முன்னணியின் பின்னணிகள் – 29

This entry is part 16 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
நாங்கள் பிளாக்ஸ்டேபிளை அடைகிறோம். ராய்க்காக ஒரு கார், ரொம்ப அலங்காரமாயும் இல்லை, எளிமையாயும் இல்லை, காத்திருந்தது. சாரதியிடம் எனக்காய் ஒரு குறிப்பு… மறுநாள் திருமதி திரிஃபீல்டுடன் மதிய உணவுக்கு வாருங்களேன் நீங்கள். நான் ஒரு வாடகைக்கார் பிடித்து பியர் அன்ட் கீ ஓட்டலை அடைந்தேன். ராய் சொன்னார். இப்ப முன்பக்கமாகவே புது மரைன் ஓட்டல் ஒன்று வந்திருக்கிறது. வசதிகள் அதிகமான பெரிய விடுதி அது, என்றாலும் எனது பால்யகாலத்தில் இருந்தே நான் பார்த்துவந்த விடுதி இது, பியர் அன்ட் கீ. அதிலேயே தங்கலாம் என்றிருந்தது.
ரயில் நிலையத்தில் இருந்தே மாற்றங்களை நான் கவனித்தபடியே வர நேர்ந்தது. அது இருந்த இடமே பழைய இடம் அல்ல, நிலையமே புதிய தெருவுக்கு வந்திருந்தது. மேட்டுத் தெருவில் இருந்து பள்ளத்துக்கு காரில் போகிறதே விநோத அனுபவம். ஆனால் பியர் அன்ட் கீ, அப்படியே இருந்தது. மாற்றமே இல்லை. அதே கரடு முரடான வரவேற்பு. வாயிலில் யாருமே இல்லை. சாரதி என் பையை வைத்துவிட்டுப் போய்விட்டான்.
‘யாராவது இருக்கீங்களா?’ பதில் இல்லை. நான் மது விடுதிக்குப் போனேன். அங்கே அசிரத்தையாய் இளம் பெண் ஒருத்தி. தலை கலைந்து கிடந்தது. உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள். காம்டன் மெகன்சி எழுதிய புத்தகம். எனக்கு இங்கே அறை கிடைக்குமா, என்று அவளிடம் கேட்டேன். சட்டென கலைந்து சிதறினாப் போல என்னை நிமிர்ந்து பார்த்தாள். ம், என்றாள் அசுவாரஸ்யமாக. எனக்கு அறையை யாராச்சும் அடையாளங் காட்டினால் தேவலை, என்றேன் நான். எழுந்து கொண்டாள். கதவைத் திறந்து கீச்சிட்டாப் போல கூப்பிட்டாள். ”கேத்தி?”
”யாரது?” என்று உள்ளிருந்து குரல்.
”யாரோ ஆண், அறை வேணுமாம்.”
கொஞ்சநேரத்தில் ஒரு உருக்குலைந்த மூதாட்டி வந்தாள். அழுக்கு மூட்டை. அவள் உடையின் வண்ணங்களே மக்கி விட்டிருந்தன. நரைத்த தலை தாறுமாறாய்க் கிடந்தது. ரெண்டு மாடி கடந்து போய் சின்னதாய் ஒரு கச்சடா அறையைக் காட்டித் தந்தாள்.
”இதைவிட நல்லதா இருந்தாத் தேவலாம்…”
”பொதுவா வியாபாரிங்க வந்தால் இப்பிடி அறைகள் தான் கேட்பார்கள்…’ என்றபடி மூக்குச் சிந்தினாள்.
”வேற எதுவும் இல்லியா?”
”ஒற்றைப் படுக்கை அறை வேற இல்லை.”
”சரி டபுள் ரூம் குடுங்க.”
”போயி திருமதி பிரன்ட்ஃபோர்டைக் கேட்டுட்டு வரேன்…”
திரும்ப அவளுடன் முதல் மாடிக்கு இறங்கி வந்தேன். அவள் ஒரு கதவைத் தட்டினாள். கிழவி உள்ளே அழைக்கப் பட்டாள். கதவு திறந்தபோது பார்த்தேன். தாட்டிகப் பொம்பளை ஒருத்தி. அலை அலையாய் நரைக் கேசம். அவளும் எதோ வாசித்துக் கொண்டிருந்தாள். இங்க பியர் அன்ட் கீ- யில் பரவாயில்லை, எல்லாருக்குமே வாசிப்பு ருசி இருக்கு. ஏழாவது அறை எனக்குப் பாந்தமாய் இல்லை, என்று கேத்தி சொன்னதும், என்னையும் அவளையும் ஒரு விறைத்த பார்வை பார்த்தாள்.
”அஞ்சைக் காட்டு.”
அட ஒழுங்கா திருமதி திரிஃபீல்டு கேட்டுக்கொண்டபடி அவளோடவே தங்காமல் போனேன், பெரிய இவனாட்டும் முரட்டு ஜம்பம் உனக்கு. அதை விடு, ராய் புத்திசாலித்தனமான யோசனை சொன்னாரில்லையா? மரைன் ஓட்டல், அதிலாவது தங்கியிருக்கலாம். உன் பழமைபாராட்டும் நேசம் நாசமாய்ப் போக.
கேத்தி என்னை திரும்பவும் மாடிக்கு அழைத்துப் போனாள். அவள் காட்டித் தந்த அறை இப்போது சற்று பெரியது. இங்கிருந்து தெருவின் மேட்டுப் பகுதி தெரிந்தது. அறையில் அதிக இடத்தை அந்த இரட்டைக் கட்டில் தான் அடைத்துக் கொண்டிருந்தது. அந்த சன்னல்களை ஒரு மாத அளவில் யாரும் திறந்திருக்கவே மாட்டார்கள்.
”இது போதும்” என்றபடி ராத்திரிச் சாப்பாடு பற்றிக் கேட்டேன்.
”என்ன வேணாலும் கிடைக்கும்” என்றாள் கேத்தி. ”எங்ககிட்ட சாப்பிட எதுவும் இப்ப இல்லை. எது கேட்டாலும் போயி வாங்கியாந்து தருவேன்.”
ஆங்கிலேய விடுதிகள் பற்றித் தெரியும் தான் எனக்கு. ஒரு மீன் வறுவல், வாட்டிய இறைச்சி என்று சொன்னேன். பிறகு மெல்ல இறங்கி ஒரு நடை ஊருக்குள் வந்தேன். கடற்கரை வரை மெல்ல நடை. நிறையக் கட்டடங்கள் இப்போது அங்கே எழும்பியிருந்தன. சரளை நடைபாதை எடுத்திருந்தார்கள். வரிசையாய் பங்களாக்கள், குடில்கள்… காற்றலையும் இடமா இது என்றிருந்தது. ஆனால் தரை அங்கங்கே புதர் மண்டிக் கிடந்தது. இத்தனை வருடங் கடந்தும் கூட ஜார்ஜ் கெம்ப்பின் கனவு, இந்த இடத்தை பிரசித்தி பெற்ற கடல்வாசஸ்தலமாக மாற்றும் ஆசை, செயல்வடிவம் பெற முடியவில்லை என்றிருந்தது. கல்பாவிய தரையில் ஒரு ஓய்வு பெற்ற பட்டாளத்துக்காரர், ரெண்டு மூதாட்டிகள் நடந்து போனார்கள். மகா சமாதியாய்க் கிடந்தது அந்த இடம். மனித வாடையே இல்லை. கடல் காற்று சில்லிப்புடன் சிறு தூறலை வீசிச் சென்றது.
ஊருக்குள் போனேன். பியர் அன்ட் கீ விடுதிக்கும், டியுக் ஆஃப் கென்ட் விடுதிக்கும் இடைப் பிரதேசத்தில் கொத்துக் கொத்தாய் சிதறிய சனம், அந்த வெடவெடப்பை சட்டை செய்யவில்லை அவர்கள். அந்தப் பகுதிக்கே உரித்தான வெளிர் நீல விழிகள். கன்ன எலும்புகள் துருத்தி அதே பழுப்பு நிறம். அவங்க ஐயா மாதிரியே அவர்களும் இருந்தார்கள். அந்தக் காலத்தில் பார்த்தாப் போலவே அதோ மீனவர்கள், காதில் தங்க வளையம். பெரியவர்கள் மாத்திரமல்ல, வாலிபம் தாண்டிய பையன்களும் அதே கோலத்தில்!
சாவகாசமாய் நடந்து போகிறேன். ஒரு வங்கி, முகப்பெடுத்திருந்தது. ஆனால் நான் மெழுகும், உப்புத்தாளும் வாங்கிய அந்தக் கடை அப்படியே இருந்தது. ரெண்டு திரையரங்கங்கள் எழும்பியிருந்தன. அத்தனை பழமைக்கு அந்த திரைப்பட விளம்பரங்கள் சுவரோடு ஒட்டி சூழலுக்கு ஒட்டாமல்… கிழவிக்கு மேக் அப் போட்டாப் போல!
விடுதி திரும்பி சாப்பிட அமர்ந்தேன். கூடம் கலகலப்பின்றி குளிராய்க் கிடந்தது. ஆறாள் அமர்ந்து சாப்பிடும் பெரிய மேசையில் நான் ஒருத்தன் மாத்திரமே. பரிமாறியதும் யார்? இந்த தரித்திரம் பிடித்த கேத்தி. கணப்பு போட முடியுமா, என்று அவளைக் கேட்டேன்.
‘ ”இப்பவா? இந்த ஜுனிலா?” என உதட்டைப் பிதுக்கினாள். ”ஏப்ரலுக்குப் பிறகு நாங்க கணப்பு மூட்டுவதில்லை.”
சாப்பிட்டுவிட்டு மது விடுதிக்கு வந்தேன். ஒரு குவளை போர்ட் அருந்தலாம்.
”என்ன ஒரு அமைதி…” என்றேன் அந்த கலைந்த தலை மது மாதுவிடம்.
”ம்” என்று ஆமோதித்தாள்.
”ஒரு வெள்ளி இராத்திரி போல இங்க நிறைய சனம் இருக்கும், இல்லிங்களா?”
”அப்பிடிச் சொல்லிக்கலாம்…”
அப்போது பின் முற்றத்தில் இருந்து ஒரு குண்டு மனிதர் நுழைந்தார். கத்தரித்த வெண் சிகை. சிவந்த முகம். இவர்தான் விடுதியின் சொந்தக்காரராக இருக்கும்.
”திரு பிரன்ட்ஃபோர்டு?” என்று கேட்டேன்.
”அது நான்தான்” என்றார்.
”எனக்கு உங்க அப்பாவைப் பழக்கமுண்டு. நீங்களும் போர்ட் அருந்தலாமே?”
என் பெயரைச் சொன்னேன். பிளாக்ஸ்டேபிள்ல என் பட்டப்பெயர், மாஸ்டர் வில்லி. அதுதான் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. அதைத்தான் அப்போது அடையாளமாய்ச் சொல்லவேண்டி வந்தது. ஆனால் என்ன சோதனை, அவருக்கு என்னை அறிந்த ஞாபகம் இல்லை. ஆனாலும் நான் உபசாரம் பண்ணிய போர்ட்டை ஏற்றுக்கொண்டார்.
”இந்தப் பக்கம்… வியாபார விஷயமா வந்தீங்களா?” என்னைக் கேட்டார். ”இங்க வியாபாரிங்க தான் வர்றதும் போறதுமா இருக்காங்க. எங்களால என்ன முடியுமோ செஞ்சி தர்றோம் அவங்களுக்கு.”
நான் திருமதி திரிஃபீல்டைப் பார்க்க வந்திருக்கிறதைச் சொன்னேன். அவரை நான் என்ன விஷயமாய்ப் பார்க்க வந்தேன் என்பதை அவரே யூகிக்கட்டுமே?
”ஆமாமா, பெரியவர் இங்க அடிக்கடி வந்து போவாரு…” என்றார் திரு பிரன்ட்ஃபோர்டு. ”இங்க வர்றது அவருக்குப் பிடிச்ச சமாச்சாரம் தான். உள்ள வருவாரு, கடுக்னு எதும் குடிப்பாரு ஆனால் எப்பவும் அவர் போதையானதே கிடையாது. விடுதிக்கு வந்து சரக்கடிச்சிக்கிட்டே எதுவும் பேசிட்டிருப்பாரு. மணிக்கணக்கா எல்லார் கூடவும் சகஜமாப் பேசுவாரு… திருமதி திரிஃபீல்டுக்கு அவரு இங்க வந்து, இப்படி கண்டவன் கூடயும் பேசிச் சிரிக்கறது பிடிக்காது.
… அவர் வீட்டில் யாராண்டயும் சொல்லிக்காமயே நழுவி ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு இங்க வந்துருவார் அவர். அந்த வயசு, காலாற நடக்கறது அவருக்கு வேண்டியிருக்கில்லே? அவரை வீட்ல காணம்னால் அவர்சம்சாரத்துக்கு அவர் எங்க போயிருப்பார்னு தெரியும். உடனே இங்க தொலைபேசி வரும்… ஐயா அங்க இருக்காங்களா?… உடனே கார் எடுத்துக்கிட்டு இங்க வருவாள். வந்து என் பெண்டாட்டியை உள்ள வந்து பார்ப்பாள்.
”போயி அவரை கூட்டிட்டு வாங்களேன், திருமதி பிரன்ட்ஃபோர்டு” என்று வேண்டிக்கொள்வாள். ”அங்க அத்தனை மக்கள் மத்தில நான் போயி அவரைக் கூப்பிடறது எனக்கு முடியல்ல” என்பாள். இப்ப திருமதி பிரன்ட்ஃபோர்டு கூடத்துக்கு வந்து அவரைக் கூப்பிடுவாள். ”திரிஃபீல்ட் ஐயா. திருமதி திரிஃபீல்ட் கார்ல உங்களைத் தேடி வந்திருக்காங்க. உங்க பீரை முடிச்சிட்டிங்கன்னா உங்களை அவள் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்…”
… அவர் உள்ள நுழையும் போதே திருமதி பிரன்ட்ஃபோர்டிடம் நான் இங்க இருக்கறதா என் சம்சாரம் தொலைபேசியில் கேட்டால் சொல்ல வேணாம்னு தான் சொல்லுவாரு. கட்டாயம் தொலைபேசியும் வரும். ஆனால் நாங்க எப்பிடி சொல்லாமல் இருக்க முடியுஞ் சொல்லுங்க. மனுசன் வயசாளி. நாம பொறுப்பு ஏத்துக்க முடியாதில்ல?
… இங்கதான் பாரிஷ்ல அவர் பொறந்தது தெரியும்ல? அவரோட முதல் மனைவி இந்தப் பக்கம் தான். பிளாக்ஸ்டேபிள் பொண்ணு. அவள் செத்து வருஷங்களாகுது. எனக்கு அவளைத் தெரியாது. இவரு ரொம்ப ஜாலியான பெருசு. ஒரு பந்தா கிடையாது. லண்டன்ல அவரை ரொம்ப உயர்வாப் பேசறாங்கன்னு கேள்வி. அவர் காலமானதும் எல்லா நாளிதழிலும் அவரைப் பத்தி போட்டாங்க. ஆனால் அவரோட பேசினால் இத்தனை பெரிய ஆளா இவருன்னு நமக்குத் தெரியாது பாத்துக்கிடுங்க.
… உங்களையும், என்னையும் போல அவரும் ஒரு மணல்துகளாட்டந் தான் தோணும். ஆனால் அவர் எப்ப வந்தாலும் நாங்க அவருக்கு தன்மையா மரியாதை குடுத்து நடந்துக்குவம். இங்கயே அவருக்கு ஈசி சேர் இருக்கு. அதைக் கொண்டாந்து போடுவம். ஆனால் விடுதிக் கூடத்தில் எல்லாரோடயும் காலைத் தொங்கப்போட்டு உட்காந்து பேசணும்னு அவர் பிரியப்பட்டார். எனக்கென்னவோ வேற எங்கயும் விட இங்க அவர் ரொம்ப சந்தோஷமா இருந்தார்னுதான் படுது.
… மது விடுதிகள் அவருக்குப் பிடித்திருப்பதாக அவரே சொல்லுவார். ¢இங்கதான் வாழ்க்கை சுழிப்போட தெரியுது. வாழ்க்கை அற்புதமான விஷயம் அப்பாம்பாரு. விசித்திரமான மனுசன்யா அவரு. எங்க ஐயா போலத்தான் அவரும். ஆனால் எங்கய்யா மருந்துக்குக் கூட ஒரு புத்தகம் வாசித்தது கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு போத்தல் பிரஞ்சு பிராந்தி இருந்தாப் போதும் அவருக்கு. 78 வயசில் அவர் தவறிப்போனார். அதுதான் அவரது முதலும் கடைசியுமான படுக்கை. அவர் தலைவலி ஜுரம்னு படுத்ததே கிடையாது.
… பெரியவர் திரிஃபீல்ட் இறந்தது எனக்கே என்னமோ இழப்பாத்தான் இருந்தது. திருமதி பிரன்ட்ஃபோர்டு கிட்ட நான் சொல்லிட்டே யிருந்தேன். அவரது ஒருபுத்தகத்தையாவது நான் படிக்கணும்டின்னேன். அவர் இங்கத்த இடங்கள் பத்தி தான் நிறைய எழுதினாராமே?…”
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *