ஜென் ஒரு புரிதல் – பகுதி 20

This entry is part 2 of 37 in the series 27 நவம்பர் 2011


வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது நிகழ்ச்சியின் மூலம் ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அற்புதமா? சொற்களின் சாத்தியத்தை பல பரிமாணங்களை வாசகருக்குக் காட்சியாக்கும் ஓவியமா? சிக்கல்கள் மிகுந்த மனித உறவுகளின் பிடிபடா முடிச்சுகளை அப்படியே காட்டும் நிதர்சனமா? அக உலகும் புற உலகுமான இரு கோடுகள் சந்திக்கும் புள்ளிதான் அனுபவமா? எது அனுபவம்? எது காட்சி? எது தோற்றம்? இவை யாவற்றையும் பார்வை தான் தீர்மானிக்கிறதா? பார்வையை எது தீர்மானிக்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகளை குழந்தை போல கண் விரித்துப் பார்க்கும் விளையாட்டுத் தனம் தானா கவித்துவம்? கவிதைக்குள் இவை யாவுமே தென்படும். கவித்துவம் கவிதையில் வெளிப்படையாகவே காணப் படும். கவித்துவம் வெளிப்படும் அளவு ஒரு கவிதையின் படைப்பாக்க வெற்றியை நிர்ணயிக்கிறது.

முதற் பத்தி கவிதையின் தன்மை பற்றியதும் உள்ளடக்கம் பற்றியதும் ஆகும். கவிதையின் உருவம் பல நிலைகளைக் கடந்து எந்த உருவிலும் வரும் மாயாவியாகிவிட்டது. யாப்பு விதிகளைத் தாண்டி, புதுக் கவிதைக்கென நிர்ணயிக்கப் பட்ட புரிதல் அளவிகளைத் தாண்டி கவிதை படைப்பாக்கத்தின் ஆகச் சிறந்த வடிவம் என்னும் நாற்காலியைத் தானே கைப் பற்றிக் கொண்டது. ஜப்பான் துவங்கி வைத்த “ஹைக்கூ” என்னும் வடிவத்தின் பூர்வீகம் புதிரான முறையில் படிமங்கள் மையமாக உரையாடும் ஜென் மரபு ஆகும். “ஹைக்கூ” ஒரு வடிவமே. உள்ளடக்கம் தான் நாம் தேடும் சாராம்சம். “ஹைக்கூ” பெரிய அளவு வரவேற்புப் பெறாததற்கு தேடல் இல்லாத வறட்டுத் தடத்தில் தேங்கிப் போகும் படி படைப்பாளிகளால் சபிக்கப் பட்ட வாசகரின் கையறு நிலையே காரணம். பதினேழாம் நூற்றாண்டின் ‘மட்ஸுவோ பஷோ’ வின் “ஹைக்கூ” கவிதைகளைக் காண்போம்.

மாரிக்கால சூறைக் காற்றில் ஒரு வாழை மரம்
—————————————————
மாரிக்கால சூறைக் காற்றில் ஒரு வாழை மரம்
நான் இரவில் மழை நீர்
ஒரு பாத்திரத்தில் சொட்டுவதைக்
செவி மடுக்கிறேன்

இந்தச் சாலை வழி
———————

இந்தச் சாலை வழி
யாரும் போவதில்லை
மாரிக்கால மாலையில்

மேகங்கள்
———–
மேகங்கள்
நிலவின் காட்சியை
புறந்தள்ள ஒரு
வாய்ப்பு

வா நாம் போகலாம்
——————————–
வா நாம் போகலாம்
புதையுறும் வரை
பனிப்பொழிவைக் காண

காகத்தினுடையது
———————
காகத்தினுடையது
அது விட்டுச் சென்ற ஒரு கூடு
பிளம் மரம்

மரண கானம்
—————
காய்ச்சலால் வீழ்த்தப் பட்ட
என் கனவுகள்
மீண்டு எழுந்து
ஒரு பாதாள நிலத்துக்குள்
அணிவகுத்துச் சென்றன

பனித்துளியே நான் சுத்தம் செய்கிறேன்
——————————————–
பனித்துளியே நான் சுத்தம் செய்கிறேன்
உன் சுவையான சொட்டுக்களில்
வாழ்க்கையின் இருண்ட கைகளை

நிலவால் சுற்றி வளைக்கப்பட்ட
————————————
நிலவால் சுற்றி வளைக்கப்பட்ட
மூங்கிற் காடு
மைனாவின் பாட்டு

அங்கு வாசனை இருந்திருந்தால்
——————————-
அங்கு வாசனை இருந்திருந்தால்
பனி விழுதுகள்
பாறைகள் மீது
லில்லி மலர்களை
அழுத்தி விட்டன

இது அடை மழைக் காலம்
—————————–
இது அடை மழைக் காலம்
என் அண்டை வீட்டுக் காரர்
எப்படி வாழ்கிறாரோ
ஆச்சரியப்படுகிறேன்

பயணத்தின் முடிவு
———————-
பயணத்தின் முடிவு
இன்னும் வாழும்
இந்த மாரிக்கால
மாலைப் பொழுது

பழைய குட்டை
——————
பழைய குட்டை
குதிக்கும் நீர் தெரிக்க
தவளை

வானம்பாடி
————–
வானம்பாடி
பாடிக் கொண்டே இருக்கும்
பகல் முழுதும்
பகல் போதுமான அளவு நீண்டதல்ல

முற்றிலும் நிசப்தம்
———————
முற்றிலும் நிசப்தம்
தட்டாம் பூச்சிகளும்
கானம் பாடும்
கொதிக்கும் பாறைகள் நடுவே

கோடைக்காலப் புற்கள்
————————–
கோடைக்காலப் புற்கள்
படை வீரரின் கனவுகளில்
எஞ்சியவை

கோயில் மணியோசை அடங்கும்
————————————-
கோயில் மணியோசை அடங்கும்
மாலைப் பூக்களின் மணம்
மணியை அசைக்க

இந்தப் பனிக்கால காலைப் பொழுதில்
——————————————-
இந்தப் பனிக்காலக் காலைப் பொழுதில்
அந்தக் காகம்
அதை முற்றிலும் வெறுக்கிறேன்
ஆனால் அவன் அழகானவன்

பனி நாள்
———–
பனி நாள்
என் குதிரை
மீது நான்
ஒரு உறைந்த நிழல்

வருட இறுதி
—————
வருட இறுதி
மிதக்கும் இவ்வுலகின்
எல்லா முனைகளும்
அடித்துச் செல்லப் பட்டன

நீ தீ மூட்டு
————-
நீ தீ மூட்டு
நான் உனக்கு அற்புதமான
ஒன்றைக் காட்டுவேன்
ஒரு பெரிய பனிப் பந்து

தேனீ
——
தேனீ
மெதுவாகக் குதிரைக்குள்
இருந்து மேலெழும்பும்

(‘மட்ஸுவோ பஷோ’ வின் “ஹைக்கூ” கவிதைகளை அடுத்த
பகுதியில் தொடர்ந்து வாசிப்போம்)

Series Navigationநேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளதுமலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *