அன்னை & மனைவி நினைவு நாள்

This entry is part 9 of 11 in the series 10 மே 2020


சி. ஜெயபாரதன், கனடா++++++++

image.png

இல்லத்தில் அம்மாதான் ராணி !
ஆயினும்
எல்லோருக்கும் அவள் சேவகி !
வீட்டுக் கோட்டைக்குள்
அத்தனை ஆண்களும் ராஜா !
அம்மாதான் வேலைக்காரி !
அனைவருக்கும் பணிவிடை செய்து
படுத்துறங்க மணி
பனிரெண் டாகி விடும் !

நித்தமும்
பின்தூங்குவாள் இரவில் !
சேவல் கூவ
முன்னெழுவாள் தினமும் !
அம்மாவைத் தேடாத
ஆத்மாவே இல்லை வீட்டில் !
அம்மா இல்லா விட்டால்
கடிகாரத்தின் முட்கள்
நின்று விடும் !

எந்தப் பிள்ளைக்கும் அவள்
பந்தத் தாய் !
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு !
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு !
சமையல் அறைதான்
அவளது ஆலயம் !
இனிதாய் உணவு சமைத்துப்
பரிமாறி
எனக்கு மட்டும் வாயில்
ஊட்டுவாள் !

வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள் !

எப்போ தாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம் !
தப்பாது மிதி வாங்குவாள்
மூத்த தமயனிடம் !
காசு கேட்டுக்
கையை முறிப்பான்
கடைசித் தம்பி !
கடன்காரன் வாசலில் திட்டுவான் !
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும் !

இல்லத் தரசி தாரமாய்
வந்த பிறகு,
செல்லத் தாய் வேண்டாத
தொல்லைப் பிறவி !
தாயிக்கும் தந்தைக்கும்
சேய்கள் தரும்
ஆயுள் தண்டனை
ஓய்ந்து உய்வோர் இல்லம் !

ஓய்வைக் கொடுப்பது
தாயிக்கு முடிவில்
நோயும் வலியும்;
ஆயினும் சோறு பொங்கும்
அடுப்பினில் !
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம் !
வாழும் போது எவராலும்
வணங்கப் படாது,
செத்த பிறகு
தெய்வ மாகிறாள்

++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  May 10, 2020  (R-5) (On Mother’s Day)

Series Navigationதிசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *