கல்விச்சாலை

This entry is part 1 of 40 in the series 12 பிப்ரவரி 2012

செந்தூர்புரத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ‘எடக்கு’ முருகேசனைக் கைது செய்து விட்டார்கள். அவர் என்ன வெடிகுண்டா வைத்திருந்தார்? இல்லை, தீவிரவாதி களுக்கு துணை போனாரா? எதுவும் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், எட்டாப்பு பிள்ளைகளை வைத்து, தார்சாலையில், மர நிழலில், இயற்கைச் சூழலில், வகுப்பு எடுத்து விட்டார். அரசின் கவனம் தம் பள்ளியின் மேல் திரும்பும் என்றெல்லாம் அவர் எண்ணி அப்படி செயல்படவில்லை. பின் என்னதான் காரணம்?
காலைப் செய்தித்தாளைப் பிரித்தவுடன், படித்த செய்திதான், அவரை அப்படி செய்யத் தூண்டியிருக்கிறது. அந்தச் செய்தியைப் படித்த முருகேசன் மூடவுட் ஆனார். மூளை கலங்கிப் போனார்.
காலை ஒன்பது மணிக்கு, தண்டவாளத்தில், ‘டங் டங் ‘ அடித்தவுடன் வகுப்புக்குள் நுழைந்த முருகேசன், ‘ எலேய் நம்ம வகுப்பு இங்கிட்டில்லடா.. அங்கிட்டு ‘ என்று பசங்கள கூட்டிகிட்டு, ஊர்வலம் போவது போல், நடு சாலைக்கு போனார். வாசலில் இருந்த வாட்ச்மேன் மன்னாரு, என்னமோ ஏதோ கலவரம் நடக்கப்போவுதுன்னு ஹெட் மாஸ்டர் அறைக்கு ஓடினான். ஹெட்டு, கமலா டீச்சர், பூங்கோதை எல்லாரும் வாசலுக்கு வந்தாய்ங்க. முருகேசன் ஜரூராக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
‘ என்னாச்சு முருகேசன்? ‘ என்ற ஹெட்டுக்கு, காலைச் செய்தித்தாளின் கட்டம் போட்ட செய்தியைக் காட்டிவிட்டு, பாடத்துக்கு போனார் முருகேசன்.
செய்தி இதுதான்: கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 56 விழுக்காடு எடுத்து சாலை போட்டிருட்க்கிறார்கள். மார்ச் 2011 முடிய, ஆடிட்டர் ஜெனரல் ஆய்வு செய்து, வெளியிட்டிருக்கும் அறிக்கை. கல்விப்பணத்தை எடுத்து ரோடு போட்டால், வகுப்பை சாலையில் தானே நடத்த முடியும். ‘எடக்கு’ முருகேசன் வாத்தியார் செய்தது சரிதானே!
பாக்யராஜ் பாணியில், சொல்ல வந்த செய்தியை, ஒரு கதையாகச் சொன்னால், சீக்கிரம் புரிபடும் என்பதால், இந்த முருகேசன் கதை. மற்றபடி கதையில் எதுவும் உண்மையில்லை. இப்படிப்பட்ட வாத்தியார்கள் இருந்தால், கல்வி மேம்படுமே என்கிற நமது ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.
புதிய அரசு, சாலைகளைப் போடும் ஒப்பந்தக்காரர்களுக்கு, முன்பணம் எதுவும் கொடுக்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. ஒரு வருடம் கழித்து, சாலை, வெயில் மழைக்கு ஈடு கொடுத்து, சேதாரம் இல்லாமல் இருந்தால் மட்டுமே பணம். சேதாரம் ஆனால், ‘ஒப்பந்தம்’ தன் சொந்த செலவிலேயே, அதை சரி பண்ண வேண்டும். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறைப்படுத்தப்படுமா?
இதற்கு முன்னால் என்ன நடந்திருக்கும்? ஒப்பந்தக்காரர்களுக்கு, முன்கூட்டியே அரசு பணம் கொடுத்திருக்கும். அவரும் சாலை போட்டிருப்பார். அடுத்த மழையில் அதைத் தேடுவார்கள். பள்ளங்களை நிரப்ப மீண்டும் பணம் கொடுக்கப்படும். அது சாலை போட, இது சாலை நிரப்ப.. நிரம்புவது சாலை மட்டுமல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளங்களை நிரப்ப என்ன செய்வோம்? பக்கத்து வீட்டு ரப்பீசை எடுத்து நிரப்பிவிடுவோம். இது வீட்டுக்கு.. நாட்டுக்கு, பக்கத்து துறையின் நிதி. எப்படி இருக்கிறது கதை.
கழிப்பறை இல்லாத பள்ளிகள், போதிய வெளிச்சம் இல்லாத வகுப்பறைகள், மழை பெய்தால் சாரல் அடிக்கும் கதவு இல்லாத சன்னல்கள், ஒழுகும் கூரை, குப்பைக் கூளங்களுக்கிடையில் சத்துணவுக் கூடங்கள் என்று தினமும் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. கூடவே டாஸ்மாக்கில் வருமானம் அதிகரிப்பு என்று செய்தி. இதில கொஞ்சம் எடுத்து பள்ளிகளைச் சீரமைக்கக் கூடாதா என்று கூட எண்ணினேன். ஆனால், இது வேறு, அது வேறு என்று விவரம் தெரிந்த வெள்ளை வேட்டி சொன்னபோது, இருக்கும் என்று நம்பினேன். அதிலிருந்து எடுத்தால் தெளிந்தவுடன் தெரிந்து விடும். இதிலிருந்து எடுத்தால், தலைமுறை தாண்டித்தான் தெரியும்.
வீட்டுக்கு ஒரு மரம், தெருவுக்கு ஒரு விளக்கு, ஊருக்கு ஒரு பள்ளி என்று பாரதியோ வேறு யாரோ சொன்னதாக நினைவு. இனி சாலைக்கு ஒரு வகுப்பு என்று சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரே ஒரு கேள்வி? நல்ல சாலை போட்டால் ஏன் பள்ளமாகிறது?
அதேபோல, நல்ல கட்டிடம் இருந்தால் பள்ளி ஏன் சாலைக்கு வரப்போகிறது?
0

Series Navigationசுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *