ஜென் ஒரு புரிதல் -26

This entry is part 5 of 40 in the series 8 ஜனவரி 2012

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது )

மலை ஏறுகையில்
——————–

நான் ஊதுபத்தி ஏற்றினேன்
நிலத்தைப் பெருக்கினேன்
ஒரு கவிதை வருவதற்காகக்
காத்திருந்தேன்

பிறகு நான் சிரித்தேன்
மலையின் மீது
என் உதவியாளர்கள் மீது
ஊன்றியபடி ஏறினேன்

மேகத்தின் பிசுறுகளை
எவ்வளவு அப்பக்கம்
தள்ளி விட்டது பார்
நீல வானம்
அதன் கலையில்
என்னால் ஆசானாக முடியுமா?

மீண்டும் நீர்வீழ்ச்சி அவதானிப்பில்
—————————————-

ஒரு வாழ்க்கை முழுதும் பேசாமல்
“இடி முழக்கமான மௌனம்”
அது “வெய் மா” * வழியாகும்
ஆனால் எந்த பிட்சுவும் கற்பிக்க இயலாத
இடம் ஒன்று இங்கே உள்ளது
சித்தி பெற்ற “தாவ் சீன்” ** னின்
“என்னால் கூற இயலாது” என்னும்
வார்த்தைகள் இப்போது புரிகின்றன
மிகவும் தெளிவாக
இந்தத் தண்ணீர் என் ஆசிரியர்

* – “வெய் மா”- “ழி லு வெய் மா” என்னும் சீனப் பழமொழிக்கு “ஒரு மானைச்
சுட்டிக் காட்டி குதிரை என்று கூறுதல் என்று பொருள்

** -“தாவ் சீன்”- நான்காம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சீனக் கவி

சற்று முன் நிறைவு செய்தது
——————————–
மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னே
ஒரு மாதம்
புத்தகங்களை மறந்து, ஞாபகம் வைத்து
மீண்டும் தெளிவாகி
பீறிட்டு வரும் தண்ணீர்
நிறைந்து ஒரு சுனையாவது போல்
அப்பழுக்கற்ற மௌனத்திலிருந்து
வெளிவருகின்றன கவிதைகள்

பித்து வார்த்தைகள்
———————-
ஆசையில்லாமல் வாழக் கற்க வேண்டுமென்றால்
அதன் மீது ஆசைப் படு
உனக்குப் பிடித்த மாதிரி நட
வெட்டியாயிருப்பதைப் பாடு
மிதக்கும் மேகங்கள்
வெட்டியாய் ஓடும் நீர்
அவற்றின் மூலம் எது?
விரிந்து பரந்த கடலிலும் நதியிலும்
அது எங்குமே கிடைக்காது

கொள்கை
———–
ஒரு பிட்சுவைப் பார்க்கும் போது
நான் பணிவாக வணங்குகிறேன்
ஒரு புத்தரைப்* பார்க்கும் போது
அவ்வாறு செய்வதில்லை

புத்தருக்கு வணங்கினால்
அது அவ்ருக்குத் தெரியாது
ஆனால் நான் ஒரு பிட்சுவுக்கு
மதிப்புக் கொடுக்கிறேன்
அவர் இங்கே நேரில் இருக்கிறார்
அல்லது இருப்பது போலத் தென்படுகிறார்

*- குறிப்பிடப்பட்டுள்ளது புத்தரின் சிலை வடிவம்

“ஹாவ் பா” வை நெருங்குகையில்
————————————-
(அந்த கிராமத்தின் நடுவில் சில ஓட்டு வீடுகளைப்
பார்த்து ரசித்தேன்)
நீரோடை, மூங்கில், மல்பெரி, ஹெம்ப்,
பனியும் மேகமும் சூழ்ந்த குடியிருப்புகள்
மென்மையான மோனமான இடம்
சொற்பமான உழப்பட்ட நிலம்
சில ஓடு வேய்ந்த வீடுகள்
எத்தனை பிறவிகள் நான்
வாழ வேண்டுமோ
இந்த எளிமையை எட்ட

ப்யூட்டோ கோயில்
———————-
மலையின் மடியில்
மறைந்திருக்கும் ஒரு
பொக்கிஷம் போன்ற கோயில்
பைன் மூங்கில்
உள்ளார்ந்த மணம்
புராதன புத்தர் அங்கே வார்த்தையின்றி
அமர்ந்துள்ளார்
ஆன்மீக நதிமூலம்
அவருக்கென பேசும் பீறிட்டு

————————————

பத்தாயிரம் மலைகளால் சூழப்பட்டு
சுற்றப்பட்டு வெளியேற வழியற்று
நீ இங்கே வரும் வரை
இங்கே வர வழியே கிடையாது
இங்கே வந்து விட்டாலோ
போக வழி கிடையாது

நான் கண்டதை எழுதுகையில்
———————————-
உயிரோடு இருப்பவை எல்லாம்
வாழ்ந்தாக வேண்டும்
வசப்பட்டது என்பதில்லாமல்
கிடைத்தவை என்று ஏதுமில்லை

மாயாஜால பெரிய விலங்குகளில் தொடங்கி
நுண்ணிய கிருமிகள் வரை
தன் வழியைத் திட்டமிடும் ஒவ்வொன்றும்
புத்தர், தாவோ வழி பிட்சு ?
தம் உழைப்பில் தளர்ந்து ஒயாமல்

காலையின் தூதுவனாய் சேவல்
ஒரு கானம் பாட இயலாதவனா?
என் பசி தீர நான் உணவுக்குத் திட்டமிடுகிறேன்
எனக்குக் குளிர் எனவே என்னைப் போர்த்துவர்

ஆனால் அம்மாப் பெரிய திட்டங்கள்
உனக்குத் துன்பத்தையே விளைவிக்கும்
உனது தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்
அத்தோடு முடிந்தது
ஒரு சிறு படகு
காற்றின் வழி
நீரைக் மென்மையாய்க்
கடைந்து முன் செல்லும்

Series Navigationகாதறுந்த ஊசிமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *