மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

author
8
0 minutes, 3 seconds Read
This entry is part 16 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

–     இரா.உமா
mathavidai

 

“எந்நாடு போனாலும்

தென்னாடுடைய சிவனுக்கு

மாதவிலக்கான பெண்கள் மட்டும்

ஆவதே இல்லை”

& கவிஞர் கனிமொழி

மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?

Geetha Ilangovan

மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.

அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?

(மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் தோழர் கீதா)

தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.

இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.

கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது.  பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.

மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.

மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.

மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.

 

 

 

 

Series Navigationமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18நாயினும் கடையேன்நான்…
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இரா. உமா அவர்களே, மாதவிலக்கு பற்றிய விழிப்புணர்வை உண்டுபண்ணும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. இது பெண்கள் வயதுக்கு வந்தபின் ( பருவம் எய்துவது ) உண்டாகும் உடலின் செயலியல் மாற்றம் என்பதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. இதை தீட்டு என்று நாம் அழைத்தாலும் இது தனிமைப் படுத்தவோ அல்லது மதச் சடங்குகளுடன் தொடர்புடையதோ அல்லவென்பதையும் நாம் தெளிவு படுத்த வேண்டும். நம்முடைய சமுதாயத்தில்தான் வயதுக்கு வந்ததை பறை சாற்றும் வண்ணம் இதை பெரிய சடங்காகவும் நிகழ்த்தி வருகின்றனர். வேறு முன்னேறிய சமுதாய மக்களிடையே இவ்வாறு நடப்பதில்லை. ஆகவே மதச் சடங்குக்கும் நம்பிக்கைக்கும் மாதவிலக்குக்கும் கொஞ்சமும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. அவை அனைத்தும் நம் முன்னோர்கள் அறியாமையால் பின்பற்றிய மூட நம்பிக்கையும் பழக்க வழக்கமாகும். சமுதாய விழிப்புணர்வை உண்டுபண்ணும் இக் கட்டுரைக்காக நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    I I M Ganapati Raman says:

    //நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். //

    பலவற்றைப்பற்றிப் பேச வேண்டாம். இந்த கட்டுரைப்பொருளான பீரியடைப்பற்றி மட்டுமே பேசலாம். மதம் சொல்லும் தீட்டு, அல்லது புனிதம் – இவற்றை மறுக்க‌ அறிவியலுக்கு என்ன தகுதி?

    மதங்கள் பலபல விடயங்களைத் தெரிவிக்கின்றன. அவையனைத்தும் அறிவியலுக்குட்பட்டவைய‌ல்ல. உட்படா வெளியைச்சார்ந்தவை. அவற்றுள் ஒன்று உடலை வைத்துப் பின்னப்படும் மதக்கருத்துக்கள். அறிவியலின் எல்லை மனிதனின் சிந்தனையின் எல்லை வரைக்கும்தான். மதத்தின் எல்லை அளவிட முடியாதது. எனவே கட்டுரையாளரின் கருத்து பிழையானதே.

    மதம் சொன்னது பிழை என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை. ஆனால், அதைத் தவிர்த்திருந்திருக்கலாமென ஆதங்கப்படலாம்.

    //மதச் சடங்குக்கும் நம்பிக்கைக்கும் மாதவிலக்குக்கும் கொஞ்சமும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. அவை அனைத்தும் நம் முன்னோர்கள் அறியாமையால் பின்பற்றிய மூட நம்பிக்கையும் பழக்க வழக்கமாகும். //

    மூட நம்பிக்கை என்று மதத்தில் கிடையாது. எல்லாம் நம்பிக்கைகளே. அவற்றுள் நமக்குப்பிடிக்காதவைகளை மட்டுமே ‘மூட நம்பிக்கைகள்’ என்றழைக்கிறோம். இது மூடநம்பிக்கையென்றால், வானத்திலிருந்து அசிரீரி வந்தது என்பதையும் கன்னி குழந்தை பெற்றதையும் மூடநம்பிக்கைகள் என்று சொல்லமாட்டீர்கள்; காரணம், உங்களுக்கு அவை பிடிக்கும்.

    பிறமதங்களில் எப்படியோ தெரியாது. இந்துமதத்தில் menstruating women are not allowed to enter puja room or temples because on those days, they are polluted beings. ஆனால், இஃதோடு மட்டும் நின்றுவிட வேண்டும். அதற்கப்பால் இப்படிப்பட்டத் தீட்டை ஒரு வன்கொடுமையாக மாற்றியது மதம் அன்று. மதத்தைத் தவறாகப்பயனபடுத்தல் எனலாம். கூவிலபுரத்தில் நடந்தவை அப்படிப்பட்டவை.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // பலவற்றைப்பற்றிப் பேச வேண்டாம். இந்த கட்டுரைப்பொருளான பீரியடைப்பற்றி மட்டுமே பேசலாம். மதம் சொல்லும் தீட்டு, அல்லது புனிதம் – இவற்றை மறுக்க‌ அறிவியலுக்கு என்ன தகுதி? //

      அறிவியல் அப்படித்தான். மதன் என்பதில் உள்ள அறிவியல் கூறுகள் பெரும்பாலும் உள்ளுணர்வு மற்றும் அனுபவம் சார்ந்தவை. எனவே அவை பிழையாக – உங்களுக்கு பிழை என்ற விளி ஒவ்வாமையாக இருப்பின், காலத்துக்குத்தகுந்த ஒத்திசைவின்மை என்று சொல்லிக்கொள்ளுங்கள் – இருப்பதில் குற்றமோ ஆச்சர்யமோ இல்லை.

      ஆனால் அறிவியல் கறாரான தர்க்க முறைக்கு உட்பட்டது. தர்க்கத்தை தொடர் சோதனைகள் மூலம் கோட்பாடாக மாற்றி உலகளாவியதாக்குகிறது. அதில் பிழை ஏற்படின் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதே தர்க்க வழியில் அவற்றை களைந்து முன்னேறுகிறது. அந்த முறையில், மாதவிலக்கு என்பது சாதாரண இயற்கை நிகழ்வே, அதில் புனிதத்துக்கோ, விலக்குக்கோ அறிவியல் ரீதியான ஆதாரமில்லை என்கிறது. சுகாதாரம் போதும் என்கிறது. ஒருவேளை, மருத்துவம் முன்னேறாத காலங்களில் மாதவிலக்கான காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல்/உள ரீதியான சோர்வு காரணமாக பெண்கள் முழு ஓய்வில் இருத்தல் நலம் என்ற பார்வையாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள் சூழச்சூழ அறிவியல்ரீதியில்லாத பல நம்பிகிக்கைகளும் ஏற்றப்பட்டு ‘புனிதம்’, ‘தீட்டு’ போன்ற கருதுகோள்கள் பிறந்திருக்கலாம். அறிவியல் தனது பார்வையில் தரப்படுத்தப்பட்ட சோதனையின்பாற்பட்டு தனது கருத்தைச்சொல்கிறது. அவ்வளவே. இதில் தகுதிக்கோ தகுதியின்மைக்கோ இடமில்லை.

      1. Avatar
        I I M Ganapathi Raman says:

        //ருத்துவம் முன்னேறாத காலங்களில் மாதவிலக்கான காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல்/உள ரீதியான சோர்வு காரணமாக பெண்கள் முழு ஓய்வில் இருத்தல் நலம் என்ற பார்வையாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.//

        So, the isolation was not artificial but a natural corollary of natural causes. இயறகை பெண்ணை அவ்வாறு படைக்க மனிதன் அதைப் பயன்படுத்திக்கொண்டான். மதம் அதை நன்றாகத்தான் பயன்படுத்தியது அதாவது: ஓய்வில் இருத்தல் நலம்”‘ என்பதால், அவர்கள் மதச்சடங்குகளிலிருந்து தனிமைப்படுத்தப்படவேண்டும். They are polluted is an unwanted growth of such thought as you have pointed out. அவர்கள் நலத்துக்கு என்றுதான் எடுக்க வேண்டும். மாறாக சிவனுக்குப்பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது.

        நான் எழுதிய இன்னொரு பின்னூட்டம் போடப்படாததால் என் இன்னொரு கருத்து இங்கு வைக்கப்படவில்லை. அதாவது, மதம் மட்டுமன்று, அரசும் பெண்களைத் தாங்களே தனிமைப்படுத்த உதவியாக பெண்கள் அறை ஒன்றை அலுவலகங்களில் கட்டிவைத்திருக்கிறது. தனியாரும் அப்படிச்செய்ய ஆணையிட்டிருக்கிறது. அங்கு அவர்கள் சென்று ஓய்வெடுக்கலாம். எப்படி மெட்டரினிடி விடுப்பு 3 மாதங்கள் சம்பளத்தோடு தரப்படுகிறதோ, எப்படி சைல்ட் கேர் லீவ் 3 மாதங்கள் வரை கொடுக்கப்படுகிறதோ அப்படி. (உங்கள் குழந்தை 12 வயது வரும் வரைக்கும் சைல்டு கேர் லீவு எடுக்கலாம்.) No feminist has objected to treating woman by such grants. Why only in religion?

        ஆக, இவற்றிலிருந்து என்ன தெரிகின்றன‌? அரசோ மதமோ, பெண்ணை இழிவு படுத்தவில்லை. பெண்ணின் நலத்தைப்பேணவே சிலவற்றை வைத்திருக்கின்றன. அவை ஒரு தடைக்கற்களாகவும் இழிவுபடுத்தும் செயல்களாகவும் இருப்பதாகவும் செய்தல் இன்றைய பெண்ணிய சிந்தனையாள்ர்களின் அஜன்டா. அதாவது அவர்களுக்கு ஏதாவது சென்சேஷனலாக இருக்கவேண்டுமெனபதால். கனிமொழியின் கவிதை அதைத்தான் காட்டுகிற்து. Women should accept the nature of their bodies and be contented and praise God for making them diifferent. In other words, be proud of being a woman. The whole complaint about the do’s and dont’s on menstruating women is myopic. (Our Tamil women appear to be not familiar with the new thinking in western world of feminism. There. they have changed their course from ancient ways of ‘defense for defense sake’. Now they say, Feel proud of being different. Difference does not imply demeaning of your dignity. You can hold your head high just as men, who don’t complain for being different from you.

        அதே சமயத்தில் கூவலபுரத்தில் நடந்தவை இப்படிப்பட்ட பாசிட்டிவ் தனிமைப்படுத்தலல்ல. அவை வன்கொடுமை. எந்தவொரு நல்ல விசயத்தையும் கெடுக்கலாம். கத்தியை வைத்து கத்தரிக்காய் வெட்டலாம். அதற்குத்தான் அது. கொலையும் பண்ணலாம். அதற்கன்று அது.

        I wonder why such ordinary comments are censored by Thinnai.

  3. Avatar
    I I M Ganapathi Raman says:

    //தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. //

    எழுத்தாளர்கள் மிகைப்படுத்துவார்கள். அது அவர்கள் பொழைப்பு. கட்டுரையாளர்களுமா?

    மருந்துக்கடைகளில் போய் ஆணுறை வாங்குவார்கள். நாப்கின்ஸ் வாங்கமாட்டார்கள். எல்லாக்கடைகளிலும் கிடைக்கும். டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்களில் வாங்குபவர்களும் பில் போடும ஆணகளும் எவ்வித உணர்வும் கொள்வதில்லை. எவரும் மறைப்பதில்லை. எந்த இரகிசயமும் இல்லை assuming she means by மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகள் the napkins.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    நம் முன்னோர்கள் அறியாமையின் காரணமாக தவறான பலவற்றை நம்பினர். ஒரு காலத்தில் 1500 ஆம் வருடத்துக்கு முன் அநேகமாக எல்லா இனத்தினரும், மதத்தினரும் நாம் வாழும் உலகை மையமாக வைத்துதான் சூரியனும் சந்திரனும் இயங்குவதாக நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது தவறு என்றும் விண்வெளியில் காணப்படும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றுதான் நாம் காணும் சூரியன் என்றும் அதைத்தான் பூமி சுற்றுகிறது என்ற உண்மையை போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் சொன்னதை எல்லா இனமும் மதமும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதுபோன்று தவறான கருத்தை தவறுதான் என்று தெரிந்த பின்பு அதை விட்டுவிடுவதே மேல். அதை விடுத்து அதை வைத்து இன்னும் சர்ச்சை செய்வது வீண். மாதவிலக்கு பெண்களுக்கு ஏன் வருகிறது அதன் முக்கியத்துவம் என்ன என்பதை உலக ரீதியில் மருத்துவ வல்லுநர்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வதே அறிவுடமையாகும்…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    Guru Ragavendran says:

    \சமையல் முதலான வேலைகளை செய்யும் பெண்ணுக்கு தொடர்ந்து இரத்தம் ஒழுகும் நிலையில், இன்றைக்கு போன்று நாப்கின்கள் இல்லாத காலத்தில் மாதவிடாய் காலத்தில் வீட்டு வேலைகளில் சேர்க்காமல் தனித்து இருக்கச் செய்வதில் நியாயம் இருக்கிறது. ஆங்காங்கே இரத்தம் தோய்வதை தடுக்க ஓரிட‌த்தில் இருக்க செய்வதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு கூட ஒருவேளை தொடர்ந்து எங்காவது இரத்த போக்கு இருந்திருந்தால், அவனை எல்லா வேலைகளிலும் சேர்த்திருக்க மாட்டார்கள்தான். ஆனாலும் மாதவிடாய் காலத்தில் தீண்டத்தகாதவர்களாக வைப்பதில் நியாயம் இல்லை, அல்லது எதற்கோ ஆரம்பித்து அந்த காரணம் தெரியாமல் எங்கோ போயிருக்கிறது.இன்றைய‌ கால‌த்தில் மாற‌வேண்டிய‌துதான். ஆனால் சுத்த‌மாக‌ ஒன்றுமே இல்லை என‌த்தூக்கிப் போட‌வேண்டிய‌தில்லை. மாத‌ம் முழுக்க‌ வேலை செய்யும் ம‌னைவிக்கு மூன்று நாட்க‌ள் க‌ண‌வ‌ன்மார்க‌ள் செய்யும் வ‌ழ‌க்க‌ம் இருக்க‌ட்டும்.

    கொசுறு செய்தி. டாக்ட‌ர் ஜான்ச‌ன் கூறுவ‌துபோல் காப்பர்நிக்கஸ் வ‌ந்த‌பின்தான் ந‌ம்நாட்ட‌வ‌ர் பூமி சூரியனை சுற்றுகிறது என‌த்தெரிந்துகொண்டார்க‌ள் என‌ ப‌ல‌பேர் நினைக்கிறார்க‌ள‌. அது த‌வ‌று. காப்பர்நிக்கஸ்க்கு ப‌ல‌ ஆயிர‌ம் வருட‌ங்க‌ளுக்கு முன்பே வேதத்திலும், ஜ்யோதிஷத்திலும் ந‌வ‌கிர‌ஹ‌த்தில் சூரிய‌னை ந‌டுவில்தான் வைத்தார்க‌ள். ‘ஆதி’த்ய‌ன் என‌ முத‌லாவ‌தாக‌ வைத்தார்க‌ள். இந்த‌ கிர‌ஹ‌ங்க‌ளின் ச‌க்தி பூமியில் எப்ப‌டி பாதிக்கிற‌து எனும் வ‌கையில் ஜ்யோ சென்ட்ரிக்காக‌ பூமியை மைய‌மாக‌ வைத்து பார்த்தார்க‌ள். ந‌வ‌கிர‌ஹ‌ங்க‌ளில் பூமி இல்லை என்ப‌தை க‌வ‌னிக்க‌வும்.குரு ஒருமுறை சுற்றிவ‌ர‌ 12 வ‌ருட‌ங்க‌ள் எனும்போது அது சூரிய‌னை சுற்றிவ‌ர‌த்தான், பூமியை அல்ல‌ என்ப‌து இன்றைய‌ அறிவிய‌ல் கால‌த்தில் தெளிவாக‌த் தெரியும். கிர‌ஹ‌ங்க‌ளின் சின்ன‌ச்சின்ன‌ அசைவுக‌ளை க‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு பூமியும் ஏனைய‌ கிர‌ஹ‌ங்க‌ளும் சூரிய‌னை சுற்றுகிற‌து எனும் விஷ‌ய‌ம் ரொம்ப‌ ரொம்ப‌ சாதார‌ண‌மான‌து.

  6. Avatar
    ஷாலி says:

    //நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன.//

    பெண்ணிடம் இயற்கையாக உருவாகும் பாலியல் வளர்ச்சி, மாத சுழற்சியை தீட்டு என்று மதம் ஒதுக்கி வைப்பதாக கூறுகிறார். சரி,மதங்கள் என்ன கூறுகின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.

    மாதாமாதம் கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதன் காரணத்தை வேதகாலம் இப்படிக்கூறுகிறது.

    இந்திர ராஜ்யத்தில் புரோகிதராக இருந்தான் விஸ்வரூபன்.

    புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான். இது தெரிந்த இந்திரன் – விஸ்வரூபனின் தலையை கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான். விஸ்வரூபன் ஒரு பிராமணத் தந்தைக்கும் அசுர தாய்க்கும் பிறந்தவன்.பிராமண தந்தைக்குப்பிறந்ததால் விஸ்வரூபன் பிராமணன் ஆகிறான்.

    ஒரு பிராமணனை கொலை செய்தால் பிரமஹத்தி தோஷம் பிடிக்கும்.இந்த தோசத்தில் மாட்டிய இந்திரன் இதிலிருந்து விடுபட எங்கெங்கோ அலைந்தான்.இறுதியில் தோஷத்தின் ஒரு பகுதியை மரங்களிடமும்,பூமியிடமும்,பெண்களிடமும் பகிர்ந்து கொடுத்தான்.இந்திரனின் பிரமஹத்தி தோஷமே இன்று பெண்களிடம் மாதவிடாயாக வெளியேறுகிறது.எனவே இந்த தோஷமுள்ள பெண்கள் அச்சமயம் கோயிலுக்கு செல்லக்கூடாது. இது இந்து சமயம் கூறும் செய்தி.

    இதைப்படித்து,நமக்கு இயல்பாக வரும் ஒரு கேள்வி, இந்திரன் பிரமஹத்தி தோஷம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு மாதவிடாய் வந்ததில்லையா?

    “சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

    அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக….”.—பைபிள். (லேவியராகமம் – 15:19-30 )

    இது மாதவிடாயைப்பற்றி கிருஸ்தவம் கூறும் செய்தி.

    இதைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

    மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: ‘அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.’ (அல் குர்ஆன் 2 : 222)

    நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா அம்மையார் கூறுகிறார்கள்.,
    “நான் மாதவிடாய் வந்தவளாய் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் என் மடி மீது சாய்ந்தவாறு திருக் குர்ஆன் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.”—நூல்.-முஸ்லிம்-172.

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *