Posted in

திரை விமர்சனம் 144

This entry is part 8 of 15 in the series 29 நவம்பர் 2015

 

 

0

சில்லறை திருடர்களின் சிரிப்பு கார்னிவல். புதுமுக இயக்குனரின் ஆர்வக் கோளாறால் காமெடி, சொதப்பல்!

0

தேசு சின்ன திருட்டுக்களை செய்யும் எரிமலைக்குண்டு கிராம ஆள். அவனுக்கு விலைமாது கல்யாணி மேல் ஒரு கண். மதன் காதலிக்கும் திவ்யா, அவனது முதலாளி ராயப்பனின் மகள். ஒரு கட்டத்தில் நால்வரும் சிதறி ஓட, இடையில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கலை சின்னாபின்னமாக்குகிறது. இயக்குனர் மணிகண்டன், சுந்தர் சி சிஷ்யனோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

தேசு சிவா பேசுவது ஒன்றுமே புரியவில்லை. இயல்பு என்று முணுமுணுப்பது பாம்புக் காதர்களுக்கும் சங்குதான். அசோக் செல்வன், மதன் பாத்திரத்தில் ஓரளவு தேறுகிறார். அவர் முகத்தில் சிரிப்பை பார்ப்பதே பரவசம். கல்யாணியாக ஓவியா தன் அகலக் கண்களாலும், கர்சீப் உடைகளாலும் கவர்கிறார். திவ்யாவாக சுருதி ராமகிருஷ்ணா ஜஸ்ட் பாஸ்! ஓவியர் ரவிவர்மனாக ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ், வாய் பேச முடியாத பாத்திரத்தில் மிளிர்கிறார். புது வில்லன் ஃபீலிங்க்ஸ் ரவியாக உதயபானு மகேஸ்வரன், மென் சிரிப்பை வரவழைக்க போராடுகிறார்.

இயக்குனர் மணிகண்டன், எல்லாவற்றிலும் நகைச்சுவையை தேடிய காரணத்தால் பல இடங்களில் சோகம் ஒட்டிக் கொள்கிறது. முதல் படத்தில் காட்டிய அதீத ஆர்வத்தை அடுத்தடுத்த படங்களில் குறைத்துக் கொண்டால் தேறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

உண்மையில் இந்தப் படத்தில் ஹீரோ இசைஞர் சியான் ரோல்டன் தான். பின்னணியிலும் பாடல்களிலும் அவர் காட்டியிருக்கும் வெரைட்டி, அவருக்கான புதிய கதவுகளைத் திறக்கும்.

127 நிமிட படமே சமயங்களில் போரடிக்கிறது என்றால் குறை திரைக்கதையில் என்று பத்தாம் வகுப்பு பிள்ளை கூட சொல்லிவிடும்.

மணிகண்டனுக்கு திரைக்கதை பயிற்சி அவசியம்.

சிவாவுக்கு பேச்சு பயிற்சி அவசியம்.

ரசிகனுக்கு அசாத்திய பொறுமை அவசியம்.

0

க்ரக்ஸ்: தடை

கமெண்ட்: களவாணி படத்துல நடிச்சதாலேயே எல்லா களவாணி படங்கள்லேயும் ஓவியா நடிக்கணும் என்பது விதியல்ல!

0

Series Navigationயூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடுஎழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு இலக்கியப்பணியுடன் மருத்துவப்பணியும் மேற்கொள்ளும் மனிதாபிமானி ச. முருகானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *