மூவாமருந்து

This entry is part 26 of 37 in the series 27 நவம்பர் 2011

பொதிப்பொதியாக மேகங்களைக் காற்று சுமந்துகொண்டு போகிறது. கண்ணுக்குத் தெரியாத யாரோ பொத்துவிட மேகம் உடைந்து மழை கொட்டுகிறது. இப்படித்தான் அக்கா சொல்லிக்கொடுத்தாள். இதற்குமேல் சொன்னால் எனக்குப் புரியாது என்று அவள் நினைத்துச் சொன்னதில் நான் அவ்வளவாகத் திருப்திப்படவில்லை. மழையின் வெவ்வேறு தாளகதியில் அமைந்த இசையும், ஜன்னலின்பின் தங்கமாய் நெளிந்து கலைடாஸ்கோப் ஜாலம் காட்டும் மின்னலும் மழை இரவுகளுக்காக மனதை ஏங்கவைக்கும்.
மழைக்கு அடுத்த நாள் காளான்கள் வாமனரின் குடைகளாக முளைத்து நிற்பதையும், புற்களெல்லாம் பற்றியெரிகிறப் பச்சையைப் பூசிக்கொண்டு நிற்பதையும் பார்த்து வியந்து நிற்கும்போதே, பவழமல்லிப் பூக்கள், சிகப்புக் காம்புகள் மடங்கி வதங்கிக் கிடப்பதைப் பார்த்து மனமும் வதங்கிப்போகும். மரவட்டைப் பூச்சிகள் பெரிய ஜங்க்ஷனின் யார்ட்களில் என்ஜின்கள் இலக்கில்லாமல் அலைவதாகத் தோன்றுவதுபோல் நகர்ந்து கொண்டிருக்கும். ஒரு குச்சியால் தொட்டால் சுருங்கிக்கொள்வதைப் பார்க்கும்போதெல்லாம், பேக்கரிக்கடையில் கண்ணாடி ஜாடிக்குள் வைத்திருக்கும் ‘ ஜாம் ரோல் ‘ தான் ஞாபகம்வரும். ரொம்பவும் மழையையும் மழைசார்ந்த விஷயங்களையும் அனுபவிக்கமுடியாது. வற்றாத ஜீவ நதிபோல் மூக்கு ஒழுகிக்கொண்டிருக்க கண்ணிரண்டும் வெளியேவந்துவிடும் அளவிற்குத் தொடரும் இருமலால், ” கடங்காரா! ஜலத்தில என்னடா ஆட்டம் ? ” என்ற திட்டோடு உள்ளே இழுத்துச் செல்லப்படுவேன்.

” நோவு சாத்திக்கொண்ட ” நாட்களில் அம்மா ரயில்வே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய் ஊசிபோட்டுவிட மலையாள நர்சுகளிடம் மன்றாடுவாள். தடித்த தாதியர்கள் சிடுசிடுவென்ற மூஞ்சியோடு ரோட் எஞ்சின்போல மெதுவாக, கேளாத காதுகள்கொண்டு நகர்ந்துபோனாலும் அம்மா விடாமல் அவர்களைத் தொடர்வாள். அப்படி ஒரு நாள், அம்மாவின் தொணதொணப்புத் தாங்காமல் அந்த மலையாள நர்ஸ் ஊசி போடச் சம்மதித்து அதற்கான அறைக்குள் போகும்போதுதான் அந்தக் களேபரம் நிகழ்ந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த ரெண்டு பெரிய ஆட்களில் ஒருவர் குட்டையாகவும் இன்னொருவர் கொஞ்சம் வளர்த்தியாகவும் இருந்தனர். குட்டையானவர் பக்கத்திலிருந்த இன்னொரு நர்சைவிடக் குட்டை. இருவரும் வேஷ்டியை மடித்துக் கட்டியிருக்க, அவர்களிடம் பொதுவாக, என்ன வியாதி, எவ்வளவு நாட்களாக இருக்கிறது, டாக்டர் வேறு என்ன மாத்திரைகள் கொடுத்திருக்கிறார் என்ற கேள்விகளைப் பாட்டு போடுவதற்குமுன் நேயரைக் கேட்கும் தொகுப்பாளினிபோல் கேட்டுவிட்டு, குழந்தையைத் தலைக்குமேல் தூக்கிக்கொஞ்சுவது போல மருந்து பாட்டிலைத் தூக்கிப்பிடித்துக் கண்களைச் சுருக்கி சிரிஞ்சில் மருந்தை உறிஞ்சி விட்டு சட்டெனத் திரும்பி பக்கத்திலிருந்த உயரமானவரின் வேஷ்டியைத் தூக்கி ஊசிபோட யத்தனிக்குங்கால் அந்த ஆள் உள்ளே அண்டர்வேர் போடாதிருக்கக் கண்டு பயந்துபோய் ஊசியைக் கீழேபோட்டுவிட்டாள். பக்கத்திலிருந்த பெண்களெல்லாம் சிரித்துக்கொண்டே வெளியில் ஓட, வேஷ்டி தூக்கப்பட்ட ஆள் மிகக் கோபமாகி அந்த நர்சைப் பார்த்து, ” நீயெல்லாம் பொம்பளையா ? ஒரு ஆம்பளைக்கு ஊசி போடணும்னா கைல போடவேண்டியதுதானே ? எதுக்கு வேட்டியத் தூக்கறே ” ? என்று கத்த, பதிலுக்கு அந்த நர்சும், ” யோவ், நீ என்ன ஆம்பளே ? வீட்ட விட்டு வெளியில வர்ற ஆளு, அண்டர்வர்கூட போடாம எப்படி வரலாம் ? அதுவும் ஆஸ்பத்திரிக்கு வர்றவன் இப்படி வந்துட்டு என்னை எப்படிக் குத்தம் சொல்லப்போச்சு ? என்று கத்த, பெருமழைக்குமுன் கட்டியம் சொல்லும் இடிபோல வந்தக் கூச்சல்கேட்டு பெரிய டாக்டர் வெளியே வந்துவிட்டார். அவர் அந்தக் குட்டைமனிதரைப்பார்த்து, ” நான் உங்களைக் கேட்டுவிட்டுத்தானே இஞ்செக்ஷன் எழுதிக் கொடுத்தேன். உங்களுக்கு ஊசி போட்டுக் கொள்வதில் என்ன ப்ரச்சனை, வெறும் மாத்திரை மட்டும் போதுமா “? என்று ஆங்கிலத்தில் வினவ, அவரோ, ” எனக்கு ஒன்றும் ப்ரச்சனை இல்லை. நர்சம்மாதான் ஆளைமாத்தி, எனக்கு பதில் எனக்குத் துணையாக வந்த இவருக்கு ஊசிபோடுது ” என்று மெலிந்த சீக்காளிக் குரலில் சொல்ல நர்சம்மா ஏகத்துக்கு வெட்கம்கொண்டு நின்றாள். இதற்கிடையில், எனக்கு ஊசிபோட மலையாளத் தாதி ரெடியாக,அம்மாவின் புடவைத்தலைப்பை இழுத்து ” அம்மா! நானும் அண்டர்வேர் போட்டுக்கலியே, ப்ரச்சனை ஏதாவது வருமா “? எனக்கேட்டதில், சிடுமூஞ்சி நர்ஸ் முதல் தடவையாகச் சிரித்தாள். அந்த நிகழ்விற்குப்பின் ஆஸ்பத்திரிக்கு வரும் ஆண்களுக்கு ‘ ட்ரஸ் கோட் ‘ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளாடை அணிதல் கட்டாயமாக்கப்பட்டதோடல்லாமல், ஊசி போடும் முன் எங்கு போட்டுக்கொள்ள விருப்பம் என்று ஆப்ஷன் கேட்பது வழக்கிற்கு வந்தது.

ஆனால், ஊசியே போடாத ஒரு டாக்டராலும் ப்ரச்சனை வந்துவிட்டது ஒரு நாள். டாக்டர் ராமலிங்கம் ரொம்ப சாது. நல்ல உயரம். உயரத்திற்குத்தக்க நல்ல ஆகுருதி. ஆனால் குரல் மட்டும் அநியாயத்திற்கு சன்னம். டாட்டா சுமோவிற்கு மொபெட் ஹார்னை தவறி வைத்துவிட்டது மாதிரி இருக்கும். பொறுமையாக பேஷண்ட்டுகள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். ” பேஷண்ட் ஹியரிங்க் ” என்று இதைத்தான் அங்கு வேலையிலிருந்த என் மாமா பையன் ராஜு சொன்னானோ என்னவோ! பத்துக்குப் பத்து அளவிலிருக்கும் அவர் அறையில் சின்ன மேஜையின்பின் அவர் உட்கார்ந்திருப்பார். அவரின் வலதுபுறம் ஒரு பெரிய ஸ்டூலும் அந்த ஸ்டூலின் மேல் சின்ன கழுத்துகொண்ட ஒரு அழகிய கண்ணாடிக் குடுவையும் அதில் மிகக் கவர்ச்சியான பிங்க் நிறத்தில் மருந்துக் கரைசலும் இருக்கும். அவரிடம் வைத்தியம் பார்த்துக்கொள்ளவரும் நோயாளிகள் சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டபின் அவருக்குப் பின்னாலிருக்கும் அந்த வசீகரக் கண்ணாடிக் குடுவையிலிருந்து மிக் ஷ்சரை ஒரு கலக்குக் கலக்கிச் சின்ன பாட்டிலில் விட்டுக் கொடுப்பார். காலை, மதியம் இரவு ஆக மூன்று வேளைக்கும் அதை மூன்று நாட்கள் குடித்துவிட்டு, நான்காம் நாள் வந்து ரிப்போர்ட் பண்ணச்சொல்வார். யாருக்கு என்ன வியாதி என்றாலும் பிங்க் கலர் கரைசல்தான் மருந்து. அதுவும் மூன்று நாட்களுக்கு. ஏறக்குறைய எல்லா நோய்களையும் அது சரிசெய்துதான் வந்தது. ‘ மக்கர் ‘ பண்ணின கேஸ்களுக்கு இன்னொரு மூன்று நாட்கள். அவ்வளவுதான். ” வாட் அ பனேஷியா” என்று ராஜு சிலாகித்து உடல் குலுக்கிச் சொல்வதன் அர்த்தம் யாருக்கும் புரியாது. அவனும் யாரோ சொல்லக் கேட்டுத்தான், தானே கண்டுபிடித்ததுபோலச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். இப்படிப் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள், மெட்ராசிலிருந்து வந்த ஓர் அதிகாரி கடும் வயிற்றுப்போக்கில் துன்பப்பட, பெரிய டாக்டரும் இல்லாமல்போன ஞாயிற்றுக்கிழமையில், ராமலிங்க வைத்தியம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதில் திருப்தியுராத அந்த அதிகாரி, வேறு நல்ல இங்க்லீஷ் மருந்தை ப்ரிஸ்க்ரைப் பண்ணச் சொல்லி இங்க்லீஷிலேயேகேட்க, டாக்டர் ராமலிங்கத்தின் பேனாவில் சனி காத்திருந்தது. மருந்து எழுத எடுத்த அவர் பேனாவில் இங்க் தீர்ந்து போய்விட, அவர், ராஜுவைக் கூப்பிட்டு ஆவண செய்யப் பணித்தார். ராஜுவும் வழக்கம்போல பேனாவிற்கு இங்க்காக அந்தக் கண்ணாடிக் குடுவையிலிருந்த மருந்துக் கரைசலையே எடுத்ததைப் பார்த்த அதிகாரி , ” இட் இஸ் அட்றாஷியஸ் ” என்று அலறிக்கொண்டே எழுந்து போய், வயிற்றுப்போக்கு சரியாகும் முன்பே டாக்டர் போக்கு சரியில்லையென்று ரிப்பொர்ட் தந்துவிட டாக்டர் ராமலிங்கம் என்ற மகத்தான மக்கள் மருத்துவர் மாற்றலாகி வெளி மாநிலத்திற்கே போய்விட்டார். என் மாமா பையன் ராஜுவும் ஒர்க் ஷாப்பிற்கு மாற்றல் பெற்று டெக்னீஷியனாகி விட்டான். டாக்டர் நினைவாக அவன் இப்பவும் பிங்க் கலர் சட்டைகளையே அணிகிறான்.

——- ரமணி

Series Navigationபேர்மனம் (Super mind)புதுவைத் தமிழ் சங்கம்
author

ரமணி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *