பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

This entry is part 8 of 41 in the series 10 ஜூன் 2012

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்

சிலவேளை

வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்

ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா

மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட

காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய

நேற்றின் இரவை நனைத்த மழை

உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை

நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்

அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்

அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி

விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்

உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு

உன் மீதான எனது சினங்களும்

ஆற்றாமைகளும் வெறுப்பும்

விலகியோடிப் போயிருக்கவேண்டும்

நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி

அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி

பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்

அங்குமிங்குமசையும் ஊஞ்சல்

அந்தரத்தில் சரணடையும் ஆவல்

அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்

சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்

எமக்கெதிரான

எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்

அத்திவாரத்தில் இருவரில்

எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்

நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ

ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை

விழுங்கிச் செறிக்க முடியாது

விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்

யுகங்களாகத் தொடர

வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை

இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்

சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்

பின்வாசல் சமதரைப் புல்வெளி

நிலவின் பால் குடித்தரும்பிய

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்

இரவின் சாயல் துளியேதுமில்லை

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationசூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சிமகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *