ஜென் ஒரு புரிதல் – பகுதி 12

This entry is part 19 of 41 in the series 25 செப்டம்பர் 2011

புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது? புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா? இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா? அகத்துள் ஆழ்ந்து ஆன்மீகம் தேடுவது தொடங்கியதா இல்லை தேடலின் சங்கிலித் தொடர் அறுபட்டு நான் தடுமாறி மீண்டும் விட்ட இடத்தில் தொடங்க இயலாது உழல்கிறேனா? புற உலகிலாவது ஒட்டி ஒன்றாக முடிகிறதா? கால் பந்தாகவும் பந்தை உதைக்கும் கால்களாகவும் மனித உறவு மாறும் மாய வித்தையில் புற உலகில் ஒட்டிக் கொள்ள ஏதுமில்லை. உண்மை பொய் மாயை என மூன்றும் ஒன்றாகவும் வெவ்வேறாகவும் தோன்றும் புற உலக வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் பக்குவமும் என்னிடம் இல்லை. மருத்துவரிடமும் தையற்காரரிடமும் மட்டும் ஊசி இருந்தால் போதும் என்னும் ஆற்றாமை ஏற்படுமளவு ஒருவரை ஒருவர் உற்சாகமாகக் காயப்படுத்தும் அற்ப விளையாட்டு தொடர்கிறது.

இந்த ஆற்றாமையில் என்னால் தன்னல நோக்கின்றி சமுதாய நோக்குடன் வாழ இயலவில்லை. சமூக நோக்குடன் இயங்க ஒரு மலையளவு மன உறுதியும் தன் மீது வீசப் படும் கற்களை வைத்தே தனது கனவு மாளிகையை எழுப்பும் வீரமும் தேவை என்பது தெள்ளத் தெளிவாகத் தென் படுகிறது. என் மீது சுமத்தப் படும் அடையாளங்களை என்னிடமிருந்து அன்னியப் படுத்தி என் இலக்குடன் மட்டும் என்னை உறவு படுத்திக் கொள்ளும் மனத் திண்மை என்னிடம் இல்லை. ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு வசதிக்கென ஒவ்வொரு நிலை எடுத்து வழி காணும் சந்தர்ப்ப வாதம் மட்டுமே புற உலகில் புலன் மற்றும் கௌரவம் தொடப்பான் சுக அனுபங்களுக்கு வழி கோலுகிறது. எந்த சுகத் தேட்டமும் வாய்ப்பும் இல்லாத புற உலக வாழ்க்கையில் எப்படி ஈடுபாடு வரும்? இடையறாத ஈடுபாடும் கவனமும் வேண்டும் புற உலகின் காட்டாற்று வெள்ளத்தில் காணாமற் போகாமல் அதில் நீந்தவும் ஓரிடத்தில் நிலை கொள்ளவும் மீண்டும் நீந்தி முன்னேறவும். இந்த இடையறாப் போராட்டத்திற்கு உற்சாகம் தருவதே புலன் மற்றும் கௌரவம் தொட்ட சுகங்களுக்கான வாய்ப்பே.

புற உலகும் ஆன்மீகத் தேடலுமான இரு துருவங்களை ஜென் பதிவுகள் நமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன. புற உலகின் மாயையை உணர்ந்தும் அதனுள்ளே இருந்து ஆன்மீகத் தேடலைத் தொடங்கித் தொடரும் மகத்தான பரிணாமம் நிகழாமற் போவதற்குத் தன்னலமும் அதன் பிள்ளைகளான பற்றுகளுமே காரணம். இந்த நோய்க்கான மூலிகை ஒன்றே ஒன்று தான். தேடுபவர் எந்த வழியில் எந்தக் காட்டில் அதைத் தேடுகிறார் என்பது மட்டுமே வேறுபாடு.

ஜென் பதிவுகளில் நமது சிலந்தி வலையின் தன்மையை கவித்துவமான பதிவுகளில் காண்கிறோம். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘துங்க் ஷன்’னின் பதிவு இது:

வெகு காலமாய் அதை மற்றவர் மூலம் தேடினேன்
_________________________________

வெகு காலமாய் அதை மற்றவர் மூலம் தேடினேன்
நான் அதை அடைவதிலிருந்து மிகத்
தொலைவிலேயே இருந்தேன்

இப்பொழுது நானே போகிறேன்
அதை எல்லா இடங்களிலும் காண்கிறேன்
அது நானே தான் நான் அது அல்ல

இவ்வாறான புரிதலுக்குப் பின்
நான் நானாக இருக்க இயலும்

ஐந்து தரவரிசை பற்றிய பாக்கள்
____________________

காணப்படுவது உண்மைக்குள் அடக்கம்:

மூன்றாம் சாமத்தில் நிலவு உதிக்கும் முன்
நாம் சந்தித்த போது அடையாளம் கண்டு கொள்ளாததில்
வியப்பேதுமில்லை
இன்னும் என் மனதில் நிழலாடும்
கடந்த நாட்களின் அழகு

காண்பதற்குள் உண்மை அடக்கம்:

தூங்கி வழியும் கண்களுடன் ஒரு மூதாட்டி
தன்னை ஒரு நிலைக்கண்ணாடியில்
எதிர்கொள்கிறார்
தனது முகத்தைத் தெளிவாகப் பார்க்கிறார்
ஆனால் அது அவர் போலவே இல்லை
மோசம் அவர் தனது பிம்பத்தை அடையாளம் காண
முயற்சிக்கிறார்

நிஜத்திலிருந்து தொடங்குதல்:

ஒன்றுமின்மைக்குள் ஒரு பாதை உண்டு
உலகின் தூசுகளுக்கு அப்பாற்பட்டு
நம்மை வழி நடத்தும்

ராஜாவின் பெயரை உச்சரிக்கக் கூடாது
என்னும் கண்டிப்பை நீ கடைப்பிடித்தாலும்
முன்னாளில் தன் நாவன்மையால் எல்லா
நாக்குகளையும் மௌனமாக்கியோரின் சாதனையை
விஞ்சி விடுவாய்

பரஸ்பர சங்கமத்தை அடைதல்:

இரண்டு கத்திகள் உரசும் போது
பின்னேறத் தேவையில்லை
நெருப்பிலிருந்து பூக்கும்
தாமரையைப் போன்றவன் வாள் வீச்சில் வல்லோன்
அவனது உற்சாகம் வானுலகை எட்ட வல்லது

ஒற்றுமை எட்டப் பட்டது:

இருப்பது இல்லாதது இவை இரண்டுக்குள்ளுமே
வீழ்ந்து விடாதவனுக்கு நிகராகும்
தைரியம் யாருக்குண்டு?
எல்லா மனிதரும் சாதாரண வாழ்வின் ஒட்டத்திலிருந்து
வெளியேற விரும்புவர்
அவனோ என்னதான் இருந்தாலும்
கரிகளுக்கும் சாம்பருக்கும் இடையே
அமரத்தானே வருகிறான்

ஆசானின் பாடற் குறிப்பு:
எத்தனை முறை “டோக்குன்” மது
மலையிலிருந்து வராமற் போயிருக்கிறது
அவனோ அசட்டு புத்திசாலிகளை
பனியை கொண்டு வரப் பணிக்கிறான்
அதைக் கொண்டு அவர்கள்
கிணற்றை நிரப்புகிறார்கள்

“அது நானே தான். நான் அதுவல்ல” என்பது ஏன்? பனிக்கட்டி, காற்றில் ஈரப்பதம், பனித்துளி, நீராவி, நதி, கடல், ஏரி எனப் பல்விதமாக நிலைகளின் காரணமாகவோ அல்லது சேர்ந்த இடம் காரணமாகவோ தண்ணீர் பல பெயர்களைப் பெறுகிறது. இவை அனைத்தின் மூலக்கூறாகத் தண்ணீர் இவற்றுள் இருக்கிறது. ஆனால் தண்ணீருக்குள் இவை இல்லை. இருப்பதும் இல்லாததும் எந்தப் புள்ளியில் இணைகின்றனவோ அங்கிருந்து தான் ஆன்மீகம் தொடங்குகிறது. ஜென் பற்றி மேலும் வாசிப்போம்.

Series Navigationஇறப்பு முதல், இறப்பு வரைகடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *