பூவுலகு பெற்றவரம்….!

This entry is part 10 of 23 in the series 14 டிசம்பர் 2014
ஜெயஸ்ரீ ஷங்கர்

பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்

ஒய்யார முண்டாசுக்குள்

ஓயாத  எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்

வார்த்தை ஜாலங்களால் வானத்தில்
கார்மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்

மந்திரங்கள் கற்காமல் கவிதை
ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப்போட்டு நகைப்பவன்

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்

கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்

காளியோடும்  மாரியோடும்
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்

விடுதலை வேண்டி

சங்கம் முழக்கியவன்

இறுக்கிச் சுற்றிய முண்டும்
கரு மீசையும் கனல் கண்களும்
கன ஆடையில் அச்சத்தின்
முகவரி  தந்தாலும் அச்சமில்லை
என்று இச்செகத்திற்கு
கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் ஒடுங்கிக் குனிந்து
ஓடி விளையாடியவன்

உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு

வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டெழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன் பாதை மாறாமல்

கவிதை போதைக்குள் மூழ்கியவன்

ஏழ்மையை எழுத்திலிருந்தும்
எண்ணத்திலிருந்தும் விரட்டியவன்

வீரத்தை வாளாக்கி வணங்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்

சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு

ஆன்ம ரகசியம் சொன்ன தீ ..!

பாரதி உந்தன் பார்வை தீ…!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை

காப்பிய பாரதத்தை

கண்ணனின் பெருமைதனை

பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக

புதைத்து விடவா பிறந்து வந்தாய்…!

பாரதம் கண்டெடுத்த புதையலாக

பாரதி நீயன்றோ பூவுலகு பெற்றவரம்….!

 

Series Navigationஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !  கைவசமிருக்கும் பெருமை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *