Posted in

கனவுகளின் விடியற்காலை

This entry is part 51 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அது ஒரு கனவுப்பொழுது
இலைகளின் மீதமர்ந்து தவழ்ந்த காலம்
படர் கொடியின் நுனி பிடித்து
ஊஞ்சலிட்ட பருவம்

கனவுகளடர்ந்த விடியற்காலைப்பொழுதுகளில்
விரலிடுக்குகளிலிருந்து வழிந்து
புள்ளிகளால் நீட்சியுறும் கோலம்…
கோலப்பொடியாய் நானிருந்த தருணம்

சலனமற்ற நீரோடையில் வீழ்ந்த கல்லாய்
அலை கழிந்த நேரம்
மிதிவண்டியின் மிதியடிகள்
எனை நிந்தித்த வேளையில்
கனவுலகில் விடியலை துரத்திய பொழுதுகள்

வெய்யிலில் குடை நனைத்து
ஈரமாய் உலவின காலம்
கொப்புளங்கள் செருப்பணிந்து தேய்ந்து
இரணமான கணங்கள்

எல்லா வலிகளும் அற்றுப்போனதாய்
நான் உணர்ந்த நொடியில்
இறுக்கிப் பிழிகிறது மண்ணறை
பொதியாய்.

-சு.மு.அகமது

Series Navigationஉன் இரவுமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *