிறர் காதுகளில் விழுந்து விடாதபடி ” நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே..நீயெல்லாம் ஒரு நண்பனாடா?” என்றான்..அவன் முகத்தில் கோபக்கனல் வீசியது..

“என்னடா சொல்றே நீ? என் நட்பு ஆத்மார்த்தமானது..எதையும் எதிர்பார்த்து உங்கிட்ட நட்பு பாராட்டலை நான்னு உனக்கு சொல்லி விளங்க வைக்கத் தேவை இல்லை..”நகு, நகு நட்புனும் , மன்னன் கோப்பெரும்சோழன் —புலவர் பிசிராந்தையார் நட்பு பற்றியும் சங்க இலக்கியங்களில் நிறையவே சொல்லப் பட்டிருக்குனு நான் படிச்சிருக்கேன்..ஒரு தாய்கிட்ட, தகப்பன்கிட்ட, உடன்பிறப்புகள் கிட்ட, இவ்வளவு ஏன் கட்டின மனைவிகிட்டகூட வெளிப்படையாய்
 பகிர்ந்து கொள்ள முடியாத சிக்கலான பிரச்சினைகளை, ஒரு நல்ல, ஆத்மார்த்தமான, எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத நண்பன் கிட்ட பகிர்ந்துக்கலாம்..ஆலோசனையும் கேட்கலாம்னு சொல்வாங்கடா”..

“ஆனா நீ அப்படி நடந்துக்கலையே எங்கிட்ட?”என்றவனிடம்,

“எனக்கு விளங்கலையேடா நீ சொல்றது?”என்றேன்..

பிறகு அந்த இடத்தில் சற்றே அமைதி நிலவியது..பிறகு அவனிடம் கேட்டேன்..

“ஏண்டா ஏதாச்சும் என்னையுமறியாமால் உன்னை பத்தி யார் கிட்டவாவது,நான் தப்பா பேசிட்டேனா? அப்படி பேசினதாவும் எனக்கு ஞாபகம் இல்லை.. அப்படி இருந்தா என்னை மன்னிச்சிரு..மன்னிச்சிரு..ஒருகால் என் மன ஆதங்கத்தை யார்கிட்டயாவது கொட்டியிருக்கலாம்..”

“அதெல்லாம் எதுவுமில்லைடா.. ஆனா நீ இப்ப சொன்னியே அத்யந்த, ஆத்மார்த்தமான நண்பன்னும் எதுவொண்ணையும் மனசில வச்சுக்காம, அதாவது ஒளிவு, மறைவு இல்லாம ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கணும்னு… நீ அப்படி நடந்துக்கிட்டியா? இதுக்கு மேலே வேணாம்டா..கசப்புத்தான் மிஞ்சும்..”

“பரவாயில்லைடா..எதுவானாலும் வெளிப்படையாய் உன் மன ஆதங்கங்களை என்னிடம் நீ சொல்லலாம்..நான் தப்பா எதுவும் நினைச்சுக்க மாட்டேன்..”

“உண்மையான நட்புனு..அப்படி நடந்துக்கிட்டியா நீ? உண்மையை மறைச்சிட்டேல்ல..நான் இதை எதிர்பார்க்கலைடா உங்கிட்டயிருந்து?”

“என்ன உண்மை? நான் எதை உங்கிட்டயிருந்து மறைச்சேன்?”

“ஏண்டா..நான் அங்கே இருந்த 45 நாட்களில் நம்ம இரண்டு நண்பர்கள், சுரேஷும், ராமனும் அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் பரலோக பிராப்தி அடைஞ்சதை ஏண்டா நீ எங்கிட்ட என்னை அடிக்கடி மருத்துவ மனைக்கு பார்க்க வந்தும் சொல்லலை.. இது உனக்கே நல்லதா படுதா”..

“எல்லாம் ஒரு காரணமாய்த்தான் சொல்லலை..மறுபடியும் என்ன காரணம்னு தோண்டி, துறுவி கேட்காதே”.

“அப்படி என்னடா பொல்லாத காரணம்?பூசி மெழுகாம எதுவாய் இருந்தாலும் நீ ஒரு உண்மையான நண்பனாய் இருந்தா சொல்லு இப்பவே..ஆனா, நீ சொல்ல மாட்டேடா..ஏண்டா, ஒரு உறவினரோ, நண்பனோ மருத்துவமனையில் படுத்திருந்தா சாத்துக்கூடியோ, ஆப்பிளோ வாங்கிக்கிட்டு, அதுவும் “விசிட்டர் டைமில” போய் கூட்டத்தோட கூட்டமா பார்த்துட்டு அத்தோட நம்ம கடமை முடிஞ்சுதுனு வரதுதானே நடைமுறை வழக்கம். நீ மட்டும் விதிவிலக்கா என்ன? அதனால் இவங்கிட்ட ஏன் இப்ப நம்ம டைமை வேஸ்ட் பண்ணிக்கிட்டு அரட்டை அடிக்கணும்னு நினைச்சிருப்பே..அது மட்டுமில்லை..எங்கே நமக்கும் இன்ஃபெக்க்ஷன், அதாம்பா நோய்த்தொற்று  வந்துருமோனு ஒரு பயம் வந்திருக்கும்..”

“இவ்வளவுதானா, இன்னம் இருக்கா?நான் வேணும்னுதான் சொல்லலை நீ அங்கே படுத்திருந்தப்ப..ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, 45 நாட்கள் நீ படுத்திருந்தே..டெஸ்ட் மேல டெஸ்ட் எடுத்தும் எதனால் உனக்கு பாதிப்புனு கண்டு பிடிக்க முடியலை..அந்த சமயத்தில் இது போல கெட்ட செய்திகளை நான் உங்கிட்ட சொல்லியிருந்தேன்னு வையி,அது நெகடிவ் வைபிரேஷனை தோற்றுவிக்கலாம் உன் மனசில.. அது உன் உடல் நலத்தையும்கூட பாதிக்கும்..நமக்கும் இப்படியாயிடுமோ..குணாமாகாதோனுலாம் நினைக்கத் தோணும்..முதல்ல ஒரு நோயாளிக்கு தன்னம்பிக்கை வேணும் நாம் எப்படியும் குணமாயிடுவோம்னு. அதனால் நேர்மறை சிந்தனைகளை நாம் வளர்த்துக்கணும்.. அந்த நோயாளிகளை பார்க்க வரவங்களும் சொல்லணும்,”உங்களுக்கு ஒண்ணுமில்லை.சீக்கிரமே குணாமாயிடுவீங்க நீங்க.. பார்த்துக்கிட்டே இருங்கனு ..என்னைப் பொறுத்தவரை, நான் இப்படித்தாண்டா  நடந்துப்பேன் யாரு நோய் வாய்ப் பட்டிருந்தாலும்..இவ்வளவு ஏன்? குணமாக வாய்ப்பே இல்லாத நோயாளிக கிட்ட கூட டாக்டர்ஸ், “உங்களுக்கு ஒண்ணுமில்லை..சீக்கிரமே நீங்க வீட்டுக்கு போயிடலாம்னு நம்பிக்கை வார்த்தைகள் சொல்றதோட, நோயாளிகளின் உறவினர்களை தனியா பார்த்து “இவங்க உயிரோட இருக்கிறவரை இவங்களை சந்தோஷமா வச்சுக்குங்க..உங்களுக்கு
ஒண்ணுமில்லைனு பாசிடிவ் வார்த்தைகளையே சொல்லிக்கிட்டிருங்கனுதான் சொல்வாங்க..இதுதான் மரபு..கண்ணியம்னு நான் நினைச்சுத்தான் நீ ஹாஸ்பிடல்ல படுத்திருந்தப்ப அந்த இரண்டு மரண செய்திகளை உன் கிட்ட நான் சொல்லலை..சொல்ல என் மனமும் இடம் கொடுக்கலை….த பாரு.. நீ கேட்கலாம்..நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.. புராண,இதிகாசங்கள், எல்லாம் படிச்சவன்தான்.. என்னைக்கு இந்த உலகில்  நாம் பிறப்பெடுக்கிறோமோ, அப்பவே முடிவு தேதியையும் கடவுள் எழுதிடறான்னு  சொல்லியிருக்காங்கனு..இது வெற்று வார்த்தைகள்..மேடையில் பேச நல்லாயிருக்கும்.. ஆனா நிச வாழ்க்கையில்னு நீ மறுக்கலாம்.. ஊம்..வேணாம் வேதாந்த விசாரமெல்லாம் இப்ப..இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு உங்கிட்ட சொல்லாததற்கு..நீ படுத்திருந்த அதே பிளாக்கில 2 முதியவர்கள் பல நாட்களாய் படுத்திருந்தார்கள்..அவர்களை பார்க்க கடனேனு வரும் உறவுக்கூட்டம் என்ன பேசிக்கிட்டாங்க, அதுவும் அவங்க காதுகளில் விழறாப்பலவே..”சே! இன்னம் எத்தனை நாட்கள், மாதங்கள் இதுங்க இப்படி இங்கே படுத்துக்கிட்டு நம்ம உசிரையெல்லாம் வாங்கப் போகுதோனு””.  அதுக்கு இன்னொரு உறவினர் என்ன சொன்னார்னு தொ¢யுமா? “எப்படி போய்ச்சேரும் இதுங்க? மனசுபூரா ஆசைகளை நிரப்பி வச்சுக்கிட்டிருக்கிறப்ப..இத்தனை காலம் ஆண்டு, அனுபவிச்சதெல்லாம் போதும்னு இந்த கடைசி காலத்திலாச்சும் நினைச்சாத்தான் உசிர் நல்லபடியா போய்ச்சேரும்னு.” ஏன் இப்படி அங்கலாய்க்கிறவங்களுக்கு தோணலை,  நாம் இப்படியே என்றைக்கும் சாஸ்வதாமாய் இருக்கப் போறோமானு.அதனால்தான் நான் உன்னைப் பார்க்க வரப்பலாம், நான் அவங்க கிட்டவும் அன்பா, ஆறுதலா நாலு வார்த்தைகள் பேசிட்டுத்தான் போனேன்..என்னால பணம்,காசு கொடுத்து உதவ முடியாதுன்றதால..யாரோ முகமறியாதவங்க கிட்டவே நான் அன்பா நாலு வார்த்தை பேசினப்ப, எப்படிப்பா உங்கிட்ட துக்க செய்திகளை
பகிர்ந்துக்க முடியும்..நீ இப்ப குணமாகி வந்ததிலிருந்து உனக்காக நான் தினம்தோறும் நீ நல்லா இருக்கணும்னுதான் பிரார்த்தனை செய்து கிட்டிருக்கேன்..  ஒரு அத்யந்த நண்பனா..இதை நீ நம்பினாலும், நம்பாக்காட்டியும்..இதை உனக்கு நிரூபிக்கணும்ன்றதுக்காக “ஹே ராமா, நீ என் நெஞ்சில்தான் இருக்கேனு” தன் மார்பை பிளந்து காட்டின ஆஞ்சேனயர் போல என்னால் முடியாது” என்ற போது, நண்பன் என் கைகள் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு “என்னை மன்னிச்சுடுடா..” என்றான்..

Series Navigationமலர்ந்தும் மலராதஇருமல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *