This entry is part 25 of 34 in the series 10 நவம்பர் 2013
– பத்மநாபபுரம் அரவிந்தன் –
பன்னீர்க் குடத்துள் மிதக்கும்
சிசுவின் ஏகாந்த நிலைபோல
என் மனதுள் விரிந்து சுருங்கிச்
சுழலும் சலனங்கள்..
சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு
வெளிவரும் என் வார்த்தைகள்
புரியவில்லையென்று சொல்லித் திரியும்
நீ பலமுறை கேட்டிருக்கிறாய்
நான் எங்கிருக்கிறேன் என்றோ,
எவ்வுலகில் இருக்கிறேனென்றோ..
உன் கேள்விக்கு பதிலற்று நான்
நோக்கும் பார்வை உனை நோக்கியே
இருப்பினும் பார்வைக்குள் விழுவது நீயல்ல…
உனை ஊடுருவி வெளியேறி
அது பயணித்துக் கொண்டிருக்கும்
பெருந் தொலைவு… நீ நினைத்துக் கொள்வாய்
வார்த்தைகள் இல்லையெனினும்
பார்வையாவது கிடைக்கிறதென்று….
Series Navigationதமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளைடௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24