வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42

This entry is part 8 of 32 in the series 13 ஜனவரி 2013

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து

தொடரை இத்துடன் முடிக்க எண்ணியிருந்தவளைத் தொடரும் தொல்லைகள் தடுத்துவிட்டன.

ஆரம்பம் என்றிருந்தால் அதற்கு ஓர் முடிவும் உண்டு என்று சொல்வோம். பெண்ணின் அவல நிலைமட்டும் இன்னும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. அதற்கு ஒர் முடிவு இல்லை.

டில்லி சம்பவம் எல்லோரும் அறிந்ததே. கடந்த 41 வாரங்களாக நான் எழுதி வரும் தொடரின் மையக் கருத்தும் பெண்ணின் நிலைபற்றியதே. பல உண்மைச் சம்பவங்கள் எழுதப்பட்டன.. எனவே பாலியல் கொடுமைபற்றி விளக்க வேண்டிய தில்லை.

ஆனால் சம்பவத்தன்று நடந்த சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து நடந்து வருபவைகளும் பார்க்கும் பொழுது மனத்தின் வேதனை அதிகரித்துவிட்டது.சில எண்ணங்களையாவது பதிய வேண்டியது என் கடமை .இவைகளுக்கு அடிப்படை காரணங்கள் என்ன? ஒவ்வொரு பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்துப் பயமுறுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்குத் தீர்வு கிடையாதா? ஏன், இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்? சிந்திக்கிறேன். ஒரே மலைப்பு!.

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு

இருப்பினும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. இன்னும் சில நல்லவர்கள் இருக்கின்றார்கள். என் அனுபவங்களில் சில ஆலோசனைகள் எழுத முயல்கின்றேன். அறிஞர்கள் இன்னும் சிந்தித்து ஆக்க பூர்வமான வழிகளைக் கண்டுபிடிக்கலாம். முயற்சி செய்வோம். நம்பிக்கையை மட்டும் நாம் இழந்து விடக் கூடாது.

ஓரளவு வெளிப்படையான அலசல். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நோயைப் புரிந்து கொண்டால்தான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.

கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசு அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கின்றது .கடுமையான சட்டங்கள் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சட்டங்கள் மட்டும் நிலைமையைச் சீர் திருத்த முடியாது.

என்னுடைய துறையில் ஒருவன் பல பெண்களைக் காதலிப்பதாகச் சொல்லி சுற்றி வந்தவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. அவன் குணம் மாறவில்லை. அதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை. ஒரு நாள் மனைவியின் மேல் மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தினான். அம்மாவின் நிலையை நேரில் பார்த்த குழந்தைகள் கதறின. அவன் வீட்டை விட்டு ஓடினான். பிள்ளைகளின் கதறலால் சிலர் வந்து நெருப்பை அணைத்தனர். அதற்குள் அவள் உடல் வெந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் பட்டாள். காவலர்கள் வந்து விசாரணை செய்த பொழுது சாகும் நிலையிலும் அவள் தன் கணவனைக் காட்டிக் கொடுக்க மனமின்றி அதனை ஓர் விபத்தாகக் கூறிவிட்டாள். . காவலர் சென்றவுடன் அதுவரை அங்கு இருந்த அவள் கணவனும் அங்கிருந்து போய்விட்டான். தன்னுடன் வேலை பார்த்துவரும் பெண்களிடம் நடந்த உண்மைகளைக் கூறி, பிள்ளைகளை அவள் சகோதரினிடம் சேர்க்கும்படி வேண்டிக் கொண்டு உயிரைவிட்டாள். அவள் செத்த உடம்பிற்குப் புடவை வாங்கி போர்த்தியவர்கள் உடன் வேலை பார்த்தவர்கள்தான். உடன் பிறந்தான் வந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான். கொடியவன் சிறைப் பிடிக்கப்பட்டு விசாரணயும் நடந்தது. ஆனால் விடுதலை செய்யப்பட்டான். காரணம் அவனுடைய மனைவியின் சாட்சி. குழந்தைகள் கூற்றை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டங்களுக்கு சாட்சிகள் முக்கியம். நம் பெண்களும் உணமையைக் கூற மாட்டார்கள்.

ஜெனிவாவில் நடந்த மகளிர் கூட்டத்திற்குச் சென்ற பொழுது இந்திய நாட்டில் ஆணின் அடக்கு முறைகளால் பெண் தொல்லைப்படுகிறாள் என்று கூறிய பொழுது நான் சில மறுப்புகளைத் தெரிவித்தேன். பொதுப்படையாகப் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். இந்த மண்ணுக்குத் திரும்பியவுடன் ஆய்வு செய்தேன். சென்னையிலிருந்து கன்னியா குமரிவரை 1000 பெண்களிடம் விசாரணை செய்தோம். முறைப்படி தயாரித்த கேள்வித்தாள். அவர்கள் கையொப்பம் கூடப் போடத் தேவையில்லை. அப்படியிருக்க சில கேள்விகளுக்கு யாருமே பதில் கொடுக்கவில்லை. கணவனைப்பற்றி எதுவும் கூற அவர்கள் விரும்பவில்லை. இது நடந்தது 1987. இதுதான் பெண்ணின் நிலை. சட்டம் மட்டும் போதுமா?

வீட்டைவிட்டு வெளி வரும் பொழுதே பார்வைக் கணைகள், மோதல்கள் இவைகளைத் தாண்டி அலுவலகம் சென்றால் அனுதாபம் காட்டி அதிகாரம் காட்டி பாலியல் உறவிற்கு ஏற்படும் நிர்ப்பந்தம் பற்றி புகார் கொடுக்க முடிவதில்லை. சாட்சிகளை வைத்துக் கொண்டா ஆண்மகன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கின்றான். வலிமையுள்ளவர்கள் தங்கள் இச்சையைச் சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொண்டு தப்பிக்கின்றார்கள். உணர்ச்சி வேகத்தில் தவறு செய்கின்ற அசடுகள்தான் மாட்டிக் கொள்கின்றார்கள். ஆனால் அதனையும் நிரூபிப்பது கடினம். வழக்கு மன்றத்திற்கு உறுதியான, நிலையான சாட்சிகள் வேண்டும். கிராமங்களில் நடக்கும் வன்முறைகள் பற்றி வாய் திறக்க முடியாது. அங்கே பணம், சாதி, இன்னும் பல சக்திகளும் பெண்களை ஒடுக்கிவிடும். இது செய்தி பார்த்து கூறுவதல்ல.

பெரியவள் ஆன என்னைப் பள்ளிக்கு அனுப்பவும் கிராம மக்களின் கூக்குரல்

“இது உருப்படுமா? சீரழிந்துபோகும். ஓடுகாலியாகப் போகும்”. எனக்குக் கிடைத்த ஆசிகள். அப்படியிருக்க களப்பணிக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் தேடல் , ஆராய்ச்சி எல்லாம் நுனிப்புல் மேய்வதைப் போல் அமைகின்றன. அக்கால சிலப்பதிகாரக் கண்ணகியை இக்காலச் சூழ்நிலையை வைத்து விமர்சிக்கும் கூட்டம்.

டில்லி நிகழ்வுக்குப் பிறகு கூட உத்திரபிரதேசத்தில் ஓர் கற்பழிப்பு. அந்தப் பெண் கெடுத்தவனைக் காட்டிக் கொடுத்ததால் அவனும் அவன் உறவுகளும் அந்தப் பெண்ணுக்குத் தீயிட்டனர். புகார் செய்ய காவல் நிலையம் சென்ற பொழுது அவர்கள் புகாரைப் பதிவு செய்ய மறுத்தனர். இதுவும் சமீபத்தில் நடந்தது. ஆனால் இது புதிதல்ல. எனக்கு வயது 78 முடிந்துவிட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒன்றா இரண்டா, எத்தனை பெண்களை நிர்க்கதியான நிலையில் பார்த்திருக்கின்றேன். என்னை பயமுறுத்தினார்கள். எனக்கும் அந்த நிலை வரும் என்றார்கள். தீய சக்தி என்னைச் சுடும் முன்னரே என்னைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்கள் அமைத்துக் கொண்டேன். அழிக்கபட்ட பெண்களுக்குப் புனர்வாழ்வு கொடுக்க வந்த பெண்களையும் அழித்தனர். ஆரம்ப காலத்தில் மகளிர் நலத்துறையே ஓர் புனர் வாழ்வில்லமாயிற்று. ஒன்று கெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது கெட்ட பெயர்களையாவது சுமத்தியிருப்பர். சிலர் மட்டும்தான் இதில் தப்பியவர்கள்.

இந்தக் கொடுமையின் எண்ணிக்கை இப்பொழுது கூடிவிட்டது. ஏன்? நாம் எங்கே தவறு செய்தோம். ?.ஆம். தவறுகள் ஒன்றல்ல. பல வடிவங்களில் தோன்றி நம் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைத்துவிட்டன. இது சீர்திருத்தமல்ல. சீரழிவு.

நான் எல்லோரையும் குறை கூறவில்லை. இந்த சூழல் நம்மிடையே வளர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். ஓரளவாவது காரணங்களை நாம் உணர்ந்துதான் ஆகவேண்டும். எங்கோ இந்தக் கொடுமை என்று இருப்பது அசட்டுத் தனம். நம் வீட்டு வாயிலைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. இனியும் உணஃராவிட்டால் நாம் மனிதர்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. பேச்சிலும் சினிமாவிலும் மயக்கப்பட்டு கிடக்கும் மனிதன் , இதையும் கூத்தாக நினைத்து பார்த்து ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். சிந்திக்கத் தெரிந்தவர்கள், நல்ல மனம் படைத்தவர்களாவது உணர்ந்து ஒன்று சேர்வோம். ஒருமித்து முயற்சி செய்வோம்.

சினிமா பார்த்துவிட்டுவரும் அப்பனும் மகளும் காம உணர்வில் நெருங்கியதும் அவர்கள் மகிழ்ந்ததும் கதை .அதிலும் அந்த வருணனைகள் அப்பப்பா. ஓர் எழுத்தாளன் அவன் திறமையை இதிலா காட்ட வேண்டும். சீர்திருத்தச் செம்மல் என்று கூறிக் கொண்டு இப்படி ஒரு கதை. அப்பனும் மகளும் சேர்ந்து வாழ முடியாதவர்கள். கதையின் பெயரும் அதுதான் “வாழ முடியாதவர்கள்” அப்பொழுது நான் பள்ளி மாணவி. அக்காலத்தில் இத்தகையப் புத்தகங்களின் விற்பனை அதிகம். ஆசிரியர் காரணமல்ல. அதில் எழுதப்பட்ட விஷயங்களின் சுவர்ச்சி கொள்கைகளை வளர்க்கப் பண்பாட்டு கொலையா? .

கூத்து என்றால் கதை மட்டுமல்ல, மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு ஓர் செய்தியும் சேர்த்துக் கதைகள் அமைப்பார்கள். இராமனின் மன உறுதியை அவன் விரோதியின் மனைவியின் வாயிலாகப் புகழும் கவிஞன் , அவன் தன் எழுத்தில் கொஞ்சம் சிருங்காரரசம் சேர்த்ததை அதையே ரசமாக்கி விமர்சனம் செய்த படைப்புகளும் வர ஆரம்பித்ததே! கம்பராமயணம் முழுமையும் பாடல்களாகப் படித்தது 1970 ஆண்டில் தான். நான் விரும்பிய அண்ணா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அவருடன் அவர் எழுதிய கம்பரசம் புத்தகத்தைப் பற்றி விவாதித்திருப்பேன். இலக்கியம்பற்றி விவாதிக்க நான் என்றும் தயங்கிய தில்லை. இராமாயணம்பற்றி கி.வ.ஜ அவர்களுடனும், சிலப்பதிகாரம்பற்றி ம.பொ.சி அவர்களுடன் விவாதித்தவள்தான் நான். என்னுடைய தேடல் அர்த்தமற்றதல்ல. ஒரு முடிவை மனத்தில் வைத்துக் கொண்டு இறங்க மாட்டேன். அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இறங்குவேன். புரிந்து தெளிவடையும் வரைவிடமாட்டேன்.

இன்று பத்திரிகைகளாப் பாருங்கள். நான் தமிழகம் சென்ற பொழுது சில இல்லத்தரசிகள் என்னிடம் குறைபட்டுக் கொண்டனர். பாலியல் கல்வியென்று பாலியல் உறவுகளை படங்கள் போட்டு விளக்கமாக சில பத்திரிகைகளில் வருகின்றன. சிறுவர்களும் அப்புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது அந்தப் படக் காட்சிகள் அவர்கள் மனத்தைப் பதிக்காதா? அதனால் தான் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் படிக்கும் இன்னொரு குழந்தைப் பெண்ணுடன் செயல்முறையில் இறங்குகின்றான். கேட்டால் அப்பா, அம்மா விளையாட்டு என்கின்றான். பாலியல் கல்வி முக்கியம்தான் அதனை முறைப்படி எப்படி செய்ய வேண்டுமென்று அறிந்து செயல்பட வேண்டும். இதிலும் வணிகமா?

பெண் ஒரு காட்சிப் பொருளாகி விட்டாள். சிகரெட் விளம்பரத்திலும் கவர்ச்சியான பெண். வயதானவர்களும் ஆன்மீகவாதிகளும் பெண்ணை அடக்கமாக இருக்கச் சொல்கின்றார்கள். அந்தப் பெண்ணை விளம்பரத் துறைக்கு அனுப்பி பணம்பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் பெற்றோர். தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டோம். இன்றைய அவல நிலைக்கு இப்படி எத்தனை காரணங்கள் ?!

பண்பாடு என்பது பண்படுத்துதலும் கூட. நிலம் வரண்டு விடாமல் அடிக்கடி பண்படுத்துவோம். அது போல் மனிதனைப் பண்படுத்துவதற்கு ஓர் கருவியாக வந்த கூத்தும் நாளடைவில், இருக்கும் பண்பாட்டையும் குலைக்கும் நிலைமை வந்து விட்டதே. ஏற்கனவே சமுதாயத்தில் வன்முறைகளும் பாலியல் கொடுமைகளும் இருக்கத்தான் செய்தன. ஆனால் இன்று அதன் விகிதாச்சாரம் இமயமென வளர்ந்து விட்டது. வெட்கப்பட வேண்டிய விஷயம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பேச்சு காற்றோடு போய்விட்டது.

சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு அதனைக் கையாண்ட உத்திகள் சரியானதா? மேடைப் பேச்சிலும் பெண் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது, கொச்சைப் பேச்சுக்களால். மக்கள் குடித்துவிட்டு உட்கார்ந்து இந்த பேச்சுக்களைக் கேட்டு கைதட்டுவார்கள். கூட்டத்தை வசீகரிக்க கையாண்ட முறை இது சரியா ? அரசியலில் பிரிவினைகள் எப்பொழுதும் உண்டு. ஆனால் அசிங்கம் நுழைந்தது எப்பொழுது? வரலாற்று எழுத்தாளர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்யட்டும். இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஒரு பெண் அரசியலில் இருந்துவிட்டால் அவளை மேடையில் எவ்வளவு விரசமாகப் பேசுகின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கின்றார்கள். பேசுகின்றவன் அதே மேடையில் உட்கார்ந்திருக்கும் தலைமை முதல் மற்றவரைப் பார்க்கட்டும். அவர்களில் எத்தனை பேர்கள் சொந்த வாழ்க்கையில் சுத்தமாவர்கள்? பேசுகின்றவனே தன்னைப்பற்றி நினைத்துப் பேசட்டும். இது கற்பனைச் செய்தியல்ல. இது போன்று 1990 இல் ஒரு முறை நடந்த மேடைப் பேச்சு பற்றி கேள்விப்பட்டு சாகக் கிடந்த பெற்றவளை வீட்டில்விட்டு சென்னை சென்று பெண்களைக் கூட்டி கண்டனக் கூட்டம் போட்டேன். அதுமட்டுமல்ல கண்டன அறிக்கையும் பத்திரிகையில் கொடுத்து அது அச்சில் வந்தது. பெண்ணைக் கேவலப் படுத்தினால் பெற்ற பிள்ளையாயினும் உற்றவராயினும் என்னால் அவர்களைக் கண்டனம் செய்யாமல் இருக்க முடியாது. மூலையில் உட்கார்ந்து புலம்புகின்றவள் அல்ல நான். இப்பொழுது முடங்கிக் கிடக்கின்றேன். எனக்கு வயதும் சக்தியும் கிடைத்தால் இப்பொழுது எழும்பிய உணர்வுக்கு நான் முன்னின்று செல்வேன். ஒரே நேரத்தில் முடிக்க முடிந்த பிரச்சனையல்ல. எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைதியாக அதே நேரத்தில் எங்கெல்லாம் இந்த தீமை நடக்கின்ற்தோ அங்கு சென்று குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். அவன் உச்ச நிலையில் இருந்தாலும் இக்கொடுமை வெளிச்சத்திற்கு வர வேண்டும். அரசியல்வாதிகளும் மற்றவர்களும் என்னை மன்னிக்க வேண்டும். நல்லவர்களும் உடன் இருப்பது தெரியும். ஆனால் தீமையின் சூட்டிலே கடலில் கரைத்த பெருங்காயம் போன்று அவர்கள் நிலை ஆகிவிடுகின்றது.

உலகில் தேர்தல் பற்றி பெரிய சட்டங்களே இல்லாத காலத்தில் ஒரு சின்ன கிராமத்தில் தேர்தல் விதிகள் வகுக்கப்பட்டன. அதிலே கொலை, கொள்ளை யடிப்பவர்கள், குற்றவளிகள், தேர்தலில் நிற்க முடியாது. தேர்தலில் நிற்க வேண்டிய தகுதிகள் வகுக்கப் பட்டன. அதுமட்டுமல்ல, தேர்தல் முடிந்து பதவிக்கு வந்த பின்னர் தவறு செய்தால் பதவி நீக்கம் மட்டுமல்ல தண்டனையும் அளிக்கப் படும். உத்திரமேரூர் கல்வெட்டைப் பாருங்கள். அவர்கள் நிறைய படித்துப் பட்டம் பெற்றவர்கள் அல்ல. வாழ்வியல் புரிந்தவர்கள். அந்த நாணயம் படித்தவர்களிடம், அறிவில் சிறந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் உணர வேண்டாமா? ஏனிந்த பேராசை? கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்தால் சக்கரை வியாதி வரும் பொழுது சாப்பிடக் கூட முடியாதே. சொத்தின் பலன் என்ன? கால்கள் முடமாகி படுக்கையில் வீழ்ந்தால் பெற்ற பிள்ளைகளும் மற்றவர்களும் எப்பொழுது சாவாய் என்று சுற்றி சுற்றி வருவார்களே, அதைப் பார்த்து துடிக்க வேண்டிவரும்.. இந்த வயதில் தெரியாது. இளமையில், சக்தி இருக்கும் பொழுது எல்லாம் தாங்க முடியும். ஆனால் முதுமையில்தான் நாம் வாழ்ந்த லட்சணத்தின் பலன்கள் தெரியும். செத்த பின் சொர்க்கமா நரகமா என்று பேசவில்லை. பேராசைக் காரனுக்கும் பெண் சபலக்காரனுக்கும் முதுமையில் நிம்மதி இருக்காது.

“எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் கெட்டது எப்பொழுது நடக்கும் என்று சொல்ல முடியாது “

எனக்கு கிடைத்த முதல் படிப்பினை. நான் எழுதும் எல்லாத் தொடர்களிலும் இதனைக் குறிப்பிடத் தவறுவதில்லை. பணிக்குச் சென்ற முதல் நாளே அவலச் செய்தி. தங்கள் விருப்பத்திற்கு வளையாதவளை வதந்திகளால் கேவலப்படுத்தி விரட்டிய ஆண் கூட்டம்தான் என்னை வரவேற்றது. அடுத்த நாளே ஓர் ஆண் மிருகத்தால் கெடுக்கப்பட்ட அப்பாவி பெண்ணொ ருத்தியைப் பார்த்தேன். பணிக்களத்தில் தினமும் ஏதாவது ஓர் கண்ணீர்க் கதை கேட்டவள் நான். சில பெண்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. சிலரைக் காப்பாற்றி யிருக்கின்றேன். எனக்குள் எரிமலையாக இருந்துவரும் அந்தக் குமுறல்கள் தான் வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்களை எழுதத் தூண்டியது. முடிக்கும் நேரத்தில் கூட எங்கிருந்தோ ஓர் கதறல். ஆம் டில்லி சம்பவம்தான். எங்கும் அது பற்றிய பேச்சு. மேலை நாட்டவர்கள் வந்து உதவி செய்வதாகக் கூறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்தியப் பண்பாடு அதிலும் குறிப்பாக தமிழர் பண்பாடு உயர்த்திப் பேசப்பட்ட காலம் போய், நம் பண்பாட்டுக் கூறுகள் இறந்தகாலச் செய்திகளாக மாறிவிட்டதைப் பார்க்கும் பொழுது வேதனை வராமல் என்ன செய்யும்!.

கொதித்து எழுந்த கூட்டங்கள், ஓங்கி எழும்பிய குரல்கள் இவைகளை நான் மவுனமாகப் பார்த்தேன். இதன் ஆயுள் குறைவு என்று தெரியும். ஓர் கிருஷ்ண வேணியைக் கூடக் காப்பாற்ற முடியாதவர்கள் நாம். ஆரம்பத்தில் காட்டும் துடிப்பு பின்னர் வலுவிழந்து போகின்றதே?! மனிதனின் எழுச்சியும் வேகமும் அவ்வளவு தானா?

விசாரணைக் கமிஷன்கள் வைத்தால் அதுவும் வருடக் கணக்கில் விசாரணை நடத்தி அதன் வலிமை இழந்து ஏதோ ஒர் தீர்ப்பு அல்லது முடங்கிப் போய் மூலையில் கிடப்பதைப் பார்க்கின்றோம். நீதி மன்றம் செல்லும் வழக்குகளும் வாய்தாக்காளிலேயே வருடங்களைக் கடத்திவிடும். புதுப் புது சாட்சிகளால் குற்றக் குறிப்பின் திசையும் மாறலாம். அதுதான் நம் நிலை. அதற்காகச் சட்டங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. எழுச்சியும் வேண்டாம் என்று சொல்லவில்லை. குற்றங்களுக்குக் காரணமனாவைகளையும் ஒழிக்க வேண்டும். முற்றிலும் முடியா விட்டாலும் முதலில் முயற்சியைத் தொடங்க வேண்டும்

மனிதனுக்குள் உறங்கும் மிருகத்தை உசுப்பும் சக்தி மதுவிற்கு உண்டு. முதலில் தமிழ் நாடு முழுவதும் மதுவிலக்கு வர வேண்டும்.

எத்தனை குடும்பங்கள் மது அரக்கனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கிடைக்கும் சிறிய ஊதியத்தையும் குடிக்கக் கொடுத்துவிட்டு மனைவியை அடிக்கும் கணவர்கள் எத்தனை பேர்கள்? அவள் தாலியைக் கூட விடுவதில்லை. பணம் வேண்டி மனைவியை, மகளைப் பிற ஆண்களிடம் அனுப்பும் கொடுமை தொடரலாமா? சட்டத்தின் பிடிகளுக்குள் இவைகள் செல்ல முடியாத நிலை. மகள் என்றும் பாராமல் கெடுக்கும் அப்பன்மார்களுக்குத் தண்டனை எப்படி தருவது? குடும்பச் சண்டகளுக்கு சாட்சிகள் வராதே.குழந்தையையும் கசக்கின்றான். கிழவியையும் விட்டு வைப்பதில்லை. மது வியாபாரத்தால் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. அந்தப் பணத்திலிருந்து மக்கள் நலத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பது செத்த பிணங்களுக்குப் பூமாலை போடுவதைப் போல இருக்கின்றது. ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல , இந்திய நாடு முழுவதும் மதுவிலக்கு வரவேண்டும். ஒரு மாநிலைத்தில்மட்டும் என்று இருந்தால் அந்த ஊர்களில் போய்க் கொட்டமடிப்பான்.

மதுவிலக்கு என்று சொல்வது எளிது. மதுவில் பழக்கமாகிவிட்டால் அதை நிறுத்துவது அவனுக்கு சுலபமல்ல. நரம்பு பலஹீனம் ஏற்பட்டிருக்கும். அவன் போதை வேண்டி எந்தக் காரியத்தையும் செய்யத் துணிவான். குடிகாரர்களுக்கு சிகிச்சை தர புனர் வாழுவு இல்லங்கள் தேவை. இப்பொழுது இருப்பவைகள் போதாது. குடிகாரனுக்கு மது கிடைக்கவில்லையென்றால் அவன் கரங்கள் நடுங்குவதையும், அவனிடம் தோன்றும் பதட்டத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? கள்ளச் சாராயம் வியாபாரம் தொடங்கப்படும். அவைகளையும் முளைக்க விடாமல் கண்காணிக்கப்படவேண்டும். ஒரு பெண்ணைக் கொளுத்தியவளைப் பற்றிய புகாரைக் கூட எடுத்துக் கொள்ளத தயங்கும் காவலர்களில் எத்தனை பேர்கள் கள்ளச் சாரயச் சந்தையை ஒடுக்குவர்?ஆலோசனைகளைக் கூறுவது எளிது. பக்கவிளைவுகள் அனைத்தையும் சேர்த்து எண்ணித் திட்டமிட வேண்டும். பல நல்ல திட்டங்கள் முழுமையாக ஆராய்ந்து திட்டமிடாமல் செயலுக்குக் கொண்டு வருவதால் பயனற்றுப் போகின்றது. வரவரப் பெண்களால் இக்கொடுமை தாங்க முடியாமல் குடிகாரப் புருஷனை உலக்கையாலும் கல்லுரல் குழவியாலும் அடித்துக் கொல்ல ஆரம்பித்திருக்கும் செய்திகளையும் பார்க்கின்றோம். ஏற்கனவே வன்முறைகள் பெருகிவரும் காலத்தில் பெண்களையும் கொலை செய்யத் தூண்டுவது சரியா?

கடுமையான சட்டங்களும் வர வேண்டும். மதுவிலக்கும் வர வேண்டும். அதனுடன் இடையூறாக வருபவைகளையும் அடக்குவது பற்றி சிந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மதுவைவிட மனிதனை ஆட்டிப் படைக்கும் இன்னொரு சக்தி வேகமாக வளர்ந்து விட்டது. மதுவாவது குடித்த பொழுது அவனைத் தன் வசப்படுத்துகின்றது. ஆனால் இந்த புதிய சக்தி அவனுக்குள் விதை விதைத்து ஊக்கமளித்து அவனை வன்முறைத் திடலுக்கு அனுப்புகின்றது. இந்த மாபெரும் சக்தி உலகம் முழுவதும் நிறைந்திருக்கின்றது. மாற்றங்கள் தோன்றுவது இயல்புதான் ஆனால் வேகமாக வளர்ந்து வரும் சில மாற்றங்கள் அச்சத்தைக் கொடுக்கின்றது !

ஊடகங்கள் தான் இந்த சக்திக்கு ஊர்தி. பல வடிவங்களில் மனிதனை மயக்குகின்றது. விஞ்ஞானம் அறிவின் பிள்ளை. ஒரு கதைபற்றி நினைத்துப் பார்ப்போம். ஈடன் கார்டனில் இருந்த பகுத்தறிவுக் கனியை மட்டும் சாப்பிடக் கூடாது என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இறைவன் கூறியிருந்த அறிவுரை. மனிதன் மீறினான். அன்றுமுதல் அவர்கள் சாத்தானின் வசமானார்கள். இதன் உட்கருத்தைப் பாருங்கள். இன்றைய வாழ்க்கைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது. விஞ்ஞானத்தால் பல வசதிகளைப் பெற்று மகிழ்ந்திருக்கின்றோம். அதே நேரத்தில் மனத்திற்குள் ஓர் விரசம் நுழைய ஆரம்பித்திருக்கின்றதே! அது வளர்ந்து உடல் அரிக்கப்படும் பொழுது அலருகின்றோம்.

ஊடகங்களில் கட்டுப்பாடுகளை எப்படி கொண்டு வருவது? சிந்தித்து செயலாற்றப் பட வேண்டிய விஷயம். மக்கள் அதிகம் சிந்திக்கமல் இருப்பது அரசியல்வாதி களுக்கு லாபம். அரசு இயந்திரங்களுக்கும் அப்படியே. தங்கள் கடமைகளைச் செய்வதற்குச் சோம்பித்திரியும் எல்லாதரப்பின்ருக்கும் மனிதன் ஏதோ ஓர் மயக்கத்தில் இருப்பது நல்லது. இப்படி திட்டமிடுபவர்களும், காக்க வேண்டியவர் களும் நினைத்தால் நிலைமை எப்படி சீர்திருந்தும்? இவர்கள் எல்லோரும் யார்? நம்மைச் சேர்ந்தவர்கள் நம்மில் ஒருவர்தான். தனித்து சாடமுடியாது. வீட்டிலே அரசியல்வாதி இருக்கலாம், அரசுப்பணியாளன் இருக்கலாம். சினிமா ரசிகன் இருக்கனலாம். பிரித்து எண்ணுவது சரியல்ல.

டில்லி நிகழ்ச்சியில் 17 வயது இளைஞன் எவ்வளவு கொடூரமாக நடந்திருக் கின்றன. என்னை நொருக்கிய செய்தி இதுதான். இரும்புக் கம்பியைக் கொண்டு அந்தப் பெண்ணை வதைக்கும் எண்ணம் ஒரு நிமிடத்தில் தோன்றியதாக இருக்க முடியாது. அவன் பெற்றோர்கள், அவன் வளர்ந்த சூழல் ஏதோ ஒன்று அவனுக்குள் இந்த தீக் கருவைப் புதைத்திருக்க வேண்டும். என்ன கொடுமை?! இந்தத் தொடரை நிதானமாகப் படித்துப் பார்க்கவும். பெண்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. குழந்தை வளர்ப்பு, சிறுவர்களைக் கவனிக்க வேண்டிய முறைகள் எழுதப் பட்டிருக்கின்றன. நான் உதாரண சம்பவங்கள் காட்டி வரும் பொழுதே நம் கண்முன்னே நடந்திருக்கும் இந்த கொடிய செயலும் ஓர் உதாரணமாக நிற்கின்றதே! பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை உணர வேண்டாமா?

டில்லி சம்பவத்தில் இன்னொரு காட்சி. அனைத்துக் கட்சிகளும் அப்பொழுது ஒருமித்த குரல் கொடுத்தது. இதனை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை. போகப் போக இது அரசியல் ஆகாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன். அப்பொழுது இருந்த உணர்வில் போராட்டம் தொடர்ந்திருந்தால் பல உயிர்கள் போயிருக்கும். நாட்டிற்கு மிகவும் மோசமான கெட்ட பெயர் வந்திருக்கும்..மற்ற பணிகளும் முடங்கின. வாகனங்கள் கூட நிறுத்தப்பட்டன. ஓரளவு வன்முறைகள் குறைக்கப்பட்டன. பெண்களிடையே எழுந்த உணர்ச்சி அடங்கக் கூடாது. அமைதியான முறையில் தொடர வேண்டும்.கொடுமைகள் நடக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்க அமைதியான முறையில் செயல்படவேண்டும். டில்லி சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள் ஒரு பெண்ணை கெடுத்தது மட்டுமின்றி அவளை கெடுத்தவனும் அவன் உறவினர்களும் தீயில் அந்தப் பெண்ணைக் கொளுத்தியதும் நடந்தது. புகாரை வாங்க மறுத்த காவலர்களும் உண்டு. அங்கு பெண்கள் கூடி புகாரை வாங்க வைத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் புகார் விசாரணை சரியாகச் செல்லுமா என்பது கேள்வி. இது போன்று ஒன்றல்ல, நாட்டில் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. காக்க வேண்டிய கடமைப் பட்டவனும் ஒதுங்கினால் எங்கே போய் நிற்பது? அதிகாரமும் பணமும் நீதி மன்றம் செல்ல முடியாமல் தடுப்பதும் , அப்படிச் சென்றால் சாட்சிகளை முடக்குவதையும் யார் சரிப்படுத்துவது? பெண்ணிற்கு மட்டுமல்ல, இம்மண்ணில் இனி நியாத்திற்கு இடமில்லையா?

“செக்ஸ்” தவறில்லை. திருமணத்தில் நம்பிக்கையில்லை. விருப்பம் உள்ளவரை ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். பாவிகளா, உங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம். பிஞ்சு மனத்தைச் சிதைக்க வேண்டாம். ஆஸ்திரேலியாவில் இப்படிப்பட்ட குழந்தைகளின் குமுறல்களை நான் நிறைய பார்த்திருக்கின்றேன். இங்கும் உண்டு. ஆனால் வெளியில் சொல்லாமல் தங்களுக்குள் குமுறும் குழந்தைகள் உண்டு. நம் ஜெயகாந்தன் அவர்கள் ஒரு பிள்ளையின் மனக் குரலை எழுதியிருக்கின்றார். தெருக்குழந்தைகள் புனர்வாழ்வுத் திட்டங்களில் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்திருக்கின்றேன்.திருமணமின்றி சேர்ந்து வாழ நினைப்பவர்கள் குழந்தைப் பேறில்லாத அறுவை சிகிச்சை செய்து கொள்ளட்டும் .குடும்பக் கட்டுப்பாடுதிட்டத்தில் மணமானவர்களுக்கு அதிகக் குழந்தைகள் இருப்பவர்களுக்கு நாம் கூறும் ஆலோசனைதானே. மக்கள் பெருக்கம் குறையும். இதில் ஆண், பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் கருத்தடை சிகிச்சை செய்துவிடலாம். பெற்றோர் இருந்து வளரும் குழந்தைகளின் நிலையே பரிதாபகரமாக மாறிக் கொண்டிருக்கின்றது. உறவில்லா இருவருக்குப் பிறக்கும் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?!

அய்யா, நான் பத்திரிகைகள் செய்தி படித்து எழுத வில்லை. இலக்கியம் படைக்க வில்லை. யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வரலாற்றையும் எழுதவில்லை. இந்த சமுதாயத்தில் பாதிக்கப்பட்டு , சிதைந்து சமுதாயத்தால் தூக்கி எறியப்பட்ட வர்களுடன் அவர்கள் நல வாழ்விற்காக முடிந்தவைகளை செய்பவள் நான். இது ஒரு மூதாட்டியின் புலம்பல்

“நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் இப்போது கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். சத்தியம், அகிம்சை, நாகரிகம், பண்பாடு என்னும் இந்த வார்த்தைகள் பொருளற்றுப் போய் விட்டனவா? இவற்றைப் பற்றியே கவலைப்படாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறதா? நாடு இப்படியே போய்க் கொண்டிருந்தால் எதிர்காலம் என்ன ஆகும்?

இந்த பூமி எவ்வளவு பழமையானதோ அந்த அளவுக்குக் கடலும், மலைகளும் பழமையானவை. மக்களின் நாகரிகமும், பண்பாடும் கூட அப்படித்தான். இவற்றைப் பழமையானவை என்று ஒதுக்கலாமா? இது ஒரு சமுதாய முன்னேற்றத்தின் அடையாளமா, சமுதாயச் சீர்கேட்டின் அறிகுறியா?”

உதயை மு.வீரையன் என்பவரின் புலம்பல். என் நெஞ்சைத் தொட்ட வரிகள். இப்படி கோடிக்கணக்கான நெஞ்சங்கள் மவுனக் கண்ணீர் வடிக்கும் நிலை வந்து விட்டதே! என்ன செய்யலாம்?

இன்னும் சில பிரச்சனைகளையும் அலசிப் பார்த்துப் பின்னர் வழிவகைகள் காணலாம்

புத்தர் ஐந்து போதனைகள் ( பஞ்சசீலம் )

1. கொலை கூடாது

2. களவு கூடாது

3. ஒழுக்கமின்மை கூடாது

4. பொய் கூடாது.

5. மது கூடாது

[புலம்பல் தொடரும்]

படத்திற்கு நன்றி

Series Navigationதேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்இட்லிப்பாட்டி
author

சீதாலட்சுமி

Similar Posts

33 Comments

  1. Avatar
    Adaikalaraj says:

    அம்மா, மிக அருமையாக பல ஆயிரக்கணக்கான உள்ளங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். நம் சமூகம் உள்ள அபாய நிலையையும் எழுதி இருக்கிறீர்கள். நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்.

  2. Avatar
    punaipeyaril says:

    விதைத்து முளைத்த செடி கண்முன் காட்டுத்தனமாய் வளர்ந்த போது காவல்காரனின் அசட்டையை கண்டிக்காமல், இன்று புலம்புவதில் என்ன பிரயோஜனம்… அதனால் தான் பாரதி “பாதகம் செய்தால்… என்று பாப்பாக்களுக்கு பாடியது…” . கம்பராமயணத்தை எழுதியது என்ன “அண்ணாஅவா..? “ அவர் உயிருடன் இருந்தால் விவாதிருப்பேன் என்று சொல்ல… இன்னும் எத்தனையோ அவர் தாண்டி அண்ணாந்து பார்க்கக் கூடிய அறிவாளிகள் உண்டே.. அவர்களுடன் விவாதிக்கலாமே… இன்று டில்லி பஸ் நிகழ்வின் போது, ஷீலா தீட்சித், சோனியா, மாயவதி, ஜெ, மமதா, கிரண்பேடி, சுஸ்மா, பிரந்தா, கனிமொழி, மீரா குமார் என்று பெண்களின் அதிகார ராஜ்யம் தானே இந்தியாவில்… இவர்களால் ஏன் பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு நிலை தர முடியவில்லை..? நேரு, கருணாநிதி, அண்ணா, கன்ஷிராம் இவர்களின் பெண்கள் மேலான மரியாதை பற்றி கேள்விகேட்காமல் அவர்களை ஆராதித்து வழி நடந்ததாலே தானே..? ஏன் இவர்கள் தங்கள் கட்சியில் இருக்கும் பெண்கள் உபயோகிக்கப்படும் முறையை தட்டிக் கேட்கலாமே…? இந்த் தேசத்தின் முக்கிய தொழில் அதிபர் ரட்டன் டாடாவுடன் கறுப்புக் கவுன் என்று வழியும் தொலைபேசி உரையாடல் நாயகியுடன் எண்டிடிவி பர்காதத் சிலாகிப்பது , பெண்களின் மனநிலையின் இன்றைய வெளிப்பாடே… அர்த்தராத்திரில் பெண் நகையுடன் என்று தானே காந்தி சொன்னார்… அப்பொழுதே பெண்ணும் பொன்னும் கள்வரால் கொள்ளப்படும் விடயம் என்று தெளிவாகிறதே.. இங்கு எல்லாமே கலவியின் மையப்புள்ளியாய செயல்படுகிறது.. அதனால் கலவி பற்றி வேறு தளத்தில் அலசப்படவேண்டும். சேர்ந்து வாழ்தல் தவறாம்… ஆனால் இரண்டு மூன்றை சேர்த்துக் கொள்ளும் நபர்களை கண்டிக்க மாட்டார்களாம்.. எப்படி ஒவ்வொரு ஆட்டமிற்கும் ஒரு குண இயல்பு உண்டோ , அதே மாதிரி ஆண் பெண்ணிற்கும் குண இயல்பு உண்டு… பசு மாடுகள் திமிரும் காளைகளாக மாறும் சமூகமும், காளை மாடுகள் பசுபோல் மாறும் சமூகமும் உருப்படாது என்பதே உண்மை… இந்த டில்லி சம்பவத்தில் கூட கதையாய், கவிதையாய், மீடியா பேட்டி, கலந்துரையாடலாய் காலம் கழிந்தது.. இதோ இன்னும் எங்கோ ஒரு மூலையில் மதத்தால், சாதியால், ஆதிக்க உணர்வால் ஒரு கற்பழிப்பு நடக்கிறது… ஏன் என்று வினவுங்கள்… புலம்புவது விட்டு நாடு திரும்பி களை பிடிங்குங்கள்… வாழ வேண்டிய காலத்தில் இளமை துடிப்பில் குண்டக்க்க மண்டக்க என்று போராடி விட்டு… போகப்போகும் காலத்தில் பயத்துடன் உடல்நலத்தில் பற்று ஏன்..? போகும் வழிக்கு துணையாய் ஓரிரண்டு வீனர்களை கொண்டு செல்லுங்கள்.. இல்லை விநோபா மாதிரி ஏதாவது செய்யுங்கள்.. திண்ணையில் கிளர்தெழும் வீச்சுக்களே வேண்டும்… புலம்பல்கள் கூடாது… என்று நினைக்கிறேன்…

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கேளுங்கள் திண்ணை எழுத்தாளர்களே, வாசகர்களே,

      திண்ணையில் எழுதுபவர் எப்படி, என்ன எழுத வேண்டும், எப்படி, என்ன எழுதக் கூடாது என்று புனைபெயரார் நமக்கெல்லாம் யுனிவேர்ஸல் இலக்கணம் கூறுகிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் !!!

      முதலில் யாரிவரை அதற்கு இலக்கணம் கேட்டார் ? கட்டுரைக்கு ஏற்ற பின்னோட்டமா இது ?

      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        punaipeyaril says:

        நிச்சயமாக சட்டாம்பிள்ளை எண்ணம் இல்லை. நொந்து கிடக்குதய்யா மனது… கடந்த 60 வருடங்களில் கேப்மாரித்தனமாக இந்த தேசத்தை சீரழித்தவர்களை கிழித்துத் தொங்க போடமால் இன்றைய நிலைக்கு புலம்பும் நெஞ்சம் கண்டால்… அண்டி பிழைத்த இனம் சுதந்திரத்திற்கு பின்னும் அதே மனநிலையில் தொடர்ந்தால்… உரிமை கேட்டுப் பெற வேண்டியது அல்ல… எடுத்துக் கொள்ள வேண்டியது… “சதயவாணிமுத்தம்மா… சாயா விலை என்னம்மா..? என்று தெருவில் கத்திச் சென்றவனில் நானும் ஒருவன். காமராஜை ஆப்பிரிக்க மிருகம் என்றவர்கள், “நானும் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனில்லை…” என்றவர்கள்… “பாவடையின் நாடாவை திறந்து பார்த்தால் தெரிவது மாநிலசுயாட்சி” என்று பெண்மையை கேவலபடுத்தியவர்.. குளம் குட்டை எல்லாம் குடிசை மாற்று திட்ட வீடாக மாற்றியவர்கள், போலீஸ்துறையில் கட்சிக்கார காவாலிகளை நுழைத்தவர்கள்… என்று இருந்த கூட்டத்தில் ,எதிர்த்து நின்று காறி உமிழாமல் , சத்யாவணிமுத்துவின் பெண்ணைத் தெரியும் அக்காவைத் தெரியும் அதனால் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அதைச் சொன்னேன் எனும் போது வலிக்கிறது அய்யா… வலிக்கிறது. காந்தி மகானாக இருக்கலாம்.. ஆனால் பட்டேலும், நேதாஜியும் அடுத்த முனை. அமெரிக்க கழுகு ஒரு காலில் அம்பும், மற்றொரு காலில் ஆலிவ் இலையும் இருப்பது போல் இந்த தேசத்தின் நிலை இருக்க இவர்கள் என்னய்யா செய்தார்கள்…? திண்டுக்கல் கோட்டைமேட்டில் ஜெய்ஹிந்த் என்று சொல்லிப் பாருங்களேன்.. இந்த புலம்பல் கட்டுரைக்கு பதில் மலர்மன்னன் கட்டுரை மாதிரி உள்ளதை உள்ளபடி உரைக்கட்டுமே… பெண் நிலை இப்படி என்பவர், அன்றைய முதல்வர்கள் பெண்ணை எப்படி உபயோகித்தனர் என்று சொல்லாமே… நேற்றைய முகத்திரைகள் கிழிக்கப்பட்டால் இன்றைய முகமூடி நபர்கள் ஓடுவார்கள் என்பது என் எண்ணம்.. தவறெனில் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்…

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          “நேற்றைய முகத்திரைகள் கிழிக்கப்பட்டால் இன்றைய முகமூடி நபர்கள் ஓடுவார்கள் என்பது என் எண்ணம்”

          அதற்கான சூழல் உள்ளது என நினைக்கிறீர்களா ? ‘கருணாநிதியின் எழுத்துக்கள் தீவிர இலக்கியத்தின் எந்தப்பிரிவிலும் பொருட்படத்தக்கவை அல்ல’ என்று சொன்னதற்கே ‘நாய், நரி, மனநோயாளி’ என்றெல்லாம் ஜெயமோகன் எப்படி வசையாடப்பட்டார் என்று தெரியும்தானே ? சாதாரண நகைச்சுவை கட்டுரைக்கே எவ்வளவு மிரட்டலை சந்தித்தார் என்பதும் சமீபத்திய நிகழ்வே. அப்படி இருக்க நேற்றைய முகமூடியை கிழிப்பதா ? தொட்டுப்பார்த்தாலே தொலை உரித்துவிடுவார்கள் ஐயா. விருப்பம் வேறு, நடைமுறை வேறு.

        2. Avatar
          jayashree shankar says:

          அதற்கு நீங்கள் கட்டுரை எழுதியவரை தனி உரிமை மனக் கீறல் செய்திருக்க வேண்டாம், அது தவறு தானே ? உங்கள் ஆதங்கம் அனைவருக்கும் உண்டு.

        3. Avatar
          seethaalakshmi says:

          மதிப்பிற்குரிய புனைப்பெயர் அவர்களுக்கு வணக்கம்
          உங்கள் உணர்வை, உங்கள் கொதிப்பைப் புரிந்து கொள்ளமுடிகின்றது. பின்னூட்டங்களுக்குப் பதில்கள் எழுதும் வலு என்னிடம் இல்லை. கட்டுரை எழுதுவதே சிரமமாக இருக்கின்றது. ஆனால் எல்லாப் பின்னூடங்களையும் படிப்பேன். அதுமட்டுமல்ல சேமித்தும் வைத்திருக்கின்றேன்.
          நான் எழுதிவருவது தமி மனித வரலாறு இல்லை. திராவிடக் கட்சி வரலாறும் இல்லை. மகளிர் நலத்துறை, சமூகநலத்துறை, தொண்டு நிறுவன்ஙகள் மூலமாக மகளிர், குழந்தைகள், சிறுவர்கள், ஊனமுற்றோர், இன்னும் பல வகையிலும் பாதிக்கப்பாடவர்களீன் தகவல்கள் அடங்கிய ஒரு தொடர். சமுதாய நலப் பணிகள் செய்ய விரும்புகிறவர்களுக்கு அதன் வேர்கள் தெரிந்திருக்க வேண்டும். இப்பொழுதும் கஷ்டம் என்று வருகின்றவர்களுக்கு இருக்கும் புனர்வாவு அமைப்புகள் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகக் எழுதப் பட்டு வரும் ஓர் தொடர். இது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், உதவிசெய்தவர்கள்பற்றி கூறும் பொழுது நன்றி தெரிவிக்கின்றேன். அதற்காக அவர்களை முழுவதும் ஏற்றுக் கொண்டதாக இல்லை. உதாரணத்திற்கு பெரியார் அவர்களைப் புகழ்ந்தேன். அவர் பெண்களைப் பற்றிய அக்கருத்துக்காக மட்டும். நான் கடவுளை வணங்குகின்றவள் ஆன்மிகவாதி.. தமிழை ரசிப்பவள். அவருடைய மற்ற கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. அவரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் புத்தகம் வாங்கிப் படிக்கலாம். எங்கள் கஷ்டங்களுக்கு சொல்லால், எழுத்தால் செயலால் உதவிகள் கிடைக்கும் பொழுது நன்றி தெரிவிக்கின்றேன்.
          திரு வெ.சா. அவர்களையும் திரு மலர் மன்னன் அவர்களையும் நான் பெரிதும் மதிக்கின்றவர்கள். அவர்களும் ஒவ்வொரு பாதையில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடன் ஒருநாளும் என்னை ஒப்பிட்டு நினைக்கமாட்டேன். நான் எழுத்தாளரல்ல. ஒரு வேலைக்காரி. எங்கள் செய்திகளைப்பற்றிய குறிப்பு எழுதுகின்றேன்.
          துறையில் வேலை பார்க்கும் பெண்களையே நடுங்க வைத்துக் கொண்டிருந்த ஒருவன் அரசியல் ஆதரவுடன் உலாவிக் கொண்டிருந்தவனை வேலையை விட்டு நீக்கும் படி நான் கூறும் பொழுது ஏற்று செயல்படுத்தியவர்கள் திருமதி சத்தியவாணிமுத்து. அதற்கு நன்றிக் கடன் செலுத்தினேன்.
          உங்களுக்கு கருணாநிதி மீது ஆத்திரம் வெறுப்பு இருக்கின்றது. அவரைத் ஹரங்கெட்டவன் என்று திட்டினீர்கள் அது உங்கள் கருத்து. என்னையும் அதே பழிச் சொல்லுடன் விழித்தது மட்டுமல்ல ஓர் வயதானவளைப் பெயர் சொல்லி அழைத்தீர்கள். முதலில் என் மனம் பாதிக்கப்பட்டாலும் உங்களுக்கு இருக்கும் ஆத்திரம் என் மேலும் படர்ந்த்து என்று என்னை சமாதானப் படுத்திக் கொண்டேன். இது மனித இயல்பு
          ஆனால் இப்பொழுதும் அமெரிக்காவைவிட்டு வந்து இந்தியவில் களை பிடுங்கச் சொல்வது சரியா என்று நீங்களே சிந்தியுங்கள். எவ்வளவு காழ்ப்புணர்ச்சி. எத்தனை வசைமாரிகள். மாற்றுக் கருத்துகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இத்தனை தாக்கல்கள் தேவையா? தொடர் ஆரம்பத்திலேயே பல விபத்துக்களில் கைகால்கள் முடமாகி வீட்டில் அடைப்பட்டு வாழ்கின்றேன். உயிர்மட்டும்தான் மிச்சம். எனக்கு சென்னைக்கு வரவேண்டியதிருக்கின்றது. ஆனால் டாக்டர் பயணம் செய்யும்நிலையில் நானில்லை என்று கூறிவிட்டார்கள்.
          நண்பரே, மாற்றுக் கருத்துக்களைக் கூட கண்ணியமாக எடுத்துச் சொல்ல வேண்டும். யாரையும் காயப் படுத்தக் கூடாது. உஙளை மதித்து இதனை எழுதுகின்றேன். உங்களுக்கும் ஓரளவு வயதாகி இருந்தாலும் என்னைவிடச் சின்னவர். உங்கள் அக்காவாகக் கூறுகின்றேன். உங்கள் மூலம் ஓர் படிப்பினை கிடைத்தது. அதற்கு நன்றி செலுத்துகின்றேன். நான் தொடர்ந்து எழுத நினைத்தது மிகப் பெரிய விஷயம் . பொதுப் பிரச்சனைகளுக்குள் நுழைந்துவிட்டேன். முதலில் தயங்கினேன். நண்பர் ஒருவர் வலியுறுத்தவும் தொடங்கிவிட்டேன். ஆனால் அடுத்த பதிவுடன் என் தொடரை முடிக்கின்றேன். .அத்தனையும் சூடான செய்திகள். எப்பொழுதும் நமக்கு அத்தகைய செய்திகள் படிப்பதில் ஆர்வம் இருக்கும். அதை எழுதச் சிந்தனைச் சிதறல்கள் கூடாது. இவ்வளவு விரிவாக எழுதியிருந்தும் அவைகளின் ஆத்ம ஒலியை உணர முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்த்திய உன்களுக்கு என் மனப் பூர்வமான நன்றி. இனி விமர்சனங்கள் எழுதும் பொழுது வார்த்தைகளால் காயப் படுத்தாதீர்கள். இது என் வேண்டுகோள்.
          நான் எழுத நினைத்தவைகள் நிச்சயம் எழுதப்படும் மனிதம் செத்துக் கொண்டிருக்கின்றது. விமர்ச்ங்கள் ச்ய்தால் மட்டும் போதாது. மீண்டு எழ வழி காண வேண்டும். நிச்சயம் வரலாற்றுச் செய்திகளுடன் எழுதப்படும். இறைவனிடம் அதுவரை நான் இருக்க வேண்டிக் கொள்கின்றேன். எப்போ, எங்கே என்பதை ஆண்டவன் முடிவு செய்வார்.

          1. Avatar
            punaipeyaril says:

            என்னையும் அதே பழிச் சொல்லுடன் விழித்தது மட்டுமல்ல ஓர் வயதானவளைப் பெயர் சொல்லி அழைத்தீர்கள். –> கண்டிப்பாக பழிச் சொல்லுடன் அழைக்கவில்லை. அப்படி ஒரு பதிவு அர்த்தமுடன் இருந்தால், நிச்சயம் அப்படி நான் பொருள்பட எழுதவில்லை என்று கூறுகிறேன்..
            மட்டுமல்ல ஓர் வயதானவளைப் பெயர் சொல்லி அழைத்தீர்கள் –> எந்த இடத்தில் என்று தெரியவில்லை… அப்படி சொல்லியிருப்பின், நமது பண்பாடு படி அது தவறென்று ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறேன்..
            தொடர் ஆரம்பத்திலேயே பல விபத்துக்களில் கைகால்கள் முடமாகி வீட்டில் அடைப்பட்டு வாழ்கின்றேன்.–> வேறு ஒரு வகையில் நானும் முடங்கியவன். நிச்சயம் ஆத்ம தேடலும், வீரியமும் உங்களை விட்டுப் பிரியாது. நகராமல் இருக்கும் போது தான் விதை வீரியமான மரமாகிறது. நீங்கள் நகராவிடினும் விருட்சமான உங்கள் எண்ணங்கள் இணையத்தில் பரவ விடுவீர்கள்..
            எனக்கு சென்னைக்கு வரவேண்டியதிருக்கின்றது. –> யார் சொன்னார் நீங்கள் பயணப்படவில்லையென்று.. இதோ இருந்த இடத்தில் இருந்து உங்கள் எண்ணம் உலகம் முழுதும் பரவித்தானேயிருக்கு. உடல் உயிரை வேண்டுமானால் ஓரிடத்தில் வைத்திருக்கும்.. ஆனால், சிந்தனை.. அதற்கு எங்கு எல்லைக்கோடுகள்… காலகெடுக்கள்
            யாரையும் காயப் படுத்தக் கூடாது.–> ரணப்பட்டுக் கிடக்கிறேன்.. கண்முன் கரை புரண்ட காவிரி பனங்காடாயும், மனிதர்கள் நரிகளாய் ஆகிப் போனதில். என் சிந்தனயெல்லாம் இன்றைக்கு காரணாம் நேற்று தானே… என்ன நடந்தது என்று நீங்கள் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்றே அப்படி எழுதினேன்..
            அதற்கு பதிலாக, நீங்கள் நிறுத்துவேன் என்று சொல்வது வேண்டாம்.
            தொடருங்கள்….
            >> அந்த நண்பர் சொல்வது தான் சரி… நீங்கள் எழுத வேண்டும்…
            நான் உங்களை தாக்கவில்லை… நீங்கள் வேதனையான மறுபக்கத்தை எழுத வேண்டும் என்றே தூண்டினேன்…
            தமிழகத்தில் இன்று பெண்கள் மிக மிக கீழாக நடத்தப்படுவது தான் உண்மை. நான் தாய்மையை மதிப்பவன்.
            எனக்கு கடவுள் பற்றி நிறைய கேள்விகள் உண்டு…
            ஆனால், பாரதி பற்றி எந்தவிதமான சந்தேகமும் கிடையாது…
            அவரது படத்தை நீங்கள் குறீயீடாக கொண்ட பின், நீங்களும் அவனின் ஆன்மா வாழும் இடமன்றோ…
            பிறக்கும் நாள், இருக்கும் நாள், இறக்கும் நாள் யாரும் அறியார்… நீங்கள், இருக்கும் வரை பகிருங்கள்…
            நான் உங்கள் தொடரை படிக்காமல் தான் இருந்தேன்.. எம் ஜி ஆர் படம் பார்த்து அந்த வாரம் படித்தேன்… எம் ஜி ஆரின் மறுபக்கம் எனக்கு நன்றாக தெரியும்.. பலரின் மறுபக்கம் தெரிந்ததால், சில எழுத்துக்கள் என்னை கிளர்ந்து விடுகின்றன…
            மற்றபடி, ”நான் எழுத நினைத்தவைகள் நிச்சயம் எழுதப்படும்..” நிச்சயம் எழுதுங்கள்.
            நான் அமைதியாக இருப்பேன்… என்று உறுதி தருகிறேன்..
            ,,விமர்ச்ங்கள் ச்ய்தால் மட்டும் போதாது.>> உண்மை… தவித்துக் கொண்டிருக்கிறேன்.. என் பங்கு என்னவென்று அடையாளம் காணத்துடித்துக் கொண்டது. ஒரு நல்ல விஷயம், தொடர்ந்து எனக்கு பிரச்சனைகளும், துன்பங்களும் வருவது… அது மட்டும் தான், என்னைத் தாண்டி உலகை பார்க்க வைக்கிறது…
            “இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்..” – என்பது போல், நீங்கள் எழுதாமல் , பதிவு செய்யுங்கள்… நல்லது நடந்தது வாழ்வில் தெரிகிறது. ஆனால், பல நல்லது நடக்காமல் போனதன் காரணம் எழுதுங்கள்.
            கங்கை காவிரி வைகை எல்லாம் காணாமல் போனது வாழ்வின் குறியீடு என்று நினைக்கிறேன்… சாக்கடை மனம் கொண்டோர் தங்களை போல் பிறரையும் மாற்றியதால், சமூகமே இன்று அவலமாய்..
            ஆனால், கனடாவில், அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் மட்டும் எப்படி ஆறுகள் சாக்கடை ஆகாமல் இருக்கின்றன … அங்கு சமூக வாழ்வு நாசக்காரர்கள் முகம் உரிக்கப்படுவதால்.. அது மாதிரி, நீங்கள் இருக்க வேண்டும்…
            உங்கள் சொல்லை கட்டளையாக ஏற்று சிறிதாவது நானும் செய்வேன்..
            ஜெயம் உண்டாகும் உங்கள் எழுத்துக்களுக்கும்..
            உடல் தாண்டிய வாழ்வு உங்களது.. ஊனம் உங்களை ஒன்றும் செய்ய முடியாது..
            கட்டிபோட , ஒடித்து போட நீங்கள் ஒன்றும் குச்சியில்லை… தீப்பந்தம்.. துண்டு துண்டாய் பிரிந்தாலும் , தீ ஒன்றாகித் தானே எரிகிறது…
            அந்த பாரதியின் அக்கினிக்குஞ்சில் நீங்களும் ஒருவர்… உங்கள் நண்பர் சொன்னது போல் எழுதுங்கள்…
            வந்தனம்… தனிப்பட்ட முறையில் உங்கள் மனம் காயப்படுத்திய்ருந்தால் மன்னிக்கவும்.

    2. Avatar
      வரதராசன் says:

      ஐயா கட்டுரையாளர் என்ன செய்தார் என்கிற வகையில் எழுதும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும் யோசிப்பது நல்லது. நீங்கள் திண்ணையில் காரசாரமாக விமரிசனம் எழுதுவது தவிர நீங்கள் கொதித்தெழும் விஷயங்களுக்காக ஏதேனும் செய்திருக்கிறீர்களா?

      1. Avatar
        punaipeyaril says:

        நிச்சயம், வரதராஜன் தனியே எழுதுகிறேன். இந்த பின்னூட்டத்தில் அது வேண்டாம்.

  3. Avatar
    Kanagasubburathinam says:

    இந்தக் கட்டுரைக்கு புனைப்பெயரில் அன்பர் தந்த விமரிசனம் தேவையில்லாமல் கடுமையாக இருப்பதாக நான் கருதுகிறேன். நாட்டு நடப்புகள் பற்றி வேதனையுடன் கட்டுரையாளர் எழுதி உள்ளவை நம்மில் பலரும் எண்ணி வருத்தப்படும் விஷயங்களே. இதனை எழுதுபவர் தான் இங்கு வந்து களை பிடுங்க வேண்டும் என்பது முட்டாள்தனம். இது கட்டுரையாளர் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாகவே தெரிகிறது. யாரும் எதையும் எப்படியும் விமரிசனம் செய்யலாம். ஆனால் இந்தக் கட்டுரையாளர் எழுதியது போல் முதுமையிலும் எழுத உண்மையான சமூக அக்கறை வேண்டும். அதையே அவர் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    ஒரு தாய் நிலையில் வயதான காலத்திலும் சீதாலட்சுமி அவர்கள் தொடர்ந்து அவருடைய அனுபவங்களை எழுதி வருவதை இப்படி தாறுமாறாக அவரை தனிப்பட்ட முறையில் காயப்படுத்துவது மனிதாபமான செயல் அல்ல. ….டாக்டர் ஜி,ஜான்சன்.

  5. Avatar
    punaipeyaril says:

    தனிப்பட்ட முறையில் அவரை எங்கே காயப்படுத்துகிறேன். எழுத்தை, எண்ணத்தை பற்றி எழுதுதுகிறேன். வயது குறியீடென்றால் பழுத்தவர் என்பதால் கருணாநிதியின் செயலை நியாயப்படுத்தி, இளையவராய் இருந்த போது விவேகானந்தர் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் புறந்தள்ளலாமா…? வயோதிகம் என்பதை குறீயீடாக கொண்டால் ராஜாத்தி அம்மாளை விசாரிக்க வேண்டியதை வயது காரணம் காட்டி விலக்கி வயது மட்டும் காரணம் காட்டி ராஜா தண்டிக்கப்பட்டது நியாயம் என்றாகி விடாது. எண்ணங்களில் என்ன வயது…? அப்ப இனி வயதானவர்கள் என்ன செய்தாலும் தாயுள்ளம் தந்தையுள்ளம் என்று கன்சஷன் தரலாமா..? சமூக விமர்சன வியாக்கியானங்களில் மனிதாபிமானம் ஏழையின் அறியாமையை அகற்றுவதில் தானிருக்கு… வெளிச்ச மனிதர்களின் கரும் பக்கத்தை சொல்ல மாட்டேன் என்பதில் அல்ல… தமிழக அரசியல் காமராஜருக்கு பின் ஒழுக்க கேட்டால் ஓங்கி நின்றது. அது பற்றி இந்த வயதானவர்கள் சொல்லிச் சென்றால் வணங்குவேன்… மலர்மன்னன், வெ.சா எழுத்து போல….

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      நீங்கள் தவறான ஒப்பீட்டை செய்கிறீர்கள் புனைபெயரில். கருணாநிதியும், ராஜாத்தி அம்மாளும் கட்டுரை ஆசிரியரும் ஒன்றே என்பதுபோல இருக்கிறது நீங்கள் சொல்வது.

      “வாழ வேண்டிய காலத்தில் இளமை துடிப்பில் குண்டக்க்க மண்டக்க என்று போராடி விட்டு… போகப்போகும் காலத்தில் பயத்துடன் உடல்நலத்தில் பற்று ஏன்..? போகும் வழிக்கு துணையாய் ஓரிரண்டு வீனர்களை கொண்டு செல்லுங்கள்.”

      இது காயப்படுத்தும் சொற்களல்லாமல் வேறென்ன ?

      1. Avatar
        punaipeyaril says:

        பொன்குமார், ”இது காயப்படுத்தும் சொற்களல்லாமல் வேறென்ன ?” அப்படி ஒரு அர்த்தம் ஏற்படுத்தியிருப்பின் மன்னிக்க மன்னிக்க…

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          என்ன சார் இது ? “போகப்போகும் காலத்தில் பயத்துடன் உடல்நலத்தில் பற்று ஏன்..? போகும் வழிக்கு துணையாய் ஓரிரண்டு வீனர்களை கொண்டு செல்லுங்கள்.” போன்ற சொற்கள் காயப்படுத்தும் என்பதைக்கூட பிறர் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள் ? என்னமோ போங்க. மேலும் நீங்கள் ‘மன்னிக்க’ என்று சொல்லவேண்டியது என்னிடமல்ல. சீதாலட்சுமி அம்மா அவர்களிடத்தில். :)

      2. Avatar
        punaipeyaril says:

        போகும் வழிக்கு துணையாய் ஓரிரண்டு வீனர்களை கொண்டு செல்லுங்கள்.”–> வயதான நான் இதைத் தான் செய்கிறேன்.. திருமதி.சீதாலஷ்மி அவர்களை “போராட்டக்காரர்” என்று நான் கண்டதால் அப்படி எழுதினேன். அது தாக்கும் சொல் அல்ல.. கிளர்த்தெழும் வித்து. கோழை தான் அது காயப்படுத்தும் சொல்லாக நினைப்பர். வீரர் அது போருக்கு முன்னான வாளால் கீறப்படும் திலகமிடலுக்கான ரத்தப்பொட்டு என்று நினைப்பர்.திருமதி.சீதாலஷ்மி அம்மாள் வீர வகையறா. அதை அவர் புரிந்து கொண்டிருப்பார் என்று முழுதாய் எனக்கு தெரியும்…

  6. Avatar
    jayashree shankar says:

    அவரது வாழ்வியல் படைப்புகளின் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். சொல்லப் பட்ட நிஜங்களும் , அதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம், உழைப்பு , கவனம்…அத்தனையும் ஒரு சேவை மனப்பான்மை முறையில் தொடரப் பட்டது. களப் பணிக்கு இப்போது வந்து செய்யுங்கள் என்று சொல்லும் வார்த்தை அநாகரீகமானது. இங்கு யாருடைய பாராட்டுக்கும் அல்லாமல் சீதாம்மா, தான் நினைப்பதை வரும் கால சந்ததியராவது உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையோடு இருப்பார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் தான் தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாது
    எழுதி வருகிறார். படிப்பவர்களுக்கு அதன் அருமை புரியும்.
    ஒரு கட்டுரையைக் கூட உங்கள் மனத்தால் ஏற்க முடியாமல் அதை எழுதுபவரைத் தாறு மாறாக விமரிசனம் செய்வதில் என்ன சந்தோஷம் கண்டீர்கள்.
    இருந்தும் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இது போன்ற எந்த பின்னூட்டத்துக்கும் பண் பட்ட மனம் புண் படாது. பாறையில் மோதுவது போல
    சேதமடைய வேண்டியது தான்.

  7. Avatar
    seethaalakshmi says:

    அன்பு நெஞ்சங்களே, நாட்டு நடப்பிலே நாம் அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
    நம்மை நாமே இனி வேதனைப் படுத்திக் கொள்ள வேண்டாம். திரு புனைப் பெயர் அவர்கள் என் தொடரை முழுமையாக வாசித்திருந்தால் பெண்பித்தர்களைப் பெயர் சொல்லாமல் எவ்வளவு கடுமையாகச் சாடியிருக்கின்றேன் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார். மீண்டும் எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன். தொடரைப் படிக்கும் பொழுது கொஞ்சம் அழமாகச் சிந்திக்க வேண்டிய பகுதிகளூம் இருக்கின்றன. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தயவு செய்து படித்துப் பாருங்கள். நல்லவர்கள் ஒன்று சேர்வோம். நம்மால் செய்ய முடிந்த சில நல்ல காரியங்கள் செய்யலாம். அவைகளை நிச்சயம் கூறுகின்றேன். அதுமட்டுமல்ல நம் குறைகளைக் குறைக்க, அழுத்தம் குறைய சில வழிகளும் கூறுகின்றேன். இனி தொடர்ந்து படிக்கவும். கலாச்சார சீரழிவு நடந்துவிட்டது. நமக்குள் ஒற்றுமை இருக்கக் கூடாது என்பது தீயவர் எண்ணம். நல்ல எண்ணம் படைத்தவர்கள் ஒன்று சேர்வோம். என்னைப்பற்றி சமூக சேவகி என்று மட்டும் கூறிவந்திருக்கின்றேன். சில விபரங்களை அடுத்த பதிவில் எழுதுகின்றேன். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கஷ்டம் ஏதாவது வந்தால் எனக்கு மெயிலில் தகவல் தெரிவிக்கவும். அவர்களுக்கு என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்கின்றேன். வேலை வாங்கிக் கொடுக்க முடியாது அது வியாபாரமாகிவிட்டது.ஆதரவற்றவர்களுக்குப் புனர் வாழ்வு ஏற்பட உதவி செய்யலாம். இப்பொழுதும் தமிழகத்தில் என் மீது அன்பு கொண்டவர்கள் இருக்கின்றார்கள்
    My mail id seethaalakshmi @gmail.com
    திருப் புனைப் பெயர் அவர்களுக்கு ஓர் விண்ணப்பம். மறுப்பில்லையென்றால் தங்கள் தொலைபேசி எண் என் மெயிலில் அனுப்பவும் ரகசியம் காப்பேன். உங்களுடன் பேச விரும்பிகின்றேன். நிச்சயம் உங்கல் வேதனைகளுக்கு, ஆதங்கத்திற்கு மருந்தாக இந்த தாய் இருப்பாள்
    முன்பு ஆண்தான் குடும்பத்தில் பிரச்சனைகளக் கிளப்புவார்கள். இப்பொழுது பெண்களும் அதில் சேர்ந்துவிட்டனர். பிரச்சனைகள் இருக்கும் பெண், ஆண் யாராயிருந்தாலும் எனக்கு மெயிலில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் பிரச்சனைகலாஈ இங்கிருந்தே கவுன்ஸ்லிங் செய்துஅமைதியை உண்டாக்க முயல்வேன். என் குழும நண்பர்களில் பலர் இப்பொழுது என் குடும்பத்தினராகிவிட்டனர். தமிழகத்திலும் என்னைச் சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள் வீட்டிற்கு வந்து பார்ப்பார்கள். என் கடைசி மூச்சு இருக்கும் வரை பிறருக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்.
    எல்லாம் நன்மைக்கே.
    சீதாம்மா

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ் வலை உலக நண்பர்களே !

    திண்ணை இணையக் கூட்டுப் பதிப்பு உதவியால் தமிழர் அனைவரும் தற்போது இந்தியாவில் நிகழும் நல் வினைகளையும், தீவினைகளையும் எடுத்துக் கூறித் தர்க்கம் செய்து பகிர்ந்து கொள்கிறோம். இந்தப் பாதையில் திருமதி சீதாலட்சுமி அம்மாள் தனது 78 வயது அனுபங்களை நமக்கு உதாரணமாகக் காட்டி நெறிமுறை களை நேரடியாகவோ, மறைமுக மாகவோ வரலாறு போல் நமக்கு வாராவாரம் எழுதி வருகிறார். அவருக்கு எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாதென்று என்பது தெளிவாகத் தெரியும். அது அவரது எழுத்துரிமை. அதைச் சில வாசகர் மாற்றும்படி வற்புறுத்துவது ஒவ்வாத ஆலோசனை. அவரது அருமைத் தந்தையார் இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்துச், சிறை சென்று அதனால் சமூகத்தில் புறக்கணிக்க பட்டவர்.

    சீதாம்மா தேசப் பற்றும், தெய்வப் பற்றும் கொண்டவர். நாட்டு மக்களின் நல்வாழ்வு அவரது குறிக்கோள். காமராஜ், அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.யார், செல்வி ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் சீதாம்மா பல்லாண்டுகள் சமூகத் துறைகளில் பணி செய்து அவற்றில் குறை, நிறைகளை அவர் திட்டப்படித் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் அவ்வாறு தொடர்ந்து எழுத வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அவரது சிந்தனை வழியில் அவர் தொடர்ந்து எழுத நாம் திண்ணையில் வசதியான சூழ்நிலையை வடித்துக் கொடுப்போம். அவரைப் போன்ற அனுபவசாலிகள், தமது தளர்ந்து உழலும் வயதிலும் எழுத முன்வந்து செயற்கரிய பணிகள் செய்து வருவது பாராட்டுக்கு உரியது. அவரது அரிய அனுபவங்களைத் தொடர்ந்து திண்ணையில் பகிர்ந்து வருவதை நான் ஒவ்வொரு வாரமும் எதிர்பார்க்கிறேன்.

    சி. ஜெயபாரதன்.

  9. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திண்ணை வாசகர்களே, வாரந்தோறும் சீதாலட்சுமி அவர்களின் வாழ்வியல் வரலாற்றை தொடர்ந்து விரும்பிப் படித்து வருபவர்களில் நானும் ஒருவன். அனேகமாக ஒவ்வொரு வாரமும் நானும் இதற்கு என் மனதில் படுவதை பின்னூட்டமாகவும் எழுதி வந்துள்ளேன். அதோடு அவருடன் தொடர்புகொண்டும் நிறைய பயன்மிக்க அனுபவபூர்வமான கருத்துகளையும் அறிந்துகொண்டேன். சமீபகாலத்தில் அவர் திண்ணையில் தொடரை முடிக்க எண்ணியபோது அவரிடம் தொடர்ந்து எழுதச் சொன்னவர்களில் நானும் ஒருவன். இதற்குக் காரணம் என்னவெனில் அவர் தொடர்ந்து தம்முடைய அனுபவங்களைச் சொல்லாமல்போனால் அதனால் உண்டான இழப்பு நமக்கும் நம்முடைய தமிழ்ச் சமுதாயத்திற்குமே எனலாம். நாம் நூல்களைப் படித்து ஆராய்வதைவிட இவர்போன்ற ஒருவரின் அனுபவப்பூர்வமான உண்மை நிகழ்வுகளின் மூலமாக நாம் இன்னும் எளிமையாக ஏராளமான உண்மைகளையும்,பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்ளலாம். சீதாலட்சுமி அவர்கள் பேர் புகழ் பொருள் வாங்கவோ அல்லது பலரின் பாராட்டு வேண்டும் என்பதற்காகவோ இவ்வாறு வாரந்தோறும் தம்முடைய முதிர் வயதில் உடலை வருத்தி இவ்வாறு எழுதவில்லை. அவர் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதே உண்மை.

    இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்னை நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவல நிலை!

    இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் இனம் சாதி வேற்றுமையாலும், மதங்களாலும், அரசியல் கட்சிகளாலும் பிரிந்து கிடக்கின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வால் ஏழை எளிய மக்கள் நசுக்கப்படுகின்றனர். ஆண்டாண்டுகாலமாக ஆண் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டு கிடந்த பெண்கள் இன்னும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்துவிட்டது. அரசியல் நாட்டு நலனுக்கு இல்லாமல் பதவிக்கு வந்து பொருள் ஈட்டும் சாதனமாக மாறிவிட்டது!

    இத்தகைய பரிதாப நிலையில் சமுதாய உயர்வுக்கு எது தேவை? உபதேசம் மட்டும் போதுமா? பிரார்த்தனைகள் பயன்படுமா? புதிய அரசியல் கட்சியா? கொள்கை பரப்பும் திரைப்படங்கள? நமது கவிஞர்களின் பாடல்களா? அல்லது எழுத்தாளர்களின் படைப்புகளா? இவை எல்லாம் எந்த வகையிலும் பயன்படுமா? இதை எல்லாம் யார் கேட்டு திருந்தப் போகிறார்கள்?

    ” சாதி இரண்டொழிய வேறில்லை ” எனும் அவ்வைப்பாட்டியின் பாடல் தெரியாதவர்களா நாம்?

    ” சாதிகள் இல்லையடி பாப்பா ” என்று பாரதி பாடி என்ன பயன்? ஒரு பாப்பாவது இதைப் படித்து இதுவே உண்மை என்று நம்பியுள்ளாரா? இல்லவே இல்லை! கவிஞர்கள் பாடுவதும் எழுத்தாளர்கள் எழுதுவதும் எல்லாமே யாரிடமும் போய்ச் சேர்த்து சமுதாய மாற்றத்தை உண்டுபண்ணுவதில்லை அனைத்துமே விழலுக்கு இரைத்த நீர்!

    இதனால்தான் தனலமற்ற சமுதாயச் சிந்தையுடன்கூடிய களப்பணி தேவை. இதற்கு சமூகநலத்துறை இன்றியமையாதது. இதில் தமிழகத்தில் ஐந்து முதல்வர்களிடம் பணியாற்றியுள்ள பழுத்த அனுபவம் உள்ளவர் சீதாலட்சுமி அவர்கள். அவர் எழுதிவரும் தொடர் எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இதைவிட சான்றுகள் வேறு தேவை இல்லை.

    புரியாதவர்கள் எதை எழுதினாலும் தாயுள்ளத்துடன் அவர்களையும் மன்னிக்கும் உயர்ந்த பண்புமிக்க சீதாலட்சுமி அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். கடவுள் அவருக்கு நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்…..டாக்டர் ஜி.ஜான்சன்.

  10. Avatar
    என்.கணேசன் says:

    அன்பு சீதாம்மா,
    சினிமா அரசியல் பரபரப்புகளைத் தாண்டி சமூக அக்கறையுடன் எழுதுபவர்கள் குறைவு. அதுவும் தங்களைப் போன்ற முதிய அனுபவஸ்தர்கள் எழுத்துகள் படிக்கக் கிடைப்பதே அரிது. எனவே கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள். அவை புலம்பல்கள் ஆக இருந்தாலும் தவறில்லை. அது ஜீவத்துவத்தின் அறிகுறி. சத்தமோ சலனமோ இல்லாமல் இருப்பது தான் தவறு. அது மரணமடைந்து விட்டதன் அடையாளம். அதைத்தான் நிறைய பேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள் என்று மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  11. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் சீதாம்மா,

    அவரவர்கள் எண்ணம் போல அவரவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். நாம் நம்மைப்போல இருக்கவேண்டியதுதான் சரியாக இருக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. தங்கள் போக்கில் தாங்கள் எழுதிக் கொண்டிருப்பதே சரியானது என்று நினைக்கிறேன். மிகவும் பக்குவப்பட்ட தங்களுக்கு இதைவிட வேறு என்ன சொல்லப் போகிறோம். சேவையுள்ளம் இறுதிவரை ஓயாது.. ஓயவும் கூடாது. அதுதான் மனதிற்கும் நிம்மதியளிக்கக்கூடியது.

    அன்புடன்
    பவள சங்கரி

  12. Avatar
    punaipeyaril says:

    நாம் நம்மைப்போல இருக்கவேண்டியதுதான் சரியாக இருக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. –> திருமதி.சீதாலஷ்மி அம்மாள் அந்த வகையறா அல்ல… “நாம்” என்பதில் அவர் தன்னை மட்டும் அடைத்தவர் அல்ல… தன்னில் பிறரையும் , பிறரில் தன்னையும் அணைத்தவர் ( அடைத்தவர் அல்ல ). இறப்புவரை பக்குவப்பட துடிக்கும் இனம் அவர். சத்தியசோதனையே அம்மாதிரி முயற்சி தான் -பக்குவத்தை நோக்கி ஒருவரின் பயணமே தேடல்.. தேடல் உள்ள வகையறா திருமதி.சீதாலஷ்மி.
    சேவையுள்ளம் கொண்டவர்கள் மாற்றத்தை தொலைதூரத்தில் எதிர்பார்ப்பது இல்லை… அருகிலேயே முயல்வார்கள். நீங்கள் உங்கள் அருகில் நடக்கும், “கோனார் மாளிகை” ஜாதிய அடையாள பெயர் மாற்றத்திற்கு ஏதாவது செய்தீர்களா..? என்று உங்கள் அறிவிப்பு பகுதி பின்னூட்டத்திற்கு பதில் தந்தால் புரிந்து கொள்வேன்.

  13. Avatar
    seethaalakshmi says:

    எல்லோருக்கும் ஓர் வேண்டுகோள். இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்வோம். நாட்டிலே நம்மைச் சுற்றி பல பிரச்சனைகள் பூதாகாரமாக இருக்கின்றன. நாம் எல்லோரும் ஒரு குடும்பம். சலசலப்பு போதும். நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். சமத்தா அவரவர் வேலை பார்க்கவும். உலகில் நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.
    சீதாம்மா

  14. Avatar
    suvanappiriyan says:

    பெண் பாதுகாப்புக்கு நம் முன் உள்ள மிக இலகுவான வழி இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைபடுத்துவதே என்று நான் சொன்னால் எனக்கு மத முத்திரை குத்தி கருத்தை புறந்தள்ளுவார்கள். நமக்கெதற்கு வம்பு. நாம் இந்த விஷயத்தில் வேடிக்கை மட்டுமே பார்ப்போம.

    1. Avatar
      paandiyan says:

      இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நன்றாக படித்தவன் காரி உமிழ்வான் . படிக்காதவன் வேண்டுமானால் மதரச ட்ரைனிங் க்கு தலையாட்டி ஆகா ஓகோ என்று கூத்தாடுவான். அந்த சட்டங்களை அங்கு உள்ளவர்கள விமர்சனம் பண்ணும்போது இங்கு உள்ளவர்கள் ஏன் அதை தலையில் வைத்து ஆடுகின்றார்கள் என்றால் அவர்கள் கல்வி முறை அப்படி . வேறு என்ன சொல்ல .அது சரி அந்த மாதரி சட்டங்கள் எல்லாம் சூடானில் என்ன பன்னியது என்று புரியவில்லை. குர்தி மக்களுக்கு என்ன ஆனது என்று புரியவில்லை. ஒருவேளை நான் படிக்காதவன் போலும்!!

  15. Avatar
    punaipeyaril says:

    இப்ப தான் ஒரு ஏழை இலங்கைப் பெண் செய்யாத தவறுக்கு அரக்கர் இனத்தால் தலை துண்டிக்கப்பட்டுள்ளார்- சகதி அரே பி யாவாவில். பெண்கள் எந்த லட்சணத்தில் சகதி அரேபியாவில் நடத்தபடுகிறார்கள் என்பது பஹ்ரைன் பாலமே சாட்சி. தீவிரவாத மதம் என்பதற்கு பாகிஸ்தானின் இன்றைய நிலையே சாட்சி..

  16. Avatar
    நந்தவன் says:

    சுவனப்பிரியன்
    //பெண் பாதுகாப்புக்கு நம் முன் உள்ள மிக இலகுவான வழி இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைபடுத்துவதே என்று நான் சொன்னால் எனக்கு மத முத்திரை குத்தி கருத்தை புறந்தள்ளுவார்கள்.//

    Aisha Ibrahim Duhulow எனும் சோமாலிய சிறுமி 13 வயது இடுப்பளவு குழியில் வைத்து கதற கதற கல்லால் அடித்தே அந்நாட்டு இசுலாமிய அதிகாரிகள் கொன்றிருக்கிறார்கள். குற்றம் சட்ட விரோத உடலுறவு, எப்படி தெரியுமா? அவளை 3 பேர் கேங் ரேப் செய்துவிட்டார்கள்.

    பங்களாதேசத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான 14 வயது சிறுமிக்கு ஷரியா கோர்டின் தண்டனை 100 சவுக்கடி. 6 நாள் கழித்து அடி தாங்காமல் செத்தே போய்விட்டாள்.

    ஆமாம். பெண்பாதுகாப்புக்கு அவளை கொன்றுவிட்டால் அதன் பின் பக்கா பாதுகாப்புதானே?

  17. Avatar
    punaipeyaril says:

    பெண்களை சாத்தான் போல் நடத்தும் இஸ்லாம் நிச்சயம் உலகால் ஒதுக்கப்படும்.ஏனெனில் பெண் நினைத்தால் எதுவும் ந்டக்கும்

    1. Avatar
      பவள சங்கரி says:

      புனைப்பெயரில் ஐயாவிற்கு பெண்கள் மீது ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கிறது. டிராகன்களால் துன்புறுத்தப்படும் புள்ளைப்பூச்சிகள், அப்படியே கிடக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் ஐயா?

  18. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    புனைப் பெயரில் ஐயா அவர்களுக்கு,

    தாங்கள் அடுத்தடுத்துப் போட்ட பின்னூட்டத்தில் கூட..
    “புகழ்வது போல…ஒரு கிண்டல் தொனியும் கூடவே
    கை கோர்த்தது போல இருக்கு..” ஏனென்றால்….
    நீங்கள் இப்படி எழுதுவது கொஞ்சம் ஆச்சரியமாக
    இருப்பது போன்ற ஒரு எண்ணத்தை எனக்கு நீங்கள்
    ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இருக்கட்டும்.

    கலங்கரை விளக்கின் கண்களை தயவு பண்ணி கட்டாதீர்கள்..!
    கடலில் தவிப்பவர்களுக்கு – அவை தான் கண்கள்.
    கரை சேர்ந்தவர் – மன்னிப்பாராக.!

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *