ஜென் ஒரு புரிதல் – பகுதி-28

This entry is part 1 of 30 in the series 22 ஜனவரி 2012

ஜென் ஒரு புரிதல் – பகுதி-28

சத்யானந்தன்

பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே அதன் சில பகுதிகள் ஏற்புடையாதில்லை.) வேதாந்தம், இந்தியத் தத்துவ மரபு பற்றிய புரிதலுக்காக அதை வாசிப்பவர் விமர்சன நோக்கில் வாசித்தாலும் வாதப் பிரதி வாத அடிப்படையில் அது அமைந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க இயலாது. ஒரு நிலையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே என்று அர்ச்சுனன் கிருஷ்ணரைக் கேள்வி கேட்பதை நாம் காண்கிறோம். பெரியப்பா, சித்தப்பா, சகோதரர், குரு என்னும் உறவுகளைப் புறந்தள்ளி அவருடன் போரிடுவதும், போரில் அவரை வதம் செய்ய நேரிடுவதும் அர்ச்சுனனுக்கு ஏற்புடையதாயில்லை.

அந்த நிமிடம் அர்ச்சுனனுக்கு வேறு வழி இருந்ததா? இல்லை. அதே சமயம் அவனுள் எழுந்த கேள்விகள் மனசாட்சி உள்ள யாருக்குமே தோன்றக்கூடியவையே. ஆனால் அந்த உறவுகள் அமைந்ததும், பின்னர் போர் என்னுமளவு எதிர் எதிர் முனையில் அந்தக் குடும்பம் பிரிந்து நின்றதும் அவனால் நிர்ணயிக்க இயலாப் பின்னணி.

நமது பின்னணி மட்டுமல்ல. நம்மால் கட்டுப்படுத்த இயலாதவைதான் கிட்டத்தட்ட பிறர் சம்பந்தமான யாவுமே. கட்டுப்படுத்தக் கூடியது நம் மனம் மட்டுமே. அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை என்று தான் எவ்வளவு முயன்றாலும் தீர்மானமாய்த் தெரிகிறது.

நாம் ஏனையருடனும், ஏனையர் நம்முடனும் இணையும் புள்ளி நதிமூலம் போல நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் துவக்கமான அல்லது ஆதாரமான புள்ளியாயிருக்கிறது. அப்புள்ளி மாறிக் கொண்டே இருப்பதை நாம் காண்கிறோம். அந்த நிலையின்மை ஒன்றே நிலையாய் இருக்கிறது. அது பதட்டத்தை, தற்காலிக சந்தோஷத்தை, துக்கத்தை, ஆதரவை, எதிர்ப்பை, பாதுகாப்பை, பயத்தை என மாறி மாறி வழ்ங்கிக் கொண்டே இருக்கிறது. உதைக்கும் கால்கள் எந்த அணி என்றாலும் கால் பந்தாய் உதை படும் அவஸ்தை தனிம்னித வாழ்வின் நீங்காத தன்மையாகி விடுகிறது.

ஒருவனின் சறுக்கலை, ஒரு விபத்தை, மரணத்தைக் காணும் போது நிலையின்மை பற்றிய ஒரு நிதரிசனம் கிடைக்கிறது. ஆனால் புத்தருக்கு நிகழ்ந்தது போல ஓர் ஒப்பற்ற தேடலின் துவக்கமாக அது இருப்பதில்லை. நிலையின்மை பற்றிய புரிதல் சோகமயமானது என்னும் தவறான அணுகு முறையில் நாம் தொடர்ந்து செல்கிறோம்.

சோகமயமானதாய் நிலையின்மை தென்படுவது நமது பிரமையின் பிள்ளையான மாயத் தோற்றமே. மாற்றம் என்னும் பஞ்சின் நூல் வடிவமே நிலையின்மை. பிறப்பும் , மாற்றங்களும் மரணங்களும் சமமாய் நாம் உணர இயலாத ஏதோ ஒரு ஒழுங்கில் உயிர்த்துடிப்புடன் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. மாற்றத்தை ஏற்க மனமில்லை நமக்கு. நிலையின்மை சோக வடிவமானதன்று. உயிர்த்துடிப்பின் வடிவமானது. அதை இயற்கையின் ஏனைய உயிரினங்கள் யாவும் இயல்யாய் ஏற்று இயங்குவைக் காண்கிறோம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “கொபயஷி இஸ்ஸா” வின் கவிதைகளில் இதைத் தெள்ளத் தெளிவாய்க் காண்கிறோம்.

இலையுதிர்காலக் காற்று
மலையின் நிழல்
அசையும்

——————————-
புத்த விதி
ஒரு இலையின் மேல்
பனித்துளியாய் ஒளிரும்

——————————-

மயான விளக்கொளியில்
சோறு உண்பது
முழுதும் நிர்வாணமாய்

——————————–

பூச்சிகளே அழாதீர்
காதலர்கள், நட்சத்திரங்கள் கூடப்
பிரிவர்

———————————

சரியாய் நடப்படாத
நெற் பயிர்
மெதுவாய் மெதுவாய்.. பசுமை!

———————————

முதல் விட்டிற் பூச்சி
ஏன் விரட்ட வேண்டும்
அது இஸ்ஸா

———————————

நெருஞ்சி முட் புதரிலிருந்தா
இவ்வளவு அழகிய பட்டாம் பூச்சி
தோன்றியது?

————————————–

என் வீட்டில் எலிகளும்
விட்டிற் பூச்சிகளும்
இணக்கமாய் இயங்கும்

————————————–

செர்ரிப் பூ நிழலில்
அன்னியம் என்று
யாருமில்லை

————————————–

ஊதாப்பூந் தோட்டத்துக்குள்
ஒரு தோள் தெரிய
புனிதன்

————————————–

இருப்பினால்
இங்கே இருக்கிறேன்
பனிப் பொழிவில்

————————————–

மொகுபோஜிக் கோவில்–
விட்டிற் பூச்சிகள்
குரைக்கும் நாயிடமும்
வரும்

————————————-

எப்போதும் மறவாதே
நாம் நரகத்தின் மீது
நடக்கிறோம்
பூக்களின் மீது
விழி பதிய

————————————-

இப்போது துவங்கும்
வருங்கால புத்த ஆட்சி
வசந்த பைன்கள்

————————————-

பிரதிபலிக்கும்
ஈசலின் கண்ணில்
மலைகள்

————————————-

நெல் நாற்றுகள்
முதிர்ந்த புத்தரின்
களைத்த முகம்

————————————-

வசந்தம் துவங்கும்
இவ்வைம்பது வயதில்
குறைந்த பட்சம்
நான் மனிதமாய்
இருக்கிறேன்

————————————-

மோனம்
ஏரியின் ஆழத்தில்
அலை மோதும்
மேகங்கள்

————————————-

மலையைப் பார்த்த படி
ஒரு வண்ணத்துப் பூச்சியை
நசுக்கி

————————————

தொலைவு மலையின்
மலர்க் கூட்டம்
ஒளி சிந்தும்
கிழக்குச் சாளரம்

————————————

மனிதர் இருக்கும் இடத்தில்
நீ பூச்சிகளைக் காண்பாய்
புத்தர்களையும்

————————————

மலைக் கோயில்
பனியின் ஆழத்தில்
ஒரு மணி

————————————

பெரு நதியை நோக்கி
வீசிச் செல்லப்பட்டன
மிதந்தன
செர்ரி மலர்கள்

————————————

வசந்தப் பகல்
கிழக்கு மலைகளை
அஸ்தமனத்துக்கு பிறகும்
காண இயலும்

————————————

புற்றிசலின் இறகுகள் கூட
நாளுக்கு நாள்
மூப்படையும்

————————————

அமைதியும் மோனமும்
மலையை அவதானிக்கும்
தவளை

————————————

சூரியனைப் பார்க்காமலேயே
குளிர்காலச் செம்பருத்தி
பூக்கும்

————————————

புத்தரின் உடல்
அதை ஏற்கும்
குளிர்கால மழை

————————————

Series Navigationஅறியான்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *