வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3

This entry is part 10 of 28 in the series 27 ஜனவரி 2013

 

மூன்று அங்க நாடகம்

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

Cover image

1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவை யோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார். அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra), காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

Fig 1 Your husband softened towards son

 

 

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம். இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது. இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது . பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது. அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது. அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது. அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில் எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது. அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர். அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள் உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக் [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான். இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுகிறார். அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

Fig 3 My son will be punished

நாடக உறுப்பினர்

1. ரிச்செர்டு டச்சியான் [35 வயது] (Richard Dudgeon)

2. கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன் (Christy Dudgeon)

3. கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன் [வயது 50]

(Rev. Anthony Anderson)

4. ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி [30 வயது] (Wife : Julia Anderson)

5. ஜெனெரல் பர்காயின் [50 வயது] (British General Burgoyne)

6. மேஜர் சுவின்டன் [55 வயது] (Major Swindon)

7. ஸார்ஜன்ட் (Sergeant)

8. வழக்கறிஞர் ஹாக்கின்ஸ் (Lawyer Hawkins)

9. மிஸிஸ். டிமதி டச்சியான் : [வயது 60] [Mrs Timothy Dudgeon : Mother of Richard Dudgeon)

10. சாப்பிளின் புரூட்நெல் (Chaplin Mr Brudenell)

11. சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா டைட்டஸ் டச்சியான் & மனைவி (Uncle Titus Dudgeon & Wife)

13 இளம் மங்கை : எஸ்தர் [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -1 பாகம் -3

மூன்று அங்க நாடகம்

இடம்: அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர். [Websterbridge, New Hamshire, U.S.A..]

நடந்த ஆண்டு : 1777 (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது : ஒரு நாள் இலையுதிர் காலத்து இருண்ட மாலை நேரம். ஆறு மணி இருக்கலாம்.

அரங்க அமைப்பு: ஓர் எளிய குடியானவரின் பழைய வீடு. வயதான மூதாட்டி மிஸிஸ் டச்சியான் சமையல் அறையில் நாற்காலில் அமர்ந்து சாய்ந்துள்ளார். இரவு பூராவும் விழித்திருந்ததால் அவள் தளர்ச்சி அடைந்துள்ளது முகத்தில் தெரிகிறது. பிரிஸ்பிட்டீரியன் கிறித்து ஆலயத்துக்கு ஞாயிறு தோறும் தவறாது செல்லும் மத நேய அபிமானி அவள். சோபா, நாற்காலி, மேஜை யாவும் அழுக்கடைந்து உள்ளன. அடுத்து அந்த அறையில் 16 அல்லது 17 வயதிருக்கும் ஓரிள மங்கை படுத்திருக்கிறாள். பயந்த சுபாவப் பெண். கருத்த கூந்தல், பழுப்பு நிறத்தவள். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. மூன்றாவது தட்டலில் முதிய வயது மாது விழித்தெழுகிறாள். கதவைத் திறந்ததும் முதிய மாதின் சின்ன மகன் கிரிஸ்டி நுழைந்து தன் தந்தை நோயில் மரித்ததை அறிவிக்கிறான். அந்த அதிர்ச்சியை மிகையாக்க அவனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் கிறித்துவப் பாதிரி அந்தோனி ஆண்டர்சன் வருகிறார். நோயில் செத்த கணவன் டிமதி டச்சியான் சாகுவதற்கு முன்பு புதிய உயில் ஒன்றை எழுதியதாக முதிய மாதிடம் அறிவிக்கிறார்.

+++++++++++++++++

Fig 3 Your son sent a bad message

நாடக முதல் அங்கம்

 

மிஸிஸ் டச்சயான்: அப்படியானால் பிரிட்டீஷ் இராணுவம் என் மூத்த மகன் ரிச்சர்டை துரோகியா என்று இனி வேவு பார்க்கும் !

ஆண்டர்சன்: நேராக்க் கண்ணில் படாது, கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தான் ரிச்சர்டு ! யாரும் அவன் மீது சந்தேகப் பட முடியாது ! உங்கள் கணவர் டிமதி மிகவும் வேதனை பட்டார், தம்பி பீட்டர் கோர மரணத்தில் துடித்த போது ! அதே சமயம் அவர் போக்கிரி மகன் ரிச்சர்டு மீது பரிவுடன்தான் பழகி வந்திருக்கிறார். நோயில் கிடந்த போது ஆள் அனுப்பி மகனைப் பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார்.

மிஸிஸ். டச்சியான்: என்ன ? ஊர் சுற்றி மகனைத் தேடிப் பார்க்க என் கணவர் ஆள் அனுப்பினாரா?

ஆண்டர்சன்: ஆனால் தகவல் அறிந்தாலும் ரிச்செர்டு பார்க்க வரவில்லை. தந்தைக்கு ஓர் அதிர்ச்சிக் கடிதம் மட்டும் அனுப்பினான். அது ஒரு கொடிய செய்தி ! மிக்க கடூரமானது !

மிஸிஸ் டச்சியான்: அப்படி என்ன கொடிய செய்தி ?

ஆண்டர்சன்: தூக்கு மேடை ஏறி மரித்த தன் சித்தாப்பாவுக்குத் தானோர் ஆதரவாளனாய் ஆகப் போவதாகவும், பெற்றோருக்கு எதிராளியாய் மாறப் போவதாகவும் எழுதியுள்ளான் ! இந்தக் கீழ் உலகிலும் மேல் உலகிலும் இவற்றைத்தான் அவன் தொடர்ந்து கடைப் பிடிக்கப் போவதாய்ச் சொல்லி யிருக்கிறான்.

மிஸிஸ் டச்சியான்: [ஆத்திரமாய்] பாருங்கள், இந்தப் பிடிவாதக் கொள்கைக்கு, அவன் தண்டிக்கப் படுவான் ! அவன் தண்டிக்கப் பட வேண்டும் இரண்டு உலகிலும் !

ஆண்டர்சன்: அது நம் கையில் இல்லை, மிஸிஸ் டச்சியான் !

மிஸிஸ் டச்சியான் : ஓவ்வோர் வாரமும் ஆலயத்தில் அது தானே என் காதில் விழுகிறது ! தீயோர் தண்டிக்கப் படுவார் என்றுதானே சொல்லி வருகிறீர் ! நல்லவருக்கும் தீயவருக்கும் வேறுபாடு இல்லா விட்டால் நாம் ஏன் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் ? கடவுளின் விதிகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? நம்மையும் கேலி செய்து கடவுளையும் அவமதிக்கும் ஒரு நபரைத் தண்டிக்காமல் எப்படி இருப்பது ?

Fig 4 Did my husband make a new will

 

 

ஆண்டர்சன்: நல்லது. ரிச்செர்டின் பூகோளப் பிதா அவனுடன் பரிவோடு தான் இருக்கிறார். அவரது மேலோகப் பிதா நம் எல்லோருக்குமே பிதா தான் !

மிஸிஸ். டச்சியான்: ரிச்செர்டின் பூமிப் பிதா மிக்க மென்மையான உள்ளம் கொண்டவர்.

ஆண்டர்சன்: [அதிர்ச்சியுடன்] மென்மையானவரா ?

மிஸிஸ் டச்சியான்: [ஆவேசமாக] நான் ரிச்செர்டின் தாய். நானே அவனுக்கு எதிரியாய் மாறினால், பிறகு யார் அவனுக்கு ஆதரவாய் இருப்பார் ?

உட்காருங்கள் மேதகு மினிஸ்டரே ! முன்பே நான் சொல்லி இருக்க வேண்டும். என் மனம் இன்று அமைதியின்றிக் கொந்தளிக்கிறது.

ஆண்டசன்: மிக்க நன்றி [ஒரு நாற்காலியை இழுத்து அமர்கிறார்] … சின்ன மகன் புதிய உயிலைப் பற்றி சொன்னானா ?

மிஸிஸ். டச்சியான்: [கோபமாய்] என்ன ? புதிய உயிலா ? இதை என் கணவர் எப்போது எழுதினார்? உமக்கு எப்படித் தெரியும் ? எனக்கே ஒரு புதுச் செய்தியாய்த் தோன்றுது !

ஆண்டர்சன்: உங்களுக்கு இது தெரியாதா ? சாகப் போகும் தன் இறுதி வேளையில் உன் கணவர் உயிலை மாற்றி விட்டார் ! நான் அவர் அருகில் இருந்ததால் எனக்குத் தெரியும் இது.

மிஸிஸ் டச்சியான்: நீங்கள் அருகில் இருந்தும் இதைத் தடுக்க வில்லையா ? அவர் என் சொத்துக்களை வழிப்பறி செய்ததை எப்படி நீங்கள் அனுமதித்தீர் ? எனக்குத் தெரியாமல் எனது சொத்துக்களை என் பதி என்ன செய்தார் ?

ஆண்டர்சன்: நானொரு கிறித்துவப் பாதிரி ! மரணத் தருவாயில் தவிக்கும் ஓர் இல்லற ஆன்மாவுக்கு அமைதி விடுவிப்பு அளிக்கப் போனவன். எனக்கு என்ன உரிமை, தகுதி உள்ளது அவர் இறுதி விருப்பத்தை மாற்றி அமைக்க ?

Fig 5 My husband took advantage

 

 

மிஸிஸ் டச்சியான்: என் கணவர் டிமதிக்கு எதுவுமே சொந்தமாய் இல்லை. அவரது பணம் என்பது திருமணத்தின் போது என் சொத்தாய் நான் கொண்டு வந்தது. அந்த சொத்தை என் விருப்பப்படி நான் என் மகனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது. இப்போது என்ன நடந்திருக்கிறது ? என் கணவர் என் சொத்துக்களை தன் விருப்படி மாற்றி யார் யாருக்குக் கொடுத்தாரோ ? என் கணவருக்கு எல்லாம் தெரியும். அதனாலே சட்டத்தின் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு திருடனைப் போல் எனக்குரிய சொத்துக்களைக் களவாடி ஒரு புதிய உயிலை எழுதிச் சென்றார். மேதகு ஆண்டர்சன் ! நீங்கள் ஒரு கிறித்துவ மதத் தொண்டர் ! இத்தகைய அடாத செயலுக்கு உடந்தையாக இருந்த நீங்கள் குடும்ப நண்பரா ?

ஆண்டர்சன்: [கோபமாய் எழுந்து] இத்தகைய துக்க சமயத்தில் நீங்கள் என்னைத் தாக்குவதை நான் மனமுடைந்து சகித்துக் கொள்கிறேன்.

மிஸிஸ் டச்சியான்: துக்க சமயத்தில் பட்ட காலிலே பட வேண்டுமா இப்படி எனக்கு ? என் கணவர் இறந்தது முதலில் பெரிய அதிர்ச்சி ! அடுத்து புதிய உயில் பதிவில் என்னுரிமைச் சொத்துக்கள் பறி போனது அடுத்த புரட்சி !

 

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1. Penguin Plays : The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2. http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3. http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple” – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs [You Tube : The Devil’s Disciple Drama]

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 25, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *