Posted in

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 13 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

 

 

  1. தினம் நிகழும் கவியின் சாவு

அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத்

தின்னும்போதும்

ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து

அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும்

அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ

சிறு கவிதையொன்றில்

குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு

தரச்சென்றவனை

ஒரு கையில் கடப்பாரையும்

மறு கைநிறைய ஈரச்சாணியும் ஏந்தி

வழிமறித்த வாசக – திறனாய்வாளர் சிலர்

கண்ணனை மறைமுகமாய் புகழ்ந்தேத்தும் நீ

கொடூர நீச மோச நாச வேச தாரி

யென் றேச, பழி தூற்ற

ஏதும் பேசாமல் காற்றுவெளியிடைக் கண்ணன்

 மனநிலையைக் கண்டுவர

தன்வழியே காலெட்டிப்போட்ட கவி

தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்:

’கிட்டும் வாசகப் பிரதிகள் வரம் மட்டுமல்ல…

கட்டுடைத்தலில் தட்டுப்படுவது

படைப்பாளியின் அடையாளம் மட்டுமல்ல’.

 

2.அணுகுமுறை

சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடச் சொன்ன

பழமொழி

சக்கையை உட்கொண்டு சாரத்தை உமிழச்சொல்லும்

நவீனமொழியாகியதில்

வீடெல்லாம் குப்பைகூளங்கள்

குவிந்திருக்க

கழிவுத்தொட்டிகளெல்லாம்

பசுங்கனிகளும் புதுமலர்களும்

நிரம்பிவழிய………

 

Series Navigationமதுர பாவம் கவியின் இருப்பும் இன்மையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *