வன்மம்

This entry is part 1 of 8 in the series 6 ஜனவரி 2019

‘எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே’-அவ்வையார்

‘ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது’
மருமங்குடி கிராமத்து அண்ணனும் தம்பியும் பேசிக்கொண்டார்கள்.
பழைய அம்பாசிடர் காரின் டிக்கியில் தம்பியின் பெண். அவள் வெட்டுக்கொட்டகைக்குஏற்றப்படும் பன்றிக்குட்டியாய்கட்டிக்கிடக்கிறாள்.தம்பிபெற்ற ஒரே மகள். காவிரிக்கரை மீதுள்ள பெருநகரத் தனியார்க்கல்லூரியில் படித்துவந்தவள்.தம்பியின் எதிர்வீட்டுப்பையன் அவனும் அதே கல்லூரியில் படித்துவந்தான்.
இருவருக்கும் இடையே காதல், அந்தத் தீயை யார் மூட்டிவிட்டது.எதற்காக அதனைவளர்த்துவிட்டிருக்கிறார்கள்.அக்காதல் பயணம் நஞ்செனத் தொடர்ந்தது.
‘வாயில துணி வச்சி அடச்சி அவ கையையும் காலையும் கட்டிப்போட்டு காரு டிக்கியில மடக்கி வச்சி இருக்கேன். இந்நேரம் பாதி செத்து இருப்பா.நானு தான்பாவி, அப்பன். அவளுக்கு நான் அப்பன். கிழக்குமா மணையில குந்தி அந்த உதிக்கிறதெய்வத்தைக் கும்பிபுட்டு மாலைய எடுத்துப்போட்டு கட்டிக்குடுக்கவேண்டிய கம்முனாட்டி நான்.என் தலை எழுத்து எப்பிடி ஆயிடுச்சி .அண்ணே’ ஓ வென்று அழுதான்.
‘இப்ப்க்கி அழுதென்னா ஆவும் தம்பி?.நாம பெத்த முண்டத்துக்கு அவ பாழும்வயத்துல செம அஞ்சி இல்ல ஆறு மாசம் ஏறி இருக்குதுன்னு சொல்லுறயே.. சனியன் அது வந்துடுச்சி அத்தக்கழுவி கடாசிபோட்டு ரைட்டாபோவுலாம்.எத்தினியோ கழுதைவ போவுது அப்பிடி.அது முடியாது அந்தப்பீயேதான் நா தின்னுவன்னு அடம் புடிச்சா இப்புறம் என்னா செய்யுவ’
‘அவன் வய கொல்லைக்கி நம்மகொல்லயாலதான் ஏரிதண்ணீ போவுணும்.வேற வழி இல்லை. குறுக்கால கெடக்குற அந்த இருவது சிண்டு நெலம் அந்த நஞ்சைய கிரயம் குடுன்னான்.அது நம்ம பாட்டன் பூட்டன் காலத்து சொத்து.நம்ம நெனச்சாதான் மனசு வச்சாதான் அவன் கொல்ல நனையும் இல்லன்னா அவன் கொல்ல மாசூலுமுச்சூடும் சாவியாபூடும்.ஆனா எத்தினி நாளைக்கு இந்த துன்பம்னு பேசுறான்.அதுக்கு ஒரு முடிவு பண்ணனும்னு பித்துக்கொண்ட கோட்டானா குதிக்கிறான்.நானு முடியவே முடியாதுன்னு புட்டேன்.உன்னை நானுபாக்குற வழியில பாத்துகறேன்னு சொன்னான்.என்னண்டமார் தட்டுனான்.ரைட்டா உன்னால ஆனது நீ பாத்துகன்னு சொன்னேன்’
‘இது நடந்து ரெண்டு வருஷம் இருக்குமா தம்பி’
‘இருக்கும்.கொஞ்சம் கூடகூடம் இருக்கும்.இதுல ஒரு சாமார்த்தியம் அந்த நாயி அவன் மொவன வச்சி எம்பொண்ணுக்கு தூண்டி போட்டு இருக்கான்.எனக்கு ஒரே பொண்ணு,ஆணு வாரிசு ஏதுன்னுப்புட்டு அவன் ரோசனை.ஆருதான் என்ன பண்ண இருக்கு, மடிஞ்சிதானே ஆவுணும்னு அந்த நாயி கணக்கு’
‘இப்ப நீ கொல்லைய அவங்கிட்டகிரயம்போட்டு வித்தேன்னா எனக்கு பெரிய இடைஞ்சலு.நானு அவந்தாழ நிக்கணும் எங்கொல்ல தண்ணி பாச நாயி கிட்டதொங்குணும்.மருமங்குடில நம்மபூட்டன் காலத்து கொல்லைய நாயிகிட்டு வித்து நாலு காசு பாத்துட்டு காலத்துக்கும் நானு இல்ல எம்மொவன் கூறுகெட்டவனுக்கு தோப்புக்காரணம் போடுணுமா, கட்டி இருக்குற கோமணத்த அவுத்து ஒத்தனுக்கு குடுக்கமுடியுமா நீசொல்லு’என்றான் அண்ணன்.
டிரைவர் அம்பாசிடர் காரை இயந்திரகதியில் ஓட்டிக்கொண்டேபோனான்.
‘வண்டி இது யாருது இப்ப இத ஓட்டுறது யாரு’
‘அந்த கவலயே வேணாம். அவன் குத்தகை மாசுலுக்கு என் கொல்லையாலதான் தண்ணீ போவுணும்.நானும்தான் அவன் கொல்லய பாத்துகறன்.இல்லன்னா அவுரு எங்க வண்டி கிண்டின்னு ஓட்டுறது.ஏன் இந்த வண்டியே நானு பேர்பாதி காாசு போட்டு வாங்கி நொட்டி இருக்கன்,ஓட்டத்தெரியும்னான்.அதான். வண்டிவேணும்னா நானு எங்க கூப்புட்டாலும் எதுக்கு கூப்புட்டாலும் தட்டமாட்டான்’
‘நாம பேசுறது காதுல கீதுல உளுந்துடப்போவுது’
‘ஒண்ணும் உளுவாது.அப்பிடியே உளுந்தாலும் என்னா சிம்பிடப்போறான்.அப்பிடியே அவுரு சிம்புனாருன்னா அவுரு கதி என்னா ஆவும் சொந்த ரத்தத்தை நாம சுறுக்கும்மாட்டில்ல இழுக்கறம்’
‘நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற’
‘அவன் ரோட்ட பாத்து ஓட்டுறவன். நாம பேசுறது நம்பளோட’
‘வண்டி டிக்கியில இருக்குறது என்னான்னு தெரியுமா.அவனண்ட எங்க போவுணும்னு சொல்லி இருக்குறயா’
‘கருவெட்டி உப்பனாறு பாலம் வரைக்கும் நம்ப சவாரிபோறம்.நாம ரவ தண்ணி போட்ட்கிணு படார்னு திரும்புறம்.அவ்வளவுதான் அவனண்ட சொல்லி இருக்குறன்’
‘இனி பேச வேணாம். இந்த கடுதாசியில நானு நாலு வரி எழிதி வச்சி இருக்குறத படிச்சிகு’
அண்ணனிடம் காகித பென்சிலால் எழுதப்பட்டஒரு கால் கடுதாசியை நீட்டினான்.தம்பியவன் கடுதாசியை படிக்க ஆரம்பித்தான்.’காலு கை கட்டி வாயில துணி அடச்சி இருக்கன். அவ கிட்ட இருந்து ரவ சப்தம் கிப்தம் வராது.மூணுமொழத்துலக்கயிறு. கப்பிக்கயிறுவச்சி இருக்கன்.கழுத்துலவாட்டமா சுறுக்கு போட்டு இழுக்குறம்.ஊடால நாலு செங்கல்லுபாரத்துக்கு சொருவி அப்பிடியே பரவனாறு பாலத்துலேந்து தண்ணில கெடாவுறம்.டிரைவரு மொதல்ல தண்ணி கடைக்கி போயிடுவான். நாம நம்ப கதய முடிச்சிபிட்டு அதே கடைக்கி போறம்’
‘ரொம்ப சுளுவாதான் இருக்குது வேல’
‘யாரு கண்லயும் படாம இருக்குணும்’
‘அப்புறம் நாமதான் என்னாத்துக்கு இருக்கம்’
‘அந்த நாதாரிப்பைய பாப்பாமேல நெசமா கையை வச்சிபிட்டனா’
‘அந்த கொடுமய ஏன் கேக்குற. வவுத்துலல்ல அவ வாங்கிகிட்டா.அஞ்சி இல்ல ஆறு மாசம்னு சொல்லுறேன்.இல்லன்னா நானு இவ்வளவுக்கு துணிவேனா அண்ணே’
‘இதெல்லாம்பெரிய பாவம்.தும்பம்தான்’
‘வேற வழி நீ சொல்லு’
‘தோள்ள போட்டு தூக்கிவளத்து ஆளாக்கி நாமளே கழுத்ததிருவிஅழிக்கறதுன்னா கொடுமை, வூட்டு பொம்பளக்கி தெரியுமா சேதி’
‘அவ என்னாத்த கண்டா.அந்த நாயிக்கி தெரிஞ்சா ஒரு குசுவும் ஆவாது. நாம தண்ணி போட வந்துருக்கம்னுதான் அவளுக்கு தெரியும் வேற ஒரு மண்ணும் தெரியாது’
‘அதான் சரி’
‘கோணி எதனா கொண்டாந்து இருக்கியா’
‘அதில்லாமலா வருவன். கொண்டாந்து இருக்கன்’
‘அவள அது உள்ளாற ஏறக்கி ஒருமுடி முடிஞ்சி பரவனாத்துலகெடாவிடறம்’
வண்டி வேகவேகமாக சென்று கொண்டிருந்தது.
‘அந்த கடுதாசியமொத கிழிச்சி கெடாவு,சுக்கு நூறா கிழி அப்புறமா கெடாவு’
‘கெடாவிட்டேன்’
அவர்களின் பயணம் பரவனாற்றை நெருங்கிக்கொண்டிருந்தது.
‘வந்துட்டம் போல’
‘ஆமாம் காரியத்த பாக்குறம்’
‘பாலம் வந்து போச்சி. நானு வண்டிய நிப்பாட்டுறன்’ டிரைவர் சொல்லிவிட்டு வண்டியைவிட்டு இறங்கினான். கைகாலை உதறிக்கொண்டான்.
‘நீனு போயி அந்த கடையில குந்தி வேணும்கறத சாப்புடு.அங்கனயே இரு. நாங்க வவுத்து பிரச்சனையை பாத்துகினு வரம். வவுறு ஒரு மாதிரி நோவீட்டுஇருக்கு’
‘வேணும்கறத கடையில நீனு சாப்புடு’
டிரைவர் ‘சரி’ சொல்லிவிட்டு நடையைக்கட்டினான்.இப்போது அண்ணனும் தம்பியும் மட்டுமே பரவனாற்றங்கரைபாலத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள்.சாலையில் யாரையும் காணோம்.
அண்ணனும் தம்பியும் காரின் டிக்கியைத்திறந்தார்கள்.சக்கையாய் கிடந்த அவளை த்தயாராய்வைத்து இருந்த சாக்குக்குள் நுழைத்தார்கள்.வாயில் அடைக்கப்பட்டதுணி.அப்படியே இருந்தது. கண்கள் இரண்டும்சொருகி இருந்தன.அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை.கைகால்கள் கட்டப்பட்டே இருந்தன.சாக்கு மூட்டையை இறுக்கிக்கட்டி நான்கு செங்கல்லை மூட்டையின் கூடுதல்கனத்துக்கு ச்செறுகி ஓடும் தண்ணீீரில் வீசினார்கள்.அவளின்கதை முடிந்தது.
‘யாரும் வருல இது ஒரு நல்ல சமாச்சாரம்’
‘இதுல என்ன நல்லது கெட்டது வந்துட்டம் பூமியில நமக்குப்ழிதான் பாாவந்தான் என்னா பண்ணப்போறமோ’
‘வா அண்ணே இனி இதுல பேச ஒண்ணும் இல்ல.எதுத்தாப்புல இருக்குற கடைக்கிப்போவும்.கொற கதய பாக்குவம்’ என்றான் தம்பி.
டிரைவர் தனக்கு வேண்டியதைச்சாப்பிட்டுவிட்டு வேப்பமரத்தின் கீழ் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
‘நாங்க சாப்புட்டு வர்ரம்’
‘போயிட்டுவாங்க நானு இங்க இருக்கன்,வண்டி அங்கயே இருக்குலாமுல்ல. ஒண்ணும் தப்பு இல்லயே,நீங்களும் வந்துட்டீங்களேன்னு கேக்குறன்’
‘அப்ப நீ போயி வண்டியை பாத்துகு’
‘நானு கெளம்புறேன்’
தம்பியிடம் சொல்லிவிட்டு டிரைவர் புறப்பட்டார். அண்ணனும் தம்பியும் கை கால்களை சுத்தமாக க்கழுவிக்கொண்டனர்.சுடச்சுட பரவனாற்று மீன் பகோடாவோடு ஒரு டீ மட்டும் அருந்தினார்கள்.அதற்கு மேல் எதற்கும் அவர்களின் மனது ஒத்துக்கொள்ள மறுத்தது.
‘ரெம்ப சிம்பிளா முடிச்சிகிட்டீங்க’ கடை முதலாளி அவர்களிடம் கேள்வி வைத்தார்.
‘வேற ஜோலி இருக்கு. ஒண்ணும் மூலைல மொடங்கிக இப்பக்கி நேரம்வாாய்க்காது’ தம்பி பதில் சொன்னான்.
மூவருமாகப்பொடி நடையாய் நடந்தனர். வண்டியில் ஏறி மீண்டும் மருமங்குடிக்கே புறப்பட்டனர்.அவ்வளவே.அண்ணன் தன் வீடு நோக்கி புறப்பட்டார்.தம்பி தன் வீட்ட்டுக்கு திரும்பினார்.
தம்பியின் மனைவி வீட்டு வாயிலில் அழுது புலம்பிக்கொண்டே இருந்தாள்.
‘பாப்பா எங்க போச்சி’
‘ஏன் நீ பாக்குல’
‘நான் எங்க பாத்தன்’
தலையில் அடித்துக்கொண்டாள்.
‘நீ கெளம்பகுள்ள அவள பாத்தியா’
‘நா பாத்தனே.தூங்கிகிட்டு இருந்தா’
‘பெறவு’
‘நா போயிட்டேன்’
‘தல காணி பாயை பார்த்தேன் ஆனா அவளத்தான் காணுல’
‘அப்புறமா அவ செனேகிதிவ இன்னும் தெரிஞ்ச சனத்தை கேட்டியா’
‘கேட்டேனே ஒண்ணும் கதை ஆவுல,வயசு புள்ளயாச்சே நா என்ன செயுவன்’
தரையில் வீழ்ந்து புரண்டு அழுதாள்.
‘அவள க்கொண்டா இப்பயே கொண்டா இல்லை நா பச்சதண்ணி குடிக்கமாட்டன்’ அழ ஆரம்பித்தாள்.தேம்பிஅழுதாள். அரற்றினாள்.துரும்பானாள்.
யாரை பாத்தாலும் தன் மகள் எங்கே என்று கேள்வி வைப்பாள்.நாளாக நாளாக பேச்சை குறைத்துக்கொண்டாள்.பிரமை பிடித்தவளாக மாறிப்போனாள்.
அவன் செய்த பெருங்குற்ற உணர்வு அவனை த்துளைக்க ஆரம்பித்தது.ஆகாயத்தையே அடிக்கடி பார்க்க த்தொடங்கினான்.உளர ஆரம்பித்தான்.
‘நானே கொன்னு போட்டேன்,நானு வாழக்கூடாது இப்புறம்’ என்று முணு முணுத்துக்கொண்டேயிருந்தான்.மருமங்குடியில் அவன் உளறுவது யாருக்கும் புரியவேயில்லை.நெஞ்சை அவன் அடிக்கடி அழுத்தி பிடித்துக்கொண்டான்.
அண்ணன் அன்று பரவனாற்றுக்கு த்தம்பியோடுகாரில்போனவன்தான்பிறகு தன் வீடு திரும்பவேயில்லை. அண்ணன் வீட்டார் அவரைத்தேடி அலைந்து அலைந்து ஓய்ந்து போனார்கள்.
எதிர்வீட்டுப்பையன் இன்னது செய்வது என்று புரியாது தவித்துப்போனான்.தன் தந்தையிடம் கேட்டுப்பார்த்தான்.அவன் மனம் அவனை உலுக்கிக்கொண்டேயிருந்தது.தனியாக அமர்ந்து அழுது பார்த்தான்.தெருவெங்கும் தேடித் தேடி அவளுக்காகஅலைந்தான்.ஒன்றுமே நடக்கவில்லை.
‘அப்பா எதிர் வீட்டு பொண்ணு எங்க போனது தெரியுமா’
‘அந்தக்கழுதய நீ எதுக்கு தேடுற’
‘எனக்கு அந்தப்பொண்ணு வேணும்’
‘அந்தப்பொண்ணு இல்லாம எனக்கு இங்க வாழ்க்கை இல்லை’
‘உனக்கு பித்தா பைத்தியமா அந்த பொண்ணு எங்கேன்னு என்னை கேக்குற’ஒன்றுமே தெரியாத அப்பா இல்லையே அவர்.அவரின் போக்கு அறிந்தவந்தான் அவன்.
அவன் நேராக எதிர்வீடு சென்றான்.
அந்தப்பெண்ணின் தந்தையைத்தேடினான்.அந்தப்பெண்ணின் தாய் வீட்டின் மூலையில் சுருணையாகக்கிடந்தாள்..
‘உங்க பொண்ணு எங்க போனது?’ ஓங்கி ஓங்கி கேள்வி வைத்தான்.
அந்தத்தாய் கண்களை மூடி மூடித் திறந்தாள்.’வளிங்கு இல்லைவே இல்லையப்பா’என்று கையை விரித்தாள்.அவள் குரல் எழும்பவேயில்லை.அவளின் கண்கள் நீரைச்சொறிந்தன.
‘அவுரு எங்க?’
அந்தத்தாய் தோட்டத்து பக்கமாக இருக்கும் கதவைக்காட்டினாள்.
‘அய்யா உங்க மகள் எங்கே?’ குரல் கொடுத்துக்கொண்டே போனான்.
அவர் தோட்டத்து பக்கமாக போடப்பட்டிருக்கும் கயிற்றுக்கட்டிலில் படுத்திருப்பதாக தெரிந்தது.
‘அய்யா உங்க பாப்பா எங்க போனது”
ஒன்றும் பதில் இல்லை.கட்டில் அருகில் போனான்.அவரின் கண்கள் குத்திட்டு ஆகாயம் பார்த்தன. கைகளை த்தொட்டுப்பார்த்தான்.சில்லிட்டுக்கிடந்தது மேனி.
‘அம்மா இங்க வாங்க உடனே வாங்க’ என்று அலறி அழைத்தான்.அவளின் சிரிப்பொலி மட்டுமே அவனுக்குக்கேட்டது.
அந்தத்தாய் தன் பிரக்ஞையில் இல்லை.அவன் தெரிந்துகொண்டான்.
அவள் அவனை க்கையெடுத்துக்கும்பிட்டாள். எதுவுமே பேச நா எழவில்லை. விறு விறு என்று தன் வீடு நோக்கி ஓடினான்.தன் தந்தையை வீட்டில் காணவில்லை.
‘அப்பா எங்கே?’
‘ அவுரு எங்கிட்ட ஒண்ணும் சொல்லுல.எங்க போனாரோ?’ அவளின் தாய் விடை தந்தாள்.
‘அம்மா எழுந்திரு.எதிர் வீட்டுக்கு வா.அந்த அய்யா காலமாயிட்டாரு.அந்த அம்மாவுக்கு சொகம் இல்லே.ஒரமாமொடங்கி போச்சி அங்க ஒரு ஓரமாகெடக்கு. அந்தபாப்பாவும் அங்கஇல்லே.எங்கப்போனதுன்னு விளங்குல. நாமதான் இனி அங்க கொற காரியம் பாக்குணும்’
அம்பாசிடர்காரை பரவனாற்றுக்கு ஓட்டியவன் எழவு வீட்டு வாயிலில் தயர்ராக க்காத்திருந்தான். எப்படியோ இறந்த செய்தி அவனுக்குக் கிட்டி இருக்கலாம்
.’நான் என்னா செய்யுணும் அத சொல்லுங்க’ ஓங்கிக்கத்தினான்.
‘அப்பா வந்துடட்டுமே’ என்றாள் அவனுடைய தாய்.
‘ அவுரு வராரு இல்லே.நீ என்னோட இரு’ அவன் தன் தாயோடு எதிர் வீட்டுக்குச்சென்று நின்றுகொண்டான்.அவனின் அப்பா அங்கு வருவார். வந்து அவனுக்கு துணை நிற்பார்.கூட இருந்து உதவுவார் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.அவனின் அம்மாவுக்கு அது தெரிய நியாயமில்லை.
‘நீ எப்பவும் ஒருமனுசனா ஆம்புளயா இரு.நா உன்னோட எங்கயும் வருவன்.’அந்தத்தாய் அவனோடு பின் தொடர்கிறாள்.
===========================================

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 7
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *