பாதியில் நொறுங்கிய என் கனவு

This entry is part 13 of 36 in the series 18 மார்ச் 2012

பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின்

ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல்

இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு

முழுதுமாய் வெளிச்சம் விரித்துக் கிடந்த

பகலுலகின் சம்பாஷனைகளில் உலர்ந்த படியே

என் குருட்டு கனவுலகின் இருளை

வியாபித்துக் கிடந்தேன் இன்னுமேற்று

எக்கணமும் கவிழக் கணம் நோக்கும்

விசையழுத்தப்பட்ட சூறாவளிப் பொழுதின்

கிழடு தட்டிய மரத்தைப் போல்

தங்களை நகர்த்தும் பொழுதுகள்

என் கனவை தின்னத் தொடங்கின

சிதிலமடைந்த சுண்ணாம்புக் காரையென

சதா தன் மேனியலிருந்து வினாடிகளை

உதிர்க்கத் தொடங்கியது என் கனவு

என் கனவை விரைந்து முடிக்கக் கோரி

தூபமிடத தொடங்கி விட்டன

ஆளுமையேந்திய ஜனரஞ்சகத்தின் சலசலப்புகள்

வீட்டின் ஏதோ ஒரு மூலையில்

விழுந்துடைந்த கண்ணாடிச் சிதறல்களின்

நிலை கொள்ளா பிம்பங்களினூடே

என் கனவும் விளங்கப்படாமல்

தன்னைச் சிதைத்து வெளியெங்கும்

மினுமினுக்கத் தொடங்கியது.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Series Navigationநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்
author

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *