முள்வெளி அத்தியாயம் -12

This entry is part 28 of 41 in the series 10 ஜூன் 2012

‘செக்யூரிட்டி கேமரா’ வழியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் இளம் பெண்ணை லதா ‘கம்ப்யூட்டரி’ல் பார்த்தாள். இருபது இருபத்தி இரண்டு வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. தனது மண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் ஒருவேளை இதே வயதுப் பெண்ணோ பையனோ ஒரு வாரிசாக வந்திருக்கலாம். தோழியின் மகள் இவள். இப்படிப் பல இளைஞர்களைப் பார்க்கத்தான் நேரிடுகிறது. ஏதோ ஒரு சமயம் இது போன்ற ஆதங்கம் கவிகிறது. சில நிமிடங்களில் சுதாரித்துக் கொள்வதும் பழக்கமாகி விட்டது. ஒப்பனை அறைக்குச் சென்று கண்களில் துளிர்திருந்த நீரைக் கழுவினாள். யாரையுமே வேறு வழி இல்லையென்றால் தான் காத்திருக்க வைப்பாள். இன்று இந்தப் பெண்ணுடன் நிறைய நேரம் இருக்கிற மாதிரி தன்னையுமறியாமல் ஒரு திட்டம் போடத் தோன்றியது. சில ஈமெயில்களை அனுப்ப வேண்டும். உதவியாளரை அழைத்தாள். “இந்த ஸ்டோரியை மாலதியைப் படிக்கச் சொல்லு. இன்னிக்கி வேறே அப்பாயின்ட்மென்டையெல்லாம் கேன்ஸல் பண்ணு”

ஓரிரு நிமிடங்களில் வரவேற்பறையில் அந்தப் பெண் கதையைப் படிக்கத் துவங்குவதைப் பார்த்து விட்டு ஈமெயிலில் மூழ்கினாள்.
**__
**__**
** கதைக்கு “தவணை” என்று தலைப்பிட்டிருந்தது.

காலை மணி ஒன்பது.

ஜான்ஸன் கண்ணனுடைய நம்பரைத் தேடி எடுத்து போன் செய்த போது ‘நான் சுந்தரம் ஃபைனான்ஸ் மேனேஜர். நீங்க தேடற கண்ணன் நான் இல்ல” என்றார்.

ஒரு ஆளின் நம்பரை ‘ஸேவ்’ பண்ணும் போது எந்த ஆஃபீஸ் அல்லது எந்தத் தொழில் என்று சேர்த்து ‘ஸேவ்’ பண்ண வேண்டும் என்று பல தடவை சொல்லியிருக்கிறார்கள். பழக்கமாகவில்லை.
இன்னும் ஒரு கண்ணன் நம்பர் பிஸியாக இருந்தது. மூன்றாவது கண்ணன் தான் ஜான்ஸன் தேடிய நபர். “பாஸ்.. ஹவ் ஆர் யூ?’ என்று ஆரம்பித்தான். தனது வண்டி மிகவும் மக்கர் செய்து ஸர்வீஸுக்குப் போயிருக்கிறது என்று விளக்கினான். “பழைய வண்டியில ப்ராப்ளமே அடிக்கடி ஸர்வீஸுக்கு அனுப்பியே பாதி செலவாயிடும். என்றான் கண்ணன். சமீபத்தில் அவன் புது வண்டி வாங்கி இருக்கும் பெருமிதத்தைக் காட்டிக் கொள்வதாகத் தோன்றியது. “பாஸ். இன்னிக்கி ஒரு நாளைக்கி உன் வண்டி வேணும்’

“ஓகே. என்னை டி நகர்ல ட்ராப் பண்ணிட்டு எடுத்துக்க” என்றான் கண்ணன். அவன் ஒப்புக் கொண்டதை நம்பவே முடியவில்லை. ஆனாலும் அவனை டி நகரில் விட்டுப் போவது எளிதல்ல.

மேற்கு மாம்பலம் துரைசாமி ‘ஸப்வே’அருகே சொன்னது போல கண்ணன் காத்திருந்தான். புது பல்ஸர் வண்டி. ‘வா பாஸ்’ என்று வண்டியில் ஏற்றிக் கொண்டான்.

‘என்ன கண்ணா? ரொம்ப டீக்கா ட்ரெஸ் பண்ணியிருக்கே? எதாவது இம்பார்டன்ட் மீட்டிங்கா?”

“இன்டர்வ்யூ பாஸ்”

“ஏன்? இந்த ஜாப் நல்லாத்தானே போயிட்டிருக்கு? எதாவது லைனை மாத்தற ஐடியாவா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. சேதுவைத் தெரியுமா?”

“தெரியும். உன்னோடதான் வேலை பண்ணிக்கிட்டிருக்கான்”

“ஆமாம். எனக்குக் கொடுங்கையூர், அரும்பாக்கம். அவனுக்கு பெரம்பூர், மாதவரம். ரெண்டுபேருக்குமே நல்லாத் தான் போய்டிருக்கு. ரெண்டு ஏரியாவையும் கம்பைன் பண்ணி நாங்களே ஏஜென்ஸி எடுத்து இன்டிபென்டென்டா ஒர்க் பண்ணலாமின்னு சேது தான் ஐடியா கொடுத்தான்.”

“நிறைய ஸேல்ஸ் பீப்பிள் பண்றது தானே கண்ணன் இது”

“அதெல்லாம் சரி பாஸ். இப்போ சேது ப்ளானை மாத்திக்கிட்டான். இதை நான் எதிர் பார்க்காம என்னோட நிறைய கஸ்டமர்ஸுக்கு அவனுக்கு ‘இன்ட்ரோ’ வேறே கொடுத்திட்டேன்”

“ஆக்ட்சுவலா என்னாச்சு?’

“அவன் திடீர்னு மேனேஜருக்கிட்டே போய் என்னைப் போட்டுக் கொடுத்திட்டான். இன்டிபென்டென்ட் ஏஜென்ஸி எடுக்கற ஐடியாவே என்னுதுன்னிட்டான்”

“ரொம்ப தப்பு கண்ணன்”

“ஃபுல்லாக் கேளு பாஸ். அவங்க எனக்கு நோட்டீஸ் கொடுத்த உடனே என்னோட ஏரியாவையும் தானே பாத்துக்கறேன்னு பெட்டர் ஸாலரிக்கி அக்ரீமென்ட் போட்டிட்டான்”

“ரொம்பப் பாவம்பா நீ. அவன் பண்ணினது பெரிய துரோகம்”

“விடு. ஆல் இன் தி கேம். இந்த ஜாப் கிடைச்சா என் பிரச்சனைகளெல்லாம் தீர்ந்த மாதிரி”

பாண்டி பஜார் நெருங்கியது. ஜான்ஸன் நன்றி கூறி “நாலு லிட்டர் பெட்ரோல் ஃபில் அப் பண்றேன் கண்ணன்” என்றான். விடைபெற்றார்கள்.

இன்டர்வ்யூ முடியும் வரை கண்ணன் மொபலை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தான். மாலையில் திரும்பி வரும் போது பார்த்தால் ஜான்ஸன் இடமிருந்த ஏகப்பட்ட ‘மிஸ்ஸிட்’ கால்கள். கண்ணன் முயன்ற போது ஜான்ஸன் எண் பிஸியாக இருந்தது.நேரில் பேசிக்கொள்ளலாம் என்று வேறு பலரை அழைக்கத் துவங்கி பனகல் பார்க்கை அடைந்தான்.

ஜான்ஸன் வரும் போது ஏழு மணி ஆகி விட்டது. அவன் நடந்து வந்தான்.

“பாஸ்… வண்டிக்கி என்னா ஆச்சு?” என்றான் கண்ணன் பதறியபடி.

“முதல்லே நீ போன இன்டர்வ்யூ சக்ஸஸ்ஸா? அதைச் சொல்லு” என்றான் ஜான்ஸன்.

“ஸ்க்ஸஸ் பாஸ்.. இதை விட பெட்டர் ஸாலரி. லாப் டாப்ல இருந்த மெயில்ஸ்ல நான் பிடிச்ச ஆர்டர்ஸுக்கு ப்ருஃப் மாதிரி நிறைய இருந்தது . இம்ப்ரெஸ் ஆயிட்டாங்க. வண்டி என்ன பங்க்சர் ஆயிடுச்சா?”

“இல்லே கண்ணன். பாரிஸ் கார்னர்ல ஃபைனான்ஸ் காரங்க உன் வண்டியை ஸீஸ் பண்ணிட்டாங்க. நீ மூணு மாசமா ஈஎம்ஐ கட்டலையாமே?”

**__
**__** “எக்ஸ்பிரஸ் அவன்யூ மால்” லின் முதல் தளத்தில் இருந்த ‘காஃபி ஷாப்’பில் மாலதியும் லதாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
‘தவணை’ என்ற தலைப்பில் தான் வாசித்த சிறுகதையைப் பற்றி மாலதி விளக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசும் போது கண்கள், கன்னம், தலை என எல்லாமே பேசின. குமரியும் குழந்தையுமான உற்சாகத்துடன் அவள் பேசுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

“ஆன்ட்டி.. ஆர் யூ லிசனிங்க் ? அட்லீஸ்ட் காஃபியையாவது ஸிப் பண்ணுங்க.. ஆறுது.. ” என்னும் அவளது நினைவூட்டல் லதாவின் நினைவுலாவை நிறுத்தியது.

“எங்கெல்லாம் சென்று தேடுவேன் எங்கள் தெய்வத் திருமுருகனை.. எங்கே அவன் புகழ் பாடுவேன்.. எங்கள் எழில் அரசனை” அப்படீங்கற பாட்டை நீ ஓபனிங்க் ஸாங்கா பாடணும்”. என்றாள் லதா. மாலதி ” ஐ வில் ப்ராக்டிஸ் அண்ட் ஸிங்க் ஆன்ட்டி ” என்றாள்.

“கீதா உன் மேரேஜ் பத்தி சொல்லிக்கிட்டிருந்தா மாலா..”

“அம்மா.. ரொம்ப ப்ரஷர் பண்றாங்க ஆன்ட்டி. ஆக்ட்சுவலி நான் இந்த ஜாப க்விட் பண்ணிட்டு எம்பிஏ பண்ணலாம்னு இருக்கேன்”

“யூ எஸ்லேயா?”

“இல்ல ஆன்ட்டி கேட் எழுதி ‘ஏபிசிடி’ இந்த நாலு ‘ஐஐஎம்’ முக்குள்ளே கிடைச்சா எடுத்துக்குவேன். இல்லேயின்னா யூஎஸ்லே பர்ஸ்யூ பண்ணலாமின்னிருக்கேன்”

“சூடிதார் பாக்கலாமா கண்ணா?”

“ஷ்யூர்.. நீங்க சுடிதார் போடுவீங்களா ஆன்ட்டி?”

“………….”

“மெடீரியலா? ரெடிமேடா ஆன்ட்டி?”

“ரெடிமேட்.. ஆனா எனக்கு இல்லை”

“மாடல் கொண்டு வந்திருக்கீங்களா ஆன்ட்டி?”

“இல்லடா.. உன் ஸைஸ் பொண்ணு”.. அதற்குள் லதாவின் மொபைல் ஒலித்தது. அந்தப் பெண் குழந்தையின் பின்னே நகரும் படிக்கட்டுக்கள் வழி லதா நகர்ந்தாள்.

ஓரிரு கடைகளில் நுழைந்து கடைக்காரர் காட்டிய மாதிரிகளைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டு மாலதி மேலே நகர்ந்தாள். லதா அவள் உற்சாகத்தை ரசித்தபடியே பின் தொடர்ந்தாள்.

“எக்ஸ்பிரஸ் அவன்யூ”வில் இளைஞர் கூட்டம் அதிகமாயிருந்தது. லதாவுக்கு இவ்வளவு நேரம் இது போன்ற கூட்டம் மிகுந்த இடத்தில் இருப்பது வித்தியாசமாயிருந்தது.

ஒரு கடையில் குறைந்த வேலைப்பாடுகளுடன் ஒரு காட்டன் சூரிதார் மயில் கழுத்து வண்ணத்தில் நிறைய வேலைப்பாடுகள் உள்ள துப்பட்டாவுடன் இருந்தது.

“இது நல்லா இருக்கு ஆன்ட்டி..’ என்றாள் மாலதி….”உங்களுக்குப் பிடிச்சிருக்கில்லே?”

“வெரி குட் ஸெலெக்ஷன்”

பணம் செலுத்திய பிறகு அவளிடம் “உனக்குத்தான் கண்ணா” என்று அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் பனித்தன.

சுதாரித்துக் கொண்டு “உன் ப்ரண்ட்ஸ் ரெண்டு பாய்ஸை நீ லீட் கேரக்டருக்கு ரெகமெண்ட் பண்ணலாம்” என்றாள்.

**__
**__**
** “அம்மா நீங்க நியூஸ் பேப்பர் படிக்கணுமின்னு சொல்லியிருக்காங்க” என்றாள் வேலைக்காரி. சில தமிழ் செய்தித்தாள்கள், வாரப் பத்திரிக்கைகள், ஓரிரு ஆங்கில தினசரிகள் இருந்தன. ராஜேந்திரன் எழுதுவதை நிறுத்தி விட்டு தாள்களைப் புரட்டினான்.

சொற்களால் தாள்கள் நிறைந்திருக்கின்றன. சொற்கள் எழுத்துக்களின் கதம்பமான தோரணங்கள். வளைவும் நெளிவும் கோணல்களும் ஆன வித்தியாசங்களே அசல். சொற்கள் நகல்களே. சொற்கள் குறியீடுகளாக மாறி விட்டன. சொற்களுள் பொருள் இல்லை. புழக்கம் மட்டுமே இருக்கிறது. சொற்கள் உக்கிரமகவோ, நீர்த்தோ, கூர்மையாகவோ, மழுங்கியோ, சிதைந்தோ , வேறு பொருள் கொண்டோ, உச்சரிக்கும் உதடு, இதழ், காலம், சந்தர்ப்பம் என்றோ அவ்வப்போது மாறுகின்றன. எப்படியிருந்தாலும் எல்லா சொற்களும் அசல் தன்மையின்றி ஒலியாகவோ எழுத்தாகவோ நினைவாகவோ புழங்கிக் கொண்டே இருக்கின்றன.

சொற்கள் மானுட அதிகார விளிம்புகளின் வேலிகளாகின்றன. சொற்களுக்குள் அடங்காதவை மானுட அதிகார எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாகின்றன.

சொற்களால் ஆகக் கூடியவை மட்டுமே மானுடம் அங்கீகரிப்பது. சொல்லும் அது அதிகாரத்தைச் சுமக்காத போது அர்த்தமற்றதாகிறது.

தலைமுறைகளைத் தாண்டி யாரும் சிந்திக்காததற்கு சொற்களே காரணம். சொற்களுக்குள் ஆழ்ந்த நம்பிக்கைகளும் பீடங்களும் நிராகரிப்பு வேலிகளும் ஊடுருவி வேரூன்றி இருக்கின்றன.

சொற்களின் புதை மணல் இழுப்புக்குச் சிக்காத சிந்தனையாளர் எதையும் பதிவு செய்யவில்லை.

அசலான ஒரு தரிசனம் சொற்கள் வழி நிகழ்வதில்லை. சொற்கள் முண்டியடிக்கும் ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்தில் தரிசனம் மூச்சுத் திணறி இறந்து விடுகிறது.

சொற்களை மட்டுமே வைத்துக் கல்வி கற்றவர்கள் சொற்கள் கட்டமைத்துப் பாதுகாக்கும் பாரம்பரியத்துக்குப் புதிய நீட்சி தந்து கொண்டே இருக்கின்றனர்.

சொற்கள் இல்லாத எல்லா அவதானிப்பும் கற்றலும் வாய்த்தவர் தனித்து விடுகின்றனர்.

தனித்து இருப்பதும் சுதந்திரம் அற்றது தான். ஆனால் சார்பு நிலையிலும் கையறு நிலையிலும் இருக்கும் தேவைகளற்றது,

எழுதத் துவங்கினான்.

ஒரு கன்னத்தில்
அடித்தால் மறு கன்னத்தை
கூடியவரை பிரிதொருவனிடம்
காட்டிப்
பெயர் சொல்லாது
மேற் செல்

முதற் கற்களாலான
மலையின்
சிகரம் காண்

ஆணிகளும்
அங்கே இல்லையென்றால்
மற்ற மலைகளில்
அனேகமாக எல்லாவற்றிலும்
இருக்கும்
உயிர்த்தெழுவது
உன் விருப்பமாயிருக்க
வாய்ப்பில்லை.

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *