குயிலே நீ கூவாதே!       

author
0 minutes, 51 seconds Read
This entry is part 1 of 9 in the series 29 ஜூன் 2025

                                     மீனாட்சி சுந்தரமூர்த்தி.

                                                  

மாமரத்துக் குயில்  கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி  சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது. 

அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி மாதத்துக் குளிர் பனிப்படலமாக விரிந்திருந்தது. அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த   விஸ்வத்தின் உறக்கம் கலைந்து போகும்  என்று விளக்கைப் போடாமலே உள்ளே வந்தாள். மெல்லிய நீல விளக்கொளியில் கனமான புத்தகம் ஒன்று  மார்பில் கவிழ்ந்திருந்தது. அதை மெதுவாக எடுத்து அருகிலிருந்த மேசையில் வைத்தாள். அவ்வளவில் அவள் கைகளைப்பற்றி இழுத்தான் விஸ்வம்.

‘ என்னங்க தூங்கிட்டுதானே இருந்தீங்க?’

‘ ஆமாம், நீ உள்ளே வரும்போதே உன் வாசம் வந்து என்னை எழுப்பிவிட்டது’

‘சரி சரி. தூங்குங்க, ஆறுமணிக்கு எழுந்தா போதாதா?

‘ நீ எதுக்கு எழுந்திட்டே பாகி?’

‘  மாமரத்துக் குயில் எழுப்பிடுச்சி, தூக்கம் வரலை’

‘ சரி வா, தூங்கலாம்’ அருகிழுத்த கணவனிடமிருந்து விலகி ,

‘ இன்னக்கிதான் பரீட்சை தொடங்குது நிஷாக்கு, சீக்கிரமா வேலையை முடிக்கிறேன்’

என்று ஹாலுக்கு வந்தாள் வங்கி ஒன்றின் மேலாளரான பாகீரதி.  

கணவன் விஸ்வநாதன் வழக்கறிஞராக இருக்கிறான். இவனுடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் கூட வக்கீல்தொழில்தான் பரம்பரையாகவே பேரும், புகழும் பெற்ற குடும்பம்.அப்பா நரசிம்மன் நீதிபதியாக உயர்ந்து ஓய்வு பெற்றவர். ஒருவரும் இப்போது இல்லை. பொங்கல், தீபாவளி இன்னும் ஏதாவது விசேஷம் என்றால்  விஸ்வத்தின் தம்பி, தங்கைகள்  மற்றும் உறவினர் கூட்டம் இருக்கும்.மற்றபடி இருபது பேர் தாராளமாக வசிக்கக் கூடிய இந்தப் பெரிய  வீட்டில் இவர்கள் மூவர்தான்.அந்தக் காலத்திலேயே வீட்டின் பின்புறம் ஒரு சிறிய போர்ஷன் வேலைக்காரருக்கெனக் கட்டிவிட்டார் நரசிம்மன். அது மிகப்பெரிய வசதியாக இருந்தது. 

மூன்று தலைமுறையாக  ஒரு குடும்பம் அதில் வசித்து இவர்களுக்கு உதவியாக இருக்கிறது. அந்தக் குடும்பத்து மருமகளாக பாகீரதிக்கு மணமான இரண்டாண்டுகளில் வந்த அன்னம்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறாள்.

முகம் கழுவிக் கொண்டு பூஜை அறைக்கு வந்து மனதாரப் பெருமாளையும், தாயாரையும் வணங்கிவிட்டுச் சமையலறைக்கு வந்தாள். இன்னும் மாங்குயில் கூவிக் கொண்டிருந்தது. காபியைக் கலந்தெடுத்துக் கொண்டு  ஹாலின் ஊஞ்சலில் அமர்ந்தாள்.

‘ என்ன ஒரு இனிமையான குரல் இந்தக் குயிலுக்கு, என்ன ஒரு மென்மை. , காற்றில் கலந்து காததூரம் கேட்கும் போலிருக்கிறதே, மொழி புரியாதபோதே மனதைப் பறித்து எங்கோ இழுத்துச் செல்கிறது.’

‘ தன் மனவானில் தேக்கி வைத்திட்டக் காதலைச் சொல்லி பெண்மைக்கு விடுக்கும் அழைப்போ இது’

ஆண்குயிலின் அருகிருந்துப் பெண்குயில் இதை ரசிக்குமோ!’

நினைவோட்டத்தில் மூழ்கியவளை அருகில் வந்த விஸ்வத்தின் குரல் எழுப்பியது.

‘ தேவி எனக்கும் ஒரு கோப்பைத் தேனீர் கிடைக்குமா?’

‘ இதோ என்று விரைந்தாள். தேனீர் கோப்பையைக் கணவனிடம் தந்துவிட்டு ,

‘ என்னங்க இந்தக் குயில் சத்தம் எப்படி இருக்குது?’

‘ இந்தச் சின்னஞ்சிறு பறவைக்கு கேட்டவர் மயங்கும் குரலைத் தந்த இறைவன் படைப்பை என்னவென்று சொல்வது?’

‘தினமும் நேரந் தவறாமல் கச்சேரிக்குத் தயார் ஆகிவிடுகிறது.’

‘பாகி ஒரு விஷயம் பேச வேண்டும், சாயந்திரம் சொல்கிறேன்’

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே  நிஷா எழுந்து வந்து விட்டாள்.

‘வாடா செல்லம், போய் முகம் கழுவிட்டு வா, அம்மா ஹார்லிக்ஸ் போட்டுத் தருவா’

அன்னமும் வந்து விட, காலை நேரம் பரபரப்பானது.

காலை உணவாக இட்டிலியும், தேங்காய்ச் சட்டினியும், தக்காளிச் சட்டினியும் தயாரானது. மதிய உணவிற்காக கத்தரிக்காய்ப் பொறியலும், புதினாத் துவையலும், புடலங்காய்க் கூட்டும், இரசமும் தயாரானது.

பாகீரதிக்கும் ,விஸ்வத்திற்கும் டிபன் கேரியரில் எடுத்து வைத்துவிட்டாள் அன்னம். 

சமையல் எப்போதும் பாகீரதிதான் செய்வாள்.அதற்கு உதவி செய்வாள் அன்னம்.மூவரும் குளித்துத் தயாராகி  வந்து ஒன்றாகச் சாப்பிடுவது வழக்கம்.அதற்கேற்றாற்போல் தட்டு, தண்ணீர் எல்லாம் தயாராக எடுத்து வைத்துவிடுவாள் அன்னம். 

எட்டுமணிக்கு  மகளையும், மனைவியையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் விஸ்வம். 

முதலில் மகளைப் பள்ளியில் இறக்கி விட்டனர்.

‘ நல்லாப் பொறுமையா எழுதுடா செல்லம்’

‘ பட்டு அப்பா மதியம் வந்துடுவார், நல்லா எழுதுமா’

‘ சரிங்கம்மா, அப்பா வரேன்’

என்று இறங்கி நடந்தாள் நிஷா.

அடுத்ததாக மனைவியை வங்கியில் இறக்கி விட்டு தன் அலுவலகம் சென்றான் விஸ்வம். 

அன்றைய வழக்கு விவகாரங்களில் நேரம் போனதே தெரியவில்லை. 

ஒருமணிக்கு முன்னரே,

‘ ராமண்ணா பாப்பாவை வீட்டில விட்டுட்டு வரேன்’ என்று காரில் ஏறினான்.

‘முகமெல்லாம் பூவாக ஓடிவந்தாள் நிஷா,

‘ எப்படிடா இருந்தது’

‘அப்பா நல்லா எழுதியிருக்கேன்’

‘சரிடா,  சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கு, சாயந்திரம் படிக்கலாம்’

வீட்டிற்கு வந்து அவளை இறக்கி விட்டு,’ அன்னம் பார்த்துக்கோ’

‘ சரிங்க அண்ணா, நீங்க பொறப்படுங்க’

புறப்பட்டான். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகிறாள் நிஷா. அம்மா அப்பாவின் அறிவுத்திறன் ஒன்று சேர்ந்ததாலோ என்னவோ படிப்பில், விளையாட்டில் கெட்டிக்காரி.

அன்று மாலை வீடு திரும்பி இரவு உணவும் முடிந்து மகளைத் தூங்க வைத்துவிட்டு ஊஞ்சலுக்கு வந்தனர் இருவரும்.

‘ என்னங்க காலைல ஏதோ சொல்றேன்னு சொன்னீங்க’

‘ ஆமாம் எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்’

சிறிய அமைதி நிலவியது அங்கு.

‘ பாகி மும்பையில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு லீகல் அட்வைசராகப் பொறுப்பேற்க அழைக்கிறார்கள்.’

‘ அதனால்….’

‘ நல்ல சம்பளம், தனி பங்களா, வேலைக்கு ஆட்கள், போகவர டிரைவர் போட்டு கார்’

‘ சரி நமக்கு இப்போ இருக்கும் வசதி போதாதா?’

‘ போதும், ஆனால் பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், பேரும்,புகழும் கிடைக்கும்’

‘ சரிங்க யோசிப்போம்’

யோசிப்பதென்ன, விஸ்வம் முடிவு எடுத்துவிட்டால் அது நடக்கும்.

நிஷாவின் தேர்வு முடிந்ததும் அன்னத்தின் குடும்பத்திடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மும்பைக்குக் குடிபெயர்ந்தார்கள். பாகீரதிக்கும் மும்பைக்கு மாற்றல் மூன்றே மாதத்தில் வாங்கி விட்டான்பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேறிவிட்டாள் நிஷா. அவள் விரும்பியபடியே  பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.  

புதிய இடம், புதிய வாழ்க்கை ஆடம்பரமாக இருந்தது. 

பெரிய நிறுவனம் என்பதால் அடிக்கடி  விருந்தும் கொண்டாட்டமும் நடந்தது. 

மனைவியோடு செல்ல வேண்டியதானது, அதில் மதுப் பழக்கமும் தொற்றியது.அது மட்டுமா!

‘ பாகி எல்லாரும் உன்னைப் பட்டிக்காடுனு சொல்றாங்க’

‘ சொல்லட்டும், அதனால் என்ன?’

‘ நீ  ரெட்ஒயின் எடுத்துக்கோம்மா’

அது நல்லது, அதோட பெண்களுக்கு அழகு கூடும்னு சொல்றாங்க.

‘நீங்க எடுத்துக்கறதே சரியில்லை,இதுல நானுமா?’

நீதான் பார்கறியே,அங்க வர எல்லாப் பெண்களும் எடுத்துக்கறாங்க’

‘அதனால’

‘நாமும் சூழலுக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் மாறணும்’ 

‘ இல்லை, என்னால் முடியாது’

ஒரு வாரம் பாகீரதியோடு முகம் கொடுத்துப் பேசவில்லை விஸ்வம். கணவனுக்காக ரெட் ஒயின் எடுக்கத் துவங்கினாள், இயல்பாக ரம்,விஸ்கி என்று உயர்தர மதுவகைகளையும் அறிமுகப்படுத்திவிட்டான் விஸ்வம்.

இப்போதெல்லாம் பார்ட்டிகளில்  கலந்துகொள்வது உற்சாகமாகவும் விருப்பமாகவுமே இருந்தது இவனுக்கு.

ஒரு நாள் அதிகாலை நான்கு மணிக்கு ஊரிலிருந்து பாகீரதியின் அப்பா திடீரென நெஞ்சுவலியில் இறந்துவிட்ட செய்தி வந்தது. எல்லாச் சடங்குகளையும் முடித்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மும்பை திரும்பினார்கள். பாகீரதிக்கு கிராமத்தில் அம்மாவைத் தனியாக விட மனமில்லை.ஆனால் அவள்,

‘இது அப்பா இருந்த வீடு, நானும் கடைசிவரைக்கும் இங்கயே இருக்க நெனைக்கறேன் பாகி’

என்று சொல்லிவிட்டாள். தந்தையை இழந்ததும்,தாயைத் தனியாக விட்டதும்  பெரிய கவலையானது பாகிக்கு.தூக்கம் தொலைத்தாள். ஒரு வாரம் தூக்கமின்றித் தவித்தவளுக்கு ஒருநாள்,

‘ பாகி இதைக் கொஞ்சம் குடி, தூக்கம் வரும்’ என்று கண்ணாடிக் கோப்பை ஒன்றில் கொஞ்சம் மதுவை ஊற்றிக்கொடுத்தான் விஸ்வம். அன்று நன்றாகத் தூங்கினாள்.

சில நாள்  மாலையில் இருவரும் வீட்டில் மதுஅருந்துவது பழக்கமானது.. கண்டும் காணாமல் காலம் ஓடிக்கொண்டிருந்தது.

ஒருநாள் விஸ்வத்தின் அலுவலகப் பார்ட்டி,

‘ பாகீ போதும். ‘

‘இல்ல போதாது,இன்னும் கொஞ்சம்..’

‘இந்தாங்க மேடம், எடுத்துக்கோங்க’

தள்ளாடி விழும்வரை குடிக்கிறாள். எப்படி அவளைத் தடுப்பது என்று தெரியாமல் திகைக்கிறான் விஸ்வம்.இப்போதெல்லாம் இப்படிதான் நடக்கிறது.

தினமும் நினைத்தபோதெல்லாம் எடுத்துக் கொள்கிறாள்.அவளை பார்ட்டிக்கு அழைத்துவரவே அவனுக்கு விருப்பமில்லை. எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டான், கேட்பதாக இல்லை.

‘விசு எனக்குத் தலை வலிக்கிறது, கொஞ்சம் எடுத்துக்கறேன்’

என்று ஆரம்பிப்பாள் அதிகமாகிதான் முடியும் அது. விஸ்வத்தின் அலுவலகத்தில் இவன் காதுபடவே,

‘இவரோட மேடம் சரியான தண்ணி வண்டி’ என்று பேசிச் சிரிக்கிறார்கள்.

‘பாகீரதி முன்புபோல் வங்கிக்கு நேரத்தில் செல்வதில்லை’

அங்கும் இவளைப்பற்றி இப்படிதான் பேசுகிறார்கள். ஒருநாள் பாகீரதியின் வங்கி அலுவலர் ஒருவர் இவனிடம்,

‘ சார் மேடம் இப்படியே போனா உடம்பு கெட்டுடும், பார்த்துக்கோங்க’

என்றார்.

ஆனால் அவர் இப்படிச் சொன்னதில்  கோபம் தான் அதிகமானது விஸ்வத்திற்கு. அதனால் ஒரு முடிவுக்கு வந்தான்.

மறுநாள் காலையில்,’ பாகி நாம பிரிஞ்சிடலாம்னு நெனைக்கறேன்.’

ஒன்றும் பேசாமல் இருந்தாள்,

‘ எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு, ‘

‘ நான் குடிக்கறதா?’

‘ஆமாம், பொம்பளையா லட்சணமா இருக்கணும், போதும், இனி உன்னோட வாழ முடியாது’

‘சரி.’

அன்று அவன் அப்படிச் சொன்ன பிறகு பாகீரதி விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு மகளோடு வந்து விட்டாள்.

நிஷாவைத் தன்னோடு  இருக்க வேண்டுமென்று விஸ்வம் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. மாதங்கள் உருண்டோடின,

நிஷா மேல்படிப்பிற்காக லண்டன் செல்வதற்கு ஏற்பாடாகிறது. தந்தையைப் பார்த்துவிட்டு வர வந்திருக்கிறாள்.

‘ செல்லம், பத்திரமா இருக்கணும், என்ன தேவைன்னாலும் சொல்லு’

‘சரிப்பா,’

‘உனக்குப் புது செல்போன் வாங்கியிருக்கேன், அந்த மேசையில இருக்குமா, எடுத்துட்டுவா’

அதை எடுக்கச் சென்றவளின் கண்கள் அருகிலிருந்த  திருமண அழைப்பிதழில் பதிந்தன. அதை எடுத்துக்கொண்டு வருகிறாள்,

‘ அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?’

‘ தனியா இருக்கறது கஷ்டமா இருக்குமா அதனாலதான்’

‘நீங்க ஒரு பெரிய குடிகாரரா இருந்திருந்தா அம்மா உங்களை டைவர்ஸ் பண்ணியிருப்பாங்களா பா’

‘என்னமா சொல்றே?’

‘ நீங்க ஒரு சுயநலவாதிப்பா. நீங்களே அவங்களைக் குடிக்கப் பழக்கப்படுத்தி மோசம் பண்ணிட்டீங்க, 

என்னைக்  கொஞ்சமாவது நெனைச்சீங்களா?. நல்ல கணவரா இருந்திருந்தா அவங்களை அந்தப் பழக்கத்துல இருந்து மீட்டிருப்பீங்க, அதுக்கு என்ன முயற்சி செய்தீங்க?’

‘ எனக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டிய வயசுல நீங்க புதுவாழ்க்கையைத் தொடங்கறீங்க, வாழ்த்துகள் பா.’

என்று சொல்லிவிட்டு வேகமாக கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

 மார்கழி மாதம் அது.விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. பனியில் சிறகொடுங்கிப் பறவைகள் இணையோடு குலவிக் கொண்டிருக்க, மாங்குயில் மட்டும் கூவிக் கொண்டிருந்தது. பாகீரதி  எழுந்து விட்டாள். கையில் காபிக் கோப்பையோடு ஊஞ்சலில் வந்து அமர்கிறாள்.

வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த அன்னம்,’ அண்ணா வாங்க ‘

என்று நிமிர அவளுக்குச் சைகை செய்துவிட்டு உள்ளே வருகிறார் விஸ்வம்.

சத்தம் செய்யாமல் பாகீரதியின் பின்னால் வந்து நின்று கை குவித்து,

‘ தேவி எனக்கும் ஒரு கோப்பைத் தேனீர் கிடைக்குமா!’ என்றார்.

Series Navigationஇரு கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *