This entry is part 31 of 40 in the series 8 ஜனவரி 2012


 

அக் கிராமத்தின் சிற்றோடைக்

கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை

செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும்

சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை…

கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க

கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான

இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கிக்

காத்திருக்கும் பாவனையில் … இடக்கை  நாடி தாங்க

வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின்

கை விரல்கள் சிலவற்றை காணவில்லை..

உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்….

 

அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ

எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை…

வயதான ஒருவர் சொன்னார் …

தன் சிறு பிராயத்தில்

கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது

நிற்க முடியாமல்ப் படுத்ததென்று…

யாரோ துப்பிய வெற்றிலை எச்சில்

உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்…

 

சிதைந்துக் கொண்டிருப்பது

வெறுமொரு கற்சிலயல்ல…

சிந்தையுள் காதலுடன் ..

யாரையோ நினைவிலேற்றி

மனமுழுக்க வடிவமைத்து

விரல்கள் வழி மனமிறக்கி

உளிகளில் உயிர் கொடுத்து

பலநாட்கள் பாடுபட்டுச்

செய்தெடுத்த …

எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர்

அற்புத சிற்பியின் காதலுடன்

கூடிய கலையும், உழைப்பும் கூடத்தான் …

 

– பத்மநாபபுரம் அரவிந்தன்-

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்மண் சுவர்