ஜென் ஒரு புரிதல் -17

This entry is part 28 of 44 in the series 30 அக்டோபர் 2011

“நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே உப்புக் கண்டம் என்பது உணவுப் பொருள் அல்ல. ஒரு படிமம். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”, “பனை மரத்துல ஏறுகிறவனை எட்டின வரைக்குந்தான் தாங்க இயலும்” , ” அவன் பேனையும் எடுப்பான்; காதையும் அறுப்பான்”, “அம்மா பாடு அம்மணம்; கும்பகோணத்திலே கோதானம்”,”தென்னை மரத்தில தேள் கொட்டிச்சாம்; பனை மரத்தில அண்டக் கட்டிச்சாம்”, குதிரைக்கு வடக்கே பயணம்; ராவுத்தருக்குத் தெக்கே பயணம்” , நந்தவனமே அழிஞ்சு போச்சு; கழுதை மேஞ்சா என்ன? குதிரை மேஞ்சா என்ன?”
– இப்படி எளிய அன்றாட வாழ்விலுள்ள பல படிமங்களை சொலவடைகளில், பழமொழிகளில், புதுக்கவிதைகளில், சிறுகதைகளில் நாம் காண்கிறோம். புதுமைப்பித்தனின் கயிற்றரவில் வரும் கயிறு ஒரு உதாரணம்.

இப்படிப் படிமங்களாலேயே புரிய வைக்கிற ஒரு பாரம்பரியம் சீனத்தில் ஜென்னுக்கு முன்பே உண்டு. ஜென் மாணவர்களை ஆசிரியர்கள் படிமங்களை வைத்தே பரிட்சை செய்தார்கள். இத்தகைய கேள்விகள், புதிர்கள், இவை தொடர்பான சிறு உரைகள், கவிதைகள் “கோன்” (k?an ) என்றே அழைக்கப் பட்டன. “ஹகுவின் இகாககு” வின் கேள்வி “இரண்டு கைகள் ஒன்று சேர்ந்த்தால் கரவொலி. ஒரு கையின் ஓசை யாது?” ஒரு உதாரணம். “ஷுன்ரியூ ஸுசூகி” யின் “புத்தர் வேறெங்கும் இருந்தால் அவரைக் கொன்று விடு. ஏனெனில் உன்னுள் உள்ள புத்தர் இயல்பை நீ தொடர வேண்டும்” என்னும் பதிவு மற்றொரு உதாரணம்.

ஜென் என்பது ஒரு பாரம்பரியத்துக்கு இருந்த பெயரே. ஆன்மீகம் பற்றிய ஒரு தெளிவு நிகழும் தருணம் புத்தருக்கு நிகழ்ந்தது போல் அபூர்வமான ஒரு கணத்தில் நிகழும் என்பதே இந்தப் பாரம்பரியத்தின் நம்பிக்கை. மாறாத விழிப்பும் இடையறாத் தேடலும் வாய்த்த ஒருவருக்கு அந்த அபூர்வமான கணம் வாய்க்கும். அது கைவசப்பட்டவரும் பீடத்தில் ஏறிக்கொள்வதில்லை. தேடலின் தொடக்கத்தில் உள்ளவருடன் உரையாடுவதும் அவரின் மீது கவனம் செலுத்துவதும் அந்த மூத்தவரின் ஈடுபாட்டுக்கு உரியவையே. “கோன்” என்றால் என்ன என்னும் அபிப்ராயம் நமக்கு இருந்தால் போதும். “கோன்” களைத் தொடர்ந்து நாம் வெகு தூரம் செல்வது சாத்தியமில்லை. ஜென் பதிவுகளில் கோன் இல்லாது இருப்பதே இல்லை. ஆனால் நம்முடன் உரையாடுபவையாக இருப்பவையே நாம் மேற் செல்ல உதவுகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் “இக்கியு ஸொஜுன்” பங்களிப்பு இவை:

ஒரு மீனவன்
—————
புத்தகங்களைப் படிப்பதும்
விறைப்பாக அமர்ந்த தியானமும்
உன் அசல் மனதை இழக்கச் செய்யும்
ஆயினும் ஒரு மீனவனின் தனிமைப் பண்
ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷமாய் இருக்க இயலும்
நதி மீது மாலை நேர மழை,
நிலவு மேகங்களின் உள்ளேயும் வெளியேயும்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இவ்வெழிலை
அவன் இரவுக்குப் பின் இரவாக
உச்சரித்துக் கொண்டே இருக்கிறான்

ஒவ்வொரு நாளும் பிட்சுக்கள் துல்லியமாக
சட்டத்தை பரிட்சை செய்கிறார்கள்
முடிவே இல்லாமல் சிக்கலான சூத்திரங்களை
முணுமுணுத்த படி
எனினும் அதைச் செய்வதற்கு முன் அவர்கள்
காற்றும், மழையும், பனியும், நிலவும் அனுப்பும்
காதற் கடிதங்களைப் படிப்பது எப்படி
என்று கற்றுக் கொள்ள வேண்டும்

ஒன்றுமின்மையில் வடிவம்
——————————
அது பட்ட மரம்
அதன் மணம் வண்ணம்
ஏதும் மீதி இல்லை
ஆனாலும் எந்தக் கரிசனமும் இன்றி
அதன் கிளை மீது வசந்தம்

———-
இக்கியு இந்த உடல் உனதல்ல
எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்
எங்கெங்கு நான் இருப்பேனோ இருப்பேனோ
———–
கோன் உள்ளே தெளிவான மனம்
காரிருளை வெட்டிப் பிளக்கும்
———–
மறையும் பனி
கணப் பொழுதில் பளிச்சிட்டு
மறையும் மின்னல்
நாம் சுதாரிக்கும் போது போயிருக்கும்
இவை போல்வே நான் என
எண்ணலாம் ஒருவர் தன்னைப் பற்றி
————
ஒரே ஒரு கோன் தான் முக்கியமானது
நீ
————
இதை என்னவென்று அழைத்தாலும்
சலிப்புத் தட்டுகிறது
அசூயை ஏற்படுத்துகிறது
இங்குள்ள ஒவ்வொரு நுண்துளையையும்
இங்கே இருக்கும் அதற்கு சமர்ப்பிக்கிறேன்
————

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)அவர்களில் நான்
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *