This entry is part 3 of 26 in the series 10 மே 2015

சேயோன் யாழ்வேந்தன்

 

மழையென்பது யாதெனக் கேட்கும்

மகவுக்குச் சொல்வேன்

நீ எனக்கு

நான் உனக்கு

 

மழையென்பது யாதென

சின்ன வயது சேயோனிடம் கேட்டால்

அம்மா வடை சுடுவதற்கு

சற்று முன் வருவதென்பான்

 

மழையென்பது யாதெனக் கேட்கும்

மனைவிக்குச் சொல்வேன்

வெறுத்துக் கெடுக்கும்

விரும்பியும் கெடுக்கும்

உன்னைப் போல்தான் அதுவும்

பொய்த்துக் கெடுக்கும்

பெய்தும் கெடுக்கும்

 

மழையென்பது யாதென

என்னை நான் கேட்பேன்

இறுகிக் கிடக்கும்

மனித மனங்களில்

கொஞ்சமாவது

ஈரம் தோன்ற

நனைத்து விடவேண்டுமென்ற

பிரபஞ்சத்தின் விடாமுயற்சியென்று

சொல்லிக்கொள்வேன்

 

ஒழுகும் இடங்களில்

அலுமினியக் குண்டான்களை வைத்துவிட்டு

ஈர விறகு அடுப்புக்கு

ஓய்வு கொடுத்து விட்டு

அழும் பிள்ளைகளை

அணைத்தபடி நிற்கும்

அதோ அவளிடம்

மழையென்பது யாதெனக் கேட்டால்

சனியன் என்பாள்

seyonyazhvaendhan@gmail.com

 

Series Navigationசும்மா ஊதுங்க பாஸ் -1கலப்பு