நன்றிக்கடன்

This entry is part 16 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தெலுங்கு மூலம்: D.காமேஸ்வரி
தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

“என்னங்க! உங்க அம்மா பெட்டி படுக்கையை பேக் செய்துகிட்டு இருக்காங்க. எங்கேயாவது போகப்போவதாக உங்களிடம் சொன்னாங்களா?”
சாவகாசமாக பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த செஷாத்ரியிடம் வந்த பத்மா பதற்றத்துடன் கேட்டாள்.
பேப்பரிலிருந்து தலையை உயர்த்திய சேஷாத்ரி “என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே? எங்கே போகப்போகிறாளாம்? நீயே கேட்டுப் பாரேன்?” என்றான்.
”எனகென்ன தெரியும்? அத்தை என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. நீங்களே கேளுங்கள்.” நெற்றியைச் சுளித்தாள் பத்மா.
“என்ன நடந்தது? மறு படியும் எதாவது சண்டையா?” பொறுமையற்றவனாய் மனைவியைப் பார்த்தான்.
“என்ன இருக்கு சொல்வதற்கு? நேற்று ஏதோ சின்ன ரகளை. இது ஒன்றும் புதிது இல்லையே? பத்மா நியாயப்படுத்திக் கொள்வதுபோல் சொன்னாள். “போய் கேளுங்கள் ரொம்ப சீரியஸாக எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருக்காங்க. கண்ணன் கேட்டபோது வீட்டை விட்டு போகிறேன் கண்ணா என்றாளாம்.”
அதற்குள் கண்ணனும் விஜியும் அங்கே ஓடி வந்தார்கள் ”அப்பா! பாட்டி போகப் போகிறாளாம்.” மூச்சு இறைக்கச் சொன்னார்கள்.
சேஷாத்ரி நாற்காலியை விட்டு எழுந்து கொள்ளும் முன்பே சரஸ்வதி அங்கே வந்தாள். ‘சேஷு! நான் கிளம்புகிறேன். இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் இருப்பீங்கன்னு பயணத்தை இன்னிக்கி வைத்துக் கொண்டேன்” என்றாள்.
“எங்கே போகப் போகிறாய்? லக்ஷ்மியிடமா? உன்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தாளா என்ன? என்னிடம் சொல்லவே இல்லையே?” வலிந்த சிரிப்பை உதட்டில் ஓட்ட வைத்துக் கொண்டே கேட்டான் சேஷாத்ரி.
“லட்சுமியிடம் இல்லை. இனிமேல் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என் வயிற்றுப் பாட்டுக்கு நான் வழி தேடி கொள்ளனும் என்று முடிவு செய்திருக்கிறேன்.”
சேஷாத்ரியின் முகம் கறுத்து விட்டது. பத்மாவின் முகத்தில் குற்றவுணர்ச்சி தென்பட்டது.
“என்ன பேச்சு இது? என்ன நடந்து விட்டதுன்னு இப்படி சொல்கிறாய்?” சேஷாத்ரி கோபமாகக் கேட்டான்.
“என்ன நடக்கவில்லை? ஒரு நாள் நடக்கிற கூத்தாக இருந்தால் வாய்விட்டு சொல்ல முடியும். எனக்கு சூடு சொரணை, வெட்கம் மானம் எல்லாம் இருக்கு. என்னதான் நான் உங்களைச் சார்ந்து வாழ்ந்து வருகிறேன் என்றாலும் நீங்க எனக்கு சும்மா ஒன்றும் சாப்பாடு போடவில்லை. நாள் முழுவதும் ஓய்வே இல்லாமல் வேலை செய்து வருகிறேன். காலையில் எழுந்ததும் காபி போட்டு சமையல் செய்து, மதிய உணவுக்கு கட்டிக் கொடுத்து உங்க குழந்தைகளுக்கு ஒரு ஆயாவாக, இந்த வீட்டை காவல் காக்கும் நாயாக இருந்து வந்தேன். மாலையில் நீங்க வரும் வரையில் உங்கள் குழந்தைகள் செய்யும் லூட்டியை சகித்துக் கொண்டு, கெஞ்சி கூத்தாடி சாப்பிட வைத்து, ஹோம் வர்க் செய்யவைத்து…… இதெல்லாம் என் வீடு, என் பேரக் குழந்தைகள் என்ற நினைப்பில் ஒரு வருடமாக உழைத்தேன். சேஷு! வேறு யாராக இருந்தாலும் இந்த உழைப்பிற்கு வீட்டோடு வைத்துக் கொண்டு சாப்பாடு போட்டு, கண்ணை மூடிக்கொண்டு ஐநூறாவது தருவார்கள்.நான் ஏதோ உங்களுக்கு சுமையாக இருப்பது போலவும், வெறுமே உட்கார்ந்து தண்டச்சோறு சாபிடுவது போலவும் நடத்தும் போது, உங்களுக்கு பாரமாக இங்கேயே விழுந்துக் கிடப்பானேன்? பெற்ற தாய் என்ற மதிப்போ, பிரியமோ இல்லாத இடத்தில், நமக்காக இவ்வளவு உழைக்கிறாள் என்ற பரிவு கூட உங்களுக்கு இல்லாத போது நான் இங்கே எதற்காகக் இருக்கணும்?
இந்த வேலையை எங்கே செய்தாலும் என் காலம் நிம்மதியாகக் கழிந்துவிடும். பெற்ற தாய்க்கு உரிய மரியாதையும் மதிப்பும் கிடைக்காத இந்த வீட்டில், ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டு உங்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். என் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து ஊதியம் தரும் இடத்தைத் தேடிக் கொண்டு போகிறேன்.” சரஸ்வதியின் குரல் திடமாக ஒலித்தது.
பத்மாவின் முகம் களையிழந்தது. பதற்றத்துடன் கணவன் பக்கம் பார்த்தாள்.
‘இதெல்லாம் உன்னால் வந்த வினை’ என்பது போல் மனைவியைக் கோபமாகப் பார்த்துவிட்டு தாயைச் சமாதானப்படுத்து போல். “இதெல்லாம் என்னம்மா? மாமியார் மருமகள் சண்டை என்பது ஊர் உலகத்தில் நடக்கிற விஷயம்தானே? இதைப் போய் பெரிதாக எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் போவதாவது? நீ செய்வது கொஞ்சம் கூட நன்றாக இல்லை.” குரலை உயர்த்தினான்.
“ஆமாம் சேஷு! நான் செய்வது நன்றாக இல்லைதான். சும்மா வாய் வார்த்தை சொன்னதற்கே யாரும் வீட்டை விட்டுப் போய் விட மாட்டார்கள். எனக்கும் சுய அபிமானம் இருக்கு. எதுவும் எல்லை மீறிப் போனால் யாருக்கும் துணிச்சல் வரத்தான் செய்யும். ஆபீசுக்குப் போகும் முன் உன் மனைவி வாழைப்பழ சீப்பில் எவ்வளவு பழம் இருக்கோ கணக்கு பார்ப்பாள். மாலையில் வந்ததும் பால் தயிர் குறையாமல் இருக்கான்னு துப்பு துலக்குவாள். நான் ஏதோ வீட்டில் இருந்து கொண்டு கொள்ளையடித்து சாபிடுவது போல் ஜாடை மாடையாக பழித்துக் கொண்டே இருப்பாள். எனக்கும் வாய் இருக்கு. வயிறு இருக்கு. ஒரு பழமோ, ஒரு டம்ளர் பாலோ எடுத்து சாப்பிடும் சுவாதீனம் கூட இல்லாத வீட்டில் எந்த உரிமையுடன் நான் இருக்க முடியும்? சும்மா கிடைக்கும் உழைப்பிற்கு மதிப்பு இருக்காது. நான் போன பிறகு சம்பளம் கொடுத்து சமையல்காரியை போட்டுக் கொண்டால் தவிர நான் எவ்வளவு செய்தேன் என்று உங்களுக்குப் புரியாது.
வேறு இடமாகக் இருந்தால் எனக்குப் பிடித்தால் செய்கிறேன், இல்லையா வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன். ஒரு கோவிலுக்குப் போகணும் என்றாலும், ஒரு பழம் வாங்கி சாப்பிடனும் என்றாலும், வருடத்தில் ஒரு தடவை மகளுக்கு ஒரு புடவையோ, ரவிக்கைத் துணியோ கொடுக்கணும் என்றாலும் உன்னைக் கெஞ்சும் அவலம் எனக்கு வேண்டாம். வேண்டா வெறுப்பாக நீ கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் இழிவான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. கஷ்டப்பட்டு உழைத்து எனக்கு வேண்டியதை சம்பாதித்துக் கொள்கிறேன். வாய்க்குப் பிடித்த்தைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். பேரக் குழந்தைகளை, உங்களைப் பார்க்கணும் என்று தோன்றிய போது வந்து ஒரு வேளை இருந்துவிட்டுப் போகிறேன். அடிமையாக இந்த வீட்டில் இருப்பதைவிட வேற்று மனிதர்கள் வீட்டில் சமையல்காரியாக இருந்துகொண்டு தன்மானத்துடன் வாழ முடிவு செய்துவிட்டேன்.” திடமான் குரலில் சொல்லி முடித்தாள் சரஸ்வதி.
கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “பெற்ற மகன் உயிருடன் இருக்கும் போது யார் வீட்டிலேயோ சமையல்காரியாக இருக்கப் போகிறாயா? ஊர் உலகம் என்ன சொல்லும்? எல்லோரும் எங்களைக் காறித் துப்ப மாட்டாங்களா?” ரோஷத்துடன் கேட்டான்.
“ஊர் உலகம் புதுசா என்ன சொல்லும்? அக்கம் பக்கத்தில் நாலு நாள் வம்பு பேசுவார்கள் அதற்குப் பிறகு மறந்து விடுவார்கள். இந்தக் காலத்தில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நேரமோ, பொறுமையோ யாருக்கு இருக்கு? ஊராருக்காக என் சுயகௌரவத்தை பலியிட நான் தயாராக இல்லை.”
“அதாவது போக வேண்டிய இடத்தைக் கூட முடிவு செய்தாகி விட்டதா? யார் வீட்டுக்குப் போகிறாய் சமையல்காரியாக?” குத்தலாகக் கேட்டான.
“யாரோ ஒரு இல்லத்தரசி, உங்களைப் போலவே கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போகிறவர்கள். இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறாள். கோவிலில் பார்த்த போது ‘மாமி! உங்களைப் போலப் பெரிய துணையாய் யாராவது இருந்தால் சொல்லுங்களேன். வீட்டோடு வைத்துக் கொள்கிறோம்’ என்றாள். தாயின் மதிப்பு தெரியாத உங்கள் வீட்டில் விழுந்துக் கிடப்பதை விட பெற்ற தாய் போல் ஆதரவு தருவதாகக் சொன்ன அந்த இல்லத்தரசியின் சுபாவம் எனக்குப் பிடித்து விட்டது.”
சேஷாத்ரி கண்களை உருட்டி மனைவியை கோபமாகப் பார்த்தான். பத்மா தலையைக் குனித்து கொண்டாள். சேஷாத்ரி வேகமாக தங்களுடைய அறைக்குச் சென்று “பத்மா! இங்கே வா” என்று உரத்த குரலில் அழைத்தான். பத்மா வந்தாள்.
“போ.. போய் அம்மாவிடம் மன்னிப்பு கேள். அம்மா வீட்டை விட்டுப் போனால் அம்மா சொன்னது போல் நஷ்டம் அவளுக்கு இல்லை, நமக்கு. அம்மா இல்லை என்றால் நாம் படும் பாட்டை நாய் கூட படாது. புத்தி வந்துவிட்டது. இனிமேல் இப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டேன்னு சொல்லு. அப்படியும் மறுத்தால் கால்களில் விழுவதைத் தவிர வேறு வழி இல்லை. எத்தனை சம்பளம் கொடுத்தாலும் அம்மாவைப் போல் வேலை செய்யும் ஆள் உனக்குக் கிடைக்க மாட்டாள்.” சேஷாத்ரியின் குரல் கடுமையாக ஒலித்தது.
பத்மா ஏற்கனவே மிரண்டு போயிருந்தாள். மாமியார் இல்லாமல் வீட்டை எப்படி சமாளிப்பது என்ற எண்ணம் வந்ததும் பயம் பிடித்துக் கொண்டது. மாமியாரிடம் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று புரிந்ததும் கறுத்துப் போன முகத்துடன் ஹாலுக்குச் சென்றாள்.
“அத்தை! தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள். உங்களுக்கு இவ்வளவு கோபம் வரும் என்றோ, எங்களை விட்டு விட்டு போய் விடுவீங்க என்றோ நினைக்கவில்லை. இனிமேல் …” மேலும் ஏதோ சொல்லப்ப் போனாள்.
“வேண்டாம் பத்மா. எனக்கு வேண்டியது உன்னுடைய மன்னிப்பு இல்லை. எனக்கு என்று ஒரு வருமானம் வேண்டும். யாருக்கும் பாரமாக இல்லாமல் என் சொந்தக் கால்களில் நிற்கிறேன் என்ற ஆத்மதிருப்தி வேண்டும். அவர் போன பிறகு கையில் சல்லிக்காசு இல்லாமல் மகனைச் சார்ந்து வாழ்ந்து வரும் வாழ்க்கை எப்படி இருக்குமோ அனுபவத்திற்கு வந்துவிட்டது. வேலைக்குப் போகும் அளவுக்கு எனக்கு படிப்பு இல்லை. என் கையில் இருக்கும் தொழில் சமையல் ஒன்றுதான். அதை செய்து கொண்டு, முடிந்தால் சின்னக் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்து, இன்னும் தேவைப் பட்டால் ஊறுகாய், அப்பளாம் தயாரித்து விற்பனை செய்வேன். நேர்மையாக உழைத்தால் இந்த வயதிலும் கௌரவமாக, மதிப்புடன் வாழ முடியும் என்ற எண்ணம்தான் இந்த வீட்டிலிருந்து வெளியேறக் கூடிய துணிச்சலை எனக்கு தந்தது. சம்பளம் கொடுத்து என்னை ஆதரிப்பவர்கள் எனக்கு வேண்டும். அந்த சம்பளம் நீ தருவதாக சொன்னாள் இங்கே இருக்கிறேன். இல்லையா வேறு வீட்டுக்குப் போகிறேன்.”
“அதாவது இந்த வீட்டில் நீ இருக்கணும் என்றால் நாங்களும் சம்பளம் தர வேண்டுமா?” சேஷாத்ரி கேட்டான்.
”ஆமாம் .சும்மா கிடைக்கும் உழைப்பிற்கு எப்படி மதிப்பு இல்லையோ, வெறுமே சாப்பிடும் சாப்பாட்டிற்கும் கௌரவம் இருக்காது. தாயின் மதிப்பு எப்படியும் உங்களைப் போன்றவர்களுக்கு எப்படியும் தெரியப் போவதில்லை. குறைந்த பட்சம் தாயின் உழைப்புக்கு விலை கொடுத்தாவது அந்த நன்றிக்கடனைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.” சரஸ்வதியின் இதழ்களில் வரண்ட புன்னைகைத் தவிழ்ந்தது.
“எல்லோரும் என்ன நினைத்துக் கொள்வாங்க என்ற வருத்தம் கூட இல்லையா உனக்கு?”
“தாய்மார்கள் என்னைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்வார்கள். மகனைச் சார்ந்து வாழும் தாய்மார்களுக்கு என் வாழ்க்கை ஒரு படிப்பினையாக் இருக்கட்டும்.” சரஸ்வதி பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப முற்பட்டாள்.
சேஷாத்ரி பதற்றத்துடன் ஒரு அடி முன்னால் வைத்து தாயின் கையிலிருந்து பெட்டியை வங்கிக் கொண்டான். “நீ கேட்ட படியே பணம் தருகிறேன். உள்ளே வாம்மா” என்றான்.
“ஒரு மாத அட்வான்ஸ் முன்னாடியே கொடுத்து விட வேண்டும்.” சரஸ்வதி சொன்னாள்.
சேஷாத்ரியும் பத்மாவும் இயலாமையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

Series Navigation(76) – நினைவுகளின் சுவட்டில்எனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *