வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்

This entry is part 7 of 34 in the series 6 ஜனவரி 2013

 

(Beginning My Studies)

Walt Whitman

(1819-1892)
(
புல்லின்இலைகள் -1)

மூலம் : வால்ட்விட்மன்

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு:

அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].

1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

 

+++++++++++++++++++++++++++++

என் பாடத் துவக்கம்

(Beginning My Studies)

[வால்ட்விட்மன்]

 

படிக்கத் துவங்கிய போது

பரவசம் அளித்தது எனக்குப் பேரளவில் :

எனது முதல் எட்டு நடை,

கற்கும் தன்னுணர்வு, கற்கும் வடிவங்கள்,

விளை யாட்டின் மேன்மை,

சின்னஞ் சிறு பூச்சி, விலங்கு,

கண்ணோக்கு, நட்பு, ஐம்புல உணர்வு !

முதல் எட்டு அச்சம் தரினும், மிகையாய்

மகிழ்ச்சி அளித்தது எனக்கு !

நடந்த தூரம் சிறிது ! நடை மேலும்

தொடர விருப் பில்லை !

நிறுத்தினேன், திரிந்தேன் எந்நாளும்,

பள்ளியில் கற்றதைப்

பரவசப் பாக்களில் பாடுதற்கு !

 

+++++++++++++++++

தொடங்குபவர்கள்

(Beginners)

வால்ட் விட்மன்

 

வையத்தில் தொடங்குவோர்க் கெல்லாம்

வசதிகள் எவ்விதம்

வழங்கப் படும் படிப் படியாய் ?

எவ்விதம் அவை அரிதானவை

எவ்விதம் உலகுக்கு அச்சம் அளிக்கும் ?

எவ்விதம் தமக்கேற் றளவில்

ஏற்றுக் கொள்கிறார் ?

தமக்குத் தாமே எவ்விதம் அவர்

தாங்கிக் கொள்கிறார்

இன வெறுப்பை எல்லாம்

பிறரையும் முன் னிறுத்தி !

தோன்றும் அவர்

முரண்பாடு எத்தகையது அவரது

வயதுக் கேற்ப !

எப்படி அதை எதிர் கொள்வர்

மக்கள்

ஆயினும் அதை அறியாமல் ?

எப்படி அவரது விதியில்

ஏதோ ஒன்று நிலையாக உள்ளது

எந்நாளும் ?

எப்படி அவர் எப்போதும்

தப்பாகத் தேர்ந் தெடுக்கிறார்

தாம் மேலாய்ப் போற்றும்

தமது வெகுமதிப் பரிசுகளை ?

எவ்விதம் மாறாத

ஒரே விலை கொடுத் தின்னும்

வாங்கிக் கொள்கிறார்

மாபெரும் அதே

வாணிபச் சரக்கை ?

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

[ஆப்ரஹாம்லிங்கன்நாடகம்]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 1, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )மனத்தில் அடையாத ஒரு காகம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *