நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

This entry is part 12 of 46 in the series 26 ஜூன் 2011

தலையால் நடந்து கொண்டிருக்கும்

ஒரு வினோத பட்சியின் பின்னே
துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன்
கைகால் முளைத்த மரங்கள்
ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை
பூமியில் வரைந்து செல்கிறது
எனக்கென தென்பட்ட திசையெங்கும்
வருடிப் புணர்ந்த கனவின் துளிகள்
ஒன்றின் மேல் மற்றொன்றாகி
சமாதிகளில் புதைக்கப்பட்ட
உடல்களின் பெருங்கூட்டம் எங்கும்
அலையடித்து கிளம்பும் பரவெளியில்
மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து
அறுபட்ட காதுகள் தொங்க
விழிகளற்ற கொடிமர வேலிகள்
உமிழ்நீர் துப்பல் சிதறல்களில்
துருப்பிடித்து கருகி சாம்பலாகின.
பேராறுதல் சொல்ல வார்த்தைகளற்ற
தலைகீழ் பட்சியின் நாவுகளில்
பிரபஞ்ச ரகசியம் ஒளிந்து கிடந்த்து.
நீலக்கண்கள் சூடி பட்சியை தொட எத்தனித்த
ஒவ்வொரு விரல்களின் நுனிகளையும்
நெருப்புப் பந்துகள் பற்றி எரித்தன.
போதை வெறியூட்டப்பட்ட சுழற்சியில்
இறக்கையின் திமிறடக்கி
பட்சியை இறுகி கட்டியணைத்தபோது
நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

Series Navigationபுழுக்கம்(71) – நினைவுகளின் சுவட்டில்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *