ஜென் ஒரு புரிதல் பகுதி -5

This entry is part 18 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

எதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? இவ்வுலகிற்கா ? (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா ? விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான பொருளை, விவரங்களை, மனிதர்களைத் தேடத் தான் வேண்டும். ஆன்மீகம் இவ்வுலகிற்கு அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகிறது? இது தெளிவாகாத வரை ஆன்மீகம் ஒரு வேண்டப்படா முதுகுச் சுமையே.

அன்றாட வாழ்க்கை உண்மையிலேயே அலைக்கழிப்பும் அலுப்பூட்டுவதும் மட்டுமே ஆனதா? சகமனிதர்கள் அனைவருமே எதிர்மறையானவரா? ஒவ்வொரு நாளும் வரலாற்று மரத்தில் புதிது புதிதாய் துளிர் விடும் தளிரா? இல்லை மௌனமாய் உதிரும் சருகா?

நேர்மையும், கடினமான உழைப்பும், வெகுளித் தன்மையும் கொண்டு சொற்ப வருமானத்திற்குப் பணியோ தொழிலோ செய்யும் அடித்தட்டு மக்களைப் பார்க்கிறோம். தமக்கு எத்தகைய வருங்காலமும் சூழ்நிலையும் சகபயணிகளும் என்பது பற்றிய எந்தக் கவலையும் இன்றி மலர்களைப் போல் சிரித்திருக்கும் குழந்தைகள். ஒரு சதுர அடியில் சாலையும் இடையறாப் போக்குவரத்துமான சூழலிலும் உயர்ந்து நின்று நிழல் தரும் மரங்கள். வீழ்த்தப் பட்ட மரத்தின் நினைவுச் சின்னமானஅடி மரத்திலும் முளைத்தெழுந்த சிறு கிளை ஒன்று. ஆதவனுடன் எழுந்து உறங்கி சிறகடிக்கும் பறவைகள். நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக வழி பாட்டுத் தலங்களில் சுடர் விடும் விழிகள். எதிர்பாராமல் கேட்கக் கிடைத்த மனதைத் தொடும் சங்கீதம். அன்னியமென நாம் நினைத்த உதடுகளிலிருந்து ஒலித்த ஆறுதல் தரும் ஒரு வார்த்தை. வெப்பம் தணித்துப் பெய்த ஒரு கோடை மழை. இன்னும் எத்தனையோ நம் கவனத்தில் வாராதவை. இடையறா ஓட்டத்தில் பேச வேண்டியவரிடம் பேச வேண்டியதைப் பேச வாய்க்கவில்லை. மனம் விட்டுப் பேச யாருமே இல்லையோ என்று சில சமயம் ஐயம். மனம் விட்டுப் பேசக் கூடியவரும் நம்பிக்கையானவரும் நம்மை விடவும் விரைவான ஓட்டத்தில். இணையாக ஒரு வேளை என்னுடன் மனம் விட்டுப் பேச யாரேனும் எண்ணித் தோற்றிருக்கலாம்.
இந்தச் சூழலில் ஆன்மீகம் என்ன செய்ய இயலும்?

சுருதி சரியாக உள்ளதா என்பது வீணையைச் சுண்டியவுடன் தெளிவாவது போல் நம் மனச் சமநிலை நமது நேர்மறையான அழகியல் ரீதியான கண்ணோட்டத்தில் வெளிப்படும். துளசி, வேப்பிலை, மஞ்சள் எனத் தொடங்கி மூலிகைகள் பல பட்டியலிட வேண்டிய அளவு வெவ்வேறு விதங்களில் நன்மை செய்பவை. ஆன்மீிகம் அவ்வாறானதே. ஆன்மீகக் கண்ணோட்டம் இயல்பான பிறகு கிடைக்கும் உடனடிப் பயன் மனச் சமநிலை. அது குடும்பம் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களின் முடிவுறா ஏற்ற இறக்கங்களில் சரியான நிலைப்பாடு எடுக்கவும் மன அமைதி குலையாமல் இருப்பதால் சளைக்காமல் போராடவும் கண்டிப்பாக வழி வகுக்கிறது.

இயற்கையோடு ஒன்றிவிட்ட எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மெங்க் ஹாவ்-ஜன்” கவிதை இது:

தீவில் கவியும் பனியில் சூரியன் மறைந்தான்
இனி பயணி சற்றே சிரமப் பட வேண்டி இருக்கலாம்

விரிந்த சமவெளியைத் தாண்டி
மரங்களும் வானமும் வெவ்வேறாயில்லை
மென்மையான நதியின் மீது நிலவு வந்தமர்கிறது

என்றுமே கண்டிராத நதிகள் மலைகள்
ஸியாங் ஜாங்கின் (ஸியாங் ஜாங் மலையின்)
அழகு அவற்றை நம் வசமாக்கும்

நான் சிகரமடையத் துணியாத இம்மலை
அருகிலுள்ள மலைகளெல்லாம்
குன்றுபோல் தோன்ற நெடுதுயர்ந்து நிற்கும்

இன்று தெளிவான ஒளி மிகுந்த வானம்
என்னை பயணம் செய்யச் சுண்டி இழுத்தது
விரைவில் தொடுவானமும் காணக் கிடைக்காது

கனவு போன்ற மேக மூட்டங்கள்
பிரம்மாண்டமான வீரனாய் நிமிர்ந்த மலையை
விழுங்கியது போல் பூத்திருக்கும் நந்தவனங்கள்

மெல்லக் கவியும் முன்னிரவு இருளைத் தாண்டி
திராட்சைக் கொடிகளால் இறுக்கி இளக்கப் பட்ட
நிலவு ஓடைகளில் ஆழ்ந்து ஒளி வீசும்

யாருமற்ற தோப்பில் ஒரு குடிலில்
தியானத்தில் அமரும் பொழுது
எதிரே மலைச் சிகரம் கீழே பள்ளத்தாக்கு

அன்றலர்ந்த தாமரையின் அழகை அவதானி
எதுவும் இவ்விதயத்தைக் கறைப் படுத்த
இயலாது என்றுணர்வாய்

அழகு என்பது தோற்றமல்ல. காட்சியுமல்ல. ஓர் அனுபவம் என்பது இந்தக் கவிதை வழி நாம் உணர்வதாகும். ஜென் நம்மை இட்டுச் செல்லும் அசலான உலகை மேலும் வாசித்து அறிவோம்

சத்யானந்தன்

Series Navigationபயணங்கள்இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *