கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

This entry is part 2 of 5 in the series 1 ஜூன் 2025

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

C:\Users\computer\Desktop\ATHMAJIV\493264165_1822589748308751_7037754692867415298_n.jpg

_ லதா ராமகிருஷ்ணன்

காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி, தான் செய்துகொண்டிருக்கும் கணினி தட்டச்சுவேலையையும் சரிவர செய்ய இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்’கில் வெளியாகிக்கொண்டிருக்கும் அவருடைய சமீப கால கவிதைகள் அவருடைய வாழ்வியல் சார் நெருக்கடியை, இயலாமையை, அதனால் அவர் ’ஃபேஸ்புக்’ நட்பினரிடம் உதவி யாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, அப்படி அவருக்கு சிலர் உதவ முன்வருவதை, வேறு சிலர் அவரை அதற்காகப் பரிகசிப்பதை, மதிப்பழிப்பதையெல்லாம் கவித்துவம் குறையாத கவிதை களாக வெளிப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் கவித்துவத்தைப் பூரணமாக அனுபவிக்க முடியாதபடி அவருடைய இக்கட்டான நிலை நமக்குள்ளும் ஒரு அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. [கவிஞர் ஆத்மாஜீவை மின்னஞ்சல் மூலம் நான் கண்ட பேட்டி பதிவுகள் இணைய தளத்தில் 28 மார்ச் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு  இதோ: https://www.geotamil.com/…/202…/9055-2025-03-28-18-07-45 ]

ஆத்மாஜீவின் சமீபகால கவிதைகள் சில:

ஒவ்வொரு விடியலிலும் 

இரவின் வாசனை

கவலைகளின் படுக்கையில் 

படுத்திருப்பது நினைவுகளின் 

உடல்.

துயரின் போர்வைக்குள் 

ஒளிந்து கொள்கிறேன்.

ஆறுதல்களின் காற்றில் மனம் 

நொடிநேர ஆசுவாசமாகிறது.

கடந்து போகிற சாலைகளில் 

இரத்தச் சுவடுகள் பதிகிறது.

எனது முகத்தைப் பார்க்கும்போது 

யாரோவின் முகமாகத் தெரிகிறது.

கடவுளே 

எங்கே நான் தொலைந்து போனேன்.

ஆத்மாஜீவ்

உற்சாகம் மிகுந்த 

நொடிகளுக்காக ஏங்குகிறேன்.

கவலைகள் படிந்த 

இந்த முகத்தைப் பிடிக்கவில்லை.

கம்பீரமான வார்த்தைகள் 

ஒதுங்கி நிற்கிறது.

ஒரு காலத்தில் 

சிரித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

கொடுத்துக் கொண்டிருந்த கைகள் 

ஏந்திக் கொண்டிருக்கும் ஓவியத்தை 

வரைகிறேன் இப்போது.

உற்சாகம் இழந்து 

கவலைகள் படிந்த முகத்துடன் 

அலையும் என் கண்களில் படிகிறது 

ஒரு பிச்சைக்காரனின் வலி.

ஆத்மாஜீவ்

#ஆதிவிதையின்_நிழல்

ஜன்னல்கள் எல்லாவற்றையும்

சாத்தி விட்டேன்

அறையின் நடுவில் எரிந்தபடி இருக்கிறது

சிறிய அகல்விளக்கு

அகண்ட நெருப்புக்கோளத்தின்

அடையாளமாக

எனது முக ஓவியம் தீட்டப்பட்ட மேல்சுவற்றில்

இரண்டு நட்சத்திரங்கள் மட்டும்

இடையறாமல் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது

மூன்றாம் கண்ணிற்குள் அமர்ந்து

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில்

எழுத்துகள் எதுவும் பதிக்கப்படவில்லை

வருவதும் போவதற்குமான

இடைவெளிகளில் நிற்கும் கடவுளை

கண்டு கொள்வதாயில்லை யாரும்

திறந்தே இருக்கும் வாசலின் கதவை

தட்டியபடி நிற்கும் கரங்களில் வழிகிற

குருதியிலிருந்து மறுபடி முளைக்கிறது

ஆதிவிதையின் நிழல்

ஆத்மாஜீவ் 

#காற்றில்_புரளும்_காலத்தின்_ஏடுகள்.

காலத்தின் ஏடுகள் காற்றில் புரள்கிறது.

சுவற்றில் வரையப்பட்ட கிறுக்கல்களாய் 

எனது வார்த்தைக் கூட்டங்கள்.

ஈரத்துணியை முறுக்கிப் பிழிவதுபோல் 

இருக்கிறது எனது வாழ்க்கை.

உயிருணர்வு மிக்க நிழல் 

உலவுகிறது.

கனிதரும் மரங்களை வரைகிறேன்.

ஈரமுலராத மண்ணில் வேரூன்றி நிற்கிறது

அது.

கடந்து போகும் பாதையில் இரைந்து 

கிடக்கத்தான் செய்யும் கல்லும் முல்லும்

மெல்ல ஓதுகின்றன 

என்னுள் ஐக்கியமாகும் இறைநிழல்கள்.

எனது துயரங்களின் குரலை 

கருணையுடன் கேட்கும் காதுகளை 

கடவுளின் வரவாக இருப்பில் வைக்கிறேன்.

எதையும் கேட்க விரும்பவில்லை 

நான்.

பயணத்தின் பாதை முடிகிற போது 

வண்டியிலிருந்து இறங்கிச் செல்லும் 

ஒரு வழிபோக்கனின் கடைசி பாதச்சுவட்டில் 

விதை ஒன்றை புதைக்கிறேன்.

யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.

காற்றில் புரளும் காலத்தின் ஏடுகளிலிருந்து 

ஒருக்கால் 

மலர் ஒன்று மலரக் கூடும்.

ஆத்மாஜீவ்

என் வாழ்வின் கடைசித் துயர்

உதிரப்போகும் இலையின் அசைவு.

கல்தூணை விரும்பாதவனின்

எளிமையான விடைபெறுதல்.

சொற்களால் அடையாளப்பட்டவனின் மொழி

தனிமையின் வனாந்தரத்தில் அலைகிறது.

எழுதப்படாத புத்தகத்தின் வெற்றுப் பக்கத்தில்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது

முற்றுப்புள்ளி.

நடந்து கொண்டேயிருக்கிறேன்

பாம்பின் சட்டையை உரித்துக் கொண்டு.

யாசித்து அழுகிய கைகளை

எங்கே சென்று புதைப்பேன்.

ஆத்மாஜீவ்

கவிஞர் ஆத்மாஜீவின் வேண்டுகோள் இது. முடிந்தவர்கள் உதவ மறவாதீர்கள்

கவிஞர் ஆத்மாஜீவ் கைகூப்பிக் கேட்கிறேன்.

நட்பினர்களுக்கு என் அன்பான வணக்கம். 🙏

என் இதயத்திலிருப்பதை என் நட்பினரிடம் மனம்விட்டு சொல்கிறேன். 

ஓரிரு நிமிடங்கள் இந்தப் பதிவை தயவுசெய்து வாசிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படி தொடர்ந்து உதவிகேட்டு பதிவிடுவதும், அதன் லிங்கை இன்பாக் சில் அனுப்பி யாசிப்பதும், எனக்கு மிக அவமானமாகத்தான் இருக்கிறது. ஒரு குற்றவுணர்ச்சியுடன்தான் வேறுவழியின்றி நண்பர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனது உடலும் மனமும் முற்றிலும் தளர்ந்து விட்டது. உணவுக்கான தேவையைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. அன்புமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. 

கழுத்தை நெறிக்கும் கடன்பிரச்சனை ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிகப் படியான மனஉளைச்சலின் காரணமாக மூன்று வாரத்திற்குமுன் நான் மூர்ச்சையிழந்து சாவை சந்தித்து, ஆக்சிஜன் மூலம் மறுஉயிர்த்தெழந்ததில் ஏகப்பட்ட மருத்துவச்செலவு. இரண்டு வாரங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இப்போதும் நீண்ட நேரம் அமரமுடியாதநிலை. மயக்கமும், மிகுந்த அழுத்தமான மனவேதனையும் சூழ்ந்திருக்கிறது.

இப்படி உதவி கேட்டு தொடர்ந்து முகநூலில் பதிவிடுவது பெரிய அவமானமாக இருக்கிறது. முகநூலில் எனக்கான இடம் முற்றிலும் கேலிக்குரியதாகி விட்டது. வாழ்வதற்கான எந்த ஆதாரமும். பிடிப்புமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறேன்.

முகநூல் நண்பர்கள் அவ்வப்போது அனுப்பும் உதவிப் பணத்தில்தான் மருத்துவச் செலவும், உணவுத் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நிறைவாக இல்லையென்றாலும், நட்பினரின் உதவியால்தான் ஓரளவுக்காவது சமாளித்துக் கொள்கிறேன்.

இன்பாக்சில் பலரிடம் உதவி கேட்பது சங்கடமாக இருந்தாலும், உடல் ஒத்துழைக் காத நிலையில்தான் அவமானத்துடன் இப்படி கேட்கவேண்டியதாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே,

கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் இன்று அதையே காரணங்காட்டி பிச்சை யெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த முகநூலை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில் தான் இன்று இந்தப் பதிவை மிகுந்த தயக்கத்துடன் கூனிக்குறுகி பதிவிடுகிறேன்.

உங்களால் முடிந்தது சிறுதொகை என்றாலும், தயவுசெய்து பிச்சையிடுவதாக நினைத்து அனுப்பி உதவுகிறீர்களா? 

கையறுநிலையில் கையேந்தும் ஒருவனுக்கு நீங்கள் அனுப்பித்தரும் சிறு அளவிலான ஆதரவும் எனக்கு, எங்களுக்கு பேருதவியாக இருக்கும்

பணிவுட னும் வணக்கத்துடனும்

இப்படி உதவி கேட்டுதான் வாழ வேண்டுமா? என்ற கேள்வி என்னை தலைகுனிய வைக்கிறது. 

நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால், சென்ற 2024 ஏப்ரல் மாதமே “எல்லாம் முடிந்திருக்கும்”. இதுபோல, “கடன்பிரச்சனை கழுத்தை நெறிக்கிறது தயவு செய்து உங்களாலான உதவியை செய்யுங்கள்”, என்று யாசிக்கும்படியாக பதிவிட வேண்டியதிருந்திருக்காது.

எனக்கு மட்டுந்தான் கடன்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை. உடல் மற்றும் மனஉளைச்சல் பிரச்சனைகளா? இப்படி அசிங்கப்படும்படியாக உதவிகேட்டு கையேந்த வேண்டுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு வேறுவழி தெரியவில்லை. மன்னியுங்கள் நண்பர்களே.

“உடுக்கை இழந்தவன் கைபோல…” என் மீதுள்ள அபிமானத்தில் சில நண்பர்கள் அவ்வப்போது உதவுகிறார்கள்.

“ஒருவரையொருவர் நேசிக்கிற பெருங்குணம் காரணமாக, தன்பக்க மிருக்கும் சிரமங்களுக்கிடையிலும் சிறுதொகையேனும் எனக்கு அனுப்பி உதவி செய்திருக் கிறார்கள் பலர்.

சொல்வதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. உதவிய அனைவரும் மனிதவுருவில் தெய்வமென நன்றியுடன் வணங்குகிறேன்.

எத்தனை முயற்சி செய்தும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, நேர்மறையான சிந்தனைகளில் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித் தாலும், பசியும் கடனும் நெருக்கும்போது, தானாகவே எதிர்மறையில் போய் சிக்கிக் கொள்ள நேர்கிறது. 

கடந்து போகும் என்ற நம்பிக்கையை மட்டும் கடந்துபோகாமல் இறுகப் பிடித்துக் கொண்டு போராடுகிறேன்.

இந்தப் பதிவை முழுதாக வாசித்தவர்களுக்கும், இதைப்போன்றோ, அல்லது இதைவிட சற்றுகூடுதல் குறைவாகவோதான் வாழ்க்கையிருக்கு மென அறிவேன். எனினும், எனது நட்பு வட்டத்திலுள்ள நண்பர்களின் மீதான அதீத நம்பிக்கையில், என்னை நான் வெளியரங்கப்படுத்திக் கொண்டுள்ளேன். பலர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனது கவிதைப் பயிற்சிக்கான ஒரு அருமையான களமாக இந்த முகநூலை பயன்படுத்திக் கொண்டிருந்த நான், இன்று என்னை ஒரு கவிஞனாக முன்னிலைப்படுத்தி கையேந்திக் கொண்டிருக்கிறேன் என்பது தவிர இந்த வாழ்க்கைமீது எனக்கு எந்த புகாருமில்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

உதவ மனமிருந்தும் உதவமுடியாத சூழலிருப்பவர்களுக்கும், இதுவரை யிலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

உதவக்கூடிய சாத்தியமுள்ளவர்கள், தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் எந்தவொரு சிறுஉதவியும் எனக்கு பேருதவியாகவே இருக்கும் நண்பர்களே.

நம்பிக்கையுடன், நன்றியுடன்… 🙏

ஆத்மாஜீவ், காலக்ரமம் ஆத்மாஜீவ் என்கிற வி.சி.ராஜேந்திரன், சேலம்

எனது வங்கி மற்றும் GPay விபரங்கள்.

#Bank_Details : Rajendran Chinnasamy

Kotak Mahindra Bank

Branch : Shevapet, Salem.

Account Number : 6249465891

IFSC Code : KKBK0008781

#GPay_Number : 84385 44124

#Name : V.C. Raj

C:\Users\computer\Desktop\ATHMAJIV\APPEAL FROM ATHMAJIV\கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவி தேவை (1) image.jpg
Series Navigationவேடன்நிதானப் புரிதல்கள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *