Posted in

மகிழ்ச்சியைத் தேடி…

This entry is part 4 of 45 in the series 9 அக்டோபர் 2011

ரிஷி

ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் ‘ராணுவ வீரனின் பொம்மை கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.

மகிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே நிர்மாணித்தவனாயிற்றே!

“கோள்கள் எத்தனை?”
”ஏழு”
”இல்லை, ஒன்பது”
“வனராஜா யார்?”
“கொரில்லா”
“இல்லை, சிங்கம்”

தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும் மகன்.
[தவறாய் இருந்தால்தான் என்ன!]

எனில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:

”அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
”இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.

நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம் என்று பரிவோடு
கூறுகிறது பிள்ளை.

”வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்-
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக…
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
‘இந்தச் சின்னஞ்சிறு பகுதியே
மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.
‘என்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.
காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.

[* சமர்ப்பணம்: The Pursuit of Happy[i]ness திரைப்படத்திற்கும் அதில் நடித்த Will Smith மற்றும் அவருடைய மகன் Jade Smithற்கும்]

Series Navigationஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனைவாழ்க்கை எதார்த்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *