முள்வெளி அத்தியாயம் -16

This entry is part 14 of 41 in the series 8 ஜூலை 2012

தலைமையாசிரியை அறையில் (எதிரில்) சாந்தா டீச்சர் பொறுமையாக அமர்ந்திருந்தாள். தலைமை அப்போது இணைய தளத்தில் எதையோ அலசிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து இந்த அம்மாள் எதிரே யாரும் காத்திருக்காமல் தனியாக இருக்கும் போது ஏதாவது செய்வாரா இல்லை வெத்து பந்தாவுக்காக மட்டுந்தானா இதெல்லாம் என்று வேவு பார்க்க வேண்டும்.

சாந்தா தன் மொபைலில் தேவையற்ற குறுஞ்செய்திகளை நீக்க ஆரம்பித்தாள். “யெஸ்” என்றதும் “மேம் … டிவி ஸீரியல்ல வர்ற ‘குழலூதி மனமெல்லாம் ஸாங்குக்கு கிருஷ்ணர் வேஷம் போட ஒரு ஸ்டூடன்டை செலக்ட் பண்ணியிருக்கேன்…”

“டீச்சர்ஸ் சில்ரன் யாரும் வேண்டாம்”, என்றார் தலை.
” நோட்டட் மேம்.. அப்புறம் ‘தத்து’ ன்னு ஒரு தமிழ் ஷார்ட் ஸ்டோரி கொடுத்துப் படிக்கச் சொன்னீங்க…”
“படிச்சாச்சா?”
“இல்ல மேடம்.. எனக்கு அவ்வளவா தமிழ் வராது..”
” ஓகே. லீவ் இட் .. அந்த மேனுஸ்கிர்ப்டை எங்கிட்ட கொடுங்க…” பந்தாவாக திருப்பி வாங்கிக் கொண்ட தலைமை ஆசிரியைக்கு இரவு தான் படிக்க நேரம் கிடைத்தது.
**__
**__**
** மதியம் மணி ஒன்று. தியாகராசன் ‘தியாகராஜனா’க இருக்கும் போதே குருநாதன் . தியாகராசன் வீட்டுக்கு வந்திருக்கிறான். அப்போது குருநாதன் எட்டாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தான். ஜாதி சங்கக் கூட்டங்களில் குருநாதன் தமிழில் அழகாகப் பேசுவான் என்பதாக அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். அப்போது தியாகராசன் வீடு இதே இடத்தில் இன்னும் சிறியதாக் ஒரே ஒரு மாடியும், ‘க்ரில் கேட்’ கதவும் திண்ணையுமாக இருந்தது. வீட்டுக்குப் பின்னே ஒரு வாழையும் முன் பக்கம் ஒரு எலுமிச்சை, ஒரு முருங்கை, ஒரு மல்லிகைக் கொடி இவைகள் தான் இருந்தன. இப்போது அழகான ‘க்ரோட்டன்ஸ்’, நிறைய தொட்டிச் செடிகள், புல் தரை என வீட்டில் முன் பக்கம் பெரிய தோட்டம், பெரிய இரும்பு கேட், காவலாளி, நாய்கள். முன்பு அவரது முழுக்குடும்பமும் இருந்த கீழ்த்தளத்தில் இப்போது மிகப் பெரிய ஹால் வரவேற்பறையாகவும் அதைச் சுற்றி இரண்டு மூன்று உதவியாளர்களின் அறைகளும் அவரது பெரிய அலுவலக அறையும் இருந்தன. கட்சி தலைவரின் மிகப் பெரிய படம் ஹாலின் முடிவில் இருந்த சுவரை அடைத்திருந்தது. கட்சித் தலைவர் மற்றும் கூட்டணித் தலைவர் ஆகியோருடன் ராசேந்திரன் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் சுவரின் பல இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சுவர்க்கடிகாரம் மணி ஒன்று என்றாலும் குளிர் சாதனம் பகலின் உஷ்ணத்தை விழுங்கியது. தன் பெயரை ஒரு தாளில் உதவியாளரிடம் அவன் கொடுத்து அரை மணிக்கு மேலாகியிருந்தது. அவனுக்கு முன்னால் வந்த யாரும் இன்னும் உள்ளே போகவில்லை. தேநீர் வந்தது. காத்திருந்த பலரும் செல் போன் அதித்ததும் வெளியே போய் அங்கே இருந்த நிசப்தம் பாதிக்கப் படாது பார்த்துக் கொண்டார்கள்.

எங்கேயும் காத்திருப்பது குருவுக்கு சிரமமானதே இல்லை. தனியே காத்திருக்கும் போது எதையேனும் சிறிது நேரமாவது அசை போட வாய்க்கிறது. கூட யாராவது பதட்டமும் பரிதவிப்புமாக காத்திருக்கும் போது ஒரு நல்ல உள்ளாழும் அனுபவம் தட்டிப் பறிக்கப் பட்டு விடுகிறது. இன்று வெகுநாள் கழித்து ஒரு காத்திருத்தல். மர நிழல் மாதிரி ஒரு தனிமை.

இந்த சந்திப்பில் அவனுக்குப் பிடித்திருந்தது அப்பா அவனை எதற்காக அனுப்புகிறேன் என்று சொல்லாமல் அனுப்பி வைத்தது தான். ஒரு முறை ஒரு உறவினர் வீட்டுக்கு அவர் பெண் பூப்பெய்தியதற்கு ஒரு புடவையைப் பரிசாகக் கொடுத்து வரச் சொன்னார். அவர்கள் விழுந்து விழுந்து உபசரிக்க அந்தப் பெண்ணும் அறை சன்னல் வழியாக எட்டிப் பார்க்க அவனுக்கு ஒரு மாதிரி அப்பாவின் உள் நோக்கம் புரிந்தது. ஆனால் சில மாதங்களில் அப்பா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

ஹை ஸ்கூலில் படிக்கும் போது அம்மா அண்ணன் அக்கா யாருமில்லாமல் தனியே அவனை சித்தி வீட்டுக்கு அனுப்பிய போதும் சித்தியும் சித்தப்பாவும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். நிறைய புதுத் துணி மணிகள், அவனையொத்த பையன்களுடன் சினிமா, வீட்டில் விருந்து சாப்பாடு, ஹோட்டலிலிருந்து ஐஸ் க்ரீம், என்று ஒரே அமர்க்களம். அதற்குப் பிறகு சித்தியும் சித்தப்பாவும் அடிக்கடி வந்து போக இருந்தார்கள். அவனுடைய தலையை சித்தி கோதிக் கொடுத்தாலும் அவன் வெட்கத்தில் நெளிவான்.

ஒரு நாள் அவன் தூங்கி விட்டதாக நினைத்து “ஜோஸியர் இப்படிக் கெடுத்திருக்க வேண்டாம்” என்று பேச ஆரம்பித்த போது காதைத் தீட்டிக் கொண்டான். சித்தப்பாவுக்கு அவனைத் தத்தெடுப்பதால் சில பெரிய ச்ங்கடங்கள் உண்டாகும் என்றாராம் ஜோஸியர். பிறகு அவர் பொருத்தமான ஒரு சொந்தக்காரப் பையனைத் தத்தெடுத்தார். இன்றுவரை நூற்றுக்கணக்கான முறை பதில் தெரியாமலேயே ஒரே கேள்வி அவன் மனதில் நிழலாடி மறைகிறது. சித்தி வீட்டு வசதியும் சொத்தும் தனக்குக் கிடைத்தால் போதும் என்றா அப்பா அம்மா முடிவு செய்திருப்பார்கள்? தாரை வார்த்துக் கொடுக்க அம்மாவால் கூடவா முடிந்திருக்கும்? இல்லை அப்பாவின் ஜோஸியர் இவனைத் தள்ளி விடுவது தான் உமக்கு நல்லது என்று சொல்லியிருப்பாரா?

அதற்குப் பிறகு அப்பா அம்மாவின் மௌனங்களையோ அல்லது பேச்சையோ உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். பெற்றவர்களின் பாசம் அவ்வளவு தானா? ரத்த சம்பந்தத்தைத் தாரை வார்க்கும் தண்ணீர் கழுவித் துடைத்து விடுமா? அம்மா என்று – என்னதான் அம்மாவின் சகோதரி என்றாலும் – சித்தியை அழைக்க முடியுமா? தாய் தந்தையரை இழந்தவன் அனாதை. தாய் தந்தையாரால் இழக்கப்பட இருந்தவன் (அவர்கள் முன்வந்து இழக்கத் தயாராயிருந்த காரணத்தால்) அனாதை ஆகாதவன் அவ்வளவு தானே? ஒரு கணம் கண்ணில் நீர் துளிர்த்தது.

“ஸார்… ஒரு நிமிஷம் உள்ளே வாங்க” உதவியாளர் வந்து தனது அறைக்குள் அழைத்துப் போனார். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கம்ப்யூட்டரும் சில நாற்காலிகளுமாயிருந்தது.

“தலைவர் ரொம்ப பிஸியாயிருக்காரு. நீங்க காலேஜுல பேச்சுப் போட்டியில எல்லாம் நிறைய பிரைஸ் வாங்கி இருக்கீங்கன்னு அப்பா சொன்னாரு. கட்சி மீட்டிங் வரும் போது நம்ப ஜாதியிலே சுதந்திரப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம்னு தியாகம் பண்ணினவங்க வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லி, பாரதி, பாரதி தாசன் பாட்டையும் சேத்து நீங்க பேசணும். ஒண்ணு ரெண்டு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுங்க. ஏதேனும் ஹெல்ப் வேணும்னாலும் நானும் செய்வேன்.” “ஓகே” என்று தலையசைத்து விடை பெற்றான் குருநாதன். ஒரு வேளை தத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் இந்த “சக்கர வியூக”த்தைத் தவிர்த்திருக்க இயலுமோ?

**__
**__**
** இரவில் லதாவை உரிமையுடன் அழைக்கும் தோழிகளில் தலைமையாசிரியையும் ஒருவர். அவர் பாட்டுக்கு தான் வாசித்த கதையைப் பற்றி விஸ்தாரமாக லதாவிடம் பேசத் துவங்க, லதா அந்தத் தொகுப்பில் பல கதைகளைப் படிக்கவில்லை என்பதால் ஏதோ சமாளித்துப் பேசினாள். ராஜேந்திரனின் நினைவும் சரளமாகப் பேச இயலாது குறுக்கிட்டது. இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் ராஜேந்திரன். காற்றில் விரல்களால் துழாவிக் கொண்டிருப்பானோ?
**__
**__**
**
வண்ணத்துப் பூச்சிகள்
மட்டுமல்ல
பிணந்தின்னிக் கழுகுகளின்
சிறகுகளும்
படபடக்கும் வனவெளியில்

வனத்தின் ஸ்பரிசத்தில்
சல்லிவேரின் ஈரம்
பாலைவனத்தின் விரகம்
வருட
சிலிர்த்திருக்கும் இலைப் பசுமை

வனம் அணிந்த
நீரோடை
நிலம் புகும்
வயற்காட்டுத்
தவளை சுவாசத்தில்
வனத்தின் நீட்சியிருக்கும்

கடற்கரையில் காயும்
மீன் வலைக்கு
வசப்படாத பின்னல்
சிலந்தி வலையாய்
விரியும்

குதிரைக் குளம்புகளில்
தெறித்துக் கிளம்பிய
புழுதி
கோபுர பொம்மைகளின்
வண்ணங்களை
மறைத்துப் படியும்

Series Navigation‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *