Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

This entry is part 5 of 6 in the series 8 ஜூன் 2025

பி.கே. சிவகுமார்

பெரிய கட்டுரை எழுதும் மனநிலை பிற காரணங்களால் இல்லை. ஆதலால் thug life குறித்த சில விரைவான, சுருக்கமான குறிப்புகள். இவற்றைக் கூட எழுதியிருக்க மாட்டேன். ஆனால் படம் அளவுக்கதிகமாக, அநியாயமான எதிர்வினை விமர்சனம் பெறுகிறதோ என்ற கேள்வியால், சினிமாவின் ரசிகனாக, எழுத முயல்கிறேன்.

படம் எனக்குப் பிடித்திருந்தது. விக்ரம் 2 ஐயை விட எனக்குப் பிடித்திருந்தது. நான் மிஷன் இம்பாசிபள் வரிசை ஆங்கிலப் படங்களின் ரசிகன். அவற்றைத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையின் கடைசி படத்தைத் திரையரங்கில் பார்த்தபோது, ஆரம்பத்திலும் பல இடங்களிலும் வசனமும் பழைய கதையைப் புரிதலுக்காகச் சொல்வதும் இருந்து, சுவாரஸ்யம் குறைந்ததாகத் தோன்றியிருக்கிறது. அப்படத்தின் கிளைமாக்ஸ் விமானச் சண்டையும் நீளமோ என்ற கேள்வி எழுந்தது. படத்தின் போது கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொண்டேன். ஆனால் மொத்தத்தில் அந்தப் படம் பரவாயில்லை, நன்றாக இருக்கிறது என்றே தோன்றியது. அதைப் பார்க்கும்போது thug life படத்தில் குறைவாகவே கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேன்.

இரண்டாம் பாதி சற்றுத் தொய்வாக இருப்பதாகச் சிலர் உணரக் காரணம், இரண்டாம் பாதி எப்படிப் போகும் என்கிற புரிதல் இடைவேளையின் போது பார்ப்பவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. பழிவாங்குகிற இரண்டாம் பாதியில் – புதுமையாக ஏதும் இல்லை என்றாலும் காட்சிகள் சுவாரஸ்யமாகவே கோர்க்கப்பட்டுள்ளன. கமலுக்கும் சிம்புவுக்கும் இடையேயான கிளைமாக்ஸ் காட்சி போன்றவையின் நீளம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களின் ரசிகர்களுக்காகவும் சண்டைப் பிரியர்களுக்காகவும் எந்தப் பெரிய இயக்குநரானாலும்  பாடல்கள், சண்டைக் காட்சிகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையிலேயே தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. மற்றபடி, இரண்டாம் பாதி மோசமெல்லாம் இல்லை.

பழைய காலங்கள் போல் இல்லாமல் பாடல்களின் சில வரிகள் படம் முழுவதும் வருவது ஓர் உத்தி. இந்த உத்தி ஏற்கனவே பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, மாமன்னன். தமிழ்ப் படங்களுக்குப் பாடல்கள் வேண்டுமா என்பதே என்னைப் போன்றோர்க்கு உள்ள ஒரு கேள்வி. முழுப் பாடல்களில் இருந்து பாடல்கள் இல்லாத நிலைக்கு நகரும் முன்னேற்றத்தின் இடைநிலையாக இதைப் பார்க்கலாம். அதனால் பாடல்கள் முழுமையாக வராமல் அங்கங்கோ இறுதியிலோ சிலவரிகளாக வருவதெல்லாம், எனக்குத் தடையாகத் தோன்றவில்லை. படத்தின் வேகக் கூட்டலுக்கு இத்தகைய உத்திகள் உதவவே செய்யும்.

மேலும் பல படம் வெளிவருவதற்கு முன் இப்படத்தின் பாடல்கள் குறித்த விளம்பரத்திலோ விவாதத்திலோ நான் ஆர்வம் காட்டியதில்லை. அஞ்சு வண்ணப் பூவே, முத்த மழை, விண்வெளி நாயகா ஆகிய பாடல்களைப் பாதி கேட்டேன். எனக்கு ஞானமில்லாத விஷயங்களில் நான் ஆர்வக்கோளாறாகக் கருத்துச் சொல்வதில்லை. இசை எனக்கு ஞானமில்லாத துறை. அதனாலும் பாடல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

ஆனால் பின்னணி இசையில், ரஹ்மான் மூன்று நான்கு இடங்களில் அட என கவனிக்க வைத்தார். நவீன ப்யூஷன் என்ற பெயரில் அதீத வாத்திய சத்தத்தைத் தராமல், அதே நேரம் மெலடி என்று மிகவும் மென்மையாகப் போகாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு சமநிலையை அடைய ரஹ்மான் இசை சமீபகாலங்களில் முயல்கிறது. இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் அதற்கு உதாரணம் என ஓர் இசைப் பாமரனாக எனக்குத் தோன்றுகிறது. இந்த இடத்தில்தான் ரஹ்மானின் முதிர்ச்சியும் எப்படி அவர் அனிருத் போன்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து வேறுபட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறார் என்றும் தெரிகிறது.

மணிரத்தினத்தின் சிக்னேச்சர் காதல் காட்சிகளில் இப்படத்திலும் தெரிகிறது. கமல் – அபிராமி, கமல் – திரிஷா, அசோக் செல்வன் – அவர் முன்னாள் மனைவி ஆகியோருக்கிடையேயான காட்சிகளில் அதைப் பார்க்கலாம். மேடம், ஐ ஆம் யுவர் ஆடம் போன்ற வசனங்கள் வைரலாகி ஒரு வலம் வரலாம். என் பேர் என்னன்னு சொல்லு என்பது போன்ற க்யூட்டான உரையாடல்கள் உள்ளன. லவ் யூ சொல்லச் சொல்லி திரிஷா கேட்க, அதற்குக் கமல் சொல்லும் பதில் போன்றவற்றையும் சொல்லலாம்.

ஆக வசனங்கள் இப்படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அதில் கமலுக்கும் சிம்புவுக்கும் இடையேயான உரையாடல்களின் சில பகுதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

விக்ரம் 2 படத்தில் எனக்கு என்னவோ படம் நிறைய நேரம் குறைந்த ஒளிக் காட்சிகளில் ஓடியதாகத் தோன்றியது. மணிரத்தினமும் குறைந்த ஒளிக் காட்சிகளுக்குப் பெயர் போனவர்தான். ஆனால் அத்தகைய ஒளியமைப்புப் படம் முழுக்க வரும்போது படத்துக்கு ஓர் இருண்மையைக் கொண்டுவந்து விடுகின்றன.  படத்தின் இதர சிறப்புகள் அந்த குறைந்த ஒளிக்குள் அமிழ்ந்து விடலாம். இப்படத்தின் ஒளிப்பதிவு அத்தகைய தேவையற்ற கிராப்ட்களுக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்பது அதன் சிறப்பு. உட்புறக் காட்சிகள் தெளிவான ஆனால் அதிகமில்லாத ஒளியுடனும், வெளிப்புறக் காட்சிகள் நிலப்பரப்பின் பரிமாணத்தையும் ஆழத்தையும் பார்க்கிறவர் உணரும் வண்ணமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எந்தக் காட்சியமைப்பின் ஒளியையும் நெருடலாக உணர முடியவில்லை என்பதே நல்ல ஒளிப்பதிவின் அம்சம். ஒரு நல்ல ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் இருப்பது பார்வையாளருக்குத் தெரியாது.

படம் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் அலைவதாக குறை சொல்கிறார்கள். எழுத்தில் இப்படித் தாவித் தாவிச் செல்லும் நடை உண்டு. சுஜாதா தொடங்கி இரா. முருகன் வரை உதாரணம் சொல்லலாம். எல்லாவற்றையும் நேர்கோட்டில் பிடித்தாற்போல் காரணம் சொல்லிக் காட்சிகளை நகர்த்துகிற சினிமாவின் காலம் பின்னகர்ந்து விட்டது. இடைவெளிகளை வாசகர்களை நிரப்பிக் கொள்ளச் சொல்லித் தாவிச் செல்லும் காட்சிகள் கொண்ட சினிமா சகஜமாகிவிட்டது. டெல்லி, ஜெய்சல்மேர், நேபாள், மும்பை, கோவா, திருச்செந்தூர் எனப் படம் நோக்கமின்றி அலைவதாகச் சொல்வதில் உண்மையில்லை. வசனத்தாலோ – உதாரணமாக கைலாஷ் செல்ல வேண்டிக் கொண்ட மனைவி பாத்திரம் உடல்நலத்தால் செல்ல இயலாததால் கமல் செல்கிறார் எனச் சொல்லியோ – பாத்திரங்கள் அந்தந்த இடங்களில் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டோதான் கதை நகர்கிறது.

அதேபோல் கதையில் குழப்பம், கதையே இல்லை என்பதிலும் உண்மையில்லை. நிஜத்தில் இது பல அடுக்குகளும் ஆழங்களும் கொண்ட கதை. டெல்லியில் வாழும் கேங்க்ஸ்டர் சக்திவேலின் கதை, அவருக்கும் அமருக்கும் இடையே ஒரு கதை, சக்திவேலுக்கும் மாணிக்கத்துக்கும் இடையேயான கதை, சக்திவேலுக்கும் அவர் தொழில் எதிரிக்குமான கதை, சக்திவேலுக்கும் அவர் மனைவிக்கும் மகளுக்கும் இடையேயான கதை, சக்திவேலுக்கும் இந்திராணிக்குமிடையேயான கதை, அமருக்கும் இந்திராணிக்கும் இடையேயான கதை, அமருக்கும் சந்திராவுக்கும் இடையேயான கதை என இக்கதைக்குள் பல்வேறு கதைகள் உள்ளன. இரண்டே முக்கால் மணிநேரத்தில் தமிழ்த் திரைக்கேயுரிய பாடல்கள், சண்டைகள் போன்ற சமரசங்களுக்கு இடம் ஒதுக்கியும், தாவிச் செல்லும் கதை சொல்லும் உத்தியின் மூலம் இந்த எல்லாக் கதைகளையும் இயக்குநரால் சொல்லிவிட முடிகிறது. சிலவற்றை ஆழமாகவும் சிலவற்றைத் தொட்டுக் காட்டியும். எதை ஆழமாகக் காட்டியிருக்க வேண்டும் என்பதில் மாற்று அபிப்ராயம் ஒருவருக்கு இருக்கலாம். அது குறைதான் என வைத்துக் கொண்டாலும், இந்த மாதிரி உபகதைகளை நீட்டி முழக்கி விரிவான காட்சிகள் வைப்பது தொலைகாட்சி சீரியல்களின் மரபு. சினிமாவின் இயல்பு அல்ல.

திரிஷாவுக்கு இன்னும் அதிகம் காட்சிகள் இருந்திருக்கலாம் போன்ற அங்கலாய்ப்புகள் அந்தப் பாத்திரம் உண்டாக்கிய பாதிப்பையும் காட்டுகின்றன.

சிம்புவை இந்தப் படத்தில் எல்லாரும் புகழ்கிறார்கள். கமல் இருப்பதால், அடக்கி வாசித்திருக்கிறார். அடக்கி வாசிக்கும்போது அவரை ரசிப்பவர்கள் பெருகுகிறார்கள் என அவர் உணர்ந்தால் நல்லது.

ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. பார்வையாளரை ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார வைக்கும் அளவுக்கு.

கமலின் பழைய படங்களை ஒட்டி அதேமாதிரி சற்று மாற்றி அமைக்கப்பட்ட காட்சிகள் இருக்கின்றனவா? இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இருந்தால் என்ன? சிறப்பாக எதிர்கொள்ளப்பட்ட ஒன்றை மீண்டும் வெற்றியடைய பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கமல் மீது அவ்வளவு குண்டுகள் பலமுறை பாய்கின்றன. அவ்வளவு அடி வாங்குகிறார். அவருக்கு ஒன்றுமே ஆவதில்லையா என்கிற தர்க்கரீதியான கேள்விகளுக்கு நாயகர்களை முன்வைக்கிற படங்களில் இடமே யில்லை. நான் படிக்கிற காலத்தில் பல்லாண்டுகளுக்கு முன் வெளிவந்த பாரதிராஜாவின் கொடி பறக்குது படத்தில் ரஜினிகாந்த் ஐந்து விரல்களில் ஐந்து கத்திகள் வீசியதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எவ்வளவு முறை சுடப்பட்டும் அடிவாங்கியும் மிஷன் இம்பாசிபள் நாயகனுக்கோ ஜேம்ஸ்பாண்டுக்கோ ஒன்றும் ஆவதில்லை என்பதை அவை ஆங்கில சினிமா என்பதால் ஏற்றுக் கொள்கிறோமா? அப்படியெனில் தமிழிலும் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

படத்தின் செய்நேர்த்தியிலும், காட்சிப்படுத்தலிலும் ஆங்காங்கே மணிரத்தினம் தெரிகிறார். நடிப்பிலும் வசனங்களின் கூர்மையிலும் கமல் தெரிகிறார். இவை இந்தப் படத்தின் வெற்றிக்குப் போதுமானவை. இதுதான் தங்களின் பெஸ்ட் எனக் கமலோ மணியோ சொல்லிக் கொள்ளப் போவதில்லை என்பதால் நீங்க ஏன் எங்களுக்கு இன்னும் ஆஸ்கர் வாங்கித் தரலை என அவர்களை விடப் புத்திசாலியாக நாம் அவர்களிடம் கேட்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

ஆனாலும் இது நாயகன் மாதிரி இல்லையே என்கிறவர்களுக்கு, மணிரத்தினத்தின் கடலை விட நன்றாக இருக்கிறது என்கிற ஒப்பீடு மறந்து போகிறது. நாயகன் மாதிரியே ஏன் இன்னொரு முறை எடுக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ ஒரு கலைஞன் தான் நினைப்பதை உருவாக்கிப் பார்க்கும் சுதந்திரம் கொண்டவன். கலையை அவசரப்பட்டு நிராகரிப்பதாலோ ஏற்றுக் கொள்வதாலோ ரசனைதான் காயப்படுகிறது.

எல்லா நல்லப் படங்களும் வெற்றியடைவதில்லை, எல்லா மோசமான படங்களும் தோல்வியடைவதில்லை என்கிற நிஜம் முகத்தில் அடிக்காதவர்களா கமலும் மணியும். அதையும் மீறி அவர்கள் ஒரு படைப்பை உருவாக்கியுள்ளபோது அதை அரசியல், ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஒதுக்காமல் அணுகுவதே நாகரீகம்.

ஒவ்வொரு படமும், திரைக்கதையும் ஒவ்வொரு மாதிரி. அதை வெகுஜன மக்களும் ரசிக்கும் விதத்தில் எடுக்க முடிகிறதா என்பத தமிழ் இயக்குநர்களின், நடிகர்களின் முன்னுள்ள சவால். அதில் இப்படம் வென்றுள்ளது என்பதைக் காலம் சொல்லும்.

இந்தப் படம் தமிழுக்கு ஆஸ்கர் வாங்கித் தராது. அதே நேரம் தமிழில் வருகிற பல படங்களுக்கு மேல். கமல், மணியின் மோசமான படமும் அல்ல.

இந்தப் படம் சினிமா ரசிகனாக என் பார்வையில் வெகுஜனங்களைக் கவரக்கூடியது. முழுத்திரையில் காண வேண்டிய படம். தேவையென்றால் இன்னொரு முறையும் பார்ப்பதில் எனக்கு அலுக்காது.

இன்னொரு முறை பார்க்க நேர்ந்தால், அப்போது தோன்றுகிறவற்றைப் பகிர முயல்கிறேன்.

Series Navigationமுடிவுநீ
author

பி கே சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *