சொல்ல வல்லாயோ….

This entry is part 10 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது…….

சில நீர்த்துளிகளாய்,

சில தீக்கங்குகளாய்,

சில பூஞ்சிறகுகளாய்,

சில பெரும்பாறைகளாய்,

சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய்,

சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய்,

சில இன்சொப்பனங்களாய்,

சில கொடுங்கனாக்களாய்……

சிலவற்றில் நாம் சொஸ்தமாகிறோம்

சிலவற்றில் பஸ்பமாகிறோம்

சில நட்பு பாராட்டுகின்றன

சில நம்மை எதிரியாய் அடையாளப்படுத்துகின்றன

பிறர்க்கும், நமக்கே நமக்கும்.

சொல்லில்லா இசை அமைதியென்பார் மனம்

கேட்கும்போது எதையும் சொல்லாமலாயிருக்கும்?

நினைவின் சொல்லுக்கு விலை நவரத்தினங்களிலென்றால்

மறதியின் விலை நட்சத்திரம்!

சொல்லில்லா உறக்கம்

பத்திரமாய் நாம் தங்கும் சத்திரமாய்

தினம் தினம் உயிர்த்தெழும் வித்தகமாய்…

மொத்தமாயுள் நுழைந்து ஆக்கிரமிக்கும் சொல்லுக்கு

முகமுண்டு முதுகுத்தண்டுண்டு மூச்சுண்டு மூவேழுலகுண்டு

மூவேழிருபத்தியொன்றுமட்டுமில்லையென்ற மனக்கணக்குண்டு.

மாயமானின் மெய்யறிந்தும் பிடிக்கப் பாய்ந்தோடும் எப்போதும்

சிப்பிக்குள் முத்தாய் பிறைசூடி பித்தாகி நிற்கும்

மனமெனும் ’மாஜிகல் ரியலிஸ’த்தில்

இல்லாத பல்லின் வலியாய்

சத்தமேயின்றி யொலித்துக்கொண்டிருக்கும் சொல்

சொல்லாய் சொல்லுக்குள் சொல்லாய்……..

  •  
Series Navigationநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *